பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்! உற்சவத்தின் போது நாயந்தே என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. அதை கடைசியில் சொல்லுகிறேன். இப்போது பெரியாழ்வாரை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லலாம். ஆழ்வார் பெரிய ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றால், கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சியளிக்கிறார். பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? பல்லாண்டு, ஆண்டாளின் தகப்பனார், விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல். இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம். ஒரு அன்பர், “சரணாகதியில் பெரிய பெருமாள் திருவடிகளைப் பற்றுகிற மாதிரி திருவேங்கடமுடையான் திருவடிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உண்மைதான். “அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று திருவேங்கடமுடையான் திருவடிகளைத்தான் ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரே சொல்லியிருக்கிறார். அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி...