Skip to main content

ரெய்னி டே’ சினாரியோ

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்சென்று சேர் திருவேங்கட மா மலைஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே( திருவாய்மொழி )

போன வாரம் அலுவலகத்துக்கு போன போது ஒருவரை ஒருவர்
“உங்க ஏரியா எப்படி சார் ?”
“எங்க ஏரியா பரவாயில்லை”
“வீட்டை விட்டு வெளியிலேயே வர முடியல ஒரே தண்ணீ... ”
”மழையே இல்லாத மாதிரி எழுதியிருக்கீங்க ?”
”நீங்க சென்னை வந்தா மழை நின்றுவிடுகிறது” என்ற கமெண்ட் இன்று பொய்யானது.
இன்று காலை 4.30மணிக்கு எழுந்து போது மழை.
குடையுடன் வாக்கிங் போனேன். லேசான மழை தான். காபி ஒன்று குடித்துவிட்டு வெளியே வந்தால் ஏண்டா வெளியில் வந்தோம் என்றாகிவிட்டது. அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை மாதிரி என் சின்ன குடை பறந்து ஆட்டம் போட்டது.
மழை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிலர் வேலை செய்துகொண்டு இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. டிவிஎஸ் 50ல் பெரிய சூட்கேசில் நியூஸ் பேப்பர் வைத்துக்கொண்டு தான் சொட்ட சொட்ட நனைந்தாலும் பேப்பர் நனையாமல் பார்த்துக்கொள்ளும் அந்த சிறுவன்.
ஒரு குடையுடன் பெரிய அலுமினிய பாத்திரத்தில் பால் பாக்கெட்டை சுமந்துக்கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போகிறார் ஒரு கிழவி.
மழைக்கு ஏற்ற செருப்பு ‘பாத்ரூம் செப்பல்’ என்ற புகழ் பெற்ற செப்பல் தான். நடையாக நடந்து செருப்பு தைக்க கூட காசு இல்லாமல் பின் குத்திக்கொண்டு போன நம் முன்னோர்கள் உபயோகித்த அதே செருப்பு தான் மழைக்கு சிறந்தது. ஆனால் ஒரே பிரச்சனை நடக்கும் போது சின்ன சின்ன பொட்டாக சேறு அடிக்கும் பத்து நிமிஷம் நடந்து சென்ற திரும்பி
பார்த்தால் உங்க பேண்ட் எல்லாம் சின்ன சின்ன பொட்டாக சுங்கடி புடவை மாதிரி ஆகியிருக்கும். இன்று மாழையால் எல்லா இடங்களும் ஹவாய் தீவுகள் மாதிரி காட்சி அளிக்க இந்த ஹவாய் செப்பல் தான் சிறந்தது.
இந்த மழையிலும் ’அங்காடிதெரு’ துணிக்கடையில் வேலை செய்யும் ’பொம்பளைப் பிள்ளைங்க’ ததலையை வாரிப் பின்னிக்கொண்டு, திருநீறு இட்டுக்கொண்டு, டைட்டாக சுடிதார் போட்டுக்கொண்டு சிலர் குடையுடன் சிலர் குடை இல்லாமல் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்பது அவர்கள் நடையில்
தெரிந்தது. டிரஸ் கொஞ்சம் லூசாக தைத்திருந்தால் இன்னும் வேகமாக ஓடியிருக்கலாம்.
எப்பவாவது நிகழும் பிரச்சனையை மென்பொருளில்
‘ரெய்னி டே’ சினாரியோ என்பார்கள். ஆனால் அந்த நிகழ்வு நடக்கும் போது நம் மென்பொருளை ஒழுங்காக எழுதியிருக்கலாமே என்று தோன்றும். பெரும்பாலும் அதை நாம் செய்திருக்க மாட்டோம். பிரச்சனை வரும் போது உடனே ’பாட்ச் ரிலீஸ்’ ஒன்றை சுமாராக சோதனை செய்து கொடுப்போம். அப்போதைக்கு எம்சீல் மாதிரி ஒழுகுவதை நிறுத்தினாலும் சில நாட்களில் பிரச்சனை மீண்டும் பூதாகரமாக உருவெடுக்கும். பிரச்சனையின் மூல காரணத்தை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.
