நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் - ஆண்டாள், நாச்சியார் திருமொழி ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள். “காபித் தண்ணி கிடைக்குமா?” என்றாள் “கிடைக்கும் பேசாம வா!” “உள்ளே அஞ்சு மாசக் குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல் காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து அழுத்தினான். “காபி கிடைக்குமா கேளுங்க.” “சட்... சும்மா இரு..” என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது...