கற்போரைக் கைப்பிடித்துச் செல்லும் புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு (1) ஒரு சிறுவனின் கதை: நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு சிறுவன், தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டான். அப்பா எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்குத்தான் விற்றிருந்தான் என்றாலும், சொல்லாமல் செய்ததால் கோபமடைந்த தந்தை அவனை அடித்து விரட்டினார். வெள்ளாற்றின் மறுகரையில் இருந்த கீரப்பாளையம் கிராமத்திற்கு ஓடிப்போன அந்தச் சிறுவன், அங்கே வசித்த தன் பெரியப்பா வீட்டுக்கு சென்று தஞ்சம் புகுந்தான். பெரியப்பா சிறந்த வைணவ அறிஞர். ஸ்ரீமத் அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள் என்பது அவர் திருநாமம். அங்கேயே தங்கி, தன் பெரியப்பாவிடமே தமிழ் இலக்கியத்தையும் வைணவத்தையும் கற்கத் தொடங்கினான். பெற்றோர் எவ்வளவோ அழைத்தும் அந்தச் சிறுவன் மீண்டும் வீட்டிற்குச் செல்லவில்லை. (2) என் சொந்தக் கதை: முப்பது வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில், எழுத்தாளர் சுஜாதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ஆழ்வார் பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் திரு. புருஷோத்தம நாய...