Skip to main content

Posts

Showing posts from 2025

பகுதி 7 - மாறன்

 7. மாறன்  நாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம், “என்ன ஆச்சரியம்! என் பெயர் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது! அப்படியானால் அமுதத் தமிழில் குருகூர் சடகோபன் அருளிய அந்த ஆயிரம் பாசுரங்களையும் நீங்கள் அறிவீர்களா?” என்று வியப்புடன் கேட்டார். “ஐயனே! ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டதில்லை. ஆனால், எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக 'நாதமுனிகள்' என்ற திருநாமம் எங்களுக்கு மிகப் பரிச்சயம். இந்தப் திருநாமத்தைக் கொண்ட ஒரு யோகி என்றாவது ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க விஜயம் செய்யப் போகிறார் என்று எங்கள் குலமே பல நூறு வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை! இன்று தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது!” என்றார். இதைக் கேட்ட நாதமுனிகளுக்குப் பட்டமரம் தழைப்பது போன்ற நம்பிக்கை தழைக்கத் தொடங்கியது. மலையிலுள்ள பாம்புக்கூட்டங்களின் பிரகாசமான மாணிக்கங்கள் எல்லாம் ஒன்று திரண்டு அருவியாக கொட்டியது...

பகுதி 6 - வைத்தமாநிதி

6. வைத்தமாநிதி   திருக்குருகூருக்குள் நாதமுனிகள் நுழைந்தபோது, கதிரவன் மெதுவாக எட்டிப்பார்த்தான். முன் இரவின் புயலுடன் கூடிய மழையின் சுவடுகள் எங்கும் காணப்பட்டன. தாமிரபரணி ஆற்றிலிருந்து வழிந்தோடிய நீர், வழி நெடுகிலும் சிறு வாய்க்கால் போல ஓடிக்கொண்டு இருந்தது. சிறு மீன்கள் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் துள்ளிக்கொண்டு நீர் அழைத்துச் சென்ற பாதையில் காய்ந்த சுள்ளிகளும் இலைகளுடன் சென்றன. சிறு குன்றுகள் குளித்தது போல மாட மாளிகைகள் காட்சி அளித்தன. மரங்களின் கிளைகள் ஈரத்தின் எடை காரணமாகத் தாழ்ந்திருந்தன. அதனால் அவற்றிலிருக்கும் பழங்களைச் சிறுவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் பறிக்க முடிந்தது. வாழை மரங்களும், கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்ந்த நெற்பயிர்களும் தங்கள் தலையைக் குனிந்து நாதமுனிகளை வணங்குவது போலக் காட்சி அளித்தன. மூங்கில் இலைகளின் நுனியில் நீர்த்துளியின் மீது இளஞ்சூரியனின் ஒளிபட்டு, அவை வைரங்கள் பூத்துக் குலுங்கும் மரம்போலக் காட்சி அளித்தன. மின்னிய அக்காட்சியைக் கண்டு நாதமுனிகள் வியந்து பார்த்த அதே சமயம், பறவைகள் அம்மரத்தின் மீது கூட்டமாக வந்து அமர்ந்தன. அப்போது, வைரத்துளிகள் மொ...

