Skip to main content

பகுதி - 9 - ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும்

9. ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும்



பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் நாதமுனிகள் சென்ற அவ்வேளையில், கோயிலின் அமைதி அவரைத் தழுவிக்கொண்டது. அந்த அமைதியை ஆரம்ப ஜாமத்தின்‌ மணியோசை கலைத்தது. பல ஆண்டுகாலம் பிரிந்திருந்த தோழர்கள் சந்தித்ததுபோல், கோயில் புறாக்கள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. கோயிலின் நறுமணப் புகையுடன், பெருமாளின் மீது சாத்தப்பட்ட மகிழம் பூவின் நறுமணமும் கலந்து ஒரு வைகுண்ட சூழலை சிருஷ்டித்துக்கொண்டிருந்தது. கோயிலை ஒட்டிய தாமிரபரணி ஆற்று நீர் வழக்கத்துக்கு மாறாகச் சப்தம் இல்லாமல், மெதுவாக கோயிலை தடவிக் கொடுத்துச் சென்றது. மெல்லிய அலைகள் அங்கிருந்த பாறைகளில் பட்டு, ‘ஏன் இவ்விதம் ஜடமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்பதுபோல இருந்தது. பளிங்கு போன்ற ஆற்றின் நீரில் மீன்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. சில மீன்கள் நீருக்கு மேல் நாதமுனிகளைப் பார்க்க முடியுமா என்ற ஆவலில் துள்ளிக் குதித்து எட்டிப் பார்த்தன. அந்த மீன்களைப் போல, நாதமுனிகளின் மனமும் குருகூர் நம்பியை எப்போது காணப் போகிறோம், அவர் அருளிய இன்தமிழ் ஆராவமுதத்தை எப்போது பருகப்போகிறோம் என்று துள்ளிக் குதித்தவண்ணம் இருந்தது.


நாதமுனிகள் பொலிந்து நின்ற பிரானைச் சேவித்துக் கொண்டிருக்கும் வேளையில், நம் வாசகர்களைத் தாமிரபரணிப் படித்துறைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். வாருங்கள்.


படித்துறையை நோக்கிச் செல்லுகையில், அங்கே மூங்கில்களும், காய்ந்த புல் முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ள குடிசைகள் தென்படுகின்றன. அவற்றில் ஒரு குடிசையின் மேல் சேவல் ஒன்று கூவுகிறது. 'பொழுது எப்பொழுதோ விடிந்துவிட்டது, இந்தச் சேவல் இப்போது ஏன் கூவுகிறது?' என்று குடிசையில் இருக்கும் சிலர் வெளியே வந்து பார்க்கின்றனர். குடிசைக்கு வெளியே பலர் சுறுசுறுப்பாகக் கோரைப் புற்களை அடுக்கி வைத்துப் பாய் முடைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ மண்பாண்ட வேலை ஆரம்பிக்க மண்ணைக் குவித்து, அதில் தாமிரபரணி ஆற்றின் நீரைப் பிசைந்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் பனை ஓலையில் செய்த கூடையைத் தோளில் மாட்டிக்கொண்டு சங்கு எடுக்கவும், முத்துக் குளிக்கவும் பொருநல் சங்கணி துறைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்[1]. அவர்கள் எடுத்து வந்த விலையுயர்ந்த முத்துக்கள், மாட மாளிகையின் அணிகலன் பதித்த கதவுகளில் பதிக்கப்பட்டிருந்தன. மெல்லிய இளஞ்சிவப்புக் காலைக் கதிர்கள் அவற்றில் பட்டு, நட்சத்திரங்களின் குவியல் வானவில்லின் வண்ணங்களில்  மின்னுவது போலக் காட்சி அளிக்கிறது. 


கரடுமுரடான தரையில் செந்நெல் அறுத்துப் போர் அடித்த இடங்களில் சிதறிக் கிடந்த நெல்மணிகளை மயில்கள் உண்டு, உற்சாகம் பெற்று ஒரே தாவாகத் தாவிச் சென்று கோயில் மதில்களின் மீது ஏறி அமர்ந்தன. விலங்குகளும், பறவைகளும், தென்றல் தவழும் பூத்துக் குலுங்கும் சோலைகளும், பழத் தோட்டங்களும், தெளிந்த நீர்ச் சுனைகளும் மங்காத செல்வமாகக் காட்சி அளித்தன.


