Skip to main content

சௌரிராஜனும் யதிராஜனும்

சௌரிராஜனும் யதிராஜனும்



ஒரு முறை ஸ்ரீராமானுஜர் தன் குரு யாதவ பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாகத் தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கண்கள் தாமரை போன்றது. அந்தக் கமலம் குரங்கின் பின்பகுதியைப் போலச் சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதைக் கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்றார்.

பதிலைக் கேட்ட யாதவபிரகாசர் ‘ஆஸம்’ என்று கூறாமல், ராமானுஜர் மீது கோபம் கொண்டு, கொல்லவும் துணிந்தார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தாமரைப் பூபோன்ற பெருமாளின் கண்களை மட்டும் மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, நாம் திருக்கண்ணபுரத்துக்குச் செல்லலாம். அங்கே இந்த தாமரையை மேலும் விரிந்து மலரச் செய்யலாம்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் சந்நிதி முன் நம் திருமங்கை ஆழ்வார் கைகூப்பிக் கொண்டு நிற்கிறார். அவர் தோளில் சங்கு சக்கர இலச்சினை தீர்க்கமாகத் தெரிகிறது.

பெருமாள் “ஆழ்வாரே! என்ன விசேஷம் ? இங்கு வந்துள்ளீர் ?” என்று கேட்க

ஆழ்வார் “வைணவ இலச்சினைகளைத் தாங்கி வைணவ லட்சணத்துடன் திகழ்ந்தால் தான் மாலையிடுவேன் என்று குமுதவல்லி கூற, அடியேன் திருநறையூர் நம்பியிடம் ஓடிச்சென்று தமக்கு வைணவ அடையாளமிட வேண்டினேன். அவரும் மனமுவந்து அடியேனுக்குப் பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்து, ’ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்தார்” என்றார்.

“அப்படி என்றால் திருநறையூர் நம்பியே உமக்கு ஆசாரியன். நம்பி மந்திரத்திற்குப் பொருள் கூறினாரோ ?”

“அதன் பொருளை உம்மிடம் கேட்கச் சொல்லிவிட்டார்!” என்று கூற

திருக்கண்ணபுரம் சௌரிராஜன் திருமங்கை ஆழ்வாருக்குத் திருமந்திரத்தின் அர்த்தத்தைக் கூற ஆழ்வார் கைகட்டி வாய் புதைத்து அதைத் தன் செவிகளால் கேட்டு உணர்ந்தார்.

உபதேசம் முடித்து பெருமாள் ”கலியனே! அர்த்தம் எல்லாம் விளங்கியதா? உமக்குப் புரிந்தவற்றைச் சொல்லும்” என்று கேட்க

மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே

என்றார்.

பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் நடந்த இந்த விஷயத்தை நஞ்சீயர் தன் காலட்சேபத்தில் கூறி, ’மூன்று பதங்களுடன் கூடிய திருமந்திரம் - ப்ரணவம், நம, நாராயண என்று மூன்று பொருள்கள் பொதிந்துள்ளது; ஜீவாத்மா நாராயணனுக்கு மட்டுமே வசப்பட்டவன் என்ற எண்ணமும், நாராயணனைத் தவிர ஜீவனுக்கு வேறு உபாயம் இல்லை என்றும், நாராயணனின் மகிழ்விப்பது மட்டுமே தனது கைங்கரியமாகக் கொண்டிருப்பது. ஆனால் ஆழ்வாரோ நான் உனக்கு அடிமைப்பட்டவன் இல்லை. உன் அடியார்க்கு அடிமைப்பட்டவன்’ என்று கூறுகிறாரே இதனால் பெருமாளின் திருவுள்ளம் எப்படிப் பாடுபடுமோ!” என்று கூற அதற்கு நம்பிள்ளை

“பெருமாள் வருத்தப்படுவாரோ இல்லையோ நீர் வருத்தப்படுகிறீர் போல் தெரிகிறது. கமலக் கண்ணனாய் இருக்கும் பெருமாள், ஆழ்வார் கூறுவதைக் கேட்டு ’அல்லிக்கமலக் கண்ணனாய் இருப்பான்” என்றார்

”அப்படி என்றால் என்ன?” என்று நஞ்சீயர் கேட்க நம்பிள்ளை தொடர்கிறார்

“நம்மாழ்வார் எம்பெருமானுடைய அடியவர்களுக்குத் தாம் அடிமைப் பட்டவர் என்பதைக் கூறும் ‘நெடுமாற்கடிமை’ பாசுரத்தின் கடைசியில் ‘அல்லிக் கமலக் கண்ணனை’ என்று அருளிச் செய்கிறார். இயற்கையாகவே தாமரைப் பூ போன்ற திருக்கண்களை உடைய எம்பெருமான் தன் அடியவர்களுக்கு ஆழ்வார் அடிமைப்பட்டவர் என்பதைக் கேட்டது மிக்க மகிழ்ச்சியினால் அகவிதழ்களும் நன்கு விரிந்து தெரியும்படி நன்றாக மலர்ந்த தாமரை போன்ற திருக்கண்களுடன், அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பான். ( அல்லி - அகவிதழ் )”

அதாவது தன்னிடம் அடிமைப்பட்டிருப்பவர்களைக் காட்டிலும், தன் அடியார்களிடம் அடிமைப் பட்டவர்களைக் குறித்து எம்பெருமான் மகிழ்கிறார் என்பது.

திருவரங்கத்தமுதனார் இராமாநுச நூற்றந்தாதியில்

தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே

எல்லோரும் தம்மைப் பற்றுகிறார்களே தவிரத் தன் அடியவர்களை யாரும் பற்றுவதில்லை என்று தன் அடியார்களை ஆச்ரயிக்கிற அதிகாரியாகட்டும் இந்த அமுதனார் என்று என்னை அவர் அருளாலே தன் அடியார்களின் திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட்செய்யும்படி அருளினார்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன் யதிராஜ விம்சதியில் உன் திருவடிகளைப் பற்றியிருந்த கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் போன்றவர்களின் திருவடிகள் என் எண்ணத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் யதிகளின் அரசனே, மந்திரங்களின் அரசனான திருமந்திரத்தின் பொருளை அடியேனுக்கு அறியும்படி நீ வரம் அளிக்க வேண்டும் என்று பிராத்திக்கிறார்.

இதனால் தான் நம் ஸ்ரீ வைஷ்ணவத்தில் லக்ஷ்மணன், பரதனைக் காட்டிலும் சத்ருக்னனுக்கே ஏற்றம் அதிகம்.

-சுஜாதா தேசிகன்
20.5.2025
படத்தில் : சௌரிராஜனும் யதிராஜனும்
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம் வரிசையில் எழுத்தப்பட்ட பதிவு
படம்: கஸ்தூரி ரங்கன்

Comments