Skip to main content

5. இராமானுசன் அடி பூமன்னவே - வைத்தமாநிதி

 5. இராமானுசன் அடி பூமன்னவே - வைத்தமாநிதி


நாதமுனிகள் திருக்குருகூர்   கதிரவன் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தார். முன் இரவின் புயலுடன் கூடிய மழையின் சுவடுகள் எங்கும் காணப்பட்டது. வழி நெடுகிலும் சேறும், சின்ன வாய்க்கால் மாதிரி தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. காய்ந்த சுள்ளிகளும் இலைகளும் தண்ணீரில் மிதந்துகொண்டு சென்றன. சிறு குன்றுகள் குளித்தது போல மாட மாளிகைகள் காட்சி அளித்தன. 

மரங்களின் கிளைகள் ஈரத்தின் எடை காரணமாகத் தொங்கிக்கொண்டு அதில் இருக்கும் பழங்களைச் சிறுவர்கள் பறிக்கும் வண்ணம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தன. வாழை மரங்களும்,  நெற்பயிர்களும் தங்கள் தலையைக் குனிந்துகொண்டு நாதமுனிகளை வணங்குவது போலக் காட்சி அளித்தன.  


மூங்கில் இலைகளின் நுனியில் நீர்த்துளியின் மீது இளஞ்சூரியனின் ஒளிபட்டு அவை வைரங்கள் பூத்துக் குலுங்கும் மரம்போலக் காட்சி அளித்தது. மின்னிய அந்தக்  காட்சியை ஏற்றம் இறைத்த பெண்ணொருத்தி

மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே

என்று பாடினாள். அவள் பாடியதைக் கேட்டு வியந்தார் நாதமுனிகள். அந்தச் சமயம் பறவைகள் அம்மரத்தின் மீது கூட்டமாக வந்து உட்கார எல்லா வைரத்துளிகள் மொத்தமாக நாதமுனிகளின் மீது உதிர்ந்தன. 

முந்தைய இரவின் புயல் காற்றின் மிச்சம் மெலிதான காற்றாக வண்டுகள் துளைத்த மூங்கில் மரத்தின் வழியே சென்றபோது எழுந்த ஓசை என்று சொல்லுவதைக் காட்டிலும் புல்லாங்குழல் இசையாகக் கேட்டது. அந்த இசை புற நீர்மைப் பண்ணின்(1) சாயலில் கிளிகளும் மற்ற பட்சிகளின் ஓசையுடன் கேட்பவர்களுக்குப் புளங்காகிதம் கொடுத்தது. கிருஷ்ண த்ருஷ்ணா(2) தத்துவம் களிநடனம் புரிந்ததற்கான எல்லா அறிகுறியும் இந்த இடத்தில் தென்பட்டது. 

‘கங்குலும் பகலும் கண் துயிலறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும், சங்கு சக்கரங்களென்று கைகூப்பும், தாமரைக் கண்ணென்றே தளரும், எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டென்றும்’ என்று குருகூர் சடகோபன் பராங்குச நாயகியாக இரவும் பகலும் விடாது அழுது அழுது அந்த அழுத கண்ணீர்  நிரம்பி கீழே குளமாகத் தேங்கியிருக்க அதைத் தம் கைகளால் எடுத்து எடுத்து இறைத்து அதுவே தாமிரபரணி நதியாக ஓடியது,  இதைப் பார்த்து, கிருஷ்ணனுக்கு  பராங்குச நாயகியிடத்தில் அளவு கடந்த காதல் உண்டாயிற்று. பராங்குச நாயகிக்குக் கிருஷ்ணன் மீது காதல் அதிகமா ? அல்லது கிருஷ்ணனுக்குப் பராங்குச நாயகியின் மீது காதல் அதிகமா என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது நமக்குக் கடினமான விஷயம். 



கலியுகத்தின் தொடக்கத்தில் குருகூர் சடகோபன் இறைத்த கண்ணீர் இன்றும் தாமிரபரணி நதியாக வேகமாகச் சென்றுகொண்டு அதனால் ஊரே வளமிக்கதாகக் காட்சி அளித்தது. திருவழுதி வளநாடு என்று இந்த இடம் பெயர் பெற்றதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இவ்வழுதி வளநாட்டில் ஆறு பெரிய ஊர்களும் அவற்றில் ஒன்பது திருமால் கோயில்களும்(3) இருந்தன.

