Skip to main content

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள்

 வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள்




ஏழு வருடங்கள் முன் கார் ஓட்டிக்கொண்டு பெங்களூரிலிருந்து வயநாடு வழியாகக் கேரளாவுக்குச் சென்றேன். போகும் வழியில் பந்திப்பூர் காட்டைக் கடந்து வரும் வழியில் சாலை குறுக்கே ஒரு பெரிய யானை கடக்க கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். சத்தியமங்கலம் வந்தபோது செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினார்கள். எங்கே போகிறேன் போன்ற விசாரிப்புகளுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பக்கத்திலிருந்தவர் “சார் இங்கேதான் ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிக்கொண்டு இருந்தான்” என்றார். அந்த அடர்ந்த காட்டை மீண்டும் பார்த்தபோது அதன் நிசப்தம் ஒரு வித பீதியைக் கிளப்பியது.

image

யானை கடந்து போன பந்திப்பூரில்தான் 1994ம் வருடம் க்ருபாகர் சேனனி (Krupakar Senani) என்று இரண்டு பிரபல வனவிலங்குப் புகைப்படக்காரர்களை ‘பெரிய அதிகாரிகள்’ என்று நினைத்து வீரப்பன் கடத்தினான். பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவித்தான். (இருவரும் Birds, Beasts and Bandits - வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.) பந்திப்பூர் யானையும், நாங்களும் அன்று பயம் இல்லாமல் காட்டைக் கடந்து சென்றதற்கு வீரப்பன் கொல்லப்பட்டதே காரணம்.


சமீபத்தில் முன்னாள் சிறப்பு ‘டாஸ்க் ஃபோர்ஸின்’ தலைவர் (STF) கே. விஜயகுமார் எழுதிய ‘சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை’ படித்தேன். (Veerappan - Chasing the brigand என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.) அதைத் தொடர்ந்து, இதன் ஆங்கில மூலத்தில் சில முக்கியமான பகுதிகளையும், கர்நாடகத்தின் முன்னாள் காவல்துறை இயக்குநர் எழுதிய ‘வீரப்பனின் நட்சத்திரக் கடத்தல் - ராஜ்குமார்’ புத்தகத்தையும் மீண்டும் படித்தேன். சில புள்ளிகளை இணைக்க முடிந்தது.

image

தமிழ்நாட்டில் வீரப்பன் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. அவன் நல்லவன், அவனை இப்படி மாற்றியது கல்குவாரி அதிபர்கள், அரசியல்வாதிகள், ‘அவரை எங்கள் எல்லைச்சாமியாகவே பார்க்கிறோம்’, ‘வீரப்பன் இருந்திருந்தால் காவரி பிரச்சினை இருக்காது’, வீரப்பர் என்று கூப்பிட வேண்டும் கோயில் கட்ட வேண்டும் என்று இன்றும் அரசியல் பேசும் பிரிவினைவாதிகள் ஒரு புறம். அவன் கொள்ளைக்காரன், பல உயிர்களைக் காவு வாங்கிய ஈவு இரக்கமற்ற கொலைகாரன், தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவன் என்ற கருத்தும் உடையவர்கள் இன்னொரு புறம்.

இந்த இரண்டு கருத்துக்களைத் தாங்கித்தான் வீரப்பன் பற்றிய திரைப்படம், புத்தகம் எல்லாம் வந்திருக்கின்றன.

விஜயகுமார் எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஆவணம். வீரப்பனைச் சுட்டு வீழ்த்தியவர் என்ற ஒரு காரணம் இருந்தாலும், காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பில் பணிபுரிபவர் தேச நலனைக் கருத்தில் கொண்டு உண்மையை எழுதியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. புத்தகம் முழுவதும் விறுவிறுப்பான வீரப்பனின் வேட்டை. புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது.


ஒளிந்து கொள்பவர்களுக்கும் தேடுபவர்களுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் பத்துக்கு ஒன்பது முறை ஒளிந்து கொள்பவர்கள்தான் வெற்றி பெறுகிறாரகள் - ரிச்சர்ட் கிளார்க்.

