2.விதை நெல் ஒரு மரத்தின் கிளை காலப்போக்கில் ஒவ்வொன்றாய் உதிர்ந்து போவது போல, ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய அருளிச் செயல்களாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம், அவர்கள் காலத்திற்குப் பின் ஓதுவிப்பார் இன்றி மறையத் தொடங்கின. அவ்வேளையில், பௌத்த, சமண சமயங்கள் பரவித் தழைத்து, மறைபொருளின் உண்மைத் தன்மை திரிக்கப்பட்டு, மாறுபட்ட கொள்கைகள் தலைதூக்கின. அப்போதைய அரசர்களும் தாங்கள் தழுவிய சமயங்களால் மக்களிடையே பல பிரிவினைகள் தோன்றி, அதனால் ஏற்பட்ட பூசல்களால் தெளிவற்ற சூழல் நிலவியது. குடிமக்களும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பண்டைத் தமிழ்ப் பண்பாடாகிய நாராயணனே முழுமுதற் கடவுள் என்னும் நிலை குலைந்து, ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் காலவெள்ளத்தில் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமன்றி, ‘வைகுந்தம் புகுவார்’ என்னும் ஆழ்வார் பாசுரங்களை ஓதினால் மேன்மை மிக்க முக்தியடைவர் எனப் பொருள் கொள்வதற்குப் பதிலாக, அவை ‘கொல்லும் பாட்டு’ என்று தவறான முத்திரை குத்தப்பட்டு, அவற்றைத் தாங்கிய ஓலைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயினும், ஆங்காங்கே தமிழ்ப்பண்பில் ஊறித் திளைத்...