Skip to main content

சாஸ்திரி பவன்

கடைசியில் சொத்தையாக ஒன்று அகப்பட்டு நமக்கு திருப்பம் கொடுக்கும் வேர்கடலை பொட்டலம் மாதிரி தான் நான் சொல்லப்போகும் இந்த கதையும்.

பெல்கிஜியம் நாட்டில் என் பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதைப் பற்றி சொல்லியிருக்கிறேனா ? ஐயோ தொலைஞ்சு போச்சா? என்று நீங்கள் கேட்கும் முன்... தொலைஞ்சுப் போகலை திருடுபோனது. எப்படி என்று சொல்லுவதற்கு முன் என்னைப் பற்றியும் என் குடுமியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

என் பெயர் ஸ்ரீநிவாஸராகவன். ஸ்ரீரங்கம். தாயார் சன்னதிக்குள் சட்டென்று உள்ளே நுழையக்கூடிய வடக்கு உத்திர வீதியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடத்துக்கு நான்கு வீடு தள்ளி எங்க வீடு. மஞ்சள் திருமண் குடுமியுடன் ஸ்ரீரங்கம் தெருவில் கிரிக்கெட் விளையாடி ஈ.ஆர்.ஐ.ஸ்கூலில் படிக்கும் வரை என்னை யாரும் கேலி செய்யல, ஆனா காலேஜ் படிக்கும் போது பின்னாடியிலிருந்து கேலி பேசுவா.

முன் நெற்றியில் மழித்துக்கொண்டு இருப்பதால் “கரைய மண்டை” என்பார்கள். விளையாட்டு மைதானம் பக்கம் போனா பின் பக்கம் சுருட்டி வைத்த என் குடுமியை பார்த்து “தலையில பந்து” என்று யாராவது சத்தம் போடுவார்கள்.



எம்.எஸ்,சி கம்யூட்டர் சைன்ஸ் படித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்த பின் ஆபீஸுக்கு குடுமியுடன் தான் போனேன்.

உன் பேர் என்ன என்ற கேள்விக்கு முன் “ஆர் யூ ஃபிரம் டிரிப்ளிக்கேன் ?” என்ற வினாக்களை கடந்து, க்ளையண்ட் மீட்டிங்கில் முதலில் “ஆர் யூ ஃபிரம் ஈஸ்கான் ஆர் சம்திங் லைக் தட் ?” என்று சின்ன விசாரிப்புக்கு பிறகு தான் மீட்டிங்கையே ஆரம்பிப்பார்கள்.

குடுமிக்குள் அரித்தால், உடனே சொறிந்துக்கொள்ள முடியாது என்ற ஒன்றை தவிர வேறு எதுவும் எனக்கு சிக்கலாக தெரியவில்லை. ஆனால் சிக்கல் வேறு ரூபத்தில் வந்தது. அலுவகலத்தில் சில மாதங்கள் பெல்ஜியம் போக சொல்லிவிட்டார்கள்.

“சார் அது வந்து...”

“என்ன ராகவன்.. நல்ல ஆப்பர்ச்சுனிட்டி.. யோச்சிக்கிறீங்க”

“பாஸ்போர்ட் இல்லை”

“என்ன பாஸ்போர்ட் இல்லையா.. முதலில் அப்ளை பண்ணுங்க”

திருச்சியில் தான் பாஸ்போர்ட் அப்ளை செய்து வாங்குவதற்கு முன் குடுமியை ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.

நான் வாடகை வீட்டுல் இருந்த மாமா தான் ஆரம்பித்தார்.
“என்னடா இப்படியே குடுமியோடவா வெளிநாடு போகப்போற ? பேசாம எடுத்துடு”

“இல்ல மாமா...”

“சர்த்தாண்டா...கோயில் பட்டரே இப்பெல்லாம் கிராப் தான்”

அலுவலகத்தில் என் மேனேஜர் ஒரு நாள் லஞ்ச் முடித்துவிட்டு படியில் இறங்கும் போது..
“இமிக்ரேஷன், ஏர்போர்ட் என்று எல்லோருக்கும் பதில் சொல்லணும்.. வை டோண்ட் யூ ரிமூவ் ?” என்றார்.