நாதமுனிகள் தாமிரபரணியில் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் அமைந்திருந்த  ஸ்ரீ ஆதிநாதர் கோயிலை நோக்கி விரைந்தார். பழங்காலத்தில் ஆதிநாதர் கோயில் தாமிரபரணியாற்றின் காரையில் இருந்தது. பின்னர் வந்த அரசர்கள், ஊரை விரிவுபடுத்தும்போது வடக்கே கரையைத் தள்ளி வைத்துப் படித்துறை கட்டினார்கள். 

தாமிரபரணி ஆற்றின் மகிமையை இந்த ஊரின் பெருமையும் கூற வாசகர்களுக்குப் புரிந்துகொள்ள இந்த ஊரில் உலாவிவரும் ஒரு கதையைச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

திருக்குருகூரின் வடகரையில் ஒரு முனிவர் வாழ்ந்துவந்தார். முனிவர் போகும் இடத்துக்கு எல்லாம் ஒரு நாய் அவர் கூடவே சென்றது. நாளடைவில், அந்த நாய் அவருடனே இருந்தது. அந்த நாய் திருக்குருகூர் தெருவில் உள்ள எச்சில் சோற்றை உணவாக அருந்தி ஜீவித்து இருந்தது. ஒருநாள் முனிவர் ஒரு மரத்தடியில் யோகத்தில் இருந்தார். நாய் முனிவரிடம் செல்லத் தாமிரபரணி ஆற்றைக் கடந்தபோது வெள்ளம் அதிகமாகி, நாய் நீர்ச்சுழியில் அகப்பட்டுத் தத்தளித்தது மாண்டது.  முனிவர் சத்தம் கேட்டு விழித்தபோது நாய் உயிர் ஒளிபெற்று விண்ணுலகெய்தியது. அதைப் பார்த்த அந்த முனிவர் ஆகா இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று இந்தச் செய்யுளைப் பாடினார். 

வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே

இவ்வூரை பரமபதத்து எல்லை என்பார்கள். அப்படி என்றால் இந்த ஊர் எப்படிப்பட்ட சிறப்புடையதாக இருக்க வேண்டும் ?

கோயில் சூரிய ஒளிபட்டு பொன் போல ஜொலித்தது.  அதே சமயம் கோயில் அருகில் பெரிய புளியமரம் ஒன்று கோயிலின் விமானத்தின் மீது பரவி குடை பிடிக்கும் ஆதிசேஷனாகக் காட்சி அளித்தது.  பல பொந்துகளுடன் முதிர்ந்த அந்தப் புளியமரம் ஞானமுள்ள முனியோ என்று நாதமுனிகளுக்கு தோன்றியது. 

கோயிலுக்குள் சென்றபோது  திருமாமணி மண்டபம் சிற்பிகளின் வேலைத்திறத்தைப் பறைசாற்றின. மிக நுணுக்கமாக இவற்றை கையால் செய்தார்களா ? என்று வியக்கும்படி இருந்தன. கல்லையே இப்படிச் செதுக்கியிருந்தார்கள் என்றால் மரவேலையைப் பற்றிக் கேட்க வேண்டுமா ? கோபுரத்தின் மூன்று கட்டிடங்களிலும் மரத் தூண், யாழி, சாளரம், சிங்கப் பொதிகை உத்திரம், மேற்கட்டு விதானம் எல்லாம் நுட்பமான வேலைத்திறம் பெற்று கோயிலுக்கு மேலும் பெருமை சேர்த்தது. 

’நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே?’ என்ற பெருமாளைப் பற்றியும்,  ’தென்குருகைக்கு உண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்’ என்று ஊரின் பெருமையும் எழுதிக்கொண்டே போகலாம், ஆனால் நாதமுனிகளின் அவசரம் நாம் அறிந்ததே. அதனால் மீண்டும் இந்தக் கோயிலையும், ஊரையும் வலம் வந்து இதன் பெருமையை மேலும் அனுபவிக்கலாம். இப்போது வாசகர்களை நாதமுனிகளுடன் பெருமாளைச் சேவிக்க அழைக்கிறேன். 

