Skip to main content

குலசேகர பெருமாள்


குலசேகர ஆழ்வாருக்கு ஸ்ரீராமரிடம் உள்ள பக்தி எல்லோருக்கும் தெரிந்தது. குலசேகர ஆழ்வாருக்குப் பெருமாளின் கல்யாண குணங்களில் மிகுந்த ஈடுபாடு குறிப்பாக ஸ்ரீராமர் மீது. இராமாயண கதை கேட்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம்.  கதை கேட்கும் போது அளவுக்கு அதிகமான ஈடுபாடு காரணமாக  அன்று தான் ராமாயண நிகழ்ச்சிகள் நடப்பதாகப் பாவித்து தாம் யார் என்பதையும் மறந்து, ராமர் போர் செய்யக் கஷ்டப்படுகிறார் என்று ராமருக்கு உதவ தன் படையுடன் புறப்பட்டார். அதனால் அவர் குலசேகர பெருமாள் என்று அழைக்கப்பட்டார். 

ஆனால் அவருக்கு அரங்கன் மீது அளவுகடந்த மோகம். அவருக்குச் சயனித்த பெருமாள் தான் வேண்டும் என்றால் மலை ( கேரளா ) நாட்டு திவ்ய தேசத்திலேயே திருவாட்டாற்று, அனந்தபத்மநாப பெருமாள் என்று இரண்டு பெருமாள் இருக்க அவர் திருவரங்கம் வர துடித்தற்கு காரணம் திருவாய் மொழி படித்தது தான். 

குலசேகர ஆழ்வார் எங்கே திருவாய் மொழி பற்றி அவர் பாசுரங்களில் சொல்லியுள்ளார் ? 

அந் தமிழின் இன்பப்பாவினை
அவ் வடமொழியைப் பற்று-அற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினை, நா உற வழுத்தி என்தன் கைகள்.
கொய்ம்மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே!

என்கிறார்.

அந் தமிழின் இன்பப்பாவினை  -  நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற இன்பத்தைச் சொல்லும் அருமையான தமிழில் பாடல்களை தான் குலசேகர பெருமாள் குறிப்பிடுகிறார். 

 “அவ் வடமொழியை” என்று எதைச் சொல்லுகிறார் ? உடனே வேதம் என்று தோன்றினாலும் அது வேதம் இல்லை ! திருவாய் மொழிக்குச் சமமாக நிற்கக் கூடியது ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தான் ( குலசேகர ஆழ்வாருக்குப் பிடித்ததும் கூட ! ) ஏன் என்று உற்று நோக்கினால், ஸ்ரீ ராமர் பூஜித்த இஷ்வாகு குலதனமான ’பெரிய பெருமாள்’ ஸ்ரீராமாயணத்திலும், திருவாய்மொழியிலும் உள்ளே இருக்கிறார் ! ஸ்ரீராமரை பெருமாள் என்று அழைப்பது மரபு. அவர் ஆராதனம் செய்த பெருமாளை பெரிய பெருமாள் என்று அழைப்பது தானே சரியாக இருக்கும் ?

குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் நகரில் மாசி மாதம் புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்த போதே இவர் ராஜகுமாரர். இவரது தந்தை இவர் முகப் பொலிவைக் கண்டு தன் குலம் விளங்கத் தோன்றிய மகனுக்கு ‘குலசேகரன்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பாண்டிய வேந்தன் புதல்வியை மணந்து இவர்களுக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். மகன் பெயர் திடவிரதன். மகள் சேரகுலவல்லி. 