ஜீன்ஸுடன் குடுமி பாந்தமாவா இருக்கும் என்று உள் மனம் சொல்ல என் மனசு மாறியது. இருந்தாலும் அப்பாவிடன் ஒரு முறை கேட்டுவிடலாம் என்று ஸ்.டி.டியில்
“பெல்ஜியம் போக சொல்றாபா”
“அப்படியா சந்தோஷம்... எப்போ”
”பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்... அதுக்கப்பறம் வீசா...” என்று ஒரு சின்ன மவுனத்துக்கு பிறகு தைரியத்தை வரவழித்துக்கொண்டு
“குடுமியை எடுக்கலாம் என்று இருக்கேன்” என்றேன்.
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் பேசாமல் இருந்துவிட்டு “சரி உன் இஷ்டம்..எங்கே போனாலும் சந்தியாவந்தனத்தை விடாதே” என்றார்.

அப்பா ஒன்றும் சொல்லாதது ஆச்சரியமாக இருந்த்து. வாடகை மாமாவிடம் விசாரித்ததில்

“பேஷா எடுத்துடலாம்... ட்ரிப்ளிகேன் ஹை ரோடுல எனக்கு தெரிந்த சலூன் இருக்கு... அப்படியே ரத்னா கபே சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வந்துடலாம்” என்று ஞாயிற்றுக்கிழமை அழைத்துப்போனார்.

“அருமையா வளர்ந்திருக்கு சார்..என்று தடவி பார்த்துவிட்டு என் வைராக்கியத்தை சின்ன கத்திரியால் நறுக்கி என்னிடம் காண்பித்தார். மனசு என்னவோ செய்தது.

குடுமி இல்ல்லாமல் பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு சென்ற போது குடுமி இருந்த போது இல்லாத வெட்கம், குடுமி இல்லாத போது வந்தது.
அர்ச்சகரின் நியூரான்கள் என்னை கண்டுபிடிக்க சில நிமிஷங்கள் ஆனது.
“என்ன கிராப் ?”
“பெல்ஜியம் போறேன்.. விசா பிரச்சனை வர கூடாது..அதான்.” என்று சொல்லி மழுப்பினேன்.
குடுமி இருந்த போது சடாரியை தலை தோள் என்று சாதித்தவர், அன்று ஒரு முறை தான் சாதித்தார்.

அலுவலகத்தில்
”வாவ் யூ லூக் மச் யங்கர் நவ்” போன்ற பாராட்டுகளையும், பெண்களின் நமுட்டு சிரிப்பும், குளிக்கும் போது தலையை தடவினால் ஏதோ காணோம் என்ற நினைப்பும் சில வாரங்களில் அடங்கிய போது முன் மண்டை துளிர்விட மற்றவர்களை போல ஆனேன்.

மெல்லிய குடுமிபோல ஒன்றை வைத்துக்கொள்ளலாமா என்று யோசித்தேன் ஆனால் பெல்ஜியம் போய்விட்டு வந்த பிறகு என்று தள்ளிப்போட்டேன்.
கோயிலுக்கு மட்டும் திருமண், மற்ற இடங்களுக்கு மெல்லிசாக ஸ்ரீசூர்ணம் என்று இந்தக் காலத்து ஐயங்காராக மாறி பெல்ஜியம் சென்ற போது தான் என் பாஸ்போர்ட் திருடுபோனது.

“யூ மஸ்ட் டிராவல் பை டிரையின்.. டு எஞ்சாய் த கண்ட்ரி சைட்” என்று அலுவலகத்தில் யாரோ சொல்ல ஃபிரான்ஸிலிருந்து பெல்ஜியம் ரயிலில் பயணம் செய்தேன். அந்த ரயில் பெட்டியில் என்னையும் சேர்த்து ஐந்து பேர் தான் இருந்தார்கள். அதில் ஒரு காதல் ஜோடியை குளிர் பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. அதை பற்றி எழுதப் போவதில்லை பயப்படாதீர்கள். ஜன்னல் சீட்டில் பயணித்துக்கொண்டு இருந்த போது தான் அந்தச் சம்பவம் நடந்தது.

இரவு 11.30 மணிக்கு ரயில் ப்ரஸ்ஸல்ஸ் செண்ட்ரல் ஸ்டேஷனில் நின்றது. என்னுடன் பயணித்தவர்கள் எல்லோரும் இறங்கிவிட்டார்கள். இன்னும் இருபது நிமிடத்தில், அடுத்த இரண்டாவது ஸ்டேஷனில் நான் இறங்க வேண்டும்...