இதற்கு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். சி.தினகர் எழுதிய ‘வீரப்பன் நட்சத்திரக் கடத்தல்’ இன்னொரு முக்கிய ஆவணம். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது என்ன மாதிரியான அரசியல் நடந்தது என்று இதில் தெரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு புத்தகங்களையும், சேர்ந்து நோக்கும்போது வேறு பரிமாணம் கிடைக்கிறது.

வீரப்பனைத் தமிழகத்தின் ‘ராபின் ஹுட்’ என்றும், ‘வீரப்பனைப் பிடித்துவிட்டார்களா?’ என்றும் பலர் கேலி பேசியுள்ளார்கள். துக்ளக் சோ முதல் சுஜாதா வரை கேலி பேசாதவர்கள் யாரும் இல்லை.

சுஜாதா சொன்ன பதில் ஒன்று:

கேள்வி: இண்டர்நெட்டில் வீரப்பனைப் பற்றி வெப்தளமும் இடம் பெற்று விட்டதே?
பதில்: அப்படியா இனியாவது அவரைப் பிடித்து விடலாம்!

30 ஆண்டுகளுக்கு மேலாகக் காவல்துறைக்குத் ‘தண்ணி’ காட்டி, பல ஆண்டுகளாகக் காட்டில் சந்தனமரக் கடத்தல் செய்து, பல யானைகளைக் கொன்று, பல அதிகாரிகளைக் கொன்று தொழில் செய்த வீரப்பனை ஒரே ஒரு முறைதான் காவல்துறை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. அதன் பிறகு அவன் காவல்துறையில் பிடிபடவேயில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை தப்பித்திருக்கிறான்.

image

வீரப்பன் எவ்வளவு பயங்கரமானவன் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதும். 1990 வருடம் ஸ்ரீநிவாஸ் என்ற வனத்துறை அதிகாரி தானாக முன்வந்து கர்நாடகா அமைத்த சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார். ஒரு முறை ஸ்ரீநிவாஸிடமிருந்து வீரப்பன் தப்பியிருந்தான். அதனால் அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அவர் அதிரடிப்படையில் சேர்ந்தார். வீரப்பனின் தங்கை தற்கொலை செய்துகொள்ள ஸ்ரீநிவாஸ்தான் காரணம் என்று வீரப்பன் நம்பினான். அதனால் ஸ்ரீநிவாஸைப் போட்டுத்தள்ளத் திட்டம் வகுத்தான்.

தான் சரணடையத் தயார் என்று அறிவித்த வீரப்பனைச் சந்திக்க உற்சாகமாக ஸ்ரீநிவாஸ் கிளம்பினார். ஆனால் புதர்களுக்குள் பதுங்கி இருந்த வீரப்பனும் அவன் கூட்டாளிகளும்...

ஸ்ரீநிவாஸ் சுற்றுமுற்றும் பார்த்தார். யதார்த்தம் உறைத்தது. ... வாழ்வின் கடைசி நிமிடங்கள். நின்றுகொண்டிருந்த ஸ்ரீநிவாஸைப் பார்த்து வீரப்பனும் அவன் கூட்டாளிகளும் சிரிக்கத் தொடங்கினர். ... வீரப்பன் துப்பாக்கியால் சுட்டான். அவர் சரிந்து விழுந்து இறந்தார். ஆனால் அப்போதும் வீரப்பன் திருப்தி அடையவில்லை. ஸ்ரீநிவாஸின் தலையை வெட்டினான். கொடூரமான அந்த வெற்றிக் கோப்பையைத் தனது முகாமிற்குக் கொண்டு சென்றான். அங்கு அவனும் அவன் கூட்டாளிகளும் அதை ஒரு கால்பந்தைப் போல உதைத்து விளையாடினர்.

கிட்டவிட்ட மூன்று வருடங்கள் வரையில் ஸ்ரீநிவாஸின் தலை மீட்கப்படவில்லை!

image

அந்த முப்பது ஆண்டுகளில் அவன் 124 பேரைக் கொன்று குவித்துள்ளான். சிலர் 184 என்கிறார்கள். ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற ஒன்று உருவாகக் காரணம் அந்தப் புனித வெள்ளி படுகொலைதான்.