அரசாட்சியைக் காட்டிலும் பாகவத சம்பந்தமே அவருக்கு உவப்பாக இருந்தது. அடியார்களால் அரசாட்சிக்குக் கலக்கம் ஏற்படுகிறது அதனால் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்ய மந்திரிகள் திட்டமிட்டனர்.  அரண்மனை கோயிலில் இருந்த ரத்தன மாலையை ஒளித்து வைத்துவிட்டு அதை ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் தான் திருடினார்கள் என்று பழிசுமத்த, பதறிய குலசேகார் நச்சு பாம்புகளை குடத்தில் அடைத்துக்கொண்டு வரச் செய்து “இந்த தீச்செயலைக் திருமால் அடியார்கள் செய்ய நினைத்திந்தால் இப்பாம்புகள் என் கையை தீண்டட்டும்” என்று குடத்தில் கையைவிட்டார்  ”அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அரச வாழ்கையில் வெறுப்பு உண்டாகி தன் மகனான திடவிரதனுக்கு பட்டம் சூட்டிவிட்டு திருவரங்கம் வந்து திருவரங்கம் திருமுற்றத்து அடியார்களோடு கூடியிருந்து குளிர்ந்து அரங்கனை அனுபவித்தார். தன்னுடைய மகளை நம்பெருமாளுக்கே மணமுடித்தும் கொடுத்தார். 

நாச்சியார் அருளியதை நாச்சியார் திருமொழி என்கிறோம். பெரியாழ்வார் அருளியதைப் பெரியாழ்வார் திருமொழி என்று சொல்லுவதைப் போல பெருமாள் இடத்தில் மிகுந்த பக்தி கொண்டதால் அவரைக் குலசேகர பெருமாள் என்று பெயர் பெற்று,  அவர் அருளியது ’பெருமாள் திருமொழி’ என்று பெயர்பெற்றது.  இந்தப் பெயரை ஸ்ரீமத் நாதமுனிகளே சூட்டினார். 

பெருமாள் திருமொழிக்கு உடையவர் அருளிச் செய்த தனியன் இது: 

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்* பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன் என்றே கூறு

இதில் “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்கிறார் நம் இராமானுசன். நமக்குத் தெரிந்து தொண்டரடிப் பொடியாழ்வார் தான் ஸ்ரீரங்கத்தைத் தவிர வேறு திவ்ய தேசத்தைப் பாடவில்லை. அதனாலேயே “பதின்மர் பாடும் பெருமாள்” என்ற பெருமையை நம்பெருமாள் தட்டிச்சென்றார். ஆனால் அவருக்கு அந்தப் பெருமையை கொடுக்காமல் உடையவர் குலசேகர ஆழ்வாருக்கு ”தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்ற பெருமை வாய்த்தது எதனால் ?

அமெரிக்காவில் இருக்கும் மகளுக்கு எப்போது இந்தியாவில் இருக்கும் அம்மாவை எப்போது பார்க்க போகிறோம் என்ற நினைப்பு இருக்குமோ அதே போல நம் குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி ஆரம்பிக்கும் போது முதல் மூன்று திருமொழிகளிலும் “திருவரங்கத்தைக் காண்பது என்றைக்கோ?” என்று உணர்ச்சியின் மிகுதியால் அவர் பாடிய திருமொழிகள். 

அரசனுக்குடைய கடைமைகளை தவிர்க்க முடியாமல், அவர் திருவரங்கப் பயணம் தொடர்ந்து தடைப்பட்டிருக்கிறது. இன்று, நாளை என்று இழுத்தடித்து அவர் ஏங்கி ஏங்கித் துடித்திருக்கிறார். திருவரங்கம் செல்லாமல் அந்த வேட்கையிலேயே உருவானது தான் பெருமாள் திருமொழி. 

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் 

“தேட்டு அருந் திறல் தேனினைத் தென் அரங்கனை” என்று ஆரம்பிக்கும் இரண்டாம் திருமொழி பாசுரங்கள் மிக முக்கியமானவை.  ஸ்ரீரங்கத்தில் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ( 1070-1112 ) ஒரு கல்வெட்டு இப்படி இருக்கிறது ”ஐப்பசி தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதிதருளின அன்று இரா, திருப்புன்னைக்கீழ் [ ஸ்ரீரங்கநாத பெருமாள் ] எழுந்தருளியிருந்து ‘தேட்டருந்திறல்’ கேட்டருளும்போது” என்று கூறப்பட்டுள்ளது. 

