14. துதிக்கப்பெறுகை ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை பெற்ற நாதமுனிகள் சடகோபன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் திருக்குருகூரில் நிரந்தர நித்திய வாசம் செய்துகொண்டு இருந்தார் என்று நேயர்களுக்குச் சிறிது நினைவுபடுத்திவிட்டு, கதையில் மேலும் பயணிக்கலாம். சூரியன் மறைந்து, எல்லாத் திக்கிலும் இருள் சூழ்ந்த ஓர் இரவில் நாதமுனிகளுக்குக் கனவு ஒன்று வந்தது. முந்தைய அத்தியாயங்களில் சந்தித்து, பிறகு நாம் மறந்தே போன, நமக்கும் மிகவும் பரிச்சயமான வீரநாராயணப் பெருமாள் தான் அவர்! “நாதமுனிகளே! இவ்வளவு காலம் எம்மைப் பிரிந்து வாழ்வது உமக்குத் தகுமோ? இந்தத் தமிழ் பிரபந்தங்கள் அனைத்தும் உம் இசையில் கேட்க விருப்பம்; விரைவில் வீரநாராயணபுரம் வந்து சேரும்!” என்றார். “அடியேனை ஆட்கொண்ட ஒப்பற்ற வீரநாராயணபுரத்து எம்பெருமானே!” என்று நாதமுனிகள் கண்விழித்துப் பார்த்த போது, எங்கும் நிசப்தமாக மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்தது. சந்திரன் மேகக் கடலில் மறைய, சூரியன் மெதுவே தலைகாட்டிய அந்தக் காலைப் பொழுதில், நாதமுனிகள் ஆழ்வாரையும், பொலிந்து நின்ற பிரானையும் வணங்கி நின்றார். கோயில் அர்ச்சகர், “நாதமுனிகளே! நீ...