ஒரு புனித வெள்ளி அன்று வீரப்பன் வைத்த கண்ணிவெடிகளில் ஒரே சமயத்தில் 22 காவலர்கள் உயிர் இழந்தார்கள். அந்தப் படுகொலை தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரே நாளில் பங்குச் சந்தையில் விலை ஏறுவது போல வீரப்பனின் தலைக்கு ஐந்து லட்சம் என்பதிலிருந்து 20 லட்சம் ஏறியது. அதைவிட அவனிடம் பயமும் அதிகமாகியது.

அந்தப் புனித வெள்ளி தாக்குதலில் ராம்போ என்ற காவலர் பலத்த காயமடைந்தார். அவரைப் பற்றி புத்தகத்தில் வரும் பகுதி இது:

“அந்தக் குண்டு வெடிப்பில் ராய்போ பலத்த காயமடைந்திருந்தார்.

ஆனால் அவரைப் போன்ற அசாதாரணமானவர்களை மரணம் நெருங்குவது கடினம். அல்லது அவரது மலைபோன்ற உடல்வாகு பாதிப்பைக் குறைத்திருக்கலாம். அவசரமாக அவர் சேலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்தது, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழுவை பிரமிக்க வைத்தது.

பல மணி நேரங்களுக்குப் பிறகு அவர் சுயநினைவு வந்து எழுந்தபோது மறுபடியும் ஒரு அதிர்ச்சியில் இருந்தார். அவருக்கு அருகே அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

“நீங்க நல்லாயிட்டீங்கன்னு டாக்டர்கள் எங்கிட்ட சொன்னாங்க. சீக்கிரம் சரியாயிடுவீங்க” என்று சொன்னார்..

... ஜெயலலிதாவின் முகம் கடுமையாக இருந்தது. “இதை இப்படியே விட்டுவிடக் கூடாது” என்று உத்திரவிட்டார்.

இதற்குப் பிறகு ராம்போ ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவ விடுப்பிலிருந்தார். அவருக்கு 12 அறுவைச் சிகிச்சையாவது நடந்திருக்கும். அவர் வாழ்க்கை தொடர்ச்சியான வலியிலேயே கழிந்தது.

image

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெயலலிதா காட்டிய வேகம் அசாதாரணமானது. வால்டர் தேவாரம் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை அறிவிக்கப்பட்டு, அதில் சேர பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள்.

இன்னொரு சம்பவம். காட்டில் யானை ஒன்று விஜயகுமாரைத் துரத்த மலைச் சரிவில் விழுந்து அடிபட்டு மூன்று வாரங்கள் ஓய்விலிருந்து வந்தபிறகு அவருக்குப் பணி மாறுதல். அப்போது அவர் ஜெயலலிதாவிடம்

“மேடம்... எனது டாஸ்க் இன்னும் முடியவில்லையே?” என்று முதல்வரிடம் கேட்டேன்

“வீரப்பனைப் பிடிக்க நாள் குறித்து விட்டீர்களா?” என்றார்.

அந்தக் கேள்வி என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

“இல்லை” என்றே தர்மசங்கடத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. 20 வருடங்களாக அந்தக் கொள்ளைக்காரன் தப்பித்துக் கொண்டிருக்கிறான். என்னால் அவனைப் பிடிப்பதற்கான தேதியைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.


புத்தகத்தின் இன்னொரு பகுதியில், வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது சக காவலர் பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார். “இங்கே எப்படி ஸ்பிரைட் கிடைத்தது?” “இது பாசி பிடித்த தண்ணீர்” நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரண்டு வாய் குடிப்பதற்குள் குமட்டிக்கொண்டு வர... என்று வருகிறது.