”இருளரிய” என்று தொடங்கும் முதல் திருமொழியில் அரங்கனைக் காணும் நாள் எந்நாளோ ? என்று ஏங்குகிறார். “தேட்டு அருந் திறல்” என்று தொடங்கும் இரண்டாம் திருமொழியில் அரங்கனின் அடியார்க்கு அடியேன் என்கிறார். அவர்களே எனக்கு உயர்நிலை. பெருமாள் திருமொழியிலேயே இந்தத் திருமொழி தான் சிறப்புமிக்க பதிகமாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் தான் கல்வெட்டிலும் இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெருமாள் திருமொழி பாசுரங்கள் சிலவற்றிருக்கு ஒரு வரி பொருளை பார்க்கலாம். 

- அரங்கன் அடியார்களைக் காண்பது தான் கண்படைத்த பயனாகும். 

- கோயில் முற்றத்தில் அடியார்களின் திருவடிகளால் ஏற்படும் சேறு என உடம்புக்கு அணிகலன். 

- ’நாராயணா’ என்று அழைக்கும் அடியார்களை உடம்பு தழும்பேறுபடி தொழ வேண்டும். 

- அடியார்களை நினைத்து நினைத்து உடம்பு சிலிர்க்கின்றது. 

- அடியார்களுக்கு எப்பிறப்பிலும் அடிமை செய்ய வேண்டும். 

பாசுரங்களில் ’சேறுசெய் தொண்டர்’, ’இன்புறும் தொண்டர்’, ’காதல்செய் தொண்டர்’ ’மலையுற்றிடும் தொண்டர்’ என்று தொண்டர்களின் பெருமைகளையே ஆழ்வார் பேசுகிறார். 

கடைசியாக  இந்தத் திருமொழியை கற்பதால் உண்டாகும் பலனைப் இப்படிக் கூறுகிறார் 

“சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்கள் ஆவரே”

அதாவது ”அடியார்களுக்கு அடியராவர்” என்பது மெய்யான பக்தி உங்களுக்குக் கிடைக்கும் என்பதாகும். 

பிரபந்த சாரத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ’எங்கள்’ குலசேகர ஆழ்வாரை பற்றி அருளியது. 

பொன்புரையும் வேல் குலசேகரனே மாசிப்
புனர்பூசத்து எழில்வஞ்சிக் களத்தில் தோன்றி
அன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயில்
அனைத்து உலகின் பெரு வாழ்வும் அடியார் தங்கள்
இன்பமிகு பெரும் குழுவும் காண மண்மேல்
இருளிரிய வென்றெடுத்த இசையில் சொன்ன
நன்பொருள்சேர் திருமொழி நூற்றைந்து பாட்டும்
நன்றாக எனக்கருள் செய் நல்கி நீயே

பூதத்தாழ்வார் வாழி திருநாமத்தில் ‘பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே!’ என்று ஒரு வாக்கியம் வருகிறது. பொன்புரையும் என்ற வார்த்தை திருவரங்கத்துக்கு அழகு சேர்க்கிறது அதே வார்த்தை குலசேகர ஆழ்வாருக்கும் இங்கு அழகு சேர்க்க வருகிறது. ஸ்ரீரங்கத்தையும் குலசேகர ஆழ்வாரையும் பிரிக்க முடியுமா ? 

அன்புடனே நம்பெருமாள் : நம்பெருமாள் என்றாலே அந்த ‘நம்’மில் அன்பு கலந்திருக்கிறது. ஆனால் இங்கே ஸ்வாமி தேசிகன் ஸ்பெஷலாக ‘அன்புடனே நம்பெருமாள்’ என்று அன்புக்கு அன்பு சேர்க்கிறார். ஸ்ரீராமானுஜர் பெருமாள் திருமொழி தனியனில் அதனால் தான் ‘எங்கள் குலசேகரன் என்றே கூறு’ என்கிறார். 

