Skip to main content

செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும்

செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும் 



தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஸ்ரீரங்கத்திலேயே இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? கர்நாடகா இருக்கும் திக்கை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கவேண்டும். காரணம் திரு நாராயணபுரம் என்ற மேல்கோட்டை. 

ஸ்ரீரங்கம் பெருமாளை ’நம்’ பெருமாள் என்று செல்லமாக அழைக்கிறோம். ஆனால் மேல்கோட்டை பெருமாளே ‘செல்ல’ப் பிள்ளை! இங்கே இருக்கும் பெருமாள் ’யதிராஜ’ சம்பத் குமாரன்.  இந்தப் பெயர்க் காரணத்தைச் சுருக்கமாகத் தருகிறேன். 

ஸ்ரீரங்கத்தில் உடையவருக்கு கிருமிக்கண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து தப்பி மேல்கோட்டை அடைந்தார். அங்கு வசித்த காலத்தில், ஒரு நாள் தம்மிடம் இருந்த திருமண் முழுவதும் செலவழிந்துவிட்டது.  வருத்தத்தில் இருந்த உடையவரின் கனவில் தோன்றிய பெருமாள், கல்யாணி புஷ்கரிணி அருகே ஒரு செண்பக மரத்தடியில், மரம் போல இருக்கும் பெரிய துளசிச் செடிக்கு அருகில் உள்ள புற்றுக்குள் தான் இருப்பதாகக் கூறி திருமண் கிடைக்கும் இடத்தையும் தெரிவித்தார். மறுநாள் காலை,  உடையவர் புற்றைக் கலைக்க அங்கே திருநாராயணன் ஜோதியாய் நிற்பதைக் கண்டார். அந்த மூர்த்தியை எழுந்தருளச் செய்து தன் கைகளாலேயே அதைப் பிரதிஷ்டை செய்தார். இருந்தாலும் உடையவருக்கு ஓர் உற்சவ மூர்த்தி இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. திருநாராயணன் மீண்டும் கனவில் தோன்றி தனது உற்சவ மூர்த்தியான ராமப்பிரியன் டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதாகக் கூறினார். உடையவர் டெல்லி சென்று, ராஜாவின் மகள் அந்தப்புரத்தில் இருந்த ராமப்பிரியனை பெரியாழ்வார் பாசுரம் மூலம் ஓடி வந்து ’செல்லப் பிள்ளையாக’ தன் மடியில் அமரச் செய்து மீட்டு வந்தார். ராமப்பிரியனை நேசித்த ராஜகுமாரி உள்ளம் உருகியதால், அவனை எப்போதும் பிரியாமல் அவன் திருவடிகளிலேயே வசிக்கும்படி செய்கிறேன் என்று சொல்லி, அவளைப் போலவே ஒரு விக்ரகத்தைச் செய்து ராமபிரியன் திருவடிகளிலேயே வசிக்கும்படி செய்தார். இன்றும் மூலவர் மற்றும் உற்சவர் இருவரின் திருவடிகளிலும் இந்த விக்ரகத்தைக் காணலாம்.

திருநாராயணபுரம் எனக்கு எப்போதும் பிடித்த இடம். இந்தப் புண்ணிய பூமி தான் ஸ்ரீராமானுஜரை நமக்கு ரக்ஷித்து கொடுத்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ராஜ்யம் என்றால் மேல்கோட்டை  யதிராஜரின் ராஜ்யம். இன்றும் அந்த ஊர் ராமானுஜரே கதி என்று யதிராஜரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊர் மக்கள் ராமானுஜருக்கு காட்டிய பரிவை இன்றும் நம்மிடம் காட்டுவார்கள். ஸ்ரீராமானுஜர் சந்நிதியில் அர்ச்சகர்கள் இன்முகத்துடன் சேவை செய்து வைப்பார்கள். இதனால் தான் என்னவோ ஸ்ரீராமானுஜர் பரமபதம் செல்லும் முன் ஸ்ரீபாஷ்யம், திருவாய்மொழி என்று எதுவும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை “திருநாராயண புரத்தில் ஒரு குடிலாவது கட்டிக்கொண்டு அமைதியுடன், மனத்திருப்தியுடன் வாழ வேண்டும்” என்று உபதேசித்துவிட்டுச் செல்கிறார்.