நாதமுனிகள் ஆதிநாத வல்லி என்ற அமுதவல்லி தாயாரை வணங்கி ஆராவமுதமாகிய ஆயிரம் பாசுரங்களைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து,கோல் தேனாக அனுபவித்து(4) ஆதிபிரானாகிய பொலிந்து நின்ற பிரானை சேவித்து அவர் செவிக்குளிர  ’ஆராவமுதே’ என்ற பத்துப் பாசுரங்களையும் அழகுற உரைத்தார். 

இத்தலத்து பெருமாள் தானாகத் தோன்றி பிரம்மாவுக்கு அருள் புரிந்தவர் அதனால் அவர் ஆதிநாதப் பெருமாள் என்று பெயர் பெற்றார். தானாகத் தோன்றி பொலிந்து நின்ற பிரானாக இவருடைய திருவடிகள் வெளியே தெரியாமல், பூமியில் புதையுண்டு இருக்கும். நாதமுனிகள் பாடிய அந்தப் பத்துப் பாசுரங்களைக் கேட்டு ஓர் அடி காலடியை எடுத்து நாதமுனிகள் முன் வைக்கலாமா என்று பெருமாளுக்குத் தோன்றியது. 

நாதமுனிகளுக்குத் தீர்த்தம், மாலை பிரசாதங்களை அர்ச்சகர் வழங்கி “’குருகூர் சடகோபன் என்று எங்கள் ஊர் ஆழ்வார் அருளியது தங்களுக்கு எப்படிப் பாடம் ?” என்று கேட்டார்.

நாதமுனிகள் குருகூர் சடகோபன் தான் இந்த ஊர் ஆழ்வார் என்று கேள்விப்பட்டு உள்ளம் மகிழ்ந்தார். 

ஆழ்வார் என்ற சொல்லைக் கொஞ்சம் ஆராய்ந்தால், பெருமாள் மீதும் அவன் குணத்தின் மீது ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று கூறுவர். ஆண்கள் பெண்கள் இருபாலர்க்கும் பொதுவான சொல்லாக இருக்கிறது. குந்தவை ஆழ்வார், மதுராந்தகியாழ்வார், அம்மங்கையாழ்வார்(குலோத்துங்க சோழனின் மாள்) போன்று சோழ சாசனங்களில் அரச குடும்பத்தின் பட்டத்து ராணி, இளவரசிகளை ஆழ்வார் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அரச குடும்பப் பெண்களுக்கு அவர்களுக்கே உரித்தான கேச அலங்காரங்கள் இருந்திருக்கிறது. இன்றும் நம்மாழ்வார் கொண்டை என்பது அந்த மாதிரி ஒரு அரச குல கேச அலங்காரம் தான். பராங்குச நாயகி பாவத்தில் ஆழ்வார் செய்துகொண்ட அலங்காரமாக அது இருந்திருக்க வேண்டும். 

நாதமுனிகள் “செழிப்பு மிக்க இந்தப் பத்துப் பாசுரங்களைக் கொடுத்த குருகூர் சடகோபன் அருளிய நல்ல தமிழ் பாசுரங்கள் ஆயிரத்தையும் கருணையுடன் இங்கே யாராவது தருவார்களா என்று தேடிக்கொண்டு வந்தேன்” என்று தான் இதுவரை தேடி வந்த வந்த பயணம்குறித்து கூறி,  “இந்த ஷேத்திரத்தில் இருந்தல்லவா ஆயிரம் பாசுரங்களையும்  சடகோபன் அருளியிருக்க வேண்டும் ? சிறந்த அந்த ஆயிரமும் இவ்வூரில் வாசிக்கக்கூடிய நல்லாடியார்களுக்குத் தெரியும் என்று எண்ணி இந்தத் திருவழுதி நாட்டுக்கு வந்தேன். இந்த நல்ல தமிழை அறிந்தவர் இல்லங்களில் ஸ்ரீகோசம்(3) இருக்கும் அல்லவா ?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டார். 

