Skip to main content

1. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை - யார் அந்த குழந்தை ?

1. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை -  யார் அந்த குழந்தை ?

வருடம் - 1273 .  காஞ்சிபுரம். ஸ்ரீ வரதராஜர் கோயில்.  காலை. 

நடாதூர் அம்மாள் என்ற வைணவ பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார்.  அவரை சுற்றி, வடக்கு திருவீதிப் பிள்ளை, ச்ருத பிரகாசிக பட்டர் போன்ற பெரியவர்கள் கூர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அச்சமயம் பளிச் என்ற திருமண்ணுடன் குட்டி ராமானுஜர் போல ஐந்து வயதுக் குழந்தை, தன் மாமாவான கிடாம்பி அப்புள்ளார் கையை பிடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே வர, எல்லோரும் அந்தக் குழந்தையை வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். 


நடாதூர் அம்மாள் மெய்மறந்து  “அடடா ! என்ன முகப்பொலிவு! நம் ராமானுஜரே குழந்தையாக நடந்து வருவது போல இருக்கிறதே!” என்று தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் “கிடாம்பி அப்புள்ளாரே!  இந்தக் குழந்தை யார் ? ” என்று கேட்க, அப்புள்ளார் “என் சகோதரியின் மகன்.  என் மருமான்.  பெயர் ’திருவேங்கட நாதன்’ ” என்றார்.  

உடனே அந்தக் குழந்தை நடாதூர் அம்மளை விழுந்து சேவித்தது. அம்மாள்  குழந்தையை கையில் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் தன் காலக்ஷேபத்தைத் தொடர ஆரம்பித்தார்.  ஆனால் எந்த இடத்தில் விட்டோம் என்று அவருக்கு மறந்துவிட்டது.  “இந்த குழந்தை வந்த போது எங்கே நிறுத்தினேன்?” என்று கேட்க,  கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கும் நிறுத்திய இடம் தெரியவில்லை.  அவர்களுக்கும் மறந்திருந்தார்கள். 


மடியில் இருந்த  குழந்தை ”அடியேன் வரும் போது நீங்கள் நிறுத்திய இடம் இது தானே!” என்று கடைசியாக கேட்ட வாக்கியத்தைக் மழலையில் கூற உடனே அந்தக் குழந்தையை வியப்புடன் மார்புடன் அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து, ‘நம் எம்பெருமானார் போல் நம் சம்பிரதாயத்தை நிலை நிறுத்தி, திருமழிசை ஆழ்வார் நெல்லை கிள்ளி

சுட்டிக் காட்டியது போல இன்று காட்டி கொடுத்த இந்த குழந்தை திருமழிசை ஆழ்வார் போல  மற்ற மதங்களை நிரகரித்து  வேத செழும் பொருள் காண்பித்த நாராயணனை தவிர வேறு தெய்வம் இல்லை என்று உரைத்து  அதை எல்லோரிடமும் கொண்டு செல்லப் போகிற அவதாரப் புருஷராக விளங்கப் போகிறான்!” என்று அக் குழந்தைக்கு தீர்க்கதரிசனத்துடன் ஆசீர்வாதமாக ஒரு ஸ்லோகத்தை அருளினார். 

“ ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: 
  பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம்”

அம்மாள் திருவாக்கில் வந்த ஸ்லோகத்தின் பொருள்:  “பிற மதங்களை கண்டித்து விலக்கி, நம் வேதாந்த சிந்தாந்தத்தை ஸ்தாபித்து, வித்வான்களின் பெருமதிப்பு பெற்று, சகல மங்களங்கலங்களையும் பெறுவாய்!”

ஸ்லோகம் மூலம் அருள் ஆசீர்வாதம் செய்த அம்மாள் அப்புள்ளாரை நோக்கி “வேங்கடநாதனுக்கு அடியேனே நம் சம்பிரதாயத்தை கற்றுக் கொடுக்க ஆசை, ஆனால்  என் முதுமை காரணமாக அப்பாக்கியம் கிட்ட போவதில்லை! அப்புள்ளாரே!  அதனால் நீரே இக் குழந்தைக்கு ஆசாரியராக இருந்து, நம் சம்பிரதாயப் பொக்கிஷங்களான வேதங்களையும்,  சாஸ்திரங்களையும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், நம்மாழ்வாரின் பகவத்விஷயங்களையும், உடையவரின் ஸ்ரீபாஷ்யத்தையும், திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகத்தின் அர்த்த விசேஷணங்களையும் பிரசாதிக்க வேண்டும். இதுவே உடையவரின் திருவுள்ளத்துக்கு உகப்பாக இருக்கும்!” என்றார். 

“தங்கள் அனுகிரஹித்தபடியே எல்லா பெருமைகளையும் பெறுவான் என்பதில் ஐயம் இல்லை!” என்று அப்புள்ளார் கூறிய போது  கோயிலில் மணி ஓசை கேட்ட போது, அம்மாள் திருவாக்கை  பேரருளாளனும் சேர்ந்து ஆமோதிப்பது போல இருந்த அச்சமாயம்,  அம்மாள் குழந்தையின் கையை பிடித்து அப்புள்ளாரிடம் கொடுக்க, அப்புள்ளாரும் குழந்தையும் அம்மாளை வணங்கிவிட்டு பேரருளாளனைத் தரிசிக்க கிளம்பினார்கள். 

அந்தக் குழந்தை தான் பின்னாளில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்று போற்றப்பட்ட அவதாரப் புருஷர்! 

கோயிலில் ஒலித்த மணிக்கும் நம் தேசிகனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. 

தொடரும்... 

- சுஜாதா தேசிகன்
25.9.2023
புரட்டாசி திருவோணம்
ஸ்ரீவேதாந்த தேசிகன் திருநட்சத்திரம்.
படங்கள் உதவி : ஸ்ரீ கேஷவ்



Comments

  1. Uppilisrinivasan ParthasarathySeptember 25, 2023 at 6:38 PM

    Athi arputham swamy

    ReplyDelete
  2. Dhanyan aanen, Swamy! Mikka nanri!

    ReplyDelete
  3. AdhoBhagyam to learn and revie the life history of NamAacharyan Vedhantha Desigar. Awaited to listen and learn more and more

    ReplyDelete
  4. Sri Nigamantha Maha Desigaya Namaha. Wonderful Article,yet so simple so that Children can read and understand. That too with lovely Sketches. We are very grateful to you.

    ReplyDelete
  5. Srimathe Nigamantha Maha Desikaya namaha

    ReplyDelete
  6. Excellent / inspiring

    ReplyDelete

Post a Comment