இன்று காலை மழையில் முக்கால் மணி நேரம் நடந்த போது பார்த்த எல்லா சாலைகளும் மழைக்கு குண்டும் குழுயுமாக அதே ‘ரெய்னி டே’ சினாரியோ கச்சிதமாக பொருந்துகிறது. இனி முதல்வர்களும், மினிஸ்டர்களும் ஆலோசித்து ”பிரதமர் நிதி ஒத்துக்கினார்” என்று தினத்தந்தியில் முதல் பக்கம் செய்தி வந்த பிறகு சாலைகளில் இருக்கும் குண்டும் குழிகளையும் அப்லிக் டிசைன் போட்டு ‘பாட்ச்’ வர்க் செய்து அடுத்த மழை வரும் ஒப்பேத்தலாம். ஆனால் அது பிரச்சனையை தீர்க்காது.
இந்த மழைக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும். சிலவற்றை அரசு செய்ய வேண்டும்; சிலவற்றை நாம்.
பனியன் ஜட்டி இந்த மழைக்கு காயவில்லை என்று கவலைப்படுகிறோம், ஆனால் வெளியே உள்ள சாக்கடை நாம் போடும் பிளாஸ்டிக் குப்பையினால் அடைக்கப்படுகிறது என்று கவலைப்பட வேண்டும்.
கூவம் முழுவதும் தண்ணீர் வேகமாக ஓடுகிறது. அதில் போடப்பட்ட குப்பை, கழிவுகள் எல்லாம் மெரினா பக்கம் சென்றுவிட்டது. கூவத்தை சுத்தப்படுத்த இதைவிட வேறு நல்ல சமயம் கிடைக்காது. அதற்கு முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு இருக்கும் போதே அதை சுத்தம் செய்துவிட வேண்டும். பிறகு படகு சேவை தொடங்கலாம். நதி ஓரத்தில் ஒழுங்கான ரோடு போட்டு சைக்கிள் பாதையாக மாற்றலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். திரும்ப குப்பையான பிறகு சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் என்பது சுஜாதா பாணியில் ‘ஜல்லி’
ஒவ்வொரு தெருவாக அரசு பழுதுப்பார்க்க வேண்டும். தரமான சாலைகள் போட்டிருக்கிறார்களா என்று அந்த தெருவில் இருப்பார்கள் முடிவு செய்ய வேண்டும். சும்மா ஒட்டையை அடைத்து பாட்ச் போட கூடாது. சரியாக போடவில்லை என்றால் திரும்ப போட வைக்க வேண்டும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு போன்றவைகளை இந்த மாதிரி மழைக்காலத்தில் நடத்த வேண்டும். மாநாட்டுக்கு போட்ட சாலைகள் எல்லாம் இன்று இல்லை. 10cm மழையில் 100 கோடி கரைந்துவிட்டது
இவை எல்லாம் ரொம்ப கஷ்டம் என்றால் இன்னொன்று இருக்கிறது மழையின் ஈரத்தால் சுவரில் வெற்றிகரமான இரண்டாவது வாரங்களையும், மின்சார ஜங்ஷன் பாக்ஸில் மூலம் பௌத்திரம் நிரந்திர தீர்வு போஸ்டர்களையும் வாழைபழ தோல் உரிப்பது மாதிரி சுலபமாக உரிக்கலாம்.

Comments

  1. பதிவு இயல்பாக உள்ளது. இந்நேரம், peek மழை ஓய்ந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பும் என நினைக்கிறேன்.

    திருநீர் அல்ல => அது திருநீறு. நன்றி.

    ReplyDelete
  2. This is even better than your many stories. அருமையான கட்டுரை. கவனிக்கும் விஷயங்களை வாத்தியார் பாணியில் சொல்வது மிக சுவாரசியம். இது காப்பியடிப்பது அல்ல, இயல்பாக உங்களுக்கு வருகிறது! இன்னுமோர் நூற்றாண்டு இரும்!

    ReplyDelete

Post a Comment