ஆண்டாளும் தோழிகளும் - வங்கக் கடல் கடைந்த - (பாசுரம் 30) (சூழல்: இது திருப்பாவையின் நிறைவுப் பாசுரம். இதுவரை தன்னை ஒரு ஆயர் சிறுமியாகப் பாவித்துப் பாடிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் 'வில்லிபுத்தூர் பட்டர்பிரான் கோதை'யாகத் தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். இந்தப் பாசுரங்களை ஓதுபவர்களுக்குக் கிடைக்கும் பலனை (பலச்ருதி) விளக்கும் வகையில் கண்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான இந்த இறுதி உரையாடல் அமைகிறது.) கண்ணன்: "கோதை! நீயும் உனது தோழிகளும் இந்த முப்பது நாள் நோன்பை மிகச் சிறப்பாக நிறைவு செய்து என்னைப் பாடிப் புகழ்ந்தீர்கள். ஊராருக்கு 'பறை' வேண்டும் என்று ஒரு சாக்குபோக்கு (வியாஜம்) சொல்லிவிட்டு, கடைசியில் 'குற்றேவல்' என்ற பெரும் பலனைப் பெற்றுவிட்டீர்கள். உங்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம்!" ஆண்டாள்: "வங்கக் கடல் கடைந்த மாதவா! கேசவா! இதையெல்லாம் உன்னிடமிருந்து தானே நாங்கள் கற்றுக்கொண்டோம்?" கண்ணன்: "என்னிடமா? நான் பசுவைப் போன்றவன், உங்களுக்கு எப்படி சாமர்த்தியத்தை கற்றுக்கொடுப்பேன் ?" ஆண்டாள்: "கண்ணா! நீ பாற்கடலைக் கடைந்ததற்கும், நாங்க...