சிறு வயதில் என் அப்பா ஸ்ரீராமானுஜருடைய மூன்று முக்கியமான திருமேனி குறித்து அடிக்கடி சொல்லுவார். கேட்பதற்குச் சுவாரசியமாக இருக்கும் . அந்த மூன்று திருமேனிகளின் படத்தை ஒன்றாக ஃபிரேம் போட்டு அதற்குக் கீழே 

1 தமர் உகந்த(மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம்),

2 தான் உகந்த(ஸ்ரீபெரும்புதூர்), 

3 தான் ஆன திருமேனி(ஸ்ரீரங்கம்)

என்று எழுதி மாட்டியிருந்தேன். 

மேல் உள்ள வரிசைப் படி உடையவரின் திருமேனிகளை நமக்குக் கிடைத்தது. அதாவது முதல் திருமேனி மேல்கோட்டை, அடுத்து ஸ்ரீபெரும்புதூர், பிறகு ஸ்ரீரங்கம். 

இந்தப் பெயர்கள் எல்லாம் கொஞ்சம் குழப்பும். நினைவு வைத்துக்கொள்ளச் சுலபமான வழி ‘தமர்’ என்ற வார்த்தையைப் பிடித்துக்கொள்ளுங்கள். 

முதல் திருவந்தாதியில் ‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்று பொய்கையாழ்வார் கூறுகிறார். ‘தமர்’ என்றால் அன்பர்கள்/அடியார்கள் என்று பொருள். கிருமிகண்ட சோழன் மாண்டு ஸ்ரீரங்கத்தில் அமைதி திரும்பிய பின், ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்குப் பயணமாவதற்கு ஆயத்தமான போது அவருடைய சீடர்கள் ஸ்ரீராமானுஜரைப் பிரிய வேண்டுமே என்று வருத்தமுற்றார்கள். ‘தேவரீரைப் பிரிந்து எப்படி நாங்கள் வாழ்வது? எங்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்’ என்றார்கள். 

’உங்களை அழைத்துச் சென்றால் செல்லப் பிள்ளையை யார் பார்த்துக்கொள்வது?’ என்று கூறிய ஸ்ரீராமானுஜர், உங்கள் வருத்தத்தைப் போக்க தம்மைப் போலவே ஒரு விக்ரகத்தைச் செய்யச் சொல்லி, அதில் தம் சக்தியைப் புகுத்தி அவர்களிடம் அளித்தார். இந்த விக்ரகம்  ‘தம்ர்’ உகந்த திருமேனி என்று பிரசித்தம். அந்த விக்ரகத்தை இன்று பார்த்தாலும் நம்மிடம் பேசுவது போலவும், நம்மைப் பார்த்துப் புன்னகைப்பது போல இருக்கும். கைக்குழந்தையைக் குளிப்பாட்டும் போது கண்களை மூடிக்கொண்டு, எப்படி சிணுங்குமோ அதுப் போலத் திருமஞ்சனத்தின் போது இந்த ராமானுஜரின் திருமேனியும் கண்களை மூடிக்கொண்டு சிணுங்கும்!  ( பார்க்க ராமானுஜர் 1000வது திருநட்சத்திரம் போது அடியேன் எடுத்த சில படங்கள் ) 




சில ஆண்டுகளுக்கு முன் மேல்கோட்டை சென்றிருந்த போது எதிராசர் சந்நிதி வாசலில் ‘தான் உகந்த திருமேனி’ என்று எழுதியிருந்ததைப் பார்த்துக் குழம்பினேன். ‘தமர் உகந்த’ என்பதற்குப் பதில் ’தானுகந்த’ என்று தப்பாக எழுதியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். பிறகு ஒரு முறை பட்டணா ஸ்வாமிகளிடம் இதைக் குறித்துக் கேட்ட போது அவர் மேல்கோட்டையில் ‘தானுகந்த’ என்று தான் சொல்லுவார்கள் என்றார். 

யதிராஜருக்கு பெருமாள் செல்லப் பிள்ளை. ’தான் உகந்து தமர்களுக்கு அளித்த திருமேனி’ இந்த ஊர் மக்களுக்குச் செல்லமான பிள்ளை !

-சுஜாதா தேசிகன்
படத்தில் : ஸ்ரீராமானுஜரும் செல்லப் பிள்ளையும்.
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம் வரிசையில் எழுத்தப்பட்ட பதிவு
படம்: கஸ்தூரி ரங்கன்

Comments

  1. Ramanuja's period is generally believed to be between the 11th and 12th centuries. However, according to this article, he is said to have rescued the idol of Ramapriyan from the Delhi Sultan. This raises a historical inconsistency, as the Mughal Empire came to India much later, around the end of the 15th century. I seek clarification on this point, as I may be mistaken.- Rama Narayanan Coimbatore

    ReplyDelete

Post a Comment