Skip to main content

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள்

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள்




இன்று ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்.
ஆழ்வானைப் பற்றி சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

கூரத்தாழ்வானே நம் முன்மாதிரி

ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம்.
பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.
இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாகப் பெறுவார்கள் என்கிறார். இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார் ஆழ்வானுடைய தந்தையார். ஏன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன்.
ஆழ்வானின் சிறுவயதில் அவருடைய தாயார் பரமபதம் அடைந்தாள். ஆழ்வானைப் பார்த்துக்கொள்ள அவருடைய தந்தை மறுமணம் செய்து கொள்ள எண்ணினார். ஏறக்குறைய அது நடக்கும் சமயம், ஆழ்வானைப் பார்த்தார் அவருடைய தந்தை. எல்லா ஸ்ரீ வைஷ்ணவ இலட்சணங்களும் பொருந்தியவராக இருக்கும் ஆழ்வானுக்குத் தன் மறுமணத்தால், மாற்றாந்தாய்க்கு அடிமைப் பட்டிருக்க வேண்டி வரும், அவள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஆழ்வானைக் கொடுமைப் படுத்தினால், அதனால் தமக்குப் பாகவத அபசாரம் ஏற்படும் என்று கருதி மறுமணம் செய்துகொள்வதைத் தவிர்த்துவிட்டார்.
இப்பேர் பட்டவருடைய மகனான ஆழ்வான் எப்படிப் பட்டவராக இருப்பார் ?

ஒரு முறை கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல வெயில், பசி, சரி ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம் என்று தேடும்போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு இரு ஸ்ரீ வைஷ்ணவர் அங்கே தென்படச் சரி அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாதக் கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.
ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது. உள்ளே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ? அவர் பகவன் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு
“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்

சோழ அரசன் சபையில், ஆழ்வானுடைய சிஷ்யன் நாலூரான் ஏதோ சொல்லப் போக ஸ்ரீராமானுஜரையும் சம்பிரதாயத்தின் கவுரவத்தையும் காக்கத் தன் கண்களைத் தியாகம் செய்தார் ஆழ்வான் என்பது உங்களுக்குத் தெரிந்த கதை.
சில காலம் கழித்து ஆழ்வானைச் சந்தித்த ஸ்ரீராமானுஜர் மிகவும் வேதனையுடன், ஆழ்வானை வாரியணைத்துக் கொண்டு “விசிஷ்டாத்வைத தர்சனத்துக்காக ,உமது கண்ணை இழந்தீரே.உமக்கா இந்த நிலை?” என்று அழுதார்.
அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் திருமண் கோணியது என்று பாகவத அபசாரப்பட்டிருப்பேனோ” என்றாராம்.
பாகவத அபசாரம் என்பது எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது என்று நினைத்த ஆழ்வான் இதை விட அதற்குப் பிறகு அவர் செய்த காரியம் தான் அவர் கருணையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
ஆழ்வானும் எம்பெருமானாரும் காஞ்சிபுரத்துக்கு வந்த சமயம் உடையவர் ஆழ்வானை வரதாராஜஸ்தவத்தை பேரருளாளன் முன்பு விண்ணப்பம் செய்து, பதிலுக்குக் கண்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நியமித்தார்.
ஆசாரியர் சொன்னால் மறுத்துப் பேசக் கூடாது, அதனால் கூரத்தாழ்வானும் ஆசாரியர் கட்டளையை மறுக்கவிரும்பாமல் அப்படியே செய்தார். ஆழ்வான் வரதாராஜஸ்தவத்தை முடிக்கும் சமயம் பேரருளாளர் “என்ன வேண்டும் என்று கேட்க ?” அதற்குக் கூரத்தாழ்வான் “நான் பெரும்பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பது போல கூரத்தாழ்வானுக்கு ‘நம்’ அடைமொழி உண்டு.
இராமாநுச நூற்றதாதியில் .
”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”

பொருள்: முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வச் செருக்கு ( அதிகப் பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ).
இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூடத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர்.

மேலே குறிப்பிட்டுள்ள இராமநுச நூற்றந்தாதியில் “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார். காரணம் என்னவாக இருக்கும் ?

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் பிராத்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன் ஆனால் என்னுடைய நிழல் போல பெருமாளே உபாயம் (பாரதந்திரியத்தை) முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று விண்ணப்பிக்க
”அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி. இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று நாம் கொள்ளலாம்.