”தமிழ் பாசுரங்கள் உண்டு என்று அது எழுதப்பட்டிருப்பதைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் எங்கள் ஊரில் அப்பாடல்கள் எதையும் நாங்கள் பார்த்ததில்லை அவை காலப் போக்கில் மறைந்துவிட்டது என்று எண்ணுகிறோம். உங்களுக்குத் தெரிந்த அந்தப் பத்து பாடல்கள் கூட எங்களுக்குத் தெரியாது!” என்றார் வருத்தத்துடன். 


நாதமுனிகள் ஏக்கத்துடன் ஆனால் நம்பிக்கை இழக்காமல் கூர்மையான திருவாழி, திருச்சங்குகளை ஏந்தி நிற்கும்  மேகம் போன்ற பொலிந்து நின்ற பிரானை வேண்டி வணங்கிய சமயம் அர்ச்சகர் “இந்த பாசுரங்களைப் பட்டோலை கொண்டு ஏற்றம் பெற்றவரான மதுரகவிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒருக்கால் இப்பாசுரங்களைக் கற்றிருக்கலாம். அவர்கள் இங்கிருந்து இரண்டு கல் தூரத்தில் இருக்கும் திருக்கோளூரில் வசிக்கிறார்கள்” என்றார். 

நாதமுனிகள் அவரை வணங்கி மீண்டும் ஆதிபிரானை நோக்க அப்போது அர்ச்சகர் “திருக்கோளூர் விரைந்து சென்று அறிவீராக!” என்று திருவாய் மலர்ந்து அருளினார். 

திருக்குருகூர் அடியார் கூறியதைக் கேட்டு உடல் எல்லாம் ஆனந்தமாய் பழமையான வேதங்களைக் கற்றுத் தெளிந்தவரான நாதமுனிகள் ஆதிநாதரைத் திருவடி தொழுது, பிரதட்சிணம் செய்து,   பாக்குமரங்கள் எங்கும் காணப்படும் சோலையை உடைய திருக்கோளூருக்கு புறப்பட்டார். 

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே

பூமண்டலத்துள்ளே சீரும் சிறப்பும் மிகுந்தவனான அப்பெருமானுடைய திவ்ய தேசத்தை விசாரித்துக்கொண்டு சென்று சேர்ந்த இடம் திருக்கோளூராகவே இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சடகோபன் கூறிய திருக்கோளூர் வந்தடைந்தார். 

முன்னொரு காலத்தில் குபேரன் இந்தப் பெருமாளை வணங்கி இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் பெருமாளாக வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்துடன், செல்வத்தைப் பாதுகாத்து அதை அளந்து கொடுக்க தலைக்கு அடியில் மரக்கால் வைத்து சயனத்திருக்கோலத்தில் இருக்கிறார். நம் நாதமுனிகளுக்கோ செல்வம் என்பது சடகோபனுடைய தமிழ் மொழி பாசுரங்களைத் தான் என்பதில் ஐயம் இல்லை. 


நாதமுனிகள் திருக்கோளூர் குமுதவல்லி தாயாரை மனம் உருகிப் பிராத்தித்து, , சயனித்துக்கொண்டிருக்கும் பெருமாளை மிகுந்த பக்தியோடு வணங்கி, ஆராவமுதே என்ற பாசுரங்களைப் பெருமாள் கேட்க இன்னிசையில் பாடினார்.

தீர்த்தம் பிரசாதங்கள் கொடுத்து அர்ச்சகரிடம் நாதமுனிகள் ”இவ்வூரில் நல்ல மெய்ஞானத்தைத் தரக்கூடிய மதுரகவிகள் திரு வம்சத்தில் பிறந்த நல்லருள் மிகுந்த யாரேனும் உள்ளார்களா ? என்று வினவினார். 

அர்ச்சகர் ”ஊரில் ஸ்ரீபராங்குச தாசப் பிள்ளை என்று ஒருவர் இருக்கிறார். அவர் மதுரகவிகள் வம்சம். இப்போது இங்கே அவர் வரும் சமயம்” என்று சொல்லிமுடிக்க ஓர் இளைஞர் அங்கே வந்தார். அவர் முகத்தில் மதிநலம் அருளப்பெற்ற ஞானம் குடிகொண்டு இருந்தது.  அர்ச்சகர் “இதோ இவர் தான் நீங்கள் கேட்ட பராங்குசத் தாசப் பிள்ளை” என்றார்.

