Skip to main content

திருச்சிடா - 2


2007ல் சுஜாதாவுடன் திருச்சி மலைக்கோட்டை ரயிலில் பயணம் செய்த பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் மலைக்கோட்டை ரயிலில் கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றேன்.

சென்டரல் ஸ்டேஷனை விட எக்மோர் சுத்தமாக இருக்கிறது. நிறைய பேர் ‘ரயிலில் நீர்’ வாங்காமல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். எக்மோர் ஸ்டேஷனில் எல்.ஈ.டி. அறிவிப்புத்திரை வைரம் போல ஜொலிக்கிறது.

ரயில் பெட்டிகள் சுத்தமாக, மொபைல் சார்ஜ் செய்ய வசதி எல்லாம் எனக்குப் புதுசு. மாம்பலம் வரும் முன்பே இளைஞர்களின் செல்ஃபோனில் படம் ஆரம்பித்து முதல் பாட்டு வந்துவிடுகிறது.

வழக்கம் போல், ஸ்ரீரங்கத்துக்குப் பிறகு ராக்போர்ட் எஸ்பிரஸ் தவழ்ந்து திருச்சி ஜங்ஷன் வந்து சேருகிறது. முகமூடி அணிந்துகொண்டு பணிப் பெண்கள் சுத்தமான ஸ்டேஷனை இன்னும் சுத்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி அவ்வளவாக மாறவில்லை. இன்னுமும் மெயின்கார்ட் கேட்டிலிருந்து வரும் பேருந்துகள், கோர்ட் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் பிள்ளையார் கோயிலோடு ஏமாற்றிவிட்டு போகிறது. பின்னாடி ஏதாவது பஸ் வந்தால் இரண்டு கண்டக்டர்களும் விசிலில் பேச, பஸ் அசுர வேகத்தில் பறக்கிறது. தில்லைநகர் சாலை இரண்டு இன்ச் அகலமாகத் தெரிகிறது. பெரிய ஆஸ்பத்திரி முன்பக்கம் மரங்கள் அகற்றப்பட்டு கட்டிடம் பளிச். மூலையில் இரண்டு வாட்டர் டாங்க்குகள் இன்னும் இருக்கிறது. ஐந்து ரூபாய் டிக்கெட்டில் ஊரையே சுற்றிக் காண்பிக்கிறார்கள்.

பஸ்ஸ்டாண்ட் பக்கம் இருக்கும் சங்கீதாவில் கூட்டமும், எதிர் பக்கம் மூத்திர நாத்தமும் மாறவில்லை. ஹோட்டல் முன் பக்கம் “அம்மா டாக்ஸி ஸ்டாண்ட்” புதுசு!.

சினிமாவில் ஒட்டடை படிந்த வீட்டை காண்பித்து, அடுத்த ஷாட்டில் கலரடித்த அதே வீட்டை “எப்படி இருந்த வீடு” என்ற ஃபீலிங்கிற்கு காண்பிப்பார்கள். சோனா மீனா தியேட்டர் அந்த மாதிரி ஆகிவிட்டது. மாரிஸ் தியேட்டருக்குப் பழுப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள். மெயின்கார்ட்கேட் பஸ் ஸ்டாப்பில் பிரம்பு கடை, சைக்கிள் கடை இன்னும் இருக்கிறது. ஜோசப் காலெஜ் வெளிக்கதவுக்கு மட்டும் புதுசாக பெயின்ட் அடித்துள்ளார்கள். சத்திரம் பேருந்து நிறுத்ததிற்குக் குடை அமைத்திருக்கிறார்கள்.

ஊர் முழுக்க நிறைய பரோட்டாக் கடைகளும், மருந்துக் கடைகளையும் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கா என்று திருச்சிவாசிகள் ஆராயலாம். காலை 8 மணிக்கே பரோட்டா மாவு பிசைந்து பரோட்டா தட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பல வருடங்கள் கழித்து, பாலக்கரையில் இருக்கும் கிருஷ்ணா ஆயில் மில்லுக்குச் சென்ற போது நல்லெண்ணெய் மணம் சுண்டி இழுத்தது. பட்டாசு கடை போல ஒருபக்கம் பில், ஒரு பக்கம் சரக்கு என்று எண்ணெய் விற்பனை வழுக்கிக்கொண்டு போகிறது. காந்தி மார்க்கெட் அப்பாய் மளிகையில் வாடிக்கையாளர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்க கூட முடியாமல் ஆள் ஆளுக்கு மும்முரமாக எதையோ கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி பீம நகர் சட்டி பானை கடை, பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பக்கம் மர ஸ்டூல், பெஞ்ச் கடை, பிரமந்தா சர்பத் கடை எல்லாம் அப்படியே இருக்கிறது.