சம்பிரதாயத்தில் ஆழ்வான் என்றால் அது கூரத்தாழ்வான். ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வார்.
ஸ்ரீராமானுஜருடைய பிரதானச் சீடர் கூரத்தாழ்வானை, கூரத்தாழ்வார் என்று மரியாதையாகக் கூப்பிடாமல் ஒருமையில் ’கூரத்தாழ்வான்’ என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பார்கள்.
கூரத்தாழ்வார் என்பவர் அவர் திருதகப்பனார் அதனால் வேறுபடுத்திக்காட்ட இவரைக் கூரத்தாழ்வான் என்று அழைக்கிறார்கள் என்று பலர் கூறுவர். சில காலம் முன்புவரை, அடியேனும் அதே போலத் தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.
சில வருடங்களுக்கு முன் கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்றிருந்தேன். அங்கே சன்னதியில் கூரத்தாழ்வான் வாழ்க்கை சரித்திரம் படமாக இருந்தது அதில் ஏன் ஆழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிந்துகொண்டேன்.
கூரத்தாழ்வான் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்குக் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு எளிமையான விளக்கங்களைச் சொல்லிப் புரியவைப்பதில் வல்லவர்.
உதாரணமாக - “சிறுமா மனிசராய் என்னை ஆண்டார்” என்ற பாசுரத்தில் “சிறு - மா” அதாவது “சிறுமை - பெருமை” என்று ஒன்றுக்கொன்று முரண் பட்ட குணமாக இருக்கும் இரண்டும் எப்படி ஒருவருக்கு அதுவும் பெருமாளுக்கு இருக்க முடியும் ? என்று ஆழ்வானுடைய திரு குமாரரான பட்டர் கேட்ட போது அதற்குக் கூரத்தாழ்வான் ”ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் போன்றவர்கள் வடிவில்(மேனி) சிறுத்தவர்களாக இருந்தாலும், ஞானத்தால் உயர்ந்தவர்கள் அன்றோ?” அதே போல் தான் இதுவும் என்று பதில் சொல்லிப் புரிய வைத்தார்.
கூரத்தாழ்வானிடம் திருவாய்மொழி காலஷேபம் கேட்க வேண்டும் என்று நம் உடையவருக்கே மிகுந்த ஆசை. ஆனால் ஆசாரியரான ஸ்ரீராமானுஜருக்கு காலஷேபம் சொல்லக் கூரத்தாழ்வான் இசையவில்லை. எனவே முதலியாண்டான் போன்றவர்கள் ஆழ்வான் காலஷேபத்தைக் கேட்டு அதை ஸ்ரீராமானுஜரிடம் விண்ணப்பிப்பது என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
கூரேசர் திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமான "உயர்வற உயர்நலம் உடையவன்” என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாணக் குணங்களைப் பேசுகிறாரே என்று ஆழ்ந்து அந்த அனுபவத்தில் அப்படியே மயங்கி மோதித்துவிட்டார். இப்படி இவர் மயங்கியதை மற்றவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் தெரிவிக்க அவரும் ஓடி வந்து இது போலத் தான் “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாசம் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று சொல்லி, நம் கூரத்தாழ்வானும் நம்மாழ்வார் போல் பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு “ஆழ்வான்! ஆழ்வான்! ஆழ்வான்! எழுந்திரும்!” என்றாராம்.
அதனால் தான் அவர் ’ஆழ்வான்’ என்ற பெயருடன், அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வானின் மனம் கொஞ்சம் குழம்பியிருந்தது. பெரிய பெருமாள் அவரிடம் உமக்கு என்ன கலக்கம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஆழ்வான் “உடல் மிகவும் தளர்ந்து பகவானை முழுமையாக அனுபவிக்கக் கைங்கரியம் செய்ய முடியவில்லை, அதனால் என்னை விடுவித்து பரமபதத்தில் ஆத்மாவை நிலைக்க வைக்க வேண்டும் என்று வேண்டினார். பெருமாள் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரைச் சார்ந்த எல்லோருக்கும் பரமபதத்தை அளித்தார்.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீஇராமானுஜர் சந்தோஷமும் அதே சமயம் வருத்தமும் அடைந்தார்.
“எனக்கு முன் நீர் முந்திக்கொண்டீரே ? உம் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்வேன் ? ” என்ற போது ஆழ்வான் திருவாய்மொழி “சூழ்விசும்பு” என்று தொடங்கும் பாசுரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் புகுகின்ற புதியவர்களுக்கு ( ஜீவாத்மாவிற்கு ) வரவேற்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாம் முன்னே சென்றால் தான் பரமபதத்துக்கு பின்னே வருபவர்களுக்கு ( ஸ்ரீராமானுஜர் ) எதிர்கொண்டு மரியாதையுடன் எதிர்கொண்டு வரவேற்க முடியும். சீடரான தாம் முறைப்படி வரவேற்பு அளிப்பது தானே சரியாக இருக்கும் ?
இராமானுஜர் என்ன செய்திருப்பார் ? ஆழ்வானை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார்.
கூரத்தாழ்வான் பரமபதம் புறப்படும் சமயம், ஸ்ரீஇராமானுசர் ஆழ்வானின் காதுகளில் திருமந்திரத்தை ஓதினார். பிறகு மீண்டும் ஓதினார். பக்கத்தில் இருந்த சீடர்கள் ஏன் மறுபடியும் ஓதினீர்கள் என்று கேட்க அதற்கு உடையவர் ஓர் அரசிலங்குமாரன் வாயில் கற்பூரத்தைப் போட்டு கொள்ளாமல் இருந்தால் அவன் நாக்கு உலர்ந்து போய்விடும். அதே போல ஆழ்வானுக்குத் திருமந்திரம் தான் கற்பூரம், கூரேசர் நாக்கு உலந்து போகாமல் இருக்க மீண்டும் திருமந்திரத்தை ஓதினேன் என்றார். என்ன மாதிரி ஆசாரியன், என்ன மாதிரி சிஷ்யன்!