அப்போது ஒருவன் என் ஜன்னல் கதவை வெளியிலிருந்து வேகமாகத் தட்டினான்.
இடது கண்ணுக்கு மேல் ஒற்றைக் கடுக்கன். உடல் முழுக்க ஏதேதோ உருவங்களை பச்சை குத்திக்கொண்டு நான் முன்பு வைத்திருந்த குடுமியை விட அவனுக்கு அதிகமாக தலைமுடி இருந்தது.

நான் சைகையில் ”என்ன ?” என்பது போலக் கேட்டேன். அவன் விடுவதாக இல்லை, திரும்பவும் தட்டினான். அவனைக் கவனிக்காமல் இருப்பது போல் பாசாங்கு செய்தேன். அவன் விடுவதாக இல்லை, இன்னும் வேகமாகத் தட்டினான். திரும்பவும் அவனைப் பார்த்தபோது, ஒற்றைவிரலில் கெட்ட சைகை காண்பித்துக்கொண்டிருந்தான். டென்ஷனாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் வேறுபக்கமாக இன்னொருவன் வந்து என் லேப்டாப் பையைப் பிடுங்கிக்கொண்டு மறுபக்கம் இருந்த கதவு வழியாக குதிக்க, ரயிலும் கிளம்ப சரியாக இருந்தது. வெலவெலத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன்.

'ஆர்கனைஸ்ட் கிரைம்' என்பதற்கு அர்த்தம் புரிந்தது. எதையோ பிடித்து எழுந்தேனோ, அல்லது அழுத்தினேனோ சரியாக நினைவில்லை, டிரெயின் நின்றது.

டிக்கேட் பரிசோதிப்பவர் வந்து, “என்ன போச்சு?” என்று கேட்டார்.
“லேப்டாப்... பணம்...” என்று அழும் குரலில்.

"தினமும் நடப்பது தான்!" என்று தன் வாகிடாக்கியில் ஏதோ பேசியவாறே நடையைக் கட்டினார்.

அவர் போனபிறகு தான் அதில் என்னவெல்லாம் இருந்தது என்று யோசித்தேன்... லேப்டாப் பையில் 1000 டாலர், என் ஹோட்டல் ரூம் சாவி, முகவரிகள், அப்பறம் என்னுடைய பாஸ்போர்டும் அதில் இருந்தது. ’ஐயோ!’ என்று மூளைக்குள் பட்டாசு வெடித்தது.

சுருக்கமாக எப்படி தாயகம் திரும்பினேன் என்றும் சொல்லிவிடுகிறேன்.

தூதரகத்தில் ஒன்பது பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோக்களைக் கொடுத்து, ஏதேதோ ஃபார்ம் எல்லாம் பூர்த்தி செய்து, திருப்பதிக்கு அம்மா மஞ்சள் துணியில் ரூபாய் முடிந்துவைத்து, எனக்கு அங்கவஸ்திரம் அளவிற்கு ’எமர்ஜென்சி சர்டிபிகேட்’ என்ற பேப்பரை எட்டாக மடித்துக் கொடுத்து, விமான நிலையங்களில் என்னை ஒருமாதிரிப் பார்த்து ஒருவழியாக ஊர் வந்துசேர்ந்தேன்.

குடுமியை எடுத்ததால் தான் நடந்ததோ என்று உள் மனம் உறுத்தியது. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்று மீண்டும் குடுமி வளார்க்க ஆரம்பித்தேன். மெல்லிய திரி நூல் மாதிரி முதலில் ஆரம்பித்து பிறகு சில மாதங்கள் கழித்து முக்கால் மண்டையில் ஒழுங்கான குடுமி ஆனது.

’ஆன்-லைன்', தட்கல் போன்ற வசதிகள் இல்லாதபோது புது பாஸ்போர்ட் வாங்க பல லெட்டர், ஃபார்ம் எல்லாம் ஸிராக்ஸ் எடுத்து, அலைந்து திரிந்து ஒரு சுபயோக சுபதினத்தில் என் பழைய பாஸ்போர்ட் போட்டோவிற்கும் இப்போது உள்ள பாஸ்போர்ட் போட்டோவிற்கும் வித்தியாசம் இருக்கு என்று என்னை நேரில் சந்திக்க பாஸ்போர்ட் ஆபிஸர் பத்து மணிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

ஆட்டோ பிடித்து சாஸ்திரி பவன் என்ற பிரசித்திப்பெற்ற இடத்தில் இருந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ஒன்பது முப்பதுக்குச் சென்றுவிட்டேன்.

