கம்ப்யூட்டர் வயதுக்கு வந்துவிட்டதா ? - 1. கூகுள் ஆண்டவரும் ஏ.ஐ ஆசாரியனும்! இன்றைய நாளிதழ்களைப் புரட்டினால், தினசரி தங்க நிலவரத்துக்கு அடுத்து அதிகம் அடிபடும் வார்த்தையாக 'ஏ.ஐ' (A.I) வந்துவிட்டது. 'செயற்கை நுண்ணறிவு' என்கிற தமிழ்ச் சொல் இருந்தாலும், பீட்சா, பர்கர் மாதிரி ஏ.ஐ என்பது நம் அன்றாட வார்த்தையாகி வீட்டில் புழங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாவற்றுக்கும் 'கூகுள் ஆண்டவரை'க் கேட்டுக்கொண்டிருந்த காலம் மெல்ல மலையேறி, இப்போது 'ஏ.ஐ ஆசாரியன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். தினமும் செய்திதாளில், அலுவலகத்தில், நண்பர்களுடன் ஏ.ஐ குறித்து படிப்பது, பேசுவதை அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். சாதாரண பாமரனுக்கு புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். நான் கல்லூரியில் படிக்கும் போது, ‘வங்கிகளில் நீங்கள் போடும் கையெழுத்தை ஒரு ஸ்கேனர் கருவி மூலம் பழைய கையெழுத்தோடு ஒப்பிட்டு, அது நிஜமா, போலியா என்று கம்ப்யூட்டரே சொல்லிவிடும்’ என்று ஒரு கட்டுரை எழுதிப் பலத்த கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இன்றைக்குப் பார்த்தால் அது எவ்வளவு ‘சில்லரைத்தனமான’ விஷயம் என்று எனக்...