Skip to main content

திருமங்கையாழ்வாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் !

திருமங்கையாழ்வாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் !



நம்மாழ்வார் காலத்துக்கு முன் ’ஸ்ரீசடாரி’ என்பதற்கு ’ஸ்ரீசடகோபன்’ என்று பெயர் வந்திருக்க வாய்ப்பு இல்லை.

“சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம்” என்று ஸ்ரீசடகோபத்துக்கு ஆதிஷேன் என்று தான் பெயர் இருந்திருக்க வாய்ப்பு.

நம்மாழ்வாருக்கு ஸ்ரீசடகோபம் என்ற பெயர் எப்போது, எப்படி வந்தது ?

ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரத்தில்

வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம்ருஷிம் தாம் ச பாதுகாம்
யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ
என்கிறார்.

சடர்கள் (மூடர்கள்) திருத்தி அரங்கன் பணியில் ஈடுபட்டதால் சடாரி ;
சம் என்ற வாயுவை வென்றதால் சடகோபன்.
பாதுகை, நம்மாழ்வார் இருவருக்கும் சடாரி, சடகோபன் என்ற திருநாமங்கள்.

பெரியவாச்சான் பிள்ளை அருளிய ‘கலியன் அருள்பாடு’ என்ற பகுதியில் திருவத்யயன உற்சவம் எப்படித் திருமங்கை மன்னனால் ஏற்பட்டது என்று பல விஷயங்களை விவரித்துள்ளார்.

திருமங்கை ஆழ்வார் நம்பெருமாள் முன் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவித்து போது பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு என்ன வேண்டுமோ கேளும்” என்று சொல்ல உடனே திருமங்கை ஆழ்வார் “திருவத்யயன உத்ஸவம் போது வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்க உடனே நம்பெருமாள் “தந்தோம்” என்று அவருடைய ஆசையை நிறைவேற்றினார்.

இங்கே திருமங்கை ஆழ்வார் “வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்டதைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்க வேண்டும்.
ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு மந்திரிகளை வருகிறார்கள். அவர்களுக்கு மேடையில் ஒரே மாதிரி தான் இருக்கை அமைக்க வேண்டும் அப்போது தான் சம அந்தஸ்து என்று சொல்ல முடியும். அதே போலத் தான் திருமங்கை ஆழ்வார் ‘வேதத்தோடு திருவாய்மொழியையும்’ கேட்க வேண்டும் என்று விண்ணப்பிக்க,. நம்பெருமாளும் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்ல உடனே திருமங்கை மன்னன், ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து வரும்போது “நம்மாழ்வார்” என்று திருநாமம் சாற்றி திருமாலை, ஸ்ரீ சடகோபம், திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதித்து, நம்மாழ்வாரின் பாசுரங்கள் பத்து நாட்களும் நூறு நூறு பாசுரங்களாகக் கேட்டு அனுபவித்த பின், நம்மாழ்வாரைப் பெருமாள் திருவடிகளில் ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று சேரும்படி செய்த (நம்மாழ்வார் மோட்சம்) அந்தச் சமயத்தில் ஸ்ரீசடகோபத்துக்கு நம்மாழ்வாரின் பெயரைச் சூட்டும் படி திருமங்கை ஆழ்வாரிடம் கேட்டிருக்க வேண்டும். அதற்கும் நம்பெருமாள் ‘தந்தோம்’ என்று கூற அன்றிலிருந்து நம்மாழ்வாரே ஸ்ரீசடகோபம் என்றாகியது என்று தோன்றுகிறது.

இன்றும் அர்ச்சகர்கள் ஸ்ரீசடாரியை சாதிக்கிறார்கள். பெருமாளின் திருவடி, உங்களைத் தேடி பெருமாளே வந்து ஜாதி, குலம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் உங்கள் தலையைத் தீண்டுகிறார்!.

ஸ்வாமி தேசிகன் அம்ருதாஸ்வாதிநீ என்ற பிரபந்தத்தில்

அந்தமிலாப் பேரின்பமருந்து வேற்கும்
அடியோமயறிவுடனே யென்றுங்காத்து
முந்தைவினை நிரைவழியிலோழு காதெம்மை
முன்னிலை யாந்தேசிகர்த முன்னே சேர்த்து
மந்திரமுமந்திரத்தின் வழியுங்காட்டி
வழிப்படுத்திவானேற்றி யடிமைகொள்ளத்
தந்தையென நின்றதனித்திருமால் தாளில்
தலைவைத்தோஞ் சடகோபனருளினாலே (28)

என்று நம்மாழ்வாருடைய அருளினால் எம்பெருமான் திருவடிகளில் தலை வணங்கப் பெற்றோம். அதாவது ஆழ்வார் கருணையினால் தான் நாம் பகவானின் திருவடிகளில் சரணாகதி செய்ய நேரிட்டது என்கிறார்.

பெருமாளின் திருவடி நிலைகளான ஆதிஷேசனின் இருந்தார். அந்தத் திருவடி நிலைகளை ஸ்ரீசடகோபன் என்ற நம்மாழ்வார் ஏற்றார்.
நம்மாழ்வாரின் திருவடி நிலைகளை மதுரகவி ஆழ்வார் ஏற்றார்; பிறகு அதை ஸ்ரீராமானுஜர் ஏற்றார். ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம் !
திருவடிகளுக்கு என்றுமே ஒரு போட்டி நிலவுகிறது.

ஸ்ரீசடாரியை நாம் வாங்கிக்கொள்ளும் போது ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்றால் அது நம் திருமங்கையாழ்வார் தான்!

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே! வாழ்த்து

என்று மாமுனிகள் போல நாமும் கார்த்திகையில் கார்த்திகை நாளைக் காதலிக்கலாம்!

- சுஜாதா தேசிகன்
27.11.2023
கார்த்திகையில் கார்த்திகை, நம் திருமங்கை மன்னன் திருநட்சத்திரம்

படம்: எங்கள் இல்லத்தில் ஸ்ரீகுமுதவல்லி சமேத திருமங்கை மன்னன் சேவை சாதித்தபடி 

Comments

  1. அடியேன் உணர்ந்து ரசித்து படித்தேன்! சில தத்துவங்கள் விளக்கமாக சேர்க்க வேண்டும் அதை சரியாக செய்துள்ளீர்கள் நன்றி ஹரே கிருஷ்ணா!

    ReplyDelete

Post a Comment