சௌந்தர்ய ராஜன் - சௌந்தர்ய எதிராஜன்
திருநாகை என்னும் நாகப்பட்டினம் என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான் சௌந்தர்ய ராஜன். நம்பெருமாள், வடிவழகிய நம்பி, செல்லப் பிள்ளை என்று ஸ்ரீராமானுஜருக்கும் அந்த எம்பெருமான்களுக்கும் பல குறிப்புகள் உள்ளன ஆனால் யதிராஜனுக்கும் சௌந்தர்ய ராஜனுக்கும் அப்படி எதுவும் இல்லை. உடையவர் தன் திக்விஜயத்தின் போது இந்தப் பெருமாளை தரிசித்தார் என்ற ஒரு வரி குறிப்பு மட்டுமே உள்ளது. அதனால் சௌந்தர்ய ராஜன், எதிராஜன் இருவருக்கும் சில குறிப்புகளைக் கொடுக்கிறேன். தவறாக இருந்தால் பொருத்தருள்க.
திருமங்கை ஆழ்வார் திருநாகை சௌந்தர்ய ராஜனிடம் மையல் கொண்டு இப்படிப் பாடுகிறார்.
பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்
அச்சோ ஒருவர் அழகியவா
’அச்சோ’ என்று தமிழில் வார்த்தை கிடையாது. ஆனால் ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சம் போது ‘அச்சச்சோ’ என்று கூறுவதைப் போல இந்த பெருமாளின் அழகில் ஆழ்வார் திளைத்து நிற்கிறார்.
திருமங்கை ஆழ்வார் நாயகியாகத் தன் தோழியிடம் கூறும் இப்பாசுரத்தைச் சற்று வார்த்தைகளை மாற்றி அமைத்து எப்படி அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
தோழி! அவன் என் இடுப்பையும், என் திரண்ட இளமையான கொங்கைகளையும் உற்றுப் பார்க்கிறான். இதை என் தாய் பார்த்தால் என்ன செய்வாளோ? எனக்குப் பயமாக இருக்கிறது. அவனின் ஒளிவீசும் பொன் போன்ற திருமேனியும், மின்னலைப் போல் ஜொலிக்கும் மரகத ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மார்பும் கொண்ட தேவாதி தேவன், வேதங்களை முனிவர்களுக்கு உபதேசித்தவன், அச்சோ! அவன் அழகை நான் எப்படி வர்ணிப்பேன்! என்று திக்குமுக்கு தெரியாமல் தவிக்கிறார்.
அழகைக் கூறும் போது லாவண்யம், சௌந்தர்யம் என்று இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. லாவண்யம் மொத்த அழகு, சௌந்தர்யம் என்பது அங்கம் அங்கமாக விவரிக்கும் அழகைக் குறிப்பது. (முன்னது சமுதாய சோபை என்றும் அவயவ சோபை என்று குறிப்பிடுவார்கள்)
திருமங்கை ஆழ்வாரை இன்னும் அனுபவித்துப் புரிந்துகொள்ளக் கம்பராமாயணத்தின் ஒரு பாடலை உங்களுக்குத் தருகிறேன். ராமன் சீதையை கன்னிமாடத்தில் பார்க்கிறான். பிறகு நேரில் பார்க்கிறான்.
முன் கண்டு. முடிப்ப அரு வேட்கையினால்.
என் கண் துணைகொண்டு. இதயத்து எழுதி.
பின் கண்டும். ஒர் பெண் கரை கண்டிலெனால்;-
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே?
ராமன் சீதையை முன்பே கன்னிமாடத்தில் சில நொடிகள் பார்த்து, தன் கண்களையே தூரிகையாகக் கொண்டு தன் இதயத்தில் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்கிறான். பின்பு, அவளை நேரே பார்த்ததும் சீதையின் அழகு ஓவியத்துக்குள் அடங்காதது, தன் கண்களுக்குள்ளும் அடங்காத எல்லையற்ற அழகு என்பதைப் புரிந்துகொள்கிறான். மின்னல் அடித்தவுடன் அதைப் பார்க்கும் கண்கள் எப்படிக் கூசுமோ, அதைப் போல அவள் அவயவ அழகைத் தனித்தனியாய்ப் பார்க்கும் போது ராமனின் கண் ஒளி மங்கித் திகைத்தான் என்கிறார் கம்பன். அதாவது சீதையின் மின்னல் போன்ற ஒளி வீசும் லாவண்யத்தால் அவளுடைய சௌந்தர்ய அவயவ அழகை ராமனால் தனித்தனியாய்ப் பார்த்து ரசிக்க முடியவில்லை.