பெரு வாழ்வும் அடியார் தங்கள்: ஆண்டாள் கூறும் ‘நல்லார்கள் வாழும் நளிரரங்கமும்’, அங்கே பாகவதர்களுமே இந்த ஆழ்வாருக்குப் பிரதானம். என்பதை இது காட்டுகிறது. ஸ்ரீரங்க வாசமாகிய பெரிய செல்வமும் அங்கே வசிக்கும் பாகவதர்களுடன் காண்பதே தனக்கு  பெரும் இன்பமாகக் கருதுகிறார் அழ்வார் என்பதை மேலே முன்பு பார்த்தோம்.   

இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்ன : இது மிக முக்கியமான அதே சமயம் சுவாரஸியமான வார்த்தை. குழந்தைக்கு ஏதாவது வேண்டும், ஆனால் அது கிடைக்கவில்லை என்றால் தொண்டை கிழிய பெரிதாகச் சத்தம் போட்டு அதைப் பெற்றுவிடுவோம். ‘எடுத்தவுடன் உச்சஸ்தாயியில்  நரம்புகள் புடைக்கச் ஏன் சத்தம் போடுகிறாய் ?’ என்று கேட்பார்கள். குலசேகர ஆழ்வார் ‘இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி’ என்று பெருமாள் திருமொழி முதல் பாசுரத்தை ஆரம்பமே நம்பெருமாளை காணும் இச்சையை உச்சஸ்வரத்தில் ஆரம்பிக்கிறார்.

இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்ன என்பதற்கு இரண்டு பொருள் இருக்கிறது. 

பொருள்(1) - ‘இந்தப் பூமியில் அஞ்ஞானமாகிய இருள் அழிவதற்காக ‘இருள் இரிய’ என்று உச்சஸ்வரத்தில் தொடங்கி (எடுத்த இசையில் சொன்ன) தொடங்கி அருளிய சிறந்த திருமொழி 105 பாசுரங்களையும் நீ என்மீது அன்புகொண்டு நன்றாக எனக்கு ( மனதில் பதியுமாறு ) அருள்செய்வாயாக.  

தேசிகனின் செய்யுள் அழகை இன்னும் கொஞ்சம் ரசிக்க பொருள்(2) பார்க்கலாம். சங்கீதத்தில் உச்சஸ்வரம் என்பது (சரிகமபத) நீ’ இங்கே எப்படி பொருந்துகிறது என்று பாருங்கள்.  

பொருள்(2) : ‘இந்தப் பூமியில் அஞ்ஞானமாகிய இருள் அழிவதற்காக ‘இருள் இரிய’ என்று தொடங்கி,  நீ (உச்சஸ்வரம்) அருளிய சிறந்த திருமொழி 105 பாசுரங்களையும் என்மீது அன்புகொண்டு நன்றாக எனக்கு ( மனதில் பதியுமாறு ) அருள்செய்வாயாக.  

- சுஜாதா தேசிகன்
24-02-2021
இன்று மாசி மாதம் புனர்பூசம்
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருநட்சத்திரம்

படம்: அடியேன் இல்லத்தில் இன்று குலசேகர பெருமாள் சேவை. 

நம்மாழ்வார் திருவாய்மொழி ஈடுபாடு காரணமாக குலசேகர பெருமாள் நம்மாழ்வார் கொண்டையுடன் சேவை. 

’படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”என்பதற்கு ஏற்ப முதல் படியில் ஸ்ரீ சீதாபிராட்டியுடன் ஸ்ரீராமரும், இரண்டாம் படியில் திருவேங்கடவன் உபயநாச்சிமார்களுடன் ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள்.

Comments

  1. அற்புதம் அற்புதம்
    என் போன்ற பலரது தேடல் இது தான்
    அடியேன் ராமானுஜதாசன்
    ராதே கிருஷ்ணா

    ReplyDelete

Post a Comment