Skip to main content

பனை மரம்

குணசீலத்தில் நுங்கு 
பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இருக்கிறதா என்று தேட வேண்டும். ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார்.பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களிலும், ஆழ்வார் பாடல்களிலும் இருக்கிறது ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார்.

மடல் இலக்கியத்தில் மடல் ஏறுவோர் பனைஓலையைப் பயன்படுத்துவர் என்று இருக்கிறது. 
பனை மரத்தின் கிளையின் இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்து அதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வதை மடல் என்பர். இது மேல் தலைவன் ஏறுவது மடல் ஏறுதல் என்பதாகும். இதை செய்தால் தலைவன் படும் துன்பம் தலைவிக்கு தெரியவரும். இந்த காலத்தில் காதல் தோல்வியால் தாடி வைத்துக்கொள்வது மாதிரி. 

பலராமன், வீடுமன் ஆகியோர் பனைக் கொடியை உடையோராக சித்தரிக்கப்பாடுள்ளார்கள். பனை எனும் சொல் அளவின் பெருக்கத்தைக் குறிக்கும் சொல்லாக திருவள்ளூவர் பயன்படுத்தியுள்ளார். 


தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர்-பயன் தெரிவார்


செய்யப்பட்ட உதவி சின்னதாக இருந்தாலும்,, அதன் பயனை உணர்ந்தவர் அதனைப் பனை மரம் அளாவு போன்றது என்கிறார். 



திருமழிசைப் பிரான் திருசந்த திருசந்த விருத்தத்தம் ( 813 ) பாடலில் இருக்கு என்றார்.
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே
நீர்க் காக்கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழுவும், வாளை மீன்கள் அவற்றை நீர்க் காக்கையாகக் கருதி விழுங்கப் பாயும் திருக்குறுங்குடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தேன்றி இரணியனை இரு கூறாக்கியது நீ தானே என்கிறார்.
மேலும் பனைமரம் மேலும் நம்மாழ்வார் திருவாய்மொழி ( 3010, 4-1-4 ) வருகிறது. ”பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ” பனைமரம் போன்ற கால்களை உடைய மதம்பொருந்திய யானையைக் கொன்ற கண்ணன் திருவடிகளை வணங்குங்கள் என்கிறார்.
அதே போல திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ( 1876, 10-3-9 )
“ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஒடிப் போனார்” இங்கு ஏடு பனைஓலையை குறிக்கிறது. வாயு வேகத்தில் வந்த இராமபாணத்தால், பனை ஓலை காற்றில் பறப்பது போன்று, இராவணனின் வேல் ஆயிற்று என்கிறார் ஆழ்வார்

அபூர்வ மரம்! 
போன வருடம் டைம்ஸ் நாளிதழில் திண்டிவனம் பக்கம் ஒரு அபூர்வமான பனை மரம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியைப் படித்தேன். பனை மரம் பூத்து குலுங்கும் படம் போட்டிருந்தார்கள். இந்த அரிய வகையான பனை மரத்தின் விதையைப் பாதுகாத்து அதை நட்டு வளர்க்கத் தோட்டக்கலை முடிவு செய்திருக்கிறது என்றும் படித்தேன். இந்தப் பனை மரம் அதன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து காய்க்கும் என்பது வியப்பளிக்கும் செய்தி. 120 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும் என்றும் இணைத்தில் படித்த போது தெரிந்தது.


ஆழ்வார் பாடல்களில் பனை மரம் பற்றிய குறிப்பு இல்லாது போனாலும் நாத முனி காலத்தில் ஆழ்வார் பாடல்களை ’பட்டோலைப்படுத்த’ இந்தப் பனை மரத்தின் ஓலைகள் பயன் படுத்தப்பட்டது. இன்னும் கூட பழைய ஓலைகளைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பனை ஓலைச்சுவடிகள் - மேல்கோட்டை
திரு.அரங்கராஜன் ஸ்வாமிகளிடம் பேசிக்கொண்டு இருந்த போது( நம்பிள்ளை உரைத்திறன் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்). படி எடுக்கும் போது ஏற்படும் தப்புக்கள் பற்றியும் அவர் சொல்லும் குறிப்புகள் சுவாரசியமானவை. பனை ஓலை சுமார் நூறு வருடம் தாக்குப்பிடிக்கும். குளிர் பிரதேசங்களில், நேபாளம், இமயமலை போன்ற இடங்களில் மேலும் சில வருஷம் இருக்கலாம். நம் ஆசாரியர்கள் பலர் எழுதியது சுவையாக இருக்க அதைக் கரையான் தான் சாப்பிட்டது என்று படித்திருக்கிறோம்.