முசிறி, தொட்டியம் பக்கம் இருக்கும் கிரமத்துக்கு சென்று வந்தேன். ஊர் முழுக்க வாழை. பூவம், கற்பூரவல்லி, ரஸ்தாளி, ஏலக்கி சாகுபடி செய்கிறார்கள். இங்கிருந்து தான் கர்நாடகா, மஹாராஷ்டராவிற்குப் போகிறது என்பதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
துடப்பத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தியாவை கூப்பிட்டு
“துடப்பம் எதற்கு?”
“பட்டாம் பூச்சி பிடிக்க”
“எப்படி பிடிப்ப?”
“இதோ இப்படி” என்று செய்து காண்பித்தாள்
”ஸ்கூல் கிடையாதா ?”
வெட்கப்பட்டுக்கொண்டு “ஸ்கூல் இருக்கு” என்று ஓடிவிட்டாள்.

இந்த ஊரில் என்னை கவர்ந்தது அந்த ஊர் தென்னை மரங்கள். தென்னை மரங்கள் பல மொட்டையாக இருக்கிறது. ஒருவரிடம் கேட்டதற்கு “எங்க தம்பி காமராஜர் காலத்துல போட்ட வாய்க்கா இப்ப தண்ணீரே இல்லை இப்ப இருப்பவர்கள் பேசுகிறார்கள் ஆனால் ஒண்ணும் செய்வதில்லை” என்று அலுத்துக்கொண்டவரின் மகன் ஏதோ ஒரு ஐ.டி கம்பெனியில் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார்.

திருச்சியில் குளிர் என்று சொல்ல முடியாது, ’பிளசண்ட்’ க்ளைமேட் என்று சொல்லலாம். அதுக்கே எல்லோரும் camouflage டிசைனில் காதுக்குக் கவசம் அணிந்துக்கொண்டு ஊர் முழுக்க அலைகிறார்கள்.

ஞாயிறு காலை ஸ்ரீரங்கம் சென்ற போது, எல்லா கடைகளிலும் “ஏன் காங்கிரஸ் ? குஷ்பு ‘ஃபீலிங்’, ஐயப்பா கருப்பு, காவி வேட்டிக்குப் போட்டியாக எல்லாக் கடைகளிலும் தொங்கியது. ராஜகோபுரம் தாண்டியவுடன் எல்லா ஜவுளி கடைகளிலும் புடவை, வேட்டிகளுக்கு மலையாள வாசனை அடித்தது.

இந்த முறை ஸ்ரீரங்கம் கோயில் முழுக்க வித்தியாசமாக இருந்தது. எல்லா கோபுரங்களுக்கும் பச்சை முக்காடு போடப்பட்டு, ஒரு பெரும் படையே புனரமைப்பு வேலையில் ஈடுபட்டுள்ளது. கோபுரங்களுக்கெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘வாட்டர் கலர்’ அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள். உபயம் தமிழ்நாடு அரசும், டிவிஎஸ் கம்பெனியுமாம்.

முதலாழ்வர்கள் சன்னதி பின்புறம் புதிதாக நூறு கால் மண்டபம் முளைத்துள்ளது. ரங்கா ரங்கா என்று எதிரொலிக்கும் சுவர் பக்கம் இருக்கும் தோதண்டராமர் சன்னதியில் விளக்கு எரிந்துக்கொண்டு இருக்க அங்கே இருக்கும் தூண்களில் ‘ஆசிட் சோடா’ அடித்து பழைய பெயிண்ட் கறைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அட அங்கே ஒரு கிணறு கூட இருக்கிறது!.

எப்போதும் பூட்டியே இருக்கும் பிள்ளைலோகாச்சாரியார் சன்னதி திறந்து இருக்கிறது. தீர்த்தம், சடாரி எல்லாம் கிடைக்கிறது. திருகச்சி நம்பிகள் சன்னதியில் எனக்குப் பிரசாதம் கூடக் கிடைத்தது!.

ரங்கவிலாஸ் மண்டபத்தில் இடுக்கில் இருக்கும் சன்னதிகளில் அதிவேக அழுத்தத்தில் தண்ணீர் அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல சன்னதிகளில் சிமெண்ட் சுவர்கள் இடிக்கப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் கோயில் எப்படி இருந்ததோ அப்படி கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. இப்படிச் செய்யும் போது பல பழைய கல்வெட்டுகள் அழிந்து போகாமல் இருக்க அவர்கள் முயற்சிகள் எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இன்னும் ஆறு மாதத்தில் ஸ்ரீரங்கம் வேறு விதமாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.

பெரிய பெருமாளைச் சுற்றி ஆதிஷேன் போல கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. 250ரூபாய் டிக்கெட்டிற்கே வாசல் வரை கியூ நிற்கிறது.

