Skip to main content

பேயாழ்வார் பிறந்த இடம்

பேயாழ்வார் பிறந்த இடம்


திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று
- பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி

என் மகன் ஐந்தாவது படிக்கும் போது அவனுக்கு ஆழ்வார் கதைகளைச் சொல்லி வைத்தேன். ஒரு நாள் அவன் புத்தகப் பையைப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட காகிதங்களில் ’ஆழ்வார் கதைகள்’ என்ற தலைப்பில் முதலாழ்வார்கள் கதை காமிஸ்க் வடிவில் வரைந்திருந்தது கண்ணில் பட்டது. ( ஒரு பக்கத்தைத் தந்துள்ளேன்).



சமீபத்தில் தோளுக்கு மேல் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அவனுடன் ஒரு விடியற்காலை சென்னையைச் சுற்றி நடந்த போது, முன்பு அவன் வரைந்த காமிக்ஸ் வரைபடத்தைப் பற்றி பேச்சு வந்தது. என் கைப்பேசியில் அவன் வரைந்த அப்படத்தைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வி “பேயாழ்வார் மைலாப்பூரில் தான் பிறந்தாரா?. பிறந்த இடம் இன்னும் இருக்கிறதா?’

‘இருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன்.
‘இப்போது போய் பார்க்கலாமா?’
உடனே ஓர் ஆட்டோவை பிடித்து மைலாப்பூர் சென்றோம்.

பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியத்தின் போது பாடப் படும் முதல் வரி இது “நல்லார் நவில்கின்ற நன்மயிலை மாநகரில் நலமாக நாம் உய்ய வந்த பெருமாள்” என்கிற அந்த நன்மயிலை மாநாகர் இன்று மெட்ரோ அகழ்வாராய்ச்சியால் லஸ் மெஸ் ஆக இருக்க, சுற்றி வந்த போது லண்டனிலும் இருக்கும் அருண்டேல் தெருவைக் கண்டு பிடித்து பெருமூச்சு விட்ட போது ஒரு பெருச்சாளி ஓடியது. அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ஸ்விக்காரர்கள் ராயர் இட்லி பொட்டல மூட்டையைச் சூட்டோடு சூடாக நல்லார் நவிலச் சுமந்தோடிக்கொண்டிருக்க, ’இங்கேயா ஆழ்வார் பிறந்தார்?’ என்று அவன் சந்தேகத்துடன் கேட்டான்.

ஆமாம் ஒரு கிணற்றிலிருந்து அவதரித்தார் என்றேன்.

முதலாழ்வார்கள் கதை உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்தது. கீழே உள்ள வார்த்தைகளைப் படித்து மீண்டும் நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு மழை நாள் இரவு

இடைகழியில் மூவரும் சந்திக்க
ஒருவர் படுக்கலாம்
இருவர் இருக்கலாம்
மூவர் நிற்கலாம்
ஆயன், மாயனைப் பற்றிப் பேசப்
பெருமாள் பிராட்டியுடன் நெருக்க
ஞான விளக்கு தமிழில் ஏற்றப்பட்டது

ஸ்வாமி தேசிகன் தன் ’ரஹஸ்யத்ரய சாரத்தில்’ இந்த அழகிய தேசிகப் பிரபந்தத் தமிழ் பாசுரத்தை மேற்கோள் காட்டுகிறார்

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள்தரும் மாயன் நலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க
வீட்டுக்கு இடைகழிக் கேவெளி நாட்டும் அம் மெய்விளக்கே

[ பழையவர் மூவர் - முதலாழ்வார்கள்; மாடு - செல்வமாகிய ஆன்மா ; இருள் செக - அஞ்ஞானம் நீங்க; நடை - வழி ; வீட்டுக்கு - மோட்சம்; நான் மறை அந்தி - உபநிடதம் ; வெளி - உபாயங்கள் வருந்துதல் - நெருக்குதல் ]

பேய் என்ற சொல் ’பெரிய’ என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது. ’திருக்கண்டேன்’ என்று பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு எம்பெருமானை நேரில் கண்டு அனுபவித்து உணர்ந்த முதல் ஆழ்வார் இவரே. இவர் பெரியவர் என்பதற்காக இந்தத் திருநாமம். மேலும், நம்மைப் போல் ஷேர் ஆட்டோ பிடித்து உண்டியே உடையே உகந்து ஓடாமல், தாயாருடன் கூடிய பெருமாளின் திருவடியில் பெருங் காதலுடன் பக்தியின் மயக்கத்தால் ஞான பித்தனாக, பேய் போலத் திரிந்தமையால் பேயாழ்வார் என்று பெயர் பெற்றார்.

