Skip to main content

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 3 ( நிறைவு )


பெரிய நம்பிகள் திருமாளிகை எண்!
ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அந்த துயரமான நிகழ்வை சொல்லுவதற்கு முன் இந்த வருடம் ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று மார்கழி கேட்டை ஸ்ரீபெரிய நம்பிகள் திருநட்சத்திரமும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரமும் சேர்ந்த துவாதசி.

காலை 6 மணிக்குப் பெரிய பெருமாளை தரிசிக்க சென்ற போது 50, 100, 250 ரூபாய் என்று டிக்கெட் வரிசை அமைத்து இன்னும் பெரிய பெருமாளாகியிருந்தார். கோயில் முழுக்க கருப்பு-சிகப்பு நாத்திகர் கலரில் ’கோவிந்தா’ என்று கோஷம் போடும் ஆஸ்திகர் கூட்டம். நாழிக்கேட்டான் கோபுர வாசலில் கோயிலுக்கு வரும் பர்முடா, கைலி கூட்டத்தை காவல்துறை திரும்ப அனுப்பிக்கொண்டு இருந்தது. நெற்றியில் திருமண், குடுமி, கச்சத்துடன் அதை புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் ஒரு வெள்ளைக்காரர்.

பழசு ஆனா புதுசு !
துவாதசி அன்று பெருமாள் துளசி தீர்த்தம் கொடுத்து அருள, அதை வாங்கிக்கொண்டு, கொள்ளிடம் சலவை செய்த மாதிரி இருந்த கோயிலை பார்த்துக்கொண்டே ஆயிரம் கால் மண்டபத்தின் புது தோற்றத்தைக் கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு ஸ்ரீதேசிகன் சன்னதியில் இருப்பவர் என்னைக் கூப்பிட்டு கை நிறைய நெய்யை ஊற்றினார். அதில் துளியூண்டு பொங்கல் இருந்தது!.



தென்கலை, வடகலை பேதம் இருக்கக் கூடாது என்று அங்கிருந்து ஸ்ரீமணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்ற போது அவரின் ஸ்ரீபாதங்களைத் தலையிலும் கையில் மீண்டும் பொங்கல் கிடைத்தது.

காபி கொடுத்து உபசரித்த
பெரிய நம்பிகள் ( வம்சம்)
பழைய எண் 164 புது எண் 108 என்ற கீழ்சித்திர வீதியில் இருக்கும் பெரிய நம்பிகள் திருமாளிகைக்கு அடியேனுடைய முதல் விஜயம். சுமார் 1020 ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் பெரிய நம்பிகள் வம்சத்தவர்கள் அங்கே வசித்துவருகிறார்கள். அன்று பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் என்பதால் அவர்கள் வீட்டுக்கு நிறைய அடியார்கள் வந்து தண்டம் சமர்ப்பித்துக்கொண்டு இருந்தார்கள். தயங்கித் தயங்கி அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது முன்பே அறிமுகம் ஆனது போல் “வாங்கோ” என்று அழைத்து உட்கார வைத்து “என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று உபசரித்தார்கள்.
“எதுவும் வேண்டாம்.. இப்ப தான் பிரசாதம் சாப்பிட்டேன்” என்று சொன்னதைக் கேட்காமல் உள்ளே சென்ற தன் கையால் காபி கலந்துகொண்டு வந்து என் கையில் கொடுத்தார் அந்த பெரியவர்.

அவர் தான் தற்போதைய பெரிய நம்பி வம்சத்து ஆசாரியர் ஸ்ரீசுந்தராசாரி ஸ்வாமி. பெரிய நம்பிகள் வம்சத்து ’ஜீன்’ அப்படியே அவர்களிடம் இருப்பதை இன்றும் பார்க்கலாம். ’செயற்கரிய செய்வர் பெரியர்’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இவர்களே எடுத்துக்காட்டு. - “down to earth" என்று ஆங்கிலத்தில் சொல்லுவது இவர்களுக்கு அப்படியே பொருந்தும்.

பெருமாள் துளசி தீர்த்தம் கொடுக்க, ஸ்வாமி தேசிகனும், மணவாளமாமுனிகளும் பொங்கல் பிரசாதம் தந்தருள, பெரிய நம்பிகள் திருமாளிகையில் காபி என்று அடியேன் முன்பு எப்போதோ செய்த புண்ணியம்.

நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு
பெரிய நம்பிகள் பற்றி முன்பு சொல்லியிருந்தேன். அதைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்துகிறேன்
- அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறக்க ஸ்ரீராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து சாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்
- உடையவரை ஸ்ரீஆளவந்தார் என்று நினைத்து பெரிய நம்பிகள் கீழே அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.
- பெரிய நம்பிகளை ஊர் ஒதுக்கி வைத்த போது நம்பெருமாள் வீட்டு முன்பு நின்று இவர் செய்தது சரி தான் என்று சொன்ன இடம்.
- ஆளவந்தார் முன்பு வசித்த இடம் இது...

என்று பல பெருமைகளைக் கொண்ட நிகழ்வுகள் நடந்த அந்தத் திருமாளிகையில் ஒரு நாள் முழுக்க இருந்தேன்.

அன்று மாலை மதுரை பேராசிரியர் ஸ்ரீ உ.வே இரா.அரங்கராஜன் “ஸ்ரீவைஷணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமாநுஜ தாஸர்கள்” என்ற புத்தகம் அன்று பெரிய நம்பிகள் திருமாளிகையில் வெளியிடப்பட்டது.

புத்தக வெளியீடு 
ராமானுஜர் சரித்திரத்தில் வரும் சில தாஸர்களை பற்றி நமக்குத் தெரியும் ஆனால் அதிகம் தெரியாத தாஸர்கள் சுமார் நூறு பேர் இருக்கிறார்கள் ! முதல் ஐம்பது தாஸர்கள் பற்றிய இந்தப் புத்தகத்தில் குறிப்புகளைக் கொடுத்து நமக்கு உபகரித்துள்ளார் அரங்கராஜன் ஸ்வாமி.

புத்தகம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் முன் ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன என்ற சரித்திரத்தை சுருக்கமாகப் பார்க்கலாம்.

குலோத்துங்கன் என்ற சைவ ராஜா ஒருவன் ராமானுஜரை அவனுடைய தர்பாருக்கு அழைத்த பொழுது கூரத்தாழ்வான் ராமானுஜரைப்போல் மாறுவேடத்தில் சென்றார். தள்ளாத வயதிலும் பெரிய நம்பி ஆழ்வானுடன் சென்றார். ”சிவனுக்கு மேற்பட்ட பரதெய்வமில்லை” என்று எழுதி வாங்க வேண்டும் என்று கேட்க அதற்கு ஆழ்வான் “ஸ்ரீமந் நாராயணனே பரதத்வம்” என்று அறுதியிட்டிருக்க அரசன் கடும் சினம் கொண்டு ஆழ்வானுடைய திருக்கண்களைப் பிடுங்குமாறு ஆணையிட்டான். ஆழ்வானோ “நானே பிடுங்கிக்கொள்கிறேன்” என்று தன் இரு திருக்கண்களையும் தன் கையாலேயே குத்திக்கொண்டார்.

பிறகு அரசன் பெரிய நம்பியினுடைய கண்களைப் பறிக்கவேண்டும் என்று உத்திரவிட்டபோது மிகவும் வயதான பெரிய நம்பிகளின் கண்களை ராஜசேவகர்கள் கூறிய மழுவால் குத்தினர். உடனே பெரிய நம்பிகள் தம் இரு திருக்கரங்களையும் உயரத் தூக்கிய பெருத்த குரலில்

