Skip to main content

வாட் அன் ஐடியா சர்ஜி!

வாட் அன் ஐடியா சர்ஜி!




பஹல்காம் தாக்குதலின் கொடூரம் விஷயம் - ஆண்களையும் பெண்களையும், இந்துக்களையும் முஸ்லிம்களையும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பிரித்துப் பொறுக்கி திடீர் என்று அடித்தது தான். கூடவே “உங்க மோடியிடம் போய் சொல்லு” என்று செய்தி அனுப்பினார்கள்.  இறந்த கணவர் அடிப்பட்டுக் கிடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்த அந்தத் தேன்நிலவு ஜோடியின் படம் எல்லோரையும் உலுக்கியது. 

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று பாரத மக்கள் எல்லோரும் மோதி மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பீஹார்  அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் டிரம்ப் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக ஆங்கிலத்தில் சூளுரைத்தார். நம் எல்லோர் மனதிலும் அடிப்பார் என்று தெரியும் ஆனால் எப்போது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உறுத்திக்கொண்டு இருந்தது. 

பொறுக்கி அடித்த அந்தப் பொறுக்கிகளுக்கு மோதி என்ன மாதிரி அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் என்பதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முதலில் நதி நீர் கிடையாது என்றார். உடனே எல்லோரும் அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுரை கொடுக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுத் தலைவர்களிடம் பேசினார்கள். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்றார்கள். ஐக்கிய நாடுகள் அவர்களின் பங்கிற்கு அறிவுரை கொடுக்க, மோதி முப்படைகளின் தளபதிகளைச் சந்திப்பு நிகழ்ந்தது. பிறகு கப்பலிலிருந்து ஏவுகணையை ஒத்திகை செய்வது,  போர் விமானங்களைப் பறக்க விடுவது போன்றவை நடந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதற்கு இடையில் மீண்டும் அமெரிக்கா போன்ற தோழமை நாடுகளுடன் இந்தியா தன் நிலையை எடுத்துக் கூறிக் கொண்டு இருந்தார்கள். இப்போது எல்லோர் மனதிலும் இந்தியா உடனே எதுவும் செய்யாது, கொஞ்சம் நாள் கழித்து அடிக்கும் என்ற எண்ணம் வரத் தொடங்கியது. பிரதமர் பாதுகாப்பு அமைச்சகம், முப்படை அனைத்துக் கட்சிக் கூட்டம், என்று பல கூட்டங்கள் நடத்திக்கொண்டு அதன் படங்கள் நாளிதழ்களில் வந்தது.  ஒரு வாரம் கடந்தது. இதற்கிடையில்  பஹல்காமில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தீவிரவாதிகளின் தாக்குதலால் நாட்டில் மதக் கலவரம் வரக் கூடாது போன்ற பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு வரத் தொடங்கியது. ‘அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி ! ’ என்ற வாசகங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் கூட சுமுகமாகப் பேச்சு வார்த்தை தான் தீர்வு என்று புத்தர் போல உபதேசம் செய்ய, சமூக ஊடகங்களில் காந்தி கூறிய உபதேசங்களைப் பொழிந்து கொண்டு இருந்தார்கள். 

நம் மனதில் இந்தியா ஏன் இப்படிக் காலத்தைக் கடத்துகிறார்கள் வழக்கம்போல வழவழ கொழகொழ என்ற நினைப்பு வரத் தொடங்கியது. 

திடீர் என்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. எல்லோரும் ஆர்வமாக எதிர்ப்பாக்க - அது ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்ற புஸ்வாணத்தைக் கொளுத்திப் போட, வழக்கம் போல அரசியல் தலைவர்கள் தங்கள் தினசரி வேலையான ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மும்முரமாகச் செய்துகொண்டு இருக்க, மோதி அரசு விழாக்களில் கலந்துகொண்டு பேசிக்கொண்டும், அடிக்கடி போர் விமானங்கள் பறப்பதும், பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூட்டம் நடத்துவதுமாக இரண்டு வாரங்கள் கழிந்தது. சில நாட்களுக்கு முன் போர்க் கால நடவடிக்கைக்கு எந்த மாதிரி நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற பாடங்களும், பாடங்கள் உலாவத் தொடங்கியது. சரி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு பொறுமையாக அடிப்பார்கள் போல என்று நமக்குத் தோன்றியது. இவை எல்லாம் திசை திருப்பும் யுத்திகள் என்று யாருக்கும் தெரியவில்லை. 

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ராம நவமி கொண்டாடிய அன்று இரவு, ‘சிந்தூர்’ தாக்குதல் நடைபெற்று, ஒன்பது இடங்களில் தீவிரவாதிகளின் கூடாரங்களைத் துல்லியமாக அடித்து தும்சம் செய்யப்பட்ட செய்தி எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மோதி மேஜிக்கை நடத்திவிட்டார் என்று பாரத மக்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். இனி தான் இன்னொரு பெரிய அதிர்ச்சி வரப் போகிறது என்பதை யாரும் யூகிக்கவில்லை. 

அடிப்பட்ட பாகிஸ்தான் மருந்து தடவிக் கொண்டு இருந்த போது அந்த ஆச்சரியம் நிகழ்த்தப்பட்டது. தாக்குதல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் இரண்டு பெண்கள் - ராணுவத்தின் கரமாக கர்னல் சோஃபியா குரேஷி என்ற முஸ்லிம் பெண்மணியும், வானத்தின் வேகமாக விமானப்படையின் விங் கமாண்டர் வ்யோமிகா சிங்கும்,  இரண்டு மொழிகளில் உலக மக்கள் எல்லோருக்கும் புரியும் வண்ணம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பெருமிதத்துடன் எப்படி அடித்தோம் என்று படம் போட்டுக் காண்பித்தார்கள். 

அந்த ஹினிமூன் ஜோடியின் கொடுமையான படத்துக்கு ஆறுதலாக, அந்த இரண்டு பெண்களின் காட்சி பாரதத் திருநாட்டின் ஒரு தேசிய அடையாளமாக,  அன்று இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டது. 

ஏவுகணையின் துல்லியத் தாக்குதலைவிட, இந்த இரண்டு பெண்களின் துல்லியத் தாக்குதல் அதிர்ச்சி கலந்த வலியைக் கொடுத்திருக்கும். 

’மோதியிடம் சொல்லு’ என்பதற்குப் பதிலாகவும் இது அமைந்திருந்தது. 

வாட் அன் ஐடியா சர்ஜி!

 
-சுஜாதா தேசிகன்
8.5.2025

Comments