பிறகு ஒரு சமயம், வீரப்பனின் தாக்குதலில் கோபால் என்ற காவலர் அடிப்பட்டு ஜீப்பில் இருக்கிறார். அவருடைய ஓட்டுநர் ரவி என்பவர் காயம் பட்டு வலது மணிக்கட்டு துண்டிக்கப்படும் நிலையில் இருக்கிறார். அத்தனை வேதனையையும் தாங்கிக்கொண்டு, ரவி தனது முரட்டுத்தனமான தைரியத்தையும் சமயோஜித புத்தியையும் செயல்படுத்தி, குறுகிய நேரத்தில் ஒரே கையில் வண்டியை ஓட்டிக்கொண்டு தப்பித்திருக்கிறார்கள்.

வீரப்பன் சிறுவனாக இருந்தபோது அவன் ஒரு யானையைக் கொன்றிருக்கிறான். யானையின் நெற்றியில் சுட்டு உடனடியாக அதை உயிரிழக்கச் செய்வது அவனுக்குப் பிடித்தமான வழிமுறை. ஏராளமான யானைகளை அவன் கொன்று குவித்திருக்கிறான். ஒரு யானையின் சடலம் பறவைகள், எறும்புகள் போன்ற லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாகிறது என்றும் யானையைக் கொல்வது ஒரு தொண்டுதான் என்றும் அவன் வாதிடுவானாம்.

நாயகன் படத்தில் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்ற வசனத்திற்கு நாம் கைதட்டி ரசித்த அபத்தத்திற்கும் வீரப்பனின் இந்த விதண்டாவாதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஒரு சம்பவத்தை ஒரு சிறுகதையாகவே எழுதிவிடலாம்.

விஜயகுமார் அவருடைய வேலையைப் பற்றி முடிந்தவரையில் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஒருமுறை சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது...

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு எனது குடும்பத்தினரை அழைத்துச் சென்றேன். நான் காரை ஓட்டினேன். எனது டிரைவர் என் அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். மீனாவும் (மனைவி) குழந்தைகளும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

வழியில் ஒரு உள்ளூர் ரவுடி ஒருவன் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது என்னை ஆத்திரமூட்டியது. காரைவிட்டு வெளியே வந்தேன். அவன் என்னைக் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகப் பெரிதாக இருந்தான். நடுரோட்டில் ஒரு ரவுடியுடன் மோதுவது சரியான முடிவா இல்லையா என்பதையெல்லாம் சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. பொதுமக்களை அடித்துக்கொண்டு இருந்தவனை நோக்கி நான் வருவதைக் கண்ட அவன் என்னைத் தாக்க கையை ஓங்கினான். அவனது கையைப் பிடித்து தடுத்து ஓங்கி ஒரு அறைவிட்டேன். அடுத்து, எனது துப்பாக்கியைப் பார்த்ததும் சிறிது மிரண்டான். சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை எடுத்தேன். அவனது காலைப் பிடித்து இழுத்து காரின் முன்சீட்டில் அவனைத் தள்ளினேன். போலிஸ் ஸ்டேஷன் வரும் வரையில் அவனை அந்த மரக் கிளையை வைத்து அடித்துக் கொண்டே வந்தேன். எனது குழந்தைகள் இருவரும் சினிமாவில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்த காட்சிகளை நிஜத்தில் பார்த்து மிரட்சி அடைந்தனர். அவர்கள் பொருமினர். விம்மினர். அவர்கள் கண்ணில் கண்ணீர் உடைத்துக் கொண்டு வெளியேறியது.


குழந்தைகள் முன் இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விஜயகுமாரின் மனைவி கடுமையாகக் கோபித்துக் கொண்டுள்ளார். ஒரு போலிஸ் அதிகாரி ரவுடியை இந்த மாதிரி போலிஸில் ஒப்படைப்பதை சினிமாவில் பார்த்துக் கைதட்டும் நாம் அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் என்ன மாதிரி சவால்களைச் சந்திக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