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌…

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌… ஸ்ரீராமரைக்‌ குறித்து சிலர் பேசிய காணொளிகளைப்‌ பார்க்க‌ நேர்ந்தது. ஒன்று நான்‌ பெரும்‌ மதிப்பு வைத்திருக்கும்‌ திரு. தமிழருவி மணியன்‌ அவர்களின்‌ பேச்சு. அவர்‌ ஓர்‌ ஆத்திகர்‌. பொது வாழ்வில்‌ காமராஜர்‌ போல்‌ எளிமையையும்‌, நேர்மையையும்‌ கடைப்பிடிப்பவர்‌.  ஸ்ரீராமர்‌ சீதையைத்‌ தேடிக்கொண்டு செல்லும்‌ போது சுக்ரீவனைச்‌ சந்தித்து உதவி கேட்கிறார்‌. சுக்ரீவனைச்‌ சந்திக்கும்‌ இடத்தை வால்மீகி எப்படி அமைத்திருக்கிறார்‌? கம்பன் எப்படி கூறியிருக்கிறார் என்பதை விவரிக்கிறார். அவர்‌ கூறியதைச்‌ சுருக்கமாக‌ இங்கே தருகிறேன்‌. ராமனும்‌ லக்ஷ்மணனும்‌ சுக்ரீவனைத்‌ தேடிக்கொண்டு செல்கையில்‌, அனுமனைச்‌ சந்திக்கிறார்கள்‌. அனுமனைச்‌ சந்தித்த‌ போது லக்ஷ்மணன்‌ நடந்த‌ கதையை எல்லாம்‌ சொல்கிறான்‌. இதைக்‌ கேட்ட‌ அனுமன்‌ ராம லக்ஷ்மணர்களைத்‌ தன்‌ முதுகில் ஏற்றிக்கொண்டு சுக்ரீவன்‌ இருக்கும்‌ இடத்தை அடைகிறார்‌. இதே காட்சியைக் கம்பன் இதை மாற்றி அமைத்திருக்கிறார்‌. அனுமனுடன் சந்திப்பு நிகழ்ந்த‌ பின்‌, "நீ போய்‌ சுக்ரீவனை அழைத்துக்‌ கொண்டு வா" என்று கூற‌, அனுமன்‌ ஓடிச்‌ சென்று சுக்ரீவனை அழை...

பகுதி 5 - மதுரகவி

5. மதுரகவி மதுரைச் சங்கத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, சங்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னே, வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரந்து விரிந்த தமிழ் தேசத்தில், தென்திசையான பாண்டி நாட்டில், அகத்திய குறுமுனிவர் தம்முடைய சீடர்களுடன் ஒரு சங்கம் அமைத்துத் தமிழ்ப் பயிரைப் பொதிய மலையிலே[1]  வளர்த்தார். அதனால் இம்மலை அகத்தியமலை என்றும் பெயர் பெற்றது. ஆனால் இம்மலைக்குச் செல்வது ஆபத்து என்று ஒரு கதை உண்டு[2].. சீதையைத் தேடப் புறப்படும் வானர வீரர்களை நோக்கிச் சுக்ரீவன் வழி விவரிக்கையில், “அகத்திய மலையில் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது” என்கிறான். தமிழ் முனிவரும், தமிழ் சங்கமும் இருக்கும் இடத்தில் என்ன ஆபத்து நிகழப்போகிறது என்று அனைவரும் யோசிக்க, சுக்ரீவன் சொல்கிறான், “பொதிய மலையைத் தூரத்திலிருந்து கண்டதும், ‘என்ன அழகான மலை! அங்கே அகத்திய குறுமுனிவரை வணங்கிவிட்டுச் செல்லலாம்’ என்று தோன்றும். அதுவே ஆபத்து! அங்கே எப்போதும் தமிழ்ப் பாடல், தமிழிசை, தமிழ்க் கூத்து என முக்கனிகள் போல மூவகைத் தமிழ் விருந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். அத்தகைய விருந்தை விட்டுப் போக யாருக்குத்தான் மனம் வரும்? அங்கே சென்றால...

