Skip to main content

எழுத்தும் பணமும்

இந்தியா டூடே தமிழில் அம்பலம் சிறப்பு பக்கத்தில் சுஜாதா அவர்களின் கேள்விபதில்களும், சின்ன சின்ன கதைகள், கட்டுரைகள் வந்த சமயம்.
என் எழுத்து ஆர்வம் காரணமாக நான் பெண் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தை சிறு கட்டுரையாக எழுதினேன். அதை தைரியமாக சுஜாதா அவர்களிடம் காண்பித்தேன்.
இதை ஒரு பிரிண்டவுட் எடுத்து கொடு என்றார். கொடுத்தேன்.
அதன் மீது, ”Next Ambalam issue" என்று எழுதி கையெழுத்து போட்டு அருகில் இருந்தவரிடம் கொடுத்தார்.
இந்தியா டூடேயில் வந்தது. அடுத்த முறை அவரை பார்க்கும் போது
“சார் இந்த இஷ்யூவில வந்தது” என்றேன்.
அதற்கு அவர் கேட்ட முதல் கேள்வி
“பணம் வந்ததா ?... உங்க அட்ரஸ் கொடுத்துவிடுங்க இவர்களிடம்..பணத்தை ஒழுங்கா அனுப்பிடுங்க..” என்றார்.
பணம் பெரிது இல்லை ஆனால் எழுத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இது.

இந்த கட்டுரையை படிக்கும் போது சில்லரைத்தனமாக இருக்கிறதே என்று இன்று நினைக்கிறேன். ஆனால் அவர் தந்த ஊக்கம் தான் இன்று என்னையும் பலரையும் எழுத வைத்திருக்கிறது.

நான் எழுதிய கட்டுரை கீழே...




பெண் பார்க்கும் படலம்

பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி...

நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம் சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் பார்க்க சென்று இருந்தேன்.

"எதுவாக இருந்தாலும் அங்கேயே பெண்ணை பார்த்து கேட்டு விடு"

சென்ற இடத்தில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் பெண் பார்க்க் வரும் செய்தி எப்படியோ தினத்தந்தியில் வந்துவிட்டது போல் அந்த காலனி கதவு, ஜன்னல் இடுக்கிலிருந்து எல்லேரும் என்னை எட்டி பார்த்து சிரிக்க, அந்த காலனி நாய் குட்டி என்னை பார்த்து செல்லமாக வாலையாட்டியது!

பெண் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது. இப்படியும், அப்படியும் எல்லேரும் ஒடிக் கொண்டு இருக்க, சிலர் வலுக்கட்டாயமாக என்னை கேசரி சாப்பிடவேண்டும் என்று என்னுடன் போராடிக் கொண்டு இருக்க, அந்த கூட்டத்தில் எது பெண் என்று நான் தேடிக்கொண்டு இருந்தேன்.

அங்கு இருந்த பாட்டி என்னிடம் "பெண்ணை பிடித்திருக்கா?"

"எது பாட்டி பொண்ணு?"
"அங்கே தலையை குனிந்து கொண்டு, பச்சை புடவை"

அதற்க்குள் என் அம்மா என்னை பெண்ணுடன் எதாவது பேசு என்று அடம்பிடிக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, பஸ் ஸ்டண்ட் பிள்ளையருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு கிட்டே சென்று என்ன பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன். (அடுத்த முறை மணிமேகலை பிரசுரத்திடம் "பெண் பார்க்கும் போது கேட்கும் கேள்விகள்" புத்தகம் இருக்கா என்று கேட்க வேண்டும்)

சட்டென்று ஒரு கேள்வி உதயமாக,
"எங்கு பி.காம் படிச்ச?"

கொஞ்சநேரம் யோசித்து விட்டு அந்த பெண் "காலேஜில்" என்று மெதுவாக பதில் சொல்ல...

எனக்கு அந்த பெண்ணை... நீங்களே முடிவு செய்யுங்களேன்!

1998 

Comments

  1. அந்த இதழில்
    அந்தக் கதைக்கு
    வடிவமைத்தவன்
    என்னும் மகிழ்வான
    மலரும் நினைவுகளுடன்
    நாணா

    ReplyDelete

Post a Comment