அடடே! - ஆயிரம் கால் மண்டபம்
புதிய பாதை
“பகவத் விரோதிகளாயிருக்கிற இந்த நீசர்கள் நிறைந்த சபையிலே நியாயம் அறிந்தவர் ஒருவரும் இல்லையா?” எம்பெருமானை பரம் பொருள் என்று உணர்ந்தவர் ஒருவரும் இல்லையா ?” என்று சுற்றிலும் நோக்கினார். அப்போது அரசனுக்கு உடைவாள் எடுக்கும் ஒரு பெண்பிள்ளை உணர்ச்சி பரவசமாகி ஏந்திய உடைவாளை அரசன் முன்பு தூக்கியெறிந்து
“ அடியேன் இங்கு ஒருத்தி நியாயத்துக்குக் குரல் கொடுக்கிறேன்” என்று கூவினாள். அப்பணிப் பெண்ணே ஆழ்வானுக்கும், பெரிய நம்பிகளுக்கும் கை கொடுத்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றாள்
மிகவும் வயதான பெரிய நம்பி வலியைத் தாங்க முடியாமல் பரமபதித்தார். அவர் பரமபதிக்கும் பொழுது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தார். ஆழ்வானும் அத்துழாயும் (பெரிய நம்பியின் திருக்குமாரத்தி) ஸ்ரீரங்கம் இன்னும் சிறிது தூரம் தான் உள்ளது, அது வரை அவருடைய மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டனர். பெரிய நம்பி உடனேயே நின்று அந்த இடத்திலேயே (அத்துழாழ் மடியில்) பரமபதித்தார். ஏனென்றால் யாரெனும் இந்த சம்பவத்தைக் கேட்டால், திருவரங்கத்தில் (அல்லது ஏதேனும் ஒரு திவ்ய தேசத்தில்) வந்து தான் பரமபதிக்க வேண்டும் என்று நினைத்து விடுவார்கள். அது நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் ஆசாரியர்களின் பெருமையைக் குறைத்துவிடும் என்று கூறினார். ஆழ்வார் “வைகுந்தம் ஆகும் தம்மூரெல்லாம்” – ஸ்ரீவைஷ்ணவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீவைகுந்தம் என்று கூறினார்.

புத்தகம் முகப்பு அட்டை
அந்தப் பணிப்பெண் பெயர் நாவல்கொடி அம்மாள். பதவியை தூக்கியெறிந்து நாவல்கொடி அம்மாள் பெரியநம்பியை திருப்பள்ளிப்படுத்த உதவியாயிருந்தாள். அவளே கூரத்தாழ்வானை ஒரு தொட்டியில் ஏற்றித் திருவரங்கத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்தாள். பிறகு நாவல் கொடி அம்மாள் திருவரங்கத்திலே நித்ய வாசமாகத் தங்கிவிட்டாள். ஸ்ரீராமானுஜர் திருநாராயண புரத்திலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பிய போது நாவல் கொடி அம்மாள் உடையவருடைய திருவடிகளை ஆசிரயித்தாள். ஆழ்வான், பெரிய நம்பிகளுக்கு உதவி செய்த நாவல் கொடி அம்மாளுக்கு நம்பெருமாள் தீர்த்த பிரசாதங்களும், சகல விதமான சீர்வரிசைகளும், மரியாதைகளும் கொடுத்து கௌரவித்தருளினார்.

நாவல் கொடி அம்மாள் மாதிரி இன்னும் ஐம்பது தாஸர்கள் பற்றி இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் கூறியுள்ளார்.

கையெழுத்து சொல்லும் கதை
அன்று அரங்கராஜன் ஸ்வாமிகள் பெரிய நம்பிகள் பற்றி பெரிய நம்பிகளின் திருமாளிகையில் நிகழ்த்திய உபன்யாசத்தில் சொன்ன விஷயங்களையே இந்த மூன்று பகுதியிலும் தந்துள்ளேன்.

புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீ உ.வே. இரா.அரங்கரஜன் ஸ்வாமி ( ஆசிரியர் ), ஸ்ரீபெரிய நம்பிகள் திருமாளிகையில் தற்போது இருக்கும் பெரிய நம்பிகள் ஸ்வாமி. ஸ்ரீ.உ.வே. சுந்தராசாரி ஸ்வாமி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஆசிரியர் உ.வே அ.கிருஷ்ணமாசார்யர் எல்லோரும் அடியேனுக்கு அதில் கையெழுத்து போட்டுக்கொடுத்து ஆசிர்வதித்தனர்.


புத்தகம் கிடைக்கும் இடம்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்ரீரங்கம்  அல்லது இரா.அரங்கராஜன் சென்னை ( +91-9791457614 )



பிகு: பெரிய நம்பிகள் வீட்டுக்கு முன்பு ஸ்ரீகூரத்தாழ்வான் திருமாளிகை இருக்கிறது அதற்கு பக்கத்தில் ‘நமோ டீ ஸ்டால்’ இருக்கிறது! நமோ நாராயணா








முந்தைய பகுதிகளை படிக்க :
கையெழுத்து சொல்லும் கதை - 1
கையெழுத்து சொல்லும் கதை - 2 

Comments

  1. இவர்கள் எல்லாம் இல்லையேல் நமக்கேது ஸ்ரீரங்கமும் ரெங்கனும்..

