Skip to main content

ஸ்ரீ திருக்கச்சி நம்பியின் திருமாளிகை



ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் எம்பெருமானார் சீடர்களுடன் இருந்த சமயம் அவருக்கு தன் அபினான ஆசாரியரான திருக்கச்சி நம்பிகளின் நினைவு வருகிறது. 

“காஞ்சிபுரத்துக்கு சென்று திருக்கச்சி நம்பிகள் எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டு வருவார் யாரேனும் உண்டோ ?” என்று கேட்கிறார். 

ஸ்ரீராமானுஜரை விட்டு பிரிய மனம் இல்லாமல், ஒருவரும் “நான் போகிறேன்” என்று கூறவில்லை. 

மறுநாள் விடியற்காலை பெரியநம்பிகள் எம்பெருமானார் மடத்துக்கு சென்று வழக்கமாக பேசுவது போல  “நான் பெருமாள் கோயிலுக்குச் சென்று(காஞ்சிபுரம்)  பெருமாளை சேவித்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்” என்றார். 

“அடியேனுடைய அசாரியர் நீங்கள் ! என்னிடம் நீங்கள் அனுமதி கேட்க தேவை இல்லை, உங்களுக்கு அடியேன் தடை செய்ய முடியுமோ ? தாராளமாக சென்று வாருங்கள்” என்றார் உடையவர் வழி அனுப்பிவைக்கிறார். 

காஞ்சிபுரத்துக்கு சென்ற பெரியநம்பிகள், திருக்கச்சிநம்பிகளின் நலத்தை விசாரித்துக்கொண்டு புறப்பட்ட போது திருக்கச்சி நம்பிகள்  “இன்னும் சில நாள்களில் இங்கு உத்ஸவம் இருந்து சேவித்துவிட்டு போகலாமே ?” என்றார் 

அதற்கு பெரிய நம்பி “நான் வந்த காரியம் முடிந்துவிட்டது. இனியும் உத்ஸவத்திருக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது; உடனே திரும்ப வேண்டும்” என்றார். 

“தேவரீர் வந்த காரியம் எதுவோ ?” 

“எம்பெருமானார் காஞ்சிபுரத்துக்குச் சென்று திருக்கச்சி நம்பி எப்படி இருக்கிறார் என்று விசாரித்து கொண்டு வருவார் ஒருவருமில்லையோ ?” என்று கேட்ட போது ஒருவரும் அதற்கு முன் வரவில்லை. எனவே எம்பெருமானாரின் திருவுள்ளத்தை நிறைவேற்றுவதற்காக இங்கே வந்தேன். வந்த காரியம் முடிந்துவிட்டது கிளம்புகிறேன்” என்றார்.

நான் சென்னையில் வேலைக்கு வந்த சமயம் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தான். ஒரு முறை என் அப்பா இங்கிருந்து “எல்லா பஸ்ஸும் பூந்தமல்லிக்கு போறது; அங்கதான் திருக்கச்சி நம்பிகள் பிறந்த இடம்.. முடிஞ்சா ஒரு முறை சேவிச்சுட்டு வந்துடு” என்றார். அப்பா சொல்லி பல வருடங்கள் கழித்து 2010ல் புத்தாண்டுக்கு மறுநாள் தான் போக முடிந்தது.

 ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் நாதமுனிகளுக்கு தனி இடமுண்டு. அவருடைய பேரன் ஆளவந்தார். ஆளவந்தாரின் ஒரு சீடர்தான் நம் திருக்கச்சி நம்பிகள்.பொ.யு. 1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 91 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது 2009ஆம் ஆண்டு 1000 வருடம்.

ஸ்ரீ வேதாந்த தேசிகனின் ரஹஸ்யத்ரயஸாரத்தில் ஒரு நல்ல ஆசாரியனை அடைவதற்கு ஆறு காரணங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று  கருவிலே பிறக்கும் போது பெருமாள் நமக்கு செய்யும் காடக்ஷம். அந்த காடக்ஷம் ஸ்ரீரமானுஜருக்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்திருக்கிறது. ஒன்று இல்லை, ஐந்து அருமையான ஆசாரியர்கள் கிடைக்கப்பெற்றார். 

இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (MULTI FACETED PERSONALITY) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாளு குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் என்பதற்கு பல சான்றுகளை நாம் பார்க்கலாம். 

