7. மாறன் நாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம், “என்ன ஆச்சரியம்! என் பெயர் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது! அப்படியானால் அமுதத் தமிழில் குருகூர் சடகோபன் அருளிய அந்த ஆயிரம் பாசுரங்களையும் நீங்கள் அறிவீர்களா?” என்று வியப்புடன் கேட்டார். “ஐயனே! ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டதில்லை. ஆனால், எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக 'நாதமுனிகள்' என்ற திருநாமம் எங்களுக்கு மிகப் பரிச்சயம். இந்தப் திருநாமத்தைக் கொண்ட ஒரு யோகி என்றாவது ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க விஜயம் செய்யப் போகிறார் என்று எங்கள் குலமே பல நூறு வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை! இன்று தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது!” என்றார். இதைக் கேட்ட நாதமுனிகளுக்குப் பட்டமரம் தழைப்பது போன்ற நம்பிக்கை தழைக்கத் தொடங்கியது. மலையிலுள்ள பாம்புக்கூட்டங்களின் பிரகாசமான மாணிக்கங்கள் எல்லாம் ஒன்று திரண்டு அருவியாக கொட்டியது...