நம்மாழ்வார் முதலாழ்வார்களை ’இன்கவிபாடும் பரம கவிகள்’ என்றும் திருமங்கை ஆழ்வார்’ செந்தமிழ்பாடுவார்’ என்றும் கொண்டாடுகிறார்கள்.

குருபரம்பரை முதலாழ்வார்கள் மூவரும் கண்ணபிரான் அவதரித்த துவாபர யுகத்தில் தோன்றியவர்கள் என்றும், தற்போது உள்ள ஆராய்ச்சியாளர்கள் 7ஆம் நூற்றாண்டு என்று கருதுகிறார்கள். எது எப்படியோ ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு மெய்விளக்கு ஒளியையும், அழகிய தமிழ் அழகையும் கூட்டி உருவாக்கியதில் இந்த மும்மணி ஆழ்வார்கள் மிகவும் பழைமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

திருக்கண்டேன் என்று பிராட்டியை வணங்கி தன் திருவந்தாதியைத் தொடங்கிய பேயாழ்வார் ’அமரும் பூமேல் திரு’ என்று பிராட்டி திருவடிகளே எனக்கு எப்போதும் சரணம் என்று ஸ்ரீ வைஷ்ணவத்தின் பக்தி நெறியை நமக்குக் காட்டிக் கொடுத்த இந்த அற்புத ஆழ்வார் ‘தேனமர்சோலை மாடமா மயிலை’ என்று புகழ்பெற்ற இவருடைய பிறந்த இடத்தை அடைந்த போது எங்களுக்கு அதிர்ச்சியே காத்துக்கொண்டு இருந்தது.




பக்தி சுவையைக் கூட்டி அன்பு விளைந்த அருந்தமிழ் பாசுரங்களை அருளிய ஆழ்வாரின் பிறப்பிடம் இன்று குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது. ஆழ்வார் அவதரித்த கிணறு அமைந்த ஸ்தலத்தை ’பேயாழ்வார் அவதார ஸ்தலம்’ என்ற பலகையுடன் அதன் வாயிலில் மரக்கட்டையினால் ஆன ஆர்கானிக் 'நோ பார்க்கிங்’ அரண் ஒன்றை அமைத்திருந்தார்கள். வாயில் சுதந்திரத்துக்கு முன் 1915ல் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று பேயாழ்வார் அவதாரம் குறித்து பேயாழ்வார் பஜனசபை யாரால் 'திருமயிலாப்பூர் ஆதிகேசப் பெருமாள் சன்னதியை சேர்ந்த ஸ்ரீ பேயாழ்வார் அவதரித்த வருடம், திதி, நட்சத்திரம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் அங்கே பத்திரமாக இருப்பது வியப்பைத் தருகிறது.

அதன் அருகில் ஒரு பாழடைந்த மண்டபம் குப்பை குளமாக - சுருட்டிய பழைய படுக்கை, ஒரு சரக்கு பாட்டில், சில எச்சில் இலை, பழைய வீட்டு ஓடுகள், புதிய முட்டை ஓடுகள் என்ற குப்பையுடன் போதாக்குறைக்கு ஒரு குப்பைத் தொட்டியும் அதனுடன் இருக்கிறது. மூக்கை மூடிக் கொண்டு அதன் அருகில் சென்றால் அங்கேயும் ஒரு கல்வெட்டு.

சற்று அருகில் சென்று பார்த்த போது ’அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை - 4

நெ 24, அருண்டேல் தெரு, திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டிடம்’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

இன்னும் சில காலத்தில் அந்த மிச்சச் சொச்சம் கட்டிடமும் அழிந்து, ‘திருக்கோயிலுக்கு சொந்தமான குப்பை மேடு’ என்று எழுத வேண்டியிருக்கும்.

நாம் நம் பாரம்பரியத்தைக் காக்காமல் வெகு தூரம் சென்றுவிட்டதற்கான சாட்சி இது. ஆங்கிலத்தில் “"Don't sell your heritage for a mess of pottage" என்பார்கள் அதற்கு எடுத்துக்க்காட்டாக இந்த இடம் இன்று விளங்குகிறது.

’மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்’ என்று நம் ராமானுஜர் போற்றும் பேயாழ்வார் அவதரித்த இடம் இப்படி இருப்பது காணும் போது நம் கையாலாகாத தனத்தை நினைத்து Thomas Babington Macaulay எழுதிய இந்த வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

And how can man die better
than facing fearful odds,
for the ashes of his fathers,
and the temples of his Gods?

- சுஜாதா தேசிகன்
21.6.2025

Comments