படித்துறையில் நின்று பார்க்கையில், பரந்து விரிந்த தாமிரபரணி ஆற்றில் பல வேத அந்தணர்கள் கிழக்கு நோக்கி வணங்கி, அதில் இறங்கி காலை அனுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். மணற்கேணியில் நீர் ஊறுவதுபோல, ஆயிரம் பாடல்களில் ஒரு பாட்டும் விடப்படாமல் கிடைக்க வேண்டும் என்ற நாதமுனிகளின் ஆர்வமே தாமிரபரணி நதியாக ஓடியதுபோன்று காட்சியளிக்கிறது.


உலகில் அழகான இயற்கைக் காட்சிகள் நம் எல்லோருக்கும் இன்பம் தருகின்றன. மலையைப் பார்த்து வியப்பு ஏற்படுகிறது. கடலைப் பார்த்துக் களிப்பு உண்டாகிறது. ஆறு, நதி, விலங்கு, மரம் ஆகியவை ஒவ்வொன்றும் ஆதிகாலமாக மனத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுகின்றன. ஆற்றின் அழகில் மயங்காதவர் யாரும் இப்பூவுலகில் இல்லை. ஆதலால், ஆற்றங்கரை இடங்களையே மக்கள் அதிகம் விரும்பினார்கள். அங்கேயே சேர்ந்து வாழ்ந்தார்கள்; கோயில் அமைத்தார்கள். எல்லோரும் கூடி ஊர் அமைத்தார்கள்; ஊர் நகரமாகியது; நகரம் நாடாகியது. 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்றனர். நிலம் தரும் நீர் ஊற்றும், வான் தரும் மழை காற்றும், வளம் தரும் ஆறுகளும், வனம் தரும் மலைகளும் செல்வமாக விளங்கின. ஆற்றின் கரையையே மக்கள் வாழ்வதற்கு உரிய இடமாக நாடினர். இவ்வாறு மனம் நாடிய இடத்தையே 'நாடு' என்றனர். மக்கள் பேசி மகிழும் மொழியின் பெயராலேயே நாடுகள் அமைந்திருந்தன. தமிழ் தெரிந்தவர்கள் நாடிய இந்த இடங்களைத் திராவிட நாடு என்றார்கள்.


தன் குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் தாய் போல, ஆறுகளும் நதிகளும் நிலங்களை வளர்த்தன. ஆறுகள் கடல் நோக்கிச் செல்வதுபோல, ஆருயிர்கள் அனைத்தும் இறைநோக்கி ஓடுகின்றன. அந்த இறை பக்திக்கு மூல காரணம் தமிழாகும். தாயைப் போலத் தமிழ் மொழி பக்தியை வளர்த்தது.


கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற பெரிய ஆறுகள் திராவிட தேசத்தில் இல்லை என்றாலும், இங்கே ஓடும் சிறிய நதிகள் பெருமை உடையவை[2]. செழுந்தேன் சொட்டுச் சொட்டாக இருந்தாலும், சுவை அதிகம். அதுபோல, தமிழ்நாட்டின் ஆறுகள் சுவையுடையவை. தேனாறு, பாலாறு, நெய்யாறு என்ற ஆற்றின் பெயர்களைக் கொண்டே இதை அறியலாம்.


இந்த ஆறுகள் பரந்து பாய்ந்து நிலவளத்தை மட்டும் வளர்க்கவில்லை, பக்தியையும் வளர்த்தன. இந்த ஆற்றங்கரையோரங்களில் சான்றோர்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்று நதிகளின் மூலம் சிறப்பித்து வேதவியாசர் துவாபர யுகத்திலேயே பாகவதத்தில் கூறியுள்ளார்.


அந்தச் சமஸ்கிருத ஸ்லோகத்தின் முக்கியத்துவம் கருதி அதை வாசகர்களுக்கு இங்கே தருகிறோம்[3].