அவருடைய கருணை குணத்திற்கு திருக்கச்சி நம்பிகள் தான் அவருக்கு முன்மாதிரி(role model) என்றும் சொல்லலாம். பல சமயங்களில் இராமானுஜருக்கு குருவாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராக (Mentor) ஆக விளங்கியிருக்கிறார். இராமானுஜருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் நடந்த சம்பவங்களைப் படிக்கும் போது பின்னால் இராமானுஜரைச் ச‌ரியான வடிவாக வார்த்தவரும் இவரே என்பது புலப்படும். இராமானுஜருக்கு பல ஆசாரியர்கள் இருந்தாலும், திருக்கச்சி நம்பிகள்தான் இராமானுஜருடைய அபிமான ஆசாரியர். ராமானுஜருக்கு 8 வயது மூத்தவர். குருபரம்பரை வைபவம் திருக்கச்சி நம்பியைப் பற்றி பல கதைகளும் பல சம்பவங்களையும் சொல்லுகிறது. சிலவற்றைப் பார்க்கலாம்.

சென்னையிலிருந்து திருமழிசைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது பூவிருந்தவல்லி. பூந்தமல்லி அல்லது பூனமல்லி என்று சொன்னால் தற்பொழுது எல்லோருக்கும் புரியும். முன்பு இந்த ஊருக்கு தர்மபுரி என்ற பெயர் இருந்திருக்கிறது. பூந்தண்மலி (தண் - குளிர்ந்த, பூ - மலர்கள், மலி - நிறைந்த இடம்) என்ற பெயர்தான் பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கிறது. இங்கே வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் போல் புஷ்ப கைங்கரியம் செய்து ‘புஷ்பமங்கலம்’ என்றும் பெயராலும் இருந்திருக்கிறது. இன்று இரண்டு பக்கமும் சாலையை அடைத்துக்கொண்டு கடைகளும், பாதி தோண்டி விட்டுவிட்ட சாக்கடைகளும், பல பேருந்துகள் முண்டி அடைத்துக்கொண்டு நிற்கும் இடத்தை எல்லாம் பொறுத்துக்கொண்டு இங்கே கருணையே வடிவாக இருக்கும் தாயார் பெயர் புஷ்பவல்லித் தாயார்.

முதல் பராந்தகன் (907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது. 

திருக்கச்சி நம்பிகள் 1000 ஆண்டுகளுக்கு முன் சௌம்ய வருஷம் மாசித் திங்கள் (ஆங்கில மாதம் பிப்ரவரி) மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் (செட்டியார்) பிறந்தார். தந்தை பெயர் வீரராகவச் செட்டியார், தாயார் கமலையார். இவர்களுக்கு திருக்கச்சி நம்பிகள் நான்காவது குழந்தை. ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

[  இவருக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் - திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார் என்று மூன்று அண்ணன்கள். இவர்களின் பெயர்கள் பல புத்தகங்களில் இருக்காது. அப்பா எனக்கு விட்டு சென்ற பழைய குருபரம்பரை புத்தகத்தில் இந்த பெயர்கள் இருக்கிறது. ]

திருக்கச்சி நம்பிகள் கஜேந்த்ரதாஸர் என்று காஞ்சிப் பெருமாள் இவருக்கு கொடுத்த பெயர். 

பெரியழ்வார் திருமொழி ”ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில்” என்று ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு எம்பெருமன் அருள் புரிந்ததை கூறுகிறார். இங்கே ஒரு ஐதீகம் கூறப்பட்டுள்ளது. 

தன் தூய பக்தியினால், அச்சாவதாரப் பெருமாளிடம் தினமும் சகஜமாகப் பேசும் பாக்கியம் பெற்றிருந்தார் திருக்கச்சி நம்பி. ஒருமுறை திருக்கச்சி நம்பிகள் தேவப் பெருமாளிடம் திருவாலவட்ட(விசிரி) கைங்கரியம் செய்துவந்த போது ”தேவரீருக்கு மிகவும் விருப்பமான பெயர் ஒன்ற அடியேனுக்கு இடவேண்டும்” என்று கேட்க அதற்கு தேவப் பெருமாள் “உம்மை நாம் கஜேந்திரதாஸன் என்று அழைக்கிறேன்” என்று அருளிச்செய்தாராம். காஞ்சி பெருமாளின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கச்சி என்ற பெயரே நிலைத்துவிட்டது. 