மேலும் சில புதுவரவுகள் - அம்மா மண்டபம் பக்கம் கும்பகோணம் காபி கடையும், சைக்கிளில் 100 ரூபாய்க்கு உள்பாக்கெட் வைத்த பல வண்ணக் கதர் சட்டை விற்பனையும், முரளி காபி கடையில் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமா இருப்பவர் செடி கொடிகள் போட்ட அவாயி(Hawaii) ஹாலிடே சொக்கா, பர்முடாவுடன் பார்த்தது புதுசு. இவரைப் பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் கோயில் கெட்டப் மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது!. தன்வந்தரி சன்னதி பக்கம் எப்போதும் ஒடிக்கொண்டு இருக்கும் அந்த பூனை பழசு!.

ஞாயிறு மாலை ஸ்ரீவட்சன் வீட்டுப்பக்கம் சென்றேன்.
ஸ்ரீவட்சன் என் வகுப்புத் தோழன். ஒரே பையன். வேன்பு சன்ஸ் என்று கடை வைத்திருந்தார்கள். காத்ரேஜ் பீரோ, லாக்கர் எல்லாம் திருச்சியில் வாங்க வேண்டும் என்றால் இவர்களின் கடைக்குதான் வருவார்கள். ”தேக்சா” என்று அவனை கிண்டல் செய்வோம். ( ’தேக்சா’ என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது ) ஏழாவது படிக்கும் போது அவனை நானும் என் நண்பர்கள் சிலரும் கிண்டல் சண்டை வந்து பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

+2ல் அவன் காம்ர்ஸ் நான் சயின்ஸ் வெவ்வேறு வகுப்பு, பேசுவதற்கு அவ்வளவாக சந்தர்ப்பம் கிடையாது. கல்லூரிக்கு சென்ற பிறகு சந்திக்கும் சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விட்டது. மளிகை கடைக்கு வந்தால் பார்த்துக்கொள்வோம் ஆனால் பேச மாட்டோம். ஈகோ!.

சென்னையில் வேலைக்கு சென்ற பிறகு வாரயிறுதிக்கு ஒரு முறை திருச்சிக்கு வந்த போது அம்மா “ஸ்ரீவட்சன், ஆக்ஸிடண்டில் போய்ட்டாண்டா” என்றாள். சில வருடங்களில், அவனுடைய தந்தை இறந்துவிட அவனுடைய வீட்டைப் பார்த்தாலே ஏதோ செய்யும். இந்த முறை திருச்சிக்குச் சென்ற போது மாலை அவன் வீட்டுப்பக்கம் சென்று எட்டிப்பார்த்தேன். வீடு முழுக்க இருட்டாக, கார்த்திகைக்கு வெளியே ஒரு விளக்கு மட்டும் அசங்காமல் எரிந்துக்கொண்டு இருந்தது. திரும்ப வந்துவிட்டேன்.











Comments

  1. திருச்சியை ஒரு ரவுண்ட் அடித்தது போல இருந்தது சார்.

    ReplyDelete
  2. செம அலசல். திருச்சியில் எப்போதும் இருப்பவரகள் கூட இந்த அளவுக்கு அங்குலம் அங்குலமாக விவரித்திருக்க முடியாது. தட் இஸ் தேசிகன்..!

    பேருந்தில் செல்லும் போது, முசிறியில் நிறைய வாழை தோட்டம் பார்த்திருக்கிறேன். அருமையாக இருக்கும்...!

    ReplyDelete
  3. எனக்குத் தெரிந்தவரை பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தை தேக்சா என்பார்கள். நண்பர் கொஞ்சம் புஷ்டியானவரோ?!

    ReplyDelete
  4. It really shows how sheer observation of things around makes life so much interesting. The learning for me is do not rush wherever you go. Spend time in observing things around you and enjoy it!! While I will be just 10 minutes before the train departs, you are more than an hour before for Rockfort!!!!! Thanks again for bringing Srirangam temple in front of us...

    ReplyDelete
  5. I am touched by reading this article. Srivatsan is my uncle. We still miss him. I will share this article with Girija maami. Next time you visit Tiruchy, do visit our house. Thanks once again!

    ReplyDelete
    Replies
    1. Dear Shankar, Nice to see your comments, Can you send me your contact details by mail to me ?

      Delete
  6. பெருமாளின் திருவடி அம்சமான சடகோப்பரை நம் தலையில் சாற்றும் போது சடாரி என்கிறோம். அது போல் நம்மாழ்வார் சந்நதியில் அதற்க்கு பெயர் மதுரகவிகள் , ஸ்ரீபெரம்பதூர் ராமானுஜர் சந்நதியில் அதற்க்கு முதலியாண்டான். அதுபோல் பிள்ளைலோகாசாரியர் சந்நதியில் அதற்க்கு பெயர் மணர்ப்பாக்கம் நம்பிகளாக இருக்கலாம் அது சடாரியல்ல.

    ReplyDelete
  7. தத்ரூபமான வர்ணனைகள் ! அபாரமான நடை !

    ReplyDelete

Post a Comment