108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம்.
திருச்சியில் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு உத்தியோகத்துக்கு சென்னைக்கு வந்த போது என் அப்பா ’சென்னையை சுற்றி நிறைய திவ்ய தேசங்கள் இருக்கிறது, வாரயிறுதியில் முடிந்தால் செல்’ என்று கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும், லிப்கோ 108 திவ்ய தேசங்கள் என்ற புத்தகம் ஒன்றையும் எனக்குக் கொடுத்தனுப்பினார். திருவல்லிக்கேணியில் ஒண்டியாக இருந்த போது பைக்கில் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று அதைக் குறித்து எழுதினேன். என் முதல் எழுத்து இப்படித் தான் ஆரம்பித்தது என்று கூடச் சொல்லலாம். என்றாவது ஒரு நாள் எல்லா திவ்ய தேசம் குறித்து எழுதி படங்களுடன் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் திவ்ய தேசப் பெருமாள் படங்களையும், புத்தகங்களையும் சேகரிக்கத் தொடங்கினேன்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு பிரபல வார இதழில் 108 திவ்ய தேசம் என்ற தொடர் வந்தது, அதில் ஆச்சரியமான திவ்ய தேசப் படங்கள் வந்துகொண்டு இருந்தது. இது போன்ற படங்கள் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு வாரம் அந்தப் படத்துடன் ஓரத்தில் வாட்டர் மார்க் ஒன்று தெரிந்தது. ‘தஞ்சை மூர்த்தி’ என்று பிரபலப் புகைப்படக்காரர் திருவல்லிக்கேணியில் எனக்குப் பழக்கம் அவரிடம் இதைக் குறித்துக் கேட்டேன். அவர் ஐஸ் ஹவுஸ் பக்கம் தேடிப் பாருங்கள் என்று க்ளூ கொடுக்க, பல வாரங்கள் ஒவ்வொரு தெருவாகத் தேடி அலைந்து, அவரைக் கண்டு பிடித்து விசாரித்தேன்.
’இந்தப் படங்களை அந்த வாரப் பத்திரிக்கை எனக்குத் தெரியாமல் ’சுட்டு’ என் பெயரை அதிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கிறார்கள். எவ்வளவோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டேன்’ என்று அலுத்துக்கொண்டார்.
‘எனக்கு இந்த 108ப் படங்களும் வேண்டும் கிடைக்குமா?’ என்றேன்.
‘கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?’
‘எவ்வளவு ஆகும்?’
சொன்னார்.
அது நான் அப்போது வாங்கிக்கொண்டு இருந்த சம்பளத்தில் 50%.
நூறு ரூபாய் அட்வாஸ் கொடுத்துவிட்டு சில வாரங்களில் 108 படங்களும் கைக்குக் கிடைத்தது.
சமீபத்தில் ஆ.என்.ஆர் பிரிண்டர்ஸ் திரு ராஜன் அவர்களின் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.
அவசரமாக கிளம்பிய என்னிடம் ’உங்களுக்கு ஸ்பெஷலாக ஒரு பரிசு’ என்று பொட்டலத்தைக் கொடுத்தார். கிட்டத்தட்டக் கைக்குழந்தை எடையில் இருந்ததால் குனிந்து வாங்கிக்கொண்டேன்.
‘என்னது?’
‘வீட்டுக்குச் சென்று பிரித்துப் பாருங்கள்’ என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
ஆர்வம் தாங்காமல் ரயிலிலேயே அதைப் பிரித்தேன்.
108 திவ்ய தேசங்கள் புத்தகம்! நான் பல காலமாக நல்ல படங்களுடன் தொகுக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் கனவு புத்தகம் போலவே அது இருந்தது. வழவழப்பான ஆர்ட் பேப்பரில் , தேர்ந்தெடுத்த தகவல்களுடன் 430 பக்கம் கொண்ட ஒரு வண்ணமயமான ’காபி டேபிள்’ புத்தகம். இது அவர்களின் வெள்ளி விழா வெளியீடு! அவர்களுக்கு வாழ்த்துச் செல்லுவதுடன் அவர்களைப் பற்றி சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு முறை சுஜாதா அவர்களின் வீட்டில் இருந்த போது ஒரு பதிப்பாளர் நோட்டு புத்தகத்துடன் வந்தார். நெருக்கமாக எழுதிய அந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் புத்தகங்கள் கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என்று அதில் எழுதியிருந்தது. அதை கையில் வாங்கிய சுஜாதா அதை மேலாகப் பார்த்துவிட்டுத் திருப்பித் தந்தார். வந்த பதிப்பாளர் அவருக்குச் சேர வேண்டிய ராயல்டியை கொடுத்துவிட்டுச் சென்ற பிறகு, நான் ‘சார் கணினி யுகத்தில் இந்த மாதிரி நாற்பது பக்க நோட்டு புத்தகத்துடன்…’ என்று கேள்வியின் ஆரம்பத்தை புரிந்துகொண்ட சுஜாதா
‘தேசிகன், ஒன்றை கவனித்தீர்களா நான் அந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கு என்று பார்க்கவில்லை. தேவையும் இல்லை. ஏன் என்றால் இவர்கள் ’தொழில் தர்மம் தெரிந்தவர்கள்’ என்ற பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அதே போலத் ’தொழில் தர்மம்’ தெரிந்தவர்கள் தான் ஆர் & ஆர் பிரிண்டர்ஸ் & பப்ளிஷர்ஸ்; பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கநாயகி தாயார் & ஸ்ரீரங்கராஜன் திருப்பெயர்களைக் கொண்ட இவர்கள், ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாய புத்தகங்களைக் கடந்த 25 வருடங்களாக அச்சடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே பெரிய சாதனை என்பேன். அனைத்து ஆசாரிய பீடங்களுக்கும் கிரந்தங்கள், உற்சவப் பத்திரிக்கைகள் இங்கு தான் பிரிண்ட் செய்யப் படுகிறது. இங்கே வேலை செய்யும் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்கள் போலப் பழகுபவர்கள். இதுவே அந்த நிறுவனத்தின் ஆணிவேர். குறித்த நேரத்தில், அழகாக அச்சடித்து தருவது போன்றவை உபரி தகவல்கள்.
சொல்ல மறந்துவிட்டேன், நமது ’ராமானுஜர் தேசிக முனிகள் டிரஸ்ட்’ வழியாக பிரசுரிக்கும் கிரந்தங்கள் அனைத்தும் இவர்களிடம் தான்.
108 திவ்ய தேசம் புத்தகத்தைப் பார்த்து வியந்து, ராஜனைக் கூப்பிட்டு ‘புத்தகம் அருமை, இதன் விலை 2500 இருக்குமா ?’ என்றேன்.
‘புத்தகம் விலை 1200/- உங்கள் பெயரைச் சொன்னால் நான் 1000/- தர ரெடி’ என்றார்.
நண்பர், உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு யோசிக்காமல் இதை தரலாம்.
புத்தகம் குறித்த விபரங்கள் :
விலை 1200/- ; (இந்தப் பதிவைப் பார்த்துவிட்டுக் கூப்பிட்டால் 200/- தள்ளுபடி உண்டு, போஸ்டல் சார்ஜ் எக்ஸ்டரா)
ஆ.என்.ஆர் சென்னை - தொடர்பு கொள்ள : 9710444027, Landline. 044 28441856
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்ரீரங்கம் - 9042453934
- சுஜாதா தேசிகன்
29.06.2025
Comments
Post a Comment