108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம். திருச்சியில் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு உத்தியோகத்துக்கு சென்னைக்கு வந்த போது என் அப்பா ’சென்னையை சுற்றி நிறைய திவ்ய தேசங்கள் இருக்கிறது, வாரயிறுதியில் முடிந்தால் செல்’ என்று கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும், லிப்கோ 108 திவ்ய தேசங்கள் என்ற புத்தகம் ஒன்றையும் எனக்குக் கொடுத்தனுப்பினார். திருவல்லிக்கேணியில் ஒண்டியாக இருந்த போது பைக்கில் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று அதைக் குறித்து எழுதினேன். என் முதல் எழுத்து இப்படித் தான் ஆரம்பித்தது என்று கூடச் சொல்லலாம். என்றாவது ஒரு நாள் எல்லா திவ்ய தேசம் குறித்து எழுதி படங்களுடன் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் திவ்ய தேசப் பெருமாள் படங்களையும், புத்தகங்களையும் சேகரிக்கத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு பிரபல வார இதழில் 108 திவ்ய தேசம் என்ற தொடர் வந்தது, அதில் ஆச்சரியமான திவ்ய தேசப் படங்கள் வந்துகொண்டு இருந்தது. இது போன்ற படங்கள் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு வாரம் அந்தப் படத்துடன் ஓரத்தில் வாட்டர் மார்க் ஒன்று தெரிந்தது. ‘தஞ்சை மூர்த்தி’ என்று பிரபலப் புகைப்படக்காரர் திர...