Skip to main content

ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரியார் பாராட்டுரை

 ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரி பாராட்டுரை





முதல் பதிப்பு வெளி வந்த சமயம், அதன் பிரதியை ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் ஆசீர்வாதம் பெற சென்றிருந்தேன். அங்கே என்ன நடந்தது என்று சுருக்கமாக சொல்லுகிறேன்.
அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தை கொடுத்தது.

காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார்.

அங்கே இருந்த தீர்த்தம் ஸ்தானிகர் ( ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி ) “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்றால் நாதமுனிகளின் சந்நிதி வாசல் படியில் வைத்துச் சேவித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.

இவ்வளவு தூரம் வந்துவிட்டு …. புறப்படலாமா என்று பாதி மனசுடன் இருந்த சமயம் அங்கே சாந்தமாக வீற்றிருந்த ஒரு பெரியவரைக் காண்பித்து “இவர் எம்.எஸ். வெங்கடாச்சாரி இவரும் தீர்த்தம் ஸ்தானிகர் தான். பெரிய பண்டிதர், இவரிடம் புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரீநிவாசாச்சார்.

 

அவரிடம் புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டேன். அவர் புத்தகத்தைத் திறந்து பார்த்து “அழகாக அச்சடித்திருக்கிறீர்கள். புத்தகமே ஞானத்தின் வடிவம். இரண்டு சம்பிரதாய விஷயங்களையும் அழகாக கொடுத்திருக்கிறீர்கள். சம்பிரதாயத்தில் வித்தியாசம் இருந்தாலும், ஆழ்வார் பாசுரங்கள் எல்லோருக்கும் பொது, அது எல்லோர் நாவிலும் தவழ வேண்டும். நாலாயிரம் பலரைச் சென்று அடைய வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேறப் பல்லாண்டு” என்று ஆசிர்வதித்தார்.

அந்தச் சமயம் நாதஸ்வரம் ஒலிக்க வீர நாராயணப் பெருமாளுக்கு திருவாராதனம் மங்கள ஆர்த்தி நடைபெற ஆரம்பிக்க அங்கே சென்று பெருமாளைச் சேவித்துக்கொண்டு இருந்த சமயம், நாதமுனிகளின் சந்நிதியிலிருந்து வெங்கடாச்சாரி ஸ்வாமி என் அருகே வந்து “புத்தகத்தை கொஞ்சம் கெடுங்கள் பார்த்துவிட்டுத் தருகிறேன்” என்று வாங்கிக்கொண்டு நாதமுனிகள் சந்நிதிக்குள் சென்றார்.

பெருமாள் சேவை முடிந்த பின், அவர் என்னை நாதமுனிகளின் சந்நிதிக்குள் அழைத்து “இந்த புத்தகத்தில் சிறு திருத்தம் செய்ய வேண்டும்!” என்றார் “என்ன செய்ய வேண்டும்?” என்றேன்.

அவர் புத்தகத்தைத் திறந்து கடைசியில் வாழி திருநாமம் பக்கத்தைக் காண்பித்தார்.

ஸ்ரீமத் நாதமுனிகள் வாழி திருநாமத்துக்குப் பதில் உய்யக்கொண்டார் வாழி திருநாமம் தவறுதலாக இரண்டு முறை அச்சாகியிருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன்.

“புத்தகம் நல்லவேளையாக இன்னும் விநியோகிக்க ஆரம்பிக்கவில்லை. நிச்சயம் சரி செய்துவிடுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை!” என்றேன். அதற்கு அவர் “இது நான் சொல்லவில்லை, உள்ளே இருக்கும் நாதமுனிகள் என் மூலமாக உம்மிடம் இன்று கூறியிருக்கிறார்” என்று உள்ளே இருக்கும் நாதமுனிகளைக் கைகாட்டினார்.

காரில் புறப்படும் முன் அவர் என் அருகில் “இந்த திவ்ய தேசத்து பெருமாள் காட்டும் மன்னார், நாலாயிரத்தை நாதமுனிகளுக்கு காட்டிக்கொடுத்த மன்னார். இன்று உங்களுக்கும் காட்டிக்கொடுத்துள்ளார் !” என்றார்.

புத்தகம் பிரதியை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் அடியேனை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியதோடு மட்டும் அல்லாமல், புத்தகத்தைக் குறித்து அடியேனுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார். நாதமுனிகள் சந்நிதியிலிருந்து வந்த கடிதமாகவே இதை நான் கருதுகிறேன்.

அந்த பாராட்டு கடித்தை அவர் அனுமதியுடன் இந்த இரண்டாம் பதிப்பில் சேர்த்துள்ளேன்.

- சுஜாதா தேசிகன்
22.05.2022



Comments