    ReplyDelete
  2. Desikan swamin we need ppl like you keep on writing about the greatness of srivaishnavism and our acharyas as ppl are moving towards babas,sri sris and ishas.

    Never stop writing about srivaishnavism at any cost.

    Jai Sriman Narayana.

    Uyya ore vazhi udayavar thiruvadi.

    ReplyDelete
  3. அருமையிலும் அருமை. அடுத்த பயணத்தில் பெரியநம்பிகள் திருமாளிகைக்குப் போய் தரிசிக்கணும்.

    ReplyDelete
  4. குலோத்துங்க சோழன் இந்த விஷயத்தில் தவறிழைத்திருக்கலாம். ஆனாலும் அவன் ஒரு பெரும் பாரம்பரியத்துக்கு உரிய மாமன்னன். சுங்கம் தவிர்த்த சோழன் என்று பெயர் பெற்று மக்கள் நலனை முன்னிட்டு ஆட்சி புரிந்தான். நோழ நாடு அவன் ஆட்சியில் சிகரங்களைத் தொட்டது. சைவம் தழைத்தோங்கியது. பெரியபுராணம் எழுதப்பட்டது. பன்னிரு சைவத் திருமுறைகள் தொகுக்கப்பட்டன. பிரமாண்டமான கட்டுமானங்கள் எழுந்தன. இவ்வாறு தமிழ்நாட்டின் தலைசிறந்த மாமன்னர்களில் ஒருவனாகத் திகழ்ந்த குலோத்துங்கனின் புகழ் என்றும் தமிழக வரலாற்றில் நிலைத்திருக்கும். (கண்ணைம் பறித்தது ஒரு அடிக்குறிப்பாக இடம்பெறக் கூடும்--இதற்கு போதிய ஆதாரம் இருந்தால்.)

    ReplyDelete
  5. Vellaikaran thiruman ittundu kacham kattindu sapradayam follow panrar namba alu lungi bermuda pottundu koilukku varan super kuthhal.

    ReplyDelete
  6. ஆகா அருமை ...என்ன பக்தி ....!

    பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா ...

    ReplyDelete
  7. ஒரு இந்திய விஜயத்தின் போது, தஞ்சை அருகில் உள்ள பெரிய நம்பி திருவரசு தரிசனம் செய்ய தகப்பனாருடன் சென்று வந்தது நினைவில் உள்ளது. நாங்கள் சென்று போது நடை சார்த்திவிட்டார்கள். மீண்டும் அடுத்த கால பூஜைக்கு வரும் வரை அந்த அத்வான காட்டில் , பெரிய நம்பிகள் பற்றி நீங்கள் கூறிய தகவல்களை எனது சிறிய அறிவுக்கு எட்டும் படி சொல்லிக்கொண்டு வந்தார் எனது தந்தை. இந்திய மரபியல் தத்துவங்கள் புத்தகம் தாண்டி செவி வழி மரபில் காலம் கடந்து பரப்ப பட்டதின் ஒரு தூளியை என்னால் உணர முடிந்த தருணம் அது. மீண்டும் அந்த தகவல்களை படிக்கும் போது மறைந்த என் தகப்பனாரை நினைவு கூறுகிறது. அடியேன் தாசன் .

    ReplyDelete
  8. கண்கள் பிடுங்கப் பட்டதும், பெரிய நம்பி வலி தாங்காமல் பரம பதித்ததும்..கண்களை கலங்க வைத்து விட்டன! இத்தனைப் பெரிய மதிப்பிலா சொத்து இருந்தும், அறியாமையாலும், அஃஞானத்தாலும், இதன் மதிப்பு புரியாமல் இருக்கிறேன்!

    ReplyDelete
  9. கண்கள் பிடுங்கப்பட்டதுவும், பெரிய நம்பிகள் பரம்பதித்ததுவும்... எவ்வளவு அஃஞானத்தில் வாழ்ந்து கொண்டுள்ளேன் என்று புரிந்தது!

    ReplyDelete

Post a Comment