பராங்குச தாசப் பிள்ளை நாதமுனிகளை மலர்ந்த முகத்துடன் நோக்கி அவர் திருவடிகளை நன்கு வணங்கி “அடியோங்கள் நாதமுனிகளா ?” என்றார். 

நாதமுனிகள் வியப்புடன் பிள்ளையைப் பேரார்வத்துடன் கண்டு திருவடி தொழுது “பெருமைமிக்க நற்குணமுள்ளவரே அழகு பொருந்திய தமிழ் வேதத்தை அடியேன் பெற்று உய்யும் வகையிலே பத்தும்பத்தாக(5) அருள்வீராக” என்று சொல்லி வணங்கி நின்றார். 

அர்ச்சகர் மனம் மகிழ்ந்து பெருமாள் மீது சூட்டப்பெற்ற மகிழம் பூமாலையை நாதமுனிகளுக்குப் பிரசாதமாகச் சூட்டினார். அது நாதமுனிகளுக்கு வகுள ஆபரணமாக மணம்  வீசியது. அந்த மணத்தில் பாசுரங்களின் மணத்தை நாதமுனிகள் உணர்ந்தார். 

’வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன’ வாக்கியத்துக்கு ஏற்றார் போல் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்த செல்வத்தைத் தலையில் உள்ள மரக்காலைக் கொண்டு அளக்க ஆரம்பிக்கச் சித்தமானார் வைத்தமாநிதி பெருமாள். 

பயணம் தொடரும்..
- சுஜாதா தேசிகன்

21-08-2020
ஓவியங்கள் : நன்றி :ஜெ.பி

----------------------------------------------------

(1) புற நீர்மைப் பண் - பூபாள ராகம்

(2) கிருஷ்ண த்ருஷ்ணா - கிருஷ்ண காதல் 

(3) ஒன்பது திருமால் கோயில்களும் - இன்றைய நவதிருப்பதி. 

(4) கோல் தேனாக அனுபவித்தல் - மிக்க இன்பமாக அனுபவித்தல். 

(5) பத்தும்பத்தாக - முழுமையாக 

Comments

  1. அருமை ஸ்வாமி. மூங்கில் இலை மேலே! எங்கோ படித்த ஞாபகம். ஒரு வேளை மை கம்பனோ?

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பாடலில் இந்த 2 வரிகள் என் காதிலும் ஒலிக்கின்றன. பழைய சினிமாப்பாடலில் உபயோகித்திருக்கலாம்.

      Delete
    2. Please refer to the link below.

      https://m.facebook.com/story.php?story_fbid=224492257951862&id=224485821285839

      Delete
    3. இந்த பாடல் கம்பர் எழுதிய பாடல் என்று நம்பப்படுகிறது இதைப் பற்றி பத்து வருடம் முன் ( 2010 ) எழுதியது இங்கே https://sujathadesikan.blogspot.com/2010/05/blog-post_17.html பிறகு ஸ்ரீராமானுஜர் பகுதியில் என்னையும் அறியாமல் அதை நுழைத்தேன். பிறகு கண்ணன் தானாக உள்ளே வந்து சேர்ந்தர். நிற்க.

      மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் வந்த கட்டுரைக்கு நான் முன்பு எழுதிய பகுதி ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று நான் அறிவேன். இதில் முக்கியமான விஷயம் கம்பர் ஏதோ ஊருக்கு வரவில்லை, அவர் வந்தது திருக்குருகூர் தான்! இதுவும் எனக்கு தெரியாது ஆனால் கட்டுரை எழுதிய பின் எனக்கு தெரியவந்தது. இது ஒரு கோயின்ஸிடன்ஸ்!

      Delete
  2. அக்ஷரலக்ஷம் பெறும் இந்தப்பதிவு. ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் எங்களை நாதமுனி அவர்களுடனேயே பயணிக்கவைத்து அவர் பேசியது, கேட்டது எல்லாவற்றையும் எங்களையும் அனுபவிக்க வைத்தது. ஆரம்பித்ததும் கவனம் சிதறாமல் படிக்கவைத்தது.
    அடியேன் தாசன். 🙏🙏

    ReplyDelete

Post a Comment