வீரராகவச் செட்டியார் தன் நான்கு பிள்ளைகளில் கடைசியான திருக்கச்சி நம்பிகள், செல்வம் ஈட்டுவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவராக இருந்தார். பக்தியும், பெருமாள் தொண்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டவராகவும் இருந்தார் என்பதற்கு பல சம்பவங்கள் இருக்கின்றன.

தன் அப்பா இவருக்குக் கொடுத்த பணத்தில், பூவிருந்தவல்லியில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதில் நந்தவனம் அமைத்து தினமும் மாலைகள் தொடுத்து காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கு நடந்துசென்று சாத்துவதும், ஆலவட்ட கைங்கரியத்திலும் ஈடுபட்டார். [இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவ மூர்த்தியின் கையில் ஆலவட்டம் இருப்பதை பார்க்கலாம் பார்க்க படம்  ]  இன்று பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ஒன்றரை மணி நேரம் ஏசி காரில் செல்வதற்கே கால்கள் இழுத்துக்கொள்கிறது.

திருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிகள் பட்ட மண்ணை ஒரு திருக்குலத்தை சேர்ந்தவர் தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்கள் உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்கும்” என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறியிருக்கிறார்.

தினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா?” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி?” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசார்ய கைங்கரியம் செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை.இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவர் அருகே சில மாடுகள் இருப்பதைக் காணலாம்.



திருக்கச்சி நம்பிகள் நற்குணங்களைப் பார்த்துவிட்டு இராமானுஜர் அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்று கேட்க அதற்கு திருக்கச்சி நம்பிகள் வர்ணாசரம தர்மத்துக்கு அது ஒத்து வராது என்று மறுத்துள்ளார். எப்படியாவது திருக்கச்சி நம்பிகளின் ஆசி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த இராமானுஜருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தனது ஆசார்யராக நினைத்த திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தை, தான் சாப்பிடுகிற வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என்று நினைத்தார்; எப்படி பெருமாளுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பிரசாதம் என்று சொல்லுகிறோமோ அதே போல. அதற்காக திருக்கச்சி நம்பிகளைத் தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க, அவரும் சம்மதித்தார். இராமானுஜர் தன் மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு காத்துக்கொண்டு இருந்தார். நேரம் ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளைத் தேடிக்கொண்டு போக, வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் வீட்டை அடைந்தார். இராமானுஜர் வீட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை, தனக்கு கோயில் வேலை இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றுசொல்லி அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.

அவர் சென்றபின் இராமானுஜரின் மனைவி அவர் சாப்பிட்ட இலையை ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அவர் சாப்பிட்ட இடத்தை சாணத்தால் மெழுகிவிட்டு, தானும் குளித்துவிடுகிறாள். திரும்பி வந்த இராமானுஜர், தனது மனைவி செய்த செயலைக் கண்டு வருந்துகிறார் “அவர் சாப்பிட்டு விட்டு மீதியாக வீட்டு சென்ற ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு அவர் மனைவி “கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் சாப்பிட்ட மிச்சத்தை இங்கே யார் சாப்பிடுவது ? “ அது இல்லை என்ற பதிலை கேட்ட இராமானுஜர் ஒரு நல்ல பாகவதரான திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மீதியைச் சாப்பிடுகிற பாக்கியம் தனக்குப் போய்விட்டதே என்று மனம் வருந்துகிறார் இராமானுஜர். 



அதனால் இன்றும் ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க உற்சவத்தின் போது நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் பெருமாள்) அமுது செய்தருளியபின் (படைத்த பின்) ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்போது திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. [ ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள் சன்னதி ஆலிநாடன் திருச்சுற்றில் கருட மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது. ] 

நம்பிகள் ராமானுஜருக்கு அவர் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டு தீர்த்துவைத்த கதையும் பிரசித்தம். அப்போது பெருமாள் திருக்கச்சி வாயிலாகச் சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. (கட்டுரையின் அளவு காரணமாக அதை இங்கே தரவில்லை. )

திருக்கச்சி நம்பிகள் திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தத்துக்கு தனியன்கள் இயற்றியுள்ளார். இதைத் தவிர காஞ்சிப் பெருமாள் மீது தேவராஜாஷ்டகம் என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

இன்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே திருக்கச்சி நம்பிகள் கோயில் இருக்கிறது. வெளியே திருக்கச்சி நம்பிகள் கோயில் என்று எழுதியிருக்கிறார்கள். வெளியே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டியிருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை தராமல் இருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறார்கள். 

கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.

நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.

“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.

“நம்பி வீடு”

“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.

“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.

அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.

“உரமா ?”

“ஆமங்க வியசாயத்துக்கு”

அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.

அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.

“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”

“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”

திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான். 

நிற்க. 

போன வருடம்(2017ல்) நண்பர் திருவல்லிக்கேணி சம்பத்குமார்  அவர்கள் எனக்கு சில படங்களையும் கீழே உள்ள இந்த தகவலையும் அனுப்பியிருந்தார் 

தேசிகன் -  நிச்சயம்  தேங்காய் உடைக்க வேண்டும். இது யாருடைய  முயற்சி; யாரெல்லாம்  இதற்கு எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். நிச்சயம் பெரு முயற்சி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.    இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார்.  அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர்  திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது.  மகிழ்சியாக உள்ளது.  



இந்த வருடம்(2017) திரு மாதவன் ராஜகோபாலன் வருட உற்சவ படங்களை பார்த்த போது இந்த பதிவு தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு ஸ்பெஷல் நன்றி. 

’நம்பி’ என்றால் எல்லா விதத்திலும் மிகவும் நம்பிக்கையானவர் பரிபூர்ணர் என்று பொருள். முதல் முதலில் மதுரகவியாழ்வார் ’கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ நம்மாழ்வாரை நம்பி என்று அழைத்துள்ளார். இவரே நமக்கு முதல் நம்பி. 

பெரியநம்பி - மஹா பூர்ணர் ; திருக்கச்சிநம்பி - காஞ்சி பூர்ணர். 

இராமானுஜருக்கு கிடைத்த ஐந்து ஆசாரியர்கள் கிடைத்தார்கள். இன்று  நமக்கோ இராமானுஜரையும் சேர்த்து,  ’நம்பி’ என்று முடியும் பல ஆசாரியர்கள் கிடைத்தது நாம் செய்த பாக்கியம்!

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம் 

- சுஜாதா தேசிகன் 

( 22.2.2021)
மாசி மிருகசீர்ஷம்
ஸ்ரீ திருக்கச்சி நம்பியின் திருநட்சத்திரம்



Comments

  1. அருமையான பதிவு. நான் திருக்கச்சி நம்பிகள் பற்றி கவிஞர் வாலி எழுதிய இராமானுஜ காவியத்தில் படித்திருக்கிறேன்,அருமையாக விவரித்திருப்பார். இராமானுஜ காவியம் புத்தகவடிவில் வருவதற்கு முன்பு, விகடனில் வாராவாரம் பிரசுரிக்கப்பட்டது, அதில் உள்ள ஓவியங்கள் அருமையாக இருக்கும். இராமானுஜ காவியம் படிக்கும் பொழுது எனக்கும் ஆச்சிரியம் மேலோங்கியதுண்டு, எப்படி நம்பிகள் சிரத்தையுடன், தினமும் நந்தவனத்தில் பூக்களை பறித்து, தொடுத்து, பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சி வரை நடந்தே சென்று வரதனுக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று. பக்தியினால் மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் காஞ்சி சென்று, வரதனுக்கு ஆளவட்ட கைங்கர்யம் முடித்து மாலை பூவிருந்தவல்லி திரும்பும்முன், காஞ்சியில் இராமானுஜர் திருமாளிகை எழுந்தருள செய்து அங்கு சற்று இளைப்பாறிவிட்டு திரும்புவார் என்று. மேலும், நிறைய ஸ்வாரசியமான திருக்கச்சி பற்றிய நிகழ்வுகளை இராமானுஜ காவியத்தில் கவிதை வடிவில் திரு. வாலி அவர்கள் நமக்கு அளித்துள்ளார். நிச்சயம் இப்பொழுதாவது திருக்கச்சி திருமாளிகை சென்று வரவேண்டும். நன்றிகள் பல.

    ReplyDelete
  2. Feel like visiting Thirukachchi Nambigal temple and Thiru Maligai immediately. Acharyan Thiruvadigale Saranam. 🙏🏻🙏🏻

    ReplyDelete

Post a Comment