ஒரு முறை கூரத்தாழ்வான் உணவு பரிமாற இலை எடுக்கத் தோட்டத்துக்குச் சென்றார். அங்கே வாழை இலையை அறுத்தவர் அப்படியே கீழே மயங்கி விழுந்தார். மற்ற சிஷ்யர்கள் மயக்கம் தெளிய வைத்து என்ன என்று கேட்க அதற்கு ஆழ்வான் ’இலையை வெட்டினேன். வெட்டிய பகுதியிலிருந்து ஒழுகிய சாற்றினைக் கண்டேன். அது மாரத்தின் ரத்தம் போல எனக்குத் தோன்றியது. ஓர் உயிரைக் கொன்றுவிட்ட பாவியானேன்’ என்று புலம்பினார். பிறகு மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி இயல்பு நிலைக்கு வரவழைத்தனர்” என்றார்.

இன்னொரு சமயம் ஆழ்வார் இரவு நேரம் அடர்ந்த புதர்கள் நிறைந்த சாலை வழியே சென்று கொண்டு இருந்தார். அப்போது தவளை ஒன்று கத்துவது கேட்டது. சத்தத்தைக் கூர்ந்து கவனித்த ஆழ்வான். தவளை ஒரு பாம்பின் வாயில் சிக்கி உயிருக்குப் போராடும் சத்தம் என்று அறிந்துகொண்டார். அவரால் அந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. ‘ஐயோ உதவ முடியவில்லையே அந்தத் தவளை யாரிடம் சென்று உதவிக் கேட்கும்’ என்று நினைத்து மயங்கி விழுந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்று பாம்பின் தாடையைச் சாமர்த்தியமாக அகற்றி தவளையை விடுவித்தார். எவ்வளவு சிறிய உயிராக இருந்தாலும் அதன் மீது நமக்குக் கருணை இருக்க வேண்டும்” என்றார்

அந்த ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஒரே புதல்வன். ஒரு நாள் திடீர் என்று அவன் தன் சிகையை எடுத்துவிட்டு, வேறு மார்க்கம் சென்றுவிட்டான். பல காலம் தன் புதல்வனை நினைத்து அந்த ஸ்ரீ வைஷ்ணவர் மிகுந்த வேதனையில் துடித்தார். பல வருடங்கள் கழித்து ஒரு நாள் திடீர் என்று அவருடைய புதல்வன் திருமண் சிகையுடன் இல்லம் தேடி வந்து தன் தந்தையின் காலில் விழுந்தான்.
அந்தத் தந்தை அவனிடம் கேட்ட வார்த்தை “வழியில் ஆழ்வானைக் கண்டாயோ ?” என்பது தான்.
அப்பன் என்ற தனவந்தர் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குப் பக்கம் வசித்து வந்தார். ஆழ்வானைப் பற்றி அறிந்து அவரின் சீடராக வேண்டும் என்று விரும்பி ஆழ்வான் இல்லத்துக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக அப்போது ஆழ்வான் உயிர் பிரியும் சமயமாக இருந்தது. அதனால் அப்பன் ஆழ்வானைப் பார்க்க முடியவில்லை. மிகவும் மனம் வருந்தினார். அருகிலிருந்த பட்டரிடம் என்ன செய்யலாம் என்று கேட்க அதற்குப் பட்டர் “எப்பொழுது அப்பன் ஆழ்வானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாரோ அப்போதே ஆழ்வானின் சீடராகிறார்” என்றார். கூரத்தழ்வானின் சீடராக ஆகவேண்டும் என்ற எண்ணமே ஒருவனுக்கு நல்லது செய்யும் என்கிறது வார்த்த மாலை
இன்று ஆழ்வானின் திருநட்சத்திரம். நாம் எல்லோரும் ஆழ்வானைக் கொண்டாடலாம்.

./சுஜாதா தேசிகன்
31.01.2024
தை ஹஸ்தம்
’நம்’ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்
படம்: நன்றி Sowbaktha Gopala

Comments