கலௌ கலு பவிஷ்யந்தி

நாராயண பராயணா: |

க்வசித் க்வசிந் மஹாபாகா

த்ரமிடேஷுச பூரிச: |


தாம்ரபர்ணி நதியத்ர

க்ருத மாலா பயஸ்விநீ |

காவிரீ ச மஹாபாகா

ப்ராதீசீச மாஹாநதீ ||


சுலபமான இந்த ஸ்லோகத்தின் பொருள்: கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால், திராவிட தேசத்தில் நாராயணனே அடையத்தக்கவன் என்று பறைசாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் இங்கும் அங்கும் தோன்றுவார்கள். எங்கு தாமிரபரணி, கிருதமாலா (வைகை), பயஸ்வதி (பாலாறு), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிகள் ஓடுகின்றனவோ, அங்கு அவர்கள் தோன்றுவார்கள். இந்த ஆறுகளின் தண்ணீரைப் பருகுகின்ற தூய மனம் படைத்தவர்கள் திருமாலிடம் அபார பக்திகொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது. ரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருந்தனர். பகவானே வேதவியாசராகத் தோன்றி கூறிய வாக்கு எப்படிப் பொய்க்கும்?


திராவிட நாட்டில் மிகப் பெரிய ஆறு என்னும் பெருமிதத்துடன் பாய்கிறது காவிரி. குடகு மலையில் தோன்றி, கன்னட நாட்டினுள் புகுந்து தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்து பெரிய பெருமாளுக்கு மாலையாகி, திராவிட தேசத்துக்கு வளம் தந்து, பிறகு பூம்புகார் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. காவிரி பாய்ந்துகொண்டு இருக்கும் இடத்தில்தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் அவதரித்தனர்.


கன்னட நாட்டில் தோன்றும் பயஸ்வதி என்ற பாலாறு தமிழ்நாட்டுக்கு வந்து சிறக்கச்செய்து, வங்கக் கடலிலே முடிகிறது. இங்கே முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் அவதரித்தனர்.


மேற்கே ஓடும் பெரியாற்றங்கரையில் அவதரித்தவர் குலசேகர ஆழ்வார்.


தமிழகத்தில் தோன்றித் தமிழகத்திலேயே முடியும் சிறந்த ஆறுகள் வைகையும் தண்பொருநையும் ஆகும்.


கிருதமாலா என்ற வைகை ஆறு மேற்கு மலைத் தொடரில் தோன்றி வங்கக் கடலில் வடிகின்றது. இங்கேதான் பெரியாழ்வாரும், ஆண்டாளும் பக்திக்குப் புது இலக்கு அமைத்தார்கள்.


தண்பொருநை என்பது தாமிரபரணியின் தமிழ்ப் பெயர். இந்தத் தண்பொருநை பொதிகை மலையில் தோன்றி ஆறாக ஓடுகிறது. இந்தப் பொதிகை மலை இமயமலை போன்ற புகழ்பெற்றது. சேர மன்னன் ஒருவனைப் புலவர் ஒருவர், ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க’ என்று வாழ்த்தியுள்ளார். இன்னொரு புலவரோ பாண்டிய அரசனுக்குப் 'பொதிகைத் தலைவன்' என்று சிறப்புப் பெயர் கொடுத்துப் பொற்காசு வாங்கிக்கொண்டு சென்றார்.


உயரமான இந்த அழகிய மலையைத் திருக்குருகூரிலிருந்து நின்று பார்த்தாலும், மேற்கே திருவனந்தபுரத்திலிருந்து நின்று பார்த்தாலும் தெரியும். இம்மலையில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். இந்நீர் சிறுசிறு கால்வாய்களாக ஓடி, பெருங் கால்வாய்களாக வடிவெடுத்து ஆறாக மாறுகின்றது. கிழக்கு நோக்கி ஓடும் ஆறுதான் 'தண் பொருநை ஆறு' என்ற தாமிரபரணி.


பொங்கி வரும் இந்த நீர்ப் பெருக்கு, நிலத்தின் கற்கள், பாறைகள் மீது மோதும் போது, அதன் அலைகள் போரிடுவது போன்று காட்சியளிக்கும். அலைமோதிப் போரிடும் இயல்புடனும், குளிர்ச்சியான நீரின் தன்மைக்கு ஏற்றவாறும், செந்தமிழ்ப் பெரியோர் அதற்கு 'தண் பொருநை' என்று பெயர் சூட்டினர் போலும்!