குழப்பிக் கொட்டின கூழ்

குழப்பிக் கொட்டின கூழ் இது ஒரு அரிய சமையல் குறிப்பு. முதலில் இதை செய்ய தேவையான பொருட்கள் என்ன என்று பார்த்துவிடலாம். சென்னை ஃபில்டர்‌ காபி – தலையில் நுறையுடன், சுண்டி இழுக்கும்‌ நறுமணத்துடன்‌ ஒரு பழைய பாத்திரம்‌ நிறைய‌. ஹைதராபாத்‌ பிரியாணி – தேவையான‌ அளவு‌, அசைவப்‌ பிரியர்களைக்‌ கவரும்‌ வீரியத்துடன்‌ (ரத்தம் சொட்ட சொட்ட) மலபார்‌ பரோட்டா – சில‌ மெல்லிய‌ அடுக்குகளாக‌, சில‌ சமயம்‌ பிரிந்து செல்லும்‌ தன்மையுடன்‌ மைசூர்‌ பாக்‌ – இனிப்புச்‌ சுவைக்கு ஏற்றவாறு‌, கனமான‌ கட்டியாக ஒன்று. வடா பாவ்‌ – ஒரு அசாதாரண‌ தனித்துவமான‌ சுவைக்கு சமையல்‌ கருவிகள்‌: பெரிய‌ அகலமான‌ பாத்திரம்‌(கதிரவன் ஸ்டோர்ஸ்). அனைத்தையும்‌ கலக்க‌ ஒரு பெரிய‌ கரண்டி(LCU பிரண்ட்). மின்சார இண்டக்‌ஷன் அடுப்பு. ஒரு தங்க வாட்ச் ( டைம் பார்க்க). ஒரு பெரிய நாற்காலி (சமையல் முடிந்த உடன் உட்கார ). முழு சமையல் நேரம் - சுமார் 2.50 நிமிடம். செய்முறை. ஃபில்டர் காபியை சற்றே பெரிய பழைய பாத்திரத்தில் ஊற்றவும். நம் சமையலுக்கு ஒரு கிளாசிக்‌ துவக்கத்தைக்‌ கொடுத்து, 'ஆஹா' போட‌ வைக்கும்‌. அடுப்பை மிதமான‌ தீயில்‌ வைத்து, சுமார்‌ 30 நிமி...

பகுதி 4 - தமிழ்க்கோயில்

4. தமிழ்க்கோயில் திருவரங்கத்திலிருந்து குடந்தையை நோக்கிக் காவேரி ஓடும் வழியே புறப்பட்டார் நாதமுனிகள். குழந்தையுடன் துணைக்கு வரும் தாய் போல காவிரி காட்சி அளித்தது. ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த இடங்களில், நீரின் சலசலப்பு நாதமுனிகளைச் 'சீக்கிரம், சீக்கிரம்' என்று கூறுவது போல இருந்தது. ஒருபுறம் காவிரியும், மறுபுறம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் காண்பவர் மனதை ஈர்க்கும் விதமாக இருந்தன. பசும் பயிர் வயல்களும், கரும்பு, வாழைத் தோட்டங்களும், தென்னை மரங்களும் மாறி மாறி வந்தன. நடுவே வாய்க்கால்களும், ஓடைகளும், அதைச் சுற்றிப் பல வண்ணப் பூக்களும் மனதைக் கொள்ளையடித்தன. குளங்களில் செந்தாமரையும், அல்லிப்பூவும் மலர்ந்திருந்தன. அவற்றின் இலைகள் தண்ணீரைக் கவசம் போல மூடியிருந்தன. வயல்களில் கூட்டம் கூட்டமாக நீண்ட கழுத்தையுடைய வெண்ணிறக் கொக்குகள் பறந்துகொண்டிருந்தன. குளங்களில் செங்கால் நாரைகள் முனிவர்களைப் போல் தியானத்தில் இருந்தன. மரப் பொந்துகளில் கிளிகள் எட்டிப்பார்த்தன. ஆண் தூக்கணாங்குருவிகள் அழகாக நெய்த கூட்டைப் பெண் குருவிகள் நோட்டமிட, ஆண் குருவியோ தான் கட்டிய கூடு பெண் குருவியைக் கவரவேண்டுமே ...

பகுதி 3 - லோகசாரங்க மாமுனிவர்

3.லோகசாரங்க மாமுனிவர் நாதமுனிகளும் யாத்திரிகர்களும் கோயிலை வலமாகச் சுற்றிவந்து வாசலை அடைந்தபோது, அங்கே இரு பக்த சிரேஷ்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அழகில் மயங்கி, இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தனர். அவர்களின் முகச்சாயல் நாதமுனிகளின் வம்சத்தவர் என்பதை உணர்த்தியது. அவ்விருவரும் நாதமுனிகளையும், யாத்திரிகர்களையும் வணங்கினர். ’இவர்கள் யாராக இருக்கும்?’ என்று பாகவதர்கள் கேட்க நினைக்கும் முன்னரே, நாதமுனிகள், “இவர்கள் இருவரும் என் மருமக்கள், வரதாசாரியார் மற்றும் கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார். “ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்கு இவர்கள் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இவர்கள், [1]காளம், வலம்புரி என முழங்குவார்கள்[2] என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர். “உங்கள் நல்வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள். அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால், இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் எனப் போற்றப்பட்டு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை இசை வடிவி...