இந்தச் சித்திரை மாதம் மேல்கோட்டையில் Academy of Sanskrit Research விஜயம் செய்த போது முதல் முறையாகப் பல ஓலைச்சுவடிகளைக் கையில் தொட்டுப் பார்த்தேன். எல்லா ஓலைச்சுவடிகளையும் பாதுகாத்து வைத்துள்ளார்கள். அதில் 400 வருடம் பழமையான நம்மாழ்வார் திருவாய்மொழியும் அடங்கும். ஓவியங்களுடன் ! வாழைமட்டை அளவு ஒரு கட்டு ஓலைச்சுவடியில் 1.75லட்சம் மஹாபாரத ஸ்லோகம் பார்க்க முடிந்தது. எல்லாவற்றையும் தைலம் தடவி பாதுகாக்கிறார்கள். பூச்சி வராமல் இருக்கப் பாம்பு உரித்துப் போட்ட தோலை அதன் மீது போர்த்தியிருப்பதை பார்த்தேன்.

ராமானுஜர் உபயோகித்த கூடை
மேல்கோட்டை ராமானுஜர் சன்னதியை நிர்வகிப்பவரின் வீட்டில் சில வருடங்கள் முன் தங்கியிருந்த போது அவர்கள் வீட்டுக் கோவில் ஆழ்வார் சன்னதியில் (வீட்டின் பெருமாள் அறை) ராமானுஜர் மடி மீது அமர்ந்த செல்வப்பிள்ளை விக்கிரகத்தைப் பார்க்க நேர்ந்தது. இவர்களின் இல்லத்தில்

இ-ரா-மா-நு-ச-ன் - கையெழுத்து !
ராமானுஜர் தன் கைப்பட எழுதிக் கொடுத்த ஓலைச்சுவடியில் 'இராமானுசன்' என்ற கையெழுத்து ஓலை ஒன்று இருக்கிறது. மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் கோயிலில் இராமானுசர் உபயோகப்படுத்திய ஓலைப்பெட்டியை இன்றும் பார்க்கலாம்.

அடுத்த முறை காரிலோ, ரயிலிலோ போகும் போது பனை மரத்தைப் பார்த்தால் சாதாரணமாக நினைக்காதீர்கள்! நமக்குப் பல பொக்கிஷங்களை அது தந்திருக்கிறது.

Comments

  1. அனைத்து பனைமரங்களும் பூக்கத்தான் செய்கின்றன, அவற்றை ஆண் பனை என்று கூறுவதுண்டு. நுங்குகள் காய்க்கும் பனை பெண் பனை.

    மற்றபடி நீங்கள் மேலே படத்தில் குறிப்பிட்டுள்ள பனை என்பது, மரபனு ரீதியாக மாற்றம் ஏற்பட்ட பனையாக இருக்கலாம் [கிளை கொண்ட பனை போல].

    பனம் பூக்கள் பற்றியும் சங்க பாடல் உள்ளது.

    http://4.bp.blogspot.com/-QaivgP6euu4/UTC3lPP7LeI/AAAAAAAAEUU/t7uXJT2eJys/s1600/aanpanai.jpg

    ReplyDelete
  2. //பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இருக்கிறதா என்று தேட வேண்டும்.//
    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....
    -ஜகத்பிரசித்தி பெற்ற சங்கப்பாடலாயிற்றே?
    நினைவுக்கு வரவில்லையா?

    ReplyDelete

Post a Comment