Skip to main content

சுஜாதாவும், புத்தூர் ஸ்வாமிகளும்

1999ல் சுஜாதா ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் என்ற தலைப்பில் குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடராக எழுதினார். அது இன்றும் பலர் படித்து மகிழ்கிறார்கள். புத்தகமாக வரும் போது சில விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுவிடும். [ உதாரணம் : “போனவாரம் ரமேஷ் என்பவர்... ” ] கற்றதும் பெற்றதும் விகடனுக்கு புத்தகமாக எட்டி செய்யும் போது இதை நானே செய்திருக்கிறேன். அதே போல தான் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகமும்... 7ஆம் பகுதி ஆரம்பத்தில் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்ஸனத்தில் ஸ்ரீபுத்தூர் ஸ்வாமிகள் ‘ஸுதர்சனர் பதில்களில்’ ஒரு கேள்வி பதிலை கொடுத்து அதற்கு அவர் பதிலையும் தந்திருந்தார் சுஜாதா.
சுஜாதா கூறிய மறுப்பு
“இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது இந்த தொடரின் வாசகர்களுக்கு தெரியும். ஒரு வைணவனான நான் வைணவர்களிடம் காணும் முக்கியமான பலவீனங்கள் தம்முடைய உண்மையான நண்பர்களை அறிந்து கொள்ளாததும், சகிப்புத்தன்மை இன்மையும் ( intolerance ). இந்தக் குலம் எண்ணிக்கையில் குறைந்து வருவதற்கும் அடையாளம் இழந்துவருவதற்கும் இவை தான் காரணங்கள். மிகவும் படித்தவரும் என் பெருமதிப்பிற்குரியவருமான, ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் என் ஒரே வேண்டுகோள் : தயை கூர்ந்து இந்த கட்டுரைத் தொடரில் இதுவரை வந்த எல்லாக் கட்டுரைகளையும் முழுவதும் படித்துவிட்டு அதன் பின்னும் மேற்படி கருத்துக்கள் நியாயமானவையா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். என் எழுத்துகள் பொதுஜனப் பத்திரிகைகளில் விலைபோல எந்தக் கொள்கையையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாதவன் அடியேன் என்பதை தேவரீர் அறிய வேண்டும். மாறாக பொதுஜனப் பத்திரிகைகள் விலை போக என் எழுத்துக்களை நாடுவதுதான் சில சமயம் நிகழ்கிறது”
சுஜாதா மேலே கூறிய பதில் “எல்லாக்” மற்றும் “முழுவதும்” என்ற வார்த்தைகள் மட்டும் பெரிய எழுத்தில் அச்சடித்திருந்தது. ( ஆங்கிலத்தில் BOLDல் எழுதினால் சத்தமாக அழுத்தமாகவும் சொல்லுவதாக அர்த்தம் அந்த மாதிரி )
இதற்கு பிறகு ஸுதர்சனர் முழுவதும் படித்தாரா, என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சில நாள் முன் ஸுதர்ஸனர் பதில்கள் படித்துக்கொண்டிருந்த போது இதற்கு விடை கிடைத்தது:
“குமுதம் பக்தி ஸ்பெஷலில் நவம்பர்-99 இதழில் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் என்னும் தலைப்பில் திரு சுஜாதா அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் ஸுதர்சனர் பதிலில் வெளிவந்த அவரது கட்டுரை பற்றிய கருத்துக்களுக்குப் பதிலளிக்கையில் “கட்டுரைத் தொடரில் இதுவரை வெளிவந்த எல்லாக் கட்டுரைகளையும் முழுவதும் படித்துவிட்டு ஸுதர்சனர் தம் கருத்துக்கள் நியாயமானவையா என்று தெரிவிக்கவேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வண்ணமே அவரது எல்லாக் கட்டுரைகளையும் படித்துவிட்டு அவைபற்றிய நம்முடைய ஆய்வினையும் சமயத்துறையில் நம்நாட்டுப் பொதுஜனப் பத்திரிகைகள் மேற்கொள்ளவேண்டிய நிலைப்பற்றியும் இக்கட்டுரையில்... “
என்று சுமார் ஐந்து பக்கங்களுக்கு ஒவ்வொரு அத்தியாத்திலும் என்ன என்ன தவறுகள் என்று சுட்டிக்காட்டி ஒரு மினி PhD கட்டுரையே தந்துள்ளார் புத்தூர் ஸ்வாமிகள்.
நேற்று பரிட்சைக்கு படிக்கும் மாணவன் போல இந்த கட்டுரையை இரவு அனுபவித்து படித்தேன்.
ஸுதர்ஸனர் பதில்களை படிப்பதற்கு ஒரு வித மெச்சூரிட்டி வேண்டும், No Nonsense வகையான எழுத்து அவருடையது. முன்பு ராஜாஜி அவர்கள் எழுதிய ’முதல் மூவர்’ தொடரை, இவர் மறுத்த போது ராஜாஜி தம் அறியாமையை ஒப்புக்கொண்டார் என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவ கொள்கை என்பது பலருக்கு கசப்பாக இருக்கலாம் ஆனால் அதில் துவேஷம் இல்லை. அம்மா, அப்பாவை யாராவது ஏதாவது சொன்னால் அதை எப்படி பொறுத்துக்கொள்ள மாட்டோமோ அதே மாதிரி புத்தூர் ஸ்வாமிகளுக்கு ஸ்ரீவைஷ்ணவம் - உடனே குரல் கொடுப்பார். தூவேஷத்துக்கும் பற்றுக்கும் வித்தியாசம் இருக்கு.
தமிழில் அர்ச்சனை என்பது திமுக தமிழில் மீது உள்ள பற்றினால் செய்வதில்லை, சமிஸ்கிரத மொழியின் மீது உள்ள துவேஷத்தால் செய்வது. மேல்கோட்டையில் திருப்பாவையை கன்னட மொழியில் அச்சடித்து படிக்கிறார்கள். இது பற்று. தமிழை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் பக்தி இலக்கியங்களை வளர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் இதை செய்வது பெரும் கஷ்டம்.
பல சுஜாதா புத்தகங்களை தேடி தேடி போடும் பதிப்பகம், ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் , பிரம்மசூத்திரம், தினம் ஒரு பாசுரம் என்பதை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள் ! இது தான் சகிப்புத்தன்மை !