image

வீரப்பன் என்றால் சந்தனக் கடத்தலுக்குப் பிறகு நினைவுக்கு வருவது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல். ஜூலை 30, 2000 அன்று இரவு வீரப்பன் ராஜ்குமார் தங்கியிருந்த பண்ணை வீட்டில் வைத்து அவரைக் கடத்தினான். பக்கத்திலிருந்த ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம் ஒரு ஆடியோ கேசட் கொடுத்து அப்போதைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுக்கச் சொல்லிச் சென்றான். பர்வதம்மாள் உடனே பதற்றத்துடன் பெங்களூரு நோக்கிச் சென்றார். போகும் வழியில் குடும்ப ஜோதிடரைப் பார்த்து ஆலோசனை கேட்டுவிட்டுச் சென்றார். ஒரு சில நாட்களில் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றார் ஜோதிடர். ராஜ்குமார் வருவதற்கு 108 நாட்கள் ஆனது.

1994ல் புகைப்படக்காரர்களை கடத்தியபோது அதில் ஒருவர் தன் நண்பருக்குக் விளையாட்டாகக் கைரேகை பார்க்க, உடனே வீரப்பன் ஆர்வமாகத் தன் கையைக் காட்டிப் பார்க்கச் சொல்லி, தனக்கு ஆயுசு எவ்வளவு நாள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். எதுக்கு நமக்கு வம்பு என்று கைரேகை பார்த்தவர் ‘எழுவது வயது வரை நீங்க இருப்பீங்க’ என்று சொல்லியுள்ளார்.

2001 அதிரடிப்படைக்கு வீரப்பனின் ஜாதகம் வந்தது. அதிரடிப்படையில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் ஜாதகம் பார்க்கும் நிபுணர்களை வரவழைத்து அவர்களிடம் வீரப்பனின் பற்றியும் அவன் எதிர்காலம் பற்றியும் கேட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிரியாக இருப்பான். அவனுடைய பெரும்பாலான வாழ்க்கை வனவாசமாக இருக்கும். அவனுக்கு ராஜதண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். வீரப்பன் 14, 19, 32, 45, 52 ஆகிய வயதில் சோதனையை அனுபவிப்பான். 65 வயது வரையில் அவன் உயிரோடு இருந்துவிட்டால் அவன் 78 வயது வரை உயிரோடு இருப்பான் என்று கணித்தார்கள். வீரப்பன் 52 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின் முக்கியத் திருப்பம் ராஜ்குமாருடன் சென்ற அவருடைய உதவியாளர் நாகப்பா தப்பித்து வந்தது. விஜயகுமார் எழுதிய புத்தகத்தில்: ஒரு மாலை நேரம் நாகப்பா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். நக்கீரன் கோபால் ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு இருக்க, வீரப்பன் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்த போது, நாகப்பா இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று அங்கே இருந்த அரிவாளை எடுத்து வீரப்பனை வெட்ட ஓங்கிய போது மேலே உள்ள கூரை தடுத்தது. அப்போது கோபால் அவரது தோள்களைப் பிடித்துத் தடுக்க, அதற்கு நாகப்பா இதற்கு மேல் அங்கே இருந்தால் ஆபத்து என்று தப்பித்து வந்துவிட்டார்.

image

வில்லனிடம் தப்பித்து வந்த ஹீரோவாக நாகப்பா புகழப்பட்டார். ஆனால் விரைவிலேயே சிலர் நாகப்பா தனது ஹீரோவை விட்டு ஓடி வந்த கோழை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ராஜ்குமார் குடும்பத்தினர் கூட அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற செய்திகள் இருக்கிறது. நாகப்பா செய்ததையே ராஜ்குமார் செய்திருந்தால் மீடியா இப்படி பேசியிருக்குமா என்று தெரியாது. ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தில் விஜயகுமார் டீமில் இருக்கும் ஒரு எஸ்.பி கதாபாத்திரத்தில் ராஜ்குமார் மகன் பிறகு நடித்து திரைப்படத்தின் வழியாக வீரப்பனைக் கொன்றார்!.

தினகர் எழுதிய புத்தகத்தில் நாகப்பா பற்றி மிக முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார்.