தண்பொருநை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் 'கொற்கை' என்ற மாநகர் இருந்தது. இந்த இடம் சிறந்த துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. பழங்காலத்தில் அந்த நகரைத் தனி மன்னன் ஒருவன் ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னனுக்கு மக்கள் மூவர் இருந்தனர். அவர்களே பாண்டியன், சேரன், சோழன் என்ற மூவேந்தர் ஆவர். அவர்கள் கொற்கையில் வாழ்ந்தனர். இம்மூவரும் பிரியும் காலம் வந்தது. தமிழகத்தில் மலைத் தொடருக்கு மேற்கே சேரன் சென்று ஆண்டான். கிழக்கே சோழன் சென்று வாழ்ந்தான். தென்பகுதி நிலத்தைப் பாண்டியன் வைத்துக்கொண்டான். நீண்ட நெடுங்காலம் இம்முத்தமிழ் நாட்டை இம்மூவரும் ஆண்டார்கள். 'தண் பொருநை ஆறு' பாயும் நிலமே முத்தமிழ் வேந்தர்களின் மூல இடமாகும்.


பொதிகை மலையைப் பார்த்து மலைத்து நின்றவர்கள் அதை ’மாமலை’ என்று கொண்டாடினர். பரஞ்சோதி முனிவர் பொதிகை மலையை ஓர் அழகிய பெண்ணாகவும், தண்பொருநை ஆற்றை அவள் பெற்ற மகளாகவும் உருவகம் செய்தார். அகத்திய முனிவர் இந்த மாமலையில் அருந்தவம் புரிந்து தமிழ் வளர்த்தார். தென்றல் பிறந்த மலையில் அகத்தியர் தந்த தேன் தமிழும் பிறந்தது. அந்த மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணியின் கரையில் பொருநைக் கரை தந்த புண்ணியர் இருவர் அவதரித்தார்கள். குருகூர் சடகோபன் என்ற நம்மாழ்வாரும் 'அவரே தெய்வம்' என்று கொண்டாடிய மதுரகவிகளும். அதன் தண்ணீரிலேயே தமிழும் கலந்து ஆராவமுதமாகத் திருவாய்மொழியாகப் பாய்ந்திருக்கிறது! 'பாயும் ஆறுகளில் பொருநையில் குளிக்க வேண்டும்' என்பது மக்கள் வழிவழியே மொழிந்து வந்த மொழி!


இப்போது வாசகர்களைப் பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்கு மீண்டும் அழைக்கிறோம். அங்கே…


 நாதமுனிகள் உள்ளம் பணிந்து, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தவர் எவருக்கும் தெரியாத 'ஆயிரத்துள் இப்பத்தும்' என்று முடியும் அந்த ஆயிரம் தமிழ் பாசுரங்களும் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார். அவர் மனதின் எண்ண ஓட்டம் தாமிரபரணி போன்று ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, “நாதமுனிகளே! குருபக்தியைப் பறைசாற்றும் ஆழ்ந்த பொருளையுடைய மதுரகவிகளுடைய மிகச்சிறந்ததான 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்னும் பிரபந்தத்தை ஓர் ஆசனத்தில் அமர்ந்து, மனத்தை ஒருமைப்படுத்தி, குருகூர் சடகோபனின் திருவடிகளைத் தியானம் செய்து, நியமத்துடன், 'கண்ணிநுண் சிறுதாம்பை' பன்னீராயிரம் முறை ஓதினால், சடகோபர் உமக்குக் காட்சியளிப்பார் என்பது உறுதி. காட்சியளிக்கும் போது அந்தப் பிரபந்தங்கள் அனைத்தும் உமக்குக் கிடைத்தவையாகும். இதில் ஐயமில்லை” என்று பராங்குச தாசர் வழியனுப்பும் போது மங்களமாகக் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஒலித்தன.


அச்சமயம் கோயில் பட்டர், “நீங்கள் எதைத் தேடி இங்கே வந்தீர்களோ, அது விரைவில் கைக்கூடும்” என்று நாதமுனிகளுக்குத் தீர்த்தமும், மகிழம் பூ மாலையைப் பிரசாதமாகத் தந்தருளினார். இதை, பொலிந்து நின்ற பிரானின் வாக்காக எண்ணிய நாதமுனிகள், உடனே புளியமரத்தை நோக்கி ஓடினார். கோயிலில் குழுமியிருந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் இதைக் கண்டு, திகைத்து, 'இன்று கோயிலில் திருவிழா எதுவும் இல்லையே? ஏன் இப்படி ஓடுகிறார்?' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். சிலர் பட்டரிடம், 'ஏதும் விசேஷமா?' என்று வினவினார்கள். பட்டரும் ஒன்றும் புரியாமல் முழித்தார். நாதமுனிகளால் குருகூர் என்ற பழம் பெயரைத் துறந்து இனி ஆழ்வார் திருநகரியாகத் திகழப்போகிறது என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


தலைவனை அடைய வேண்டும் என்ற ஆசையின் மிகுதியால் பறவைகளைத் தூதுவிட்ட தலைவி, அத்தூதர்கள் மீண்டும் வந்து செய்தி சொல்லும்வரை பொறுத்திருக்க முடியாமல், தாமே காதலனைத் தேடிக்கொண்டு வேகமாகத் தலைவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்லுவது போல, நாதமுனிகளின் நடை இருந்தது[4].