Comments

  1. பாத்திரம் அறிந்து பிச்சையிடாதது வாத்தியாருடைய தவறு... இப்போது என்னத்தை சொல்ல
    -சம்பத்

    ReplyDelete
  2. Hello Desikan,
    Can you share list of sri vaishnava magazines in print/online that you know of?

    Thanks!
    Adiyen
    Balaji

    ReplyDelete
  3. புத்தூர் ஸ்வாமிகளைப் பற்றி நல்ல அறிமுகம். சுதர்சனர் பதில்கள் எங்கு கிடைக்கும்?

    "தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள் ! இது தான் சகிப்புத்தன்மை !" - அப்படியல்ல. 'குமுதம்/விகடன்' போன்ற பத்திரிகைகள் எல்லாப் பொட்டிக்கடைகளிலும் கிடைப்பதற்கும், திவ்யப்ப்ரபந்தம் வெகு சில புத்தகக் கடைகளில் கிடைப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது. சாவி அவர்கள், 'சுஜாதா' எது எழுதினாலும் வாசகர்கள் படிப்பார்கள் என்று அவருடைய லாண்டரி பில்லை வெளியிட்டதுபோல், வாசகர்களின் ரசனைக்கேற்று பதிப்பகங்கள் நடந்துகொள்கின்றன (வியாபாரம்தான்). ஒருவேளை லிப்கோ போன்ற பதிப்பகங்கள் பதிப்பித்தால்தான் உண்டு.

    ReplyDelete

Post a Comment