நாகப்பா ஓர் ஏழை. ஆனால் ராஜ்குமாரிடம் அபரிமிதமான விசுவாசம் உடையவர். ஓர் ஏழைக்குக்கூட தன்னுடைய மரியாதையைக் காப்பாத்திக் கொள்கின்ற உரிமை இருக்கிறது. நாகப்பா பற்றி தவறான அறிவிப்பை நான் வெளியிட்டேன்... அவருக்கு அநீதி செய்துவிட்டேன்... அவருக்கு என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.. தன்னுடைய உயிரினையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய எஜமானருக்காக அவர் ஒரு வீரச் செயலைச் செய்திருக்கிறார்.

நாகப்பா தயவு செய்து என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

கோபால் மட்டும் இல்லாவிட்டால், இந்த இருண்ட இரவில் நாகப்பா வீரப்பனின் வாழ்க்கையினையே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார். தொல்லைகளும் முடிவுக்கு வந்திருக்கும். வீரப்பன் இன்று உயிருடன் இருப்பதற்கு கோபால்தான் பொறுப்பு. என்ன முரண்பாடு. உண்மையுள்ள ஊழியன் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறான். காட்டுக் கொள்ளைக்காரன் வீரப்பனை மரணத்திலிருந்து காப்பாற்றி ஒருவர் குளிர்சாதன வசதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீரப்பன் பற்றிய கதைகளை எழுதி சம்பாதித்த செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நக்கீரன் கோபால் செய்த குற்றங்களுக்காக தமிழ்நாடு காலவல்துறையினர் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.


ராஜ்குமார் விடுவிப்புக்குப் பிறகு பத்திரிகையாளார்களை சந்தித்து அவருடைய அனுபவங்களைச் சொன்ன போது வீரப்பனின் மீது எந்த கசப்புணர்வும் இன்றி, ‘வீரப்பனை மனிதத்தன்மை உடையவனாகவே கருதலாம். என்னை விடுவிக்கும் முன் அங்கே ஒரே கூத்தும் கும்மாளமும்தான்’ என்று நினைவு கூர்ந்தார். வீரப்பன் இறந்த பின் ‘ஒரு தீய சக்தி அழிக்கப்பட்டது’ என்றார்.

image

ராஜ்குமார் விடுவிப்புக்குப் பல கோடிகள் கைமாறியது என்பது பல புத்தகங்களில் இருக்கிறது. விஜயகுமார் தன் புத்தகத்தில் அதைக் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இரு மாநில அரசும் அதை மறுத்தது. ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இருந்தபோது பல ரூபாய் நோட்டுகள் கிடந்ததையும், ராஜ்குமார் கடத்தலின் போது கொடுத்த பணமாக அவை இருக்கலாம் என்றும் யூகங்கள் அடிப்படையில் சொல்லி உள்ளார். சில வருடங்களுக்கு முன் ராஜ்குமார் மூத்த மகன் வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப்பட்டது ‘ஒரு ஓப்பன் சீக்ரெட்.. யார் எவ்வளவு என்று தெரியாது ஆனால் நிறைய’ என்று கூறியுள்ளார். தினகர் தன் புத்தகத்தில் எவ்வளவு கோடி யார் என்று பட்டியலிட்டுள்ளார்.

மருமகன் மூலம் 5 கோடி இரண்டு முறை (10 கோடி), உளவுத்துறைத் தலைவர் மூலம் 5 கோடி, பர்வதம்மா சென்னைக்கு அனுப்பிய 1 கோடி கருணாதிநி வீட்டில் கொடுக்கப்பட்டது. பர்வதம்மா பானுவிடம் நேரடியாக 2 கோடி, திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் சென்னையில் கருணாநிதி வீட்டிற்குக் கொண்டு சென்ற 2 கோடி... மொத்தம் 20 கோடி!