நாதமுனிகள் புளியமரத்துக்கு எதிரில் யோக தசையில் அமர்ந்து, பக்தியுடன் மனதில் "குருகூர்நம்பியைத் தவிர வேறொரு விஷயத்தையும் அறியாதவரும், சடகோபன் அருளிய பாடல்களை இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும், அவரின் குணங்களில் எப்போதும் மூழ்கி அவரையே தனக்குத் தெய்வமாகக் கொண்டுள்ள மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் குடிக்கொள்ளட்டும்[5]" என்று பெருமாளை அன்றி வேறு ஒன்றும் அறியாத சடகோபனை அன்றி மற்றொன்றை அறியாத மதுரகவி ஒருவரையே இதயத்தில் நிறுத்தித் தேவகானத்தில் யாவரும் கேட்கும்படி பாட ஆரம்பித்தார்.


இசையமுதம் பொழிந்து, தாமிரபரணி தண்பொருநையாகக் கரைபுரண்ட வெள்ளம் கோயிலுக்குள் புகுந்து கோயிலைக் குளிர்வித்தது. கண்களுக்குத் தெரியாத தேவர்கள் வைகுண்டத்தில் ஏதேனும் விசேஷமா என்று வியந்தனர்.  அசுணப் பறவைகள் மயங்கி, வெட்கப்பட்டுச் சத்தம் போடுவதை நிறுத்தின. கண்ணன் குழல் கேட்ட கன்றுகள் போலக் கோயில் மாடுகளும் உருகின. புளியமரமாக இருந்த ஆதிசேஷன் தன் மகிழ்ச்சியை உணர்த்த இப்படியும் அப்படியுமாக அசைந்தார். பொதிகை மலையில் உள்ள மான், கரடி, யானை, சிங்கம் அனைத்தும், 'தாமிரபரணியின் தலையில் வீற்றிருக்கும் அகத்திய முனிவர் மீண்டும் பாடத் தொடங்கிவிட்டாரா?' என்று மயங்கின. இந்த கானம் எல்லோரையும் மயக்கியது. ஊர் மக்களை வசப்படுத்தியது. காற்று கூட இவ்விசைக்கு இடையூறு செய்யாமல் மிக மெதுவாக வீசியது. 'இது நாரத கானமோ?' என்று சிலர் வியப்பில் ஆழ்ந்தனர். லவகுசர்கள் இராமாயணக் காலத்தில் இசைத்த இராமாயணத்தில் இராமரே மயங்கியது போல, நாதமுனிகள் இசையின் இனிமையால் நம்பியும், பிரானும் மனம் உருகி, அக்காட்சி ஓர் ஓவியம் போன்று இருந்தது.


நாதமுனிகள் நாற்பத்தி ஐந்து நாள்[6], பன்னீராயிரம் முறை இசைத்த தேவகானத்தில் சிறுத்தாம்பில் கண்ணன் கட்டப்பட்டது போல, எல்லோரும் கட்டுப்பட்டார்கள்.

________________

[1] முத்து, சங்கு போன்றவை இலங்கை வரை சென்று வியாபாரம் செய்திருக்கிறார்கள்.

[2] காவிரி ( 768 கிமீ ); பாலாறு ( 368 கிமீ); வைகை ( 264 கிமீ); பொருநை ( 120 கிமீ);

[3] ஸ்ரீமத் பகவதம் - 11 ஸ்கந்தம்.

[4] திருவாய்மொழி திருநாவாய் ஐதீகம்

[5] ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்த 

அவிதித விஷயாந்தரச் சடாரேர்

உபநிஷதாம் உபகாந மாத்ர போக:

அபிச குணவஸாத் ததேக ஸேஷீ

மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து

என்ற தனியனின் தமிழக்கம்.

[6] சடகோப திவ்ய சரித்திரம்  ( மேற்கோள் ஸ்ரீமத்நாதமுனிகள் வைபவப் பிரகாசிகை)

Comments