பகுதி 2 - விதை நெல்

 2.விதை நெல் ஒரு மரத்தின் கிளை காலப்போக்கில் ஒவ்வொன்றாய் உதிர்ந்து போவது போல, ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய அருளிச் செயல்களாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம், அவர்கள் காலத்திற்குப் பின் ஓதுவிப்பார் இன்றி மறையத் தொடங்கின. அவ்வேளையில், பௌத்த, சமண சமயங்கள் பரவித் தழைத்து, மறைபொருளின் உண்மைத் தன்மை திரிக்கப்பட்டு, மாறுபட்ட கொள்கைகள் தலைதூக்கின. அப்போதைய அரசர்களும் தாங்கள் தழுவிய சமயங்களால் மக்களிடையே பல பிரிவினைகள் தோன்றி, அதனால் ஏற்பட்ட பூசல்களால் தெளிவற்ற சூழல் நிலவியது. குடிமக்களும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பண்டைத் தமிழ்ப் பண்பாடாகிய நாராயணனே முழுமுதற் கடவுள் என்னும் நிலை குலைந்து, ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் காலவெள்ளத்தில் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமன்றி, ‘வைகுந்தம் புகுவார்’ என்னும் ஆழ்வார் பாசுரங்களை ஓதினால் மேன்மை மிக்க முக்தியடைவர் எனப் பொருள் கொள்வதற்குப் பதிலாக, அவை ‘கொல்லும் பாட்டு’ என்று தவறான முத்திரை குத்தப்பட்டு, அவற்றைத் தாங்கிய ஓலைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயினும், ஆங்காங்கே தமிழ்ப்பண்பில் ஊறித் திளைத்...

பகுதி 1 - வீரநாராயணபுரம்

 1. வீரநாராயணபுரம் அமுதமிகு, உத்தமமான, மாபெரும் காவிரிக்கு 'பொன்னி' எனும் அழகிய பெயரும் உண்டு. மழைத்துளிகளையே உணவாகக் கொண்டு முகிலைப் பாடும் வானம்பாடிப் பறவை வருந்துமாறு மழை பொய்த்துவிட்டாலும், பொன்னி நதி ஒருபோதும் பொய்க்காது[1]. அவள் பாயும் இடமெல்லாம் பொன்னைப் பொழிவது போல, நிறைந்த விளைச்சலை வாரி வழங்கி, மக்களைச் செல்வச் செழிப்பில் ஆழ்த்துவதால் அப்பெயர் பெற்றாள் என்பர். இப் பூவுலகில் வாழும் பல்லுயிர்களை நாள்தோறும் வளர்த்து, அவை உய்யும் வண்ணம் தன் அருளமுதை ஒரு தாயைப் போல ஊட்டுகிறாள். ஆதலால், அவளைக் காவிரித் தாய் என்றும் அன்புடன் அழைப்பர். குடகுமலையின் சாரலில் உள்ள பிரம்மகிரிப் பருவதத்திலிருந்து தலைக்காவிரியாய் உருண்டு, நீர்வீழ்ச்சிகளில் விழுந்து, புரண்டு, வேகமாகச் செல்லும் தன் போக்கில் ஆழமான வழியை அறுத்துக்கொண்டு விரைந்தோடிவரும் காவிரி, தன் அகன்ற ஆசைகளையெல்லாம் கொள்ள இடமில்லாமல், வட திருக்காவிரி, தென் திருக்காவிரி என இரண்டாகப் பிரிகிறாள். பின் தன் ஓட்டத்தில் நிதானம் கொண்டு, எப்போதும் தென் திசையில் இருக்கும் கோதையைத் தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் அரங்கனுக்கு மாலையாகி,...