வீரப்பனுடைய செல்வாக்கு தமிழ்த் தீவிரவாதிகளின் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு அடுத்த நிலைக்குச் சென்றது என்று கூறினால் மிகை ஆகாது. கோபால், நெடுமாறன் போன்றவர்கள் சென்று வீரப்பனை மீட்டுக் கொண்டு வந்ததை ‘In retrospect, the entire drama looks like a pre-planned, well-executed exercise with the single-point agenda of promoting Nedumaran’s interest in politics and his popularity among the public” என்று சோ கூறியுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்க, சிறையில் ‘தமானி’ (விஜயகுமார் இப்படித்தான் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்) என்ற கேரள மதத்தலைவருடன் பேசி ஒரு திட்டத்தை வகுக்க, போலிஸ் அவரை ரகசியமாகச் சந்தித்தது. அந்த சமயத்தில் தினமலர் பத்திரிகை ‘அடிக்கடி கோவை சிறைக்குக் காவல் அதிகாரி செல்கிறார்’ என்று செய்தி வெளியிட்டு போலிஸின் தூக்கத்தைக் கெடுத்தது. வீரப்பனின் கேசட் வெளியிடுகிறேன் என்று சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடத் தொடங்கின. பல தலைவர்கள் பற்றியும் வீர்ப்பன் அசிங்கமாகப் பேசியது (குறிப்பாக ஜெயலலிதா), தடா கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சு, காவிரி பிரச்சினை பற்றிப் பேசியது போன்றவை எல்லாம் இரு மாநில அரசாங்கங்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கியது.

வீரப்பன் என்கவுண்ட்டர் என்ற செய்தி வந்தபிறகு அந்த என்கவுண்ட்டர் போலி என்று மீடியாக்கள் ஊதிப் பெருக்கின. இத்தகைய வதந்திகள் அதிரடிப்படையின் நேர்மைக்கும் வலிமைக்கும் ஒரு அவமானம் என்கிறார் விஜயகுமார். அதிரடிப்படை அப்பாவி மலைவாழ் மக்களைக் கொடுமைப் படுத்தியது என்று ஒரு செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டு அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியதில் மீடியாக்களுக்கு உள்நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. கோர்ட் கேஸ் என்று வந்த பிறகு, சின்னதாக ‘வருத்தம்’ என்று வெளியிட்டு முடித்துக்கொள்கிறார்கள்.

துக்ளக் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி:

பத்திரிக்கையாளர்களுக்கும் சிறைத்தண்டனை அளிக்கும் பயங்கரவாதத் தடுப்பு மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதே?

ப: தீவீரவாதிகளைப் பற்றிய தகவல் அளித்த பத்திரிகையாளர்கள், அது பற்றிய விவரங்களை அரசுக்குத் தர மறுத்தால் தண்டனை - என்பது மசோதாவின் ஷரத்துக்களில் ஒன்று. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகையாளர்களும் குடி மக்களே. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்களே


உச்சநீதிமன்றம் நம் நாட்டுக்கு ஏன் முக்கியம் என்பது வீரப்பன் விஷயத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இரு மாநில முதல்வர்களும் தடா கைதிகளை விடுவிக்க முடிவு செய்தபோது உச்ச நீதி மன்றம் தடுத்தது. தன்னுடைய தீர்ப்பில்

உச்சநீதிமன்றம் நம் நாட்டுக்கு ஏன் முக்கியம் என்பது வீரப்பன் விஷயத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இரு மாநில முதல்வர்களும் தடா கைதிகளை விடுவிக்க முடிவு செய்தபோது உச்ச நீதி மன்றம் தடுத்தது. தன்னுடைய தீர்ப்பில்

“கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் காடுகளில் வீரப்பன் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான், வீரப்பன் தொடர்ந்து குற்றங்களை இழைப்பவன் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரிகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்குப் பயந்து அரசு நடந்து கொண்டால் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு இடம் கொடுப்பதாகிவிடும். இதன் விளையாக ஜனநாயக அமைப்பே சீர்குலைந்து போகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது கர்நாடக அரசின் பொறுப்பு. உங்களால் முடியவில்லையெனில் நீங்கள் பதவி இறங்கி அதை யார் செய்வார்களோ அவர்களுக்கு வழிவிடுங்கள்.”