திருமங்கை ஆழ்வார் பெருமாளின் அழகை ஒவ்வொன்றாக ’பொன் திருமேனி அச்சா’ ‘மரகத ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மார்பு அச்சா’ என்று வரிசையாக வர்ணித்து வரும் போது மின்னல் போன்ற அவன் மொத்த அழகையும் பார்த்து பகுத் ‘அச்சோ’ என்று முடித்துவிடுகிறார். கம்பனுக்கு ஹிந்தி தெரியாததால் அந்த வார்த்தையை உபயோகிக்கவில்லை போலும்!
திருநாகையில் உள்ள ஸார புஷ்கரணியில் நாகங்களின் அரசனான ஆதிசேஷன் கிரேதாயுகத்தில் தவமிருந்த போது எம்பெருமான் காட்சி கொடுத்து, ஆதிசேஷனை எப்போதும் தன் சயனமாக ஏற்றுக் கொள்வதாக அருளிய ஸ்தலம் இது. அதனால் தான் இந்த ஊருக்கு ’நாகன் பட்டினம்’ என்று பெயர். பிறகு அது நாகப்பட்டினம் என்று இன்றும் உருமாறாமல் இருக்கிறது.
அழகு, ஆதிசேஷன் என்ற இரண்டுமே ராமானுஜருக்கும் அப்படியே பொருந்தும்.
கண்ணனை ராமானுஜன் என்றும் கூறலாம் !
சமஸ்கிருதத்தில் ராமனுக்குப் பின்னால் தோன்றியவனை ராமானுஜன் என்று கூறலாம். ராமனுக்குப் பிறகு கண்ணன் வந்ததால் ‘ராமானுஜன்’. (பல)ராமனுக்குத் தம்பி ஆகிறான் கண்ணன் அதனாலும் ராமானுஜன் என்று அழைக்கலாம்.
யதிராஜனான ஆதிசேஷனே ராமானுஜர். ராமானுஜரும் கண்ணனைப் போலவே நல்ல அழகு, நல்ல தேஜஸ்.
உடையவரின் நிழல் போல எப்போதும் இருந்த எம்பாரின் இன்சுவைமிக்க இந்தப் பாசுரமே இதற்குச் சான்று.
பற்பமெனத்திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்தமருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் நிலாவழகும்
முன்ளவர்தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமேவிழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்
காரிசுதள்கழல் சூடியமுடியும் கனகநற்சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால்
இல்லையெனக்கெதிர் இல்லையெனக்கெதிர் இல்லையெனக்கெதிரே
தன் ஆசாரியனான உடையவரைக் காத்த கூரத்தாழ்வான் கிருமிகண்ட சோழனுடைய கொடுஞ்செயலினால் தன் கண்களை இழந்தார். உடையவர் பன்னிரண்டு வருடங்கள் திருநாராயணபுரத்தில் கழித்த பின் மீண்டும் திருவரங்கம் எழுந்தருளிய போது கூரத்தாழ்வான் “எனக்குக் கண் போனது பற்றி எந்தக் குறையில்லை. தேவரீருடைய அழகிய திருமேனியை திவ்ய மங்கள விக்ரஹ ரூபத்தில் சேவிக்கப் பெறுகின்றேன்” என்று அவர் சாதித்த ஸ்லோகம் இது ( சுமாரான தமிழில் கொடுத்திருக்கிறேன்).
“காஷாய சோபி கமனீய சிகா நிவேசம்
(பிரகாசிக்கும் அழகான காவி உடை, கவர்ச்சியான குடுமி,)
தண்டத்ரயோஜ்வல கரம் விமலோப வீதம்
(கையில் ஒளிபொருந்திய முக்கோல், தூய்மையான பூணூல்,)
உத்யந்திநேச நிபம் உல்லஸதரர்த்வ புண்ட்ரம்
(உதயமாகும் சந்திரனுக்கு ஒப்பான பிரகாசிக்கும் திருமண் காப்புடன்)
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே
(துறவிகளின் அரசனாக விளங்கும் யதிராஜனின் திருமேனி என்னெதிரே திகழ்கிறது)
இந்தத் திருமேனியைத் தான் இன்றும் நாம் ஸ்ரீபெரும்புதூரில் சேவிக்கிறோம்.
யதிராஜ மங்கள ஸ்லோகத்தில் வடுக நம்பி ராமானுஜரை “இவர் ஆதிசேஷனோ ? சேனைநாதனோ ? எம்பெருமானோ” என்று அதிசயப்படுகிறார். இந்த சௌந்தர்ய ராஜனே எதிராஜன் என்கிறார்கள் நம் பூர்வாசாரியர்கள்.
-சுஜாதா தேசிகன்
18.5.2025
படத்தில் : நாகை சௌந்தர்ய ராஜனுடன், சௌந்தர்ய எதிராஜன்
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம் வரிசையில் எழுத்தப்பட்ட பதிவு
படம்: கஸ்தூரி ரங்கன்
Comments
Post a Comment