Skip to main content

கண்களை திறக்கும் மூடிகள் !

யானை வாகனத்துடன்
திரு சுந்தரராஜன்
Recycle' என்ற வார்த்தைக்கு நச்சென்ற ஒரு தமிழ் வார்த்தை இல்லை.மறுசுழற்சி, மறுபயன்பாடு என்ற வார்த்தைகள் இருந்தாலும், அவை உபயோகித்தால் உடனே நம் மனதுக்குச் சட்டென்று அதன் பொருள் உறைப்பதில்லை.

’கபாலிடா’ போன்ற ஒரு வார்த்தையை நேற்று காஞ்சிபுரத்தில் இதற்கு கண்டுபிடித்தேன். அந்த வார்த்தை ‘’சுந்தரராஜன்’
அவர் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்த போது மாடிப்படியின் மேல் காஞ்சி தேவ பெருமாளும் தாயாரும் காட்சி தந்தார்கள். அடியேனின் பக்தி பெருமாள் தாயாருடன் காட்சி தரும் அளவிற்கு பிரமாதம் இல்லையே எப்படி என்று நினைத்து அவரிடம்

”மேலே பெருமாள்... “

“மூலவர் தான் மேலே போய் பாருங்க”

தேவராஜ பெருமாள் படிக்கட்டு மாதிரியே ஏறிக் கிட்ட சென்ற போது பல ஆச்சரியங்கள் கத்துக்கொண்டு இருந்தது.

தாயார் முகம் ஏதோ பழைய தண்ணி மக். பெருமாள் கீரிடம் ஏதோ பழைய பிளாஸ்டிக் கூடை, கை ஏதோ பழைய பைப் ( இனி நான் சொல்ல போகும் எல்லாவற்றிலும்‘பழைய’ என்ற வார்த்தையை சேர்த்துப் படிக்கவும் ).
கண்களுக்கு மூடிகள், துணிகள், துணி உலர்த்தும் கம்பி, அட்டைப் பெட்டி என்று ஒரு மினி வேஸ்ட்’ பேப்பர் கடையே அதில் இருந்தது.

இன்னொரு அறைக்குச் சென்ற போது அங்கே மேலும் பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருந்தது.

சின்ன குட்டி யானை, உற்சவ மூர்த்தி என்று எல்லாம் லைப் சைஸ் மாடல்கள். இந்த முறை உஷாராக
“இதை எல்லாம் எதை வைத்துச் செய்தீர்கள்?” என்றேன்

உற்சவர் 
மெழுகு, எம்சீல் சேர்த்து அவர் சொன்னவை எல்லாம் காயிலான் கடை சமாச்சாரம். சங்கு, சக்கிரம் ஏதோ சின்ன பிளேட் என்றார். உற்றுப்பார்த்தேன்.
பக்கத்தில் சீதையுடன் ராமர், லக்‌ஷ்மணர் ... “சார் இது..” என்று ஆரம்பிக்கும் முன் அவரே அதற்கும் பதில் சொன்னார் இது முழுக்க தர்மோகால்.
ஹாலில் ஓரத்தில் ஸ்டூல் சில அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது.
“வீட்டில் பெயிண்டிங் வேலை நடக்கிறது போல” என்றேன்.
இல்லை குதிரை வாகனம் செய்துகொண்டு இருக்கிறேன்.

மிரண்டு போனேன். அவரே தொடர்ந்தார்.

குதிரை வாகனம் In Making
”காஞ்சியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் வரதராஜ பெருமாள் பல வாகனங்களில் பவனி வருவார். நாமளும் அதே மாதிரி ஒரு வாகனத்தைச் செய்து பார்க்கலாம் என்று சில வருஷம் முன் முடிவு செய்தேன். பிறகு அதில் உற்சவரை ஏளப் பண்ணிவிடுவேன். காஞ்சி புரத்தில் இருக்கும் வாகனம் என்ன அளவோ அதே அளாவு - லைப் சைஸ்”.

“கருட வாகனம், அனுமார் வாகனம், குதிரை, ஹம்ச வானகம் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த வருஷம் குதிரை வாகனம் செப்டம்பர் 30 ரெடியாகிவிடும் வந்து பாருங்கோ” என்றார்.

’கீசர்’ அட்டைப் பெட்டி ஒன்று கிடைத்தது அது தான் மூஞ்சி என்று காண்பித்தார். அதில் இரண்டு கண்களையும் ’மூடிகளால்’ திறந்துகொண்டு இருந்தது.

“அந்த குடை?”

“அது வெறும் அட்டை, துணி” என்றார்.

போய்விட்டு வருகிறேன் என்று வெளியே வந்தேன். அவர்கள் இல்லத்தின் வெளியே ஒரு உடைந்த தூணில் ஆஞ்சநேயர். வழக்கமாக மக்கள் அதன் மீது வெண்ணெய் தடவி பிசுக்காகியுள்ளார்கள்.

“இது .. “ என்று என் கேள்வியை மீண்டும் கேட்டேன்.

ஆஞ்சநேயர் 
“ஓ. அதுவா.. பழைய காலத்து தூண் என்று நினைக்கிறேன். கோயில் புனர்நிர்மாணம் செய்யும் போது அதை அகற்றியுள்ளார்கள் வீதியோரத்தில் கிடந்தது, மக்கள் அதன் மீது வெற்றிலை துப்பிக்கொண்டு இருந்தார்கள். கல்லை ஒருநாள் திருப்பிப் பார்த்தேன். ஆஞ்சநேயர் சிலை இருந்தது. சுத்தம் செய்து ஆளை வைத்து வீட்டு முன் நிற்க வைத்தேன். இன்று போவோர் வருவோர் எல்லாம் அதைச் சேவித்துவிட்டு போகிறார்கள். சிலர் தேங்காய் கூட உடைக்கிறார்கள்.

ஒரு சின்ன அகல் விளக்கு காற்றிலும் எறிந்துகொண்டு இருந்தது.
இதை எல்லாம் செய்யும் திரு ‘’சுந்தரராஜனின் வயது வெறும் 84.
கீதையில் ”அர்ஜுனா நான் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறேன்” என்கிறான் கண்ணன். அது நிஜம் தான்.

Comments

  1. செயர்கரிய செய்வார் பெரியர். வேறென்ன சொல்ல. அவரை வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. என்ன அருமையான படைப்புகள்....அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்...

    ReplyDelete

Post a Comment