வீரப்பனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர் அப்துல் கரீம் என்ற 76 வயது ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி. இவருடைய மகன் வீரப்பனின் தாக்குதலில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. ஷகில் அகமதுவின் தந்தை. இவர்களைப் போல உண்மையான குடிமகன்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இருக்கக் கூடாது.

image

வீரப்பனை வெளியே கொண்டு வர, மிஸ்டர் எக்ஸ் என்ற வீரப்பனிடம் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவர் உதவியிருக்கிறார். அவர் யார் என்று புத்தகத்தில் சொல்லப்படவில்லை. கடைசியில் வீரப்பனை எப்படிச் சுட்டு வீழ்த்தினார்கள் என்ற பகுதிகள் படிக்கச் சுவாரசியமானவை.


வீரப்பன் முடிவுக்கு வந்த பின் துக்ளக் தலையங்கத்தில் சோ இப்படி எழுதினார்:

‘துக்ளக்’ உட்பட பல பத்திரிகைகள் செய்து வந்த கிண்டல்; பொதுவாகவே மக்களிடையே நிலவிய ஏளனம்; நிபுணர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டவர்களின் உபதேசங்கள்; நடக்கவே நடக்காது எனக் கூறி சில ‘தலைவர்கள்’ விட்டு வந்த சவால்கள்... போன்றவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு வந்த தமிழக போலிஸ்துறை, வீரப்பனையும், அவனது சகாக்கள் சிலரையும் சுட்டு வீழ்த்தி, ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது....

....

இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தன்னால் முன்பு தோற்றுவிக்கப்பட்ட விசேஷப் படையை மீண்டும் உயிர்ப்பித்தார். அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்ததுடன், நவீன சாதனங்களையும் அவர்கள் பெற வழி செய்து, அவர்களை ஊக்கப்படுத்தினார். அரசு அவர்கள் பின் நிற்கும் என்ற உறுதியையும் அவர்கள் மனதில் தோற்றுவித்தார். விசேஷப் படை காட்டிய முனைப்பிற்கு, முதல்வர் ஜெயலலிதா காட்டிய உறுதியும் முக்கியக் காரணம். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும், ரௌடிகளை அடக்குவதிலும், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிற முனைப்பு, இந்தியாவில் வேறெந்த முதல்வருக்கும் இல்லை என்ற நமது கருத்து மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கிறது. விஜயகுமாருடன் சேர்ந்து, ஜெயலலிதாவையும் பாராட்டுகிறோம். நல்லது நடந்திருக்கிறது. நல்லவர்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.

image

ஜெயலலிதா அதிரடிப்படையில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒரு மனையும், ரூ 3 லட்சம் ரொக்கமும் பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்தார்.

விஜயகுமார் ஒரு பேட்டியில் தன்னுடைய புத்தக விற்பனையில் வரும் பணத்தில் ஒரு பகுதியை எப்படிப் பயன்படுத்தப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.

“I want to donate the entire proceeds for education-related activities in the places where Veerappan struck like a tsunami - say the villages including Manjucomapatti, Pulinjur, Geddesal- where people were brutally killed by him”

என்கிறார்

விஜயகுமார் ஆங்கிலப் புத்தகத்தின் ஆரம்பத்தில் “Dedicated to late Selvi J. Jayalalithaa and to all search teams” என்று சமர்ப்பித்துள்ளார். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் இதைக் காணவில்லை!

-சுஜாதா தேசிகன்
வலம் ஏப்ரப் 2020 இதழில் பிரசுரம் ஆனது.

புத்தகங்கள்:

Veerappan: Chasing the Brigand, K. Vijay Kumar (ஆங்கிலம்)
வீரப்பன் வேட்டை, கே. விஜயகுமார் (தமிழ்)
Birds, Beasts and Bandits by Krupakar Senani,
மாலை சுவடுகள் - மாலை முரசு பிரசுரம்

பரபரப்பு செய்திகள்


image

image

image

image

image

image

Comments

  1. Absolutely awesome. Intrest to read

    ReplyDelete
  2. Excellent Review. Very informative as well.

    ReplyDelete

Post a Comment