Skip to main content

2016ல் என்ன செய்தேன்

2016 பெரிசாக ஒன்றும் செய்யவில்லை என்பதே பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ’பெரிய’ என்ற

வார்த்தைக்கு ஏற்றார் போல் சொல்ல வேண்டும் என்றால், வருட ஆரம்பத்தில் பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரத்துக்கு பெரிய நம்பிகள் திருமாளிகையில் இருந்தேன். வருடக் கடைசியில் அதே பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரம், அதே திருமாளிகையில் நிறைவாக நிறைவு செய்தேன்.

சித்திரை மாதம், ஸ்ரீஉடையவர் திருநட்சத்திரத்துக்கு ஒரு நாள் முழுக்க ஸ்ரீபெரும்பூத்தூரில் இருந்தேன். ஸ்ரீராமானுஜர் பக்கம் இருந்த கூட்டம் அதிகமாக இருக்க என்னையும் உள்ளே வைத்து கதவைச் சாத்திவிட்டார்கள். குழந்தையைத் தூக்கி கொஞ்சம் தூரத்தில் உடையவருடன் அடியேன் இருந்தது பெரும் பேறு. காஞ்சிபுரத்திலிருந்து சில மைல் தொலைவில் சாலைக் கிணற்றுக்கு சென்ற போது அதை நிர்வகிப்பவரைக் கண்டு நாம் என்ன பெரிய சாதனைச் சாதித்துவிட்டோம் என்று கூனி குறுகினேன்.

வருடக் கடைசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவரசுக்கு சென்று சில மணி நேரம் உலாவினேன். மாடுகள் சாலையில் அடிப்பட்டால் அதைக் கருணையுடன் பார்க்காமல், எவ்வளவு கிலோ என்று பார்க்கும் சமூகத்தில் நண்பர் வீரராகவன் போன்ற நல்ல உள்ளங்கள் அடிபட்ட மாட்டுக்கு உதவி செய்து, அதை நடக்கும் நிலமைக்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நம்பெருமாள் என்றும் துணை இருப்பார். சீதா என்ற மாட்டுக்கும், ரங்கா என்று கன்றுக்குட்டிக்கும் அமுதன் விரட்டிச் சென்று தழை கொடுத்தான்.
( மணவாள மாமுனிகள் திருவரசு பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன் )

2015 காட்டிலும், 2016 எல்லோரும் ரொம்ப பிஸியாக வருஷம் என்று சொல்ல வேண்டும். எப்போது யாரைப் பார்த்தாலும் மொபலை தடவிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அடியேனும் அப்படியே இருந்தேன். பத்திரிக்கை ஜோக்குகள் திராபையான இந்தக் காலத்தில் மீம்ஸ் தமிழரின் நகைச்சுவை உணர்வு இன்னும் இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. பல மீம்ஸ் ரொம்ப இண்டலிஜெண்ட் வடிவமைப்பு.

ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா தவிர மற்ற எல்லாப் பத்திரிகையிலும், எப்போது திறந்தாலும் அதில் நயந்தாரா காட்சியளித்தார். கல்கி, குங்குமம், துக்ளக் தவிர மற்ற பத்திரிகைகள் ஓசியில் கிடைத்தால் மட்டுமே புரட்டினேன். நாளிதழில் பெருமாலும் முதல் பக்கம் பிளிப்கார்ட், அமேசான் அல்லது ஏதோ ஒரு ஆன்லைன் வர்த்தகம் ஆக்கிரமித்துக்கொண்டது. 2016 தீவாவளி முதல் 2017 பொங்கல் வரை கல்கியில் 11 வாரம் ‘நெருங்காதே நீரிழிவே’ எழுதியது நல்ல அனுபவம். கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் எழுதச் சொல்லியிருக்காவிட்டால் எழுதியிருக்க மாட்டேன், அதற்காகப் பல புத்தங்கள் படித்திருக்க மாட்டேன்.
ஒரு சிறுகதை கூட எழுதவில்லை என்று நினைத்திருந்தேன். ஐஸ்பாக்ஸ்(ஜன்னல் இதழ்), சாஸ்திரி பவன் என்று இரண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். நாமக்கல் அடையார் ஆனந்த பவனில் ஒருவர் நீங்க தானே ‘சுஜாதா தேசிகன்’ என்று விசாரித்துவிட்டுப் போனார்.

காசுக்கு அரசியல் கூட்டம் போய், காசு எடுக்க எல்லா ஏ.டி.எம்மிலும் கூட்டத்தை பார்க்க முடிந்தது. அதே போல் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளைப் பார்க்க. ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளைப் பார்க்க அவன் அருளும், சிபாரிசும் உள்ளூர்க் காரர்களுக்கே தேவைப்பட்டது. கோயில் முழுக்க எங்குப் பார்த்தாலும் ரூ50, 250, 2500, 5000 என்று போர்டுகள் எரிச்சலை ஏற்படுத்தியது. அன் பாக்ஸிங்' (unboxing) போது பளிச் என்று வெளியே எடுக்கும் மொபைல் போன் மாதிரி அம்மா ஆட்சியில் ஸ்ரீரங்கம் கோயில் அன் பாக்ஸ் செய்யப்பட்டது.

ரிடையர் ஆகி மூட்டு வலியுடன் போகலாம் என்று தள்ளிப்போடாமல், பதினைந்து நாள் ஸ்ரீவேளுக்குடி அவர்களுடன் யாத்திரை சென்றது, மிகுந்த மன நிறைவும், பல படிப்பினையும் கொடுத்தது. யாத்திரையின் போது சில வித்தியாசமான பண்டங்களை சாப்பிட்டது மறக்க முடியாதது. ஆசார டயட் என்று எழுதியது பலரை சென்று சென்றடைந்தது.

யார் வீட்டிலாவது டிவி சுவிச் ஆன் செய்தால், சீரியல் அல்லது விளம்பரம் ஓட்டிக்கொண்டு இருந்தது. ஆண்களுக்கு சிகரேட் பிடிப்பது, டாஸ் மார்க் போல பெண்களுக்கு சீரியல் பார்ப்பது. எனக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் கலைஞர் டிவியில் ஸ்ரீராமானுஜர் சிரியலுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்த பின் சில  சில எபிசோடுகளை யூடியூப்பில் பார்த்தேன். குடும்பத்துடன் ’ஜோக்கர்’ படத்துக்கு சென்று பாதியில் திரும்பினேன்; ’கபாலி’யை முழுசாக பார்த்தேன்.

இந்த வருஷம் ஐபோனிலிரிந்து ஆண்டராய்டுக்கு மாறினது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. அம்மா சின்னமா மன்னிக்கவும் ’சின்ன ஆம்மா’ என்பதை ஜீரணிக்க முடியவில்லை. கூகிள், அரசியல் இரண்டும் வியப்பளிக்கிறது, அனுபவிக்கனும்...ஆராய கூடாது.

சில தினங்களுக்கு முன் ஸ்ரீரங்கா ரங்கா கோபுரம் என்ற நான்முகன் கோபுர வாசலில் பபிள் பரோட்டா செய்வதைப் பார்த்தேன். அதையே பார்த்துக்கொண்டு இருந்த என்னைப் பார்த்து ‘சார் பார்சல் வேண்டுமா’? என்றார்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 

Comments

Post a Comment