இரண்டு மூன்று பெரிய க்யூ நின்றுகொண்டிருந்தது. வெளியே சிலர் பாஸ்போர்ட் அப்ளிகேஷன் பணத்துக்கு பூர்த்தி செய்துகொண்டும், சிலர் டைப்ரைட்டரில் ஏதோ லெட்டர் அடித்துக்கொண்டு என்று எனக்கு அந்த இடம் பற்றி புரிய கொஞ்சம் நேரம் ஆனது. எனக்கு வந்திருந்த லெட்டரை காக்கி உடையுடன் இருந்த ஒருவரிடம் காண்பிக்க அவர் எனக்கு ஒரு டோக்கனைக் கொடுத்து ”உட்காருங்க கூப்பிடுவோம்” என்றார் அலட்சியமாக.

பத்தரை மணிவரை என்னை யாரும் கூப்பிடவில்லை.

மீண்டும் கேட்க, ”இருங்க சார் உங்களுக்கு முன்னாடி வந்த அவரே காத்துக்கிட்டு இருக்கிறார்” என்றது காக்கி

“ஏதோ திடீர் இன்ஸ்பெக்‌ஷனாம்” என்று பேசிக்கொண்டார்கள். கொஞ்சம் நேரம் அப்படியே எல்லாம் ஸ்தம்பித்தது.

பதினொரு மணிக்கு “உங்க அப்பாயின்மெண்ட் மூன்று மணிக்கு” என்று சொன்னபோது ஒன்றும் செய்ய முடியாத கோபம் மட்டும் வந்தது.

“பாஸ்போர்ட் ஆபிஸர் எந்த ரூம்?” என்று விசாரிக்க “மேலே மூன்றாவது ரூம்”

மாடிக்குச் சென்றபோது அங்கேயும் கூட்டம் இருந்தது.

மூன்றாவது ரூம் வெளியே ஸீரோ வாட் பல்ப் சிகப்பாக எரிந்துக்கொண்டிருந்தது. கதவை சாஸ்திரத்துக்கு ஒரு தட்டு தட்டிவிட்டு "எக்ஸ்க்யூஸ்மி... ” என்று உள்ளே நுழைந்தேன். அதற்குள் கொஞ்சம் தள்ளி இருந்த வெள்ளைநிற உடை அணிந்த ப்யூன் பதரி அடித்துக்கொண்டு உள்ளே ஓடி வந்து

“இப்படி எல்லாம் உள்ளே நுழையக்கூடாது"

உள்ளே அறையின் ஏசி மூஞ்சியில் அடித்தது. சிங்கிள் பெட் ரூம் பிளாட் கட்டும் அளவு பெரிசாக இருந்தது. பெரிய மேஜை, பல பேனாக்கள், சுழலும் நாற்காலி, அதன் மேல் பாமரேனியன் போன்ற டர்கி டவல். பாஸ்போர்ட் அதிகாரி அவ்வளவு பெரிய அறைக்கு ஏற்றார் போல் இல்லாமல் உருவத்தில் சின்னவராக கொஞ்சம் முயன்றால் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டுவிடலாம் போல இருந்தார்.

கையால் சைகை காட்ட
“சார் எனக்கு பத்து மணிக்கு அப்பாயின்மெண்ட்... இன்னும் கூப்பிடலை.. இப்ப மூணு மணிக்கு என்கிறார்கள். எனக்கு சாயந்திரம் முக்கியமான வேலை இருக்கு...” என்றேன் படப்படப்புடன்.

”முதல்ல...உட்காருங்க.. இப்ப சொல்லுங்க.. உங்க பேர் என்ன ?“

“ஸ்ரீநிவாஸராகவன்”

”மூணு மணிவரை இன்ஸ்பெக்‌ஷன் இருக்கு... தேர் மேபி எ டிலே ஆல்சோ. வேற ஏதாவது அவசர வேலை இருந்தா அப்பாயிண்ட்மெண்டை அடுத்த வாரம் மாற்றிவிடலாம்”

“இல்லை... ஆனா.. ” என்று தயங்கி நின்றேன்

“வேற என்ன ?”

”ஐஞ்சு மணிக்கு முக்கியமான வேலையா போகணும்... அதனால் ஒரு நாலு மணிக்குள்ள...”

“இதுவும் முக்கியம் தானே ... ? வில் டிரை.. பட்... ”

”சார் ஃப்ளீஸ்”

“வில் டிரை... ” என்று மேஜையில் இருந்த மணியை அழுத்தினார். ப்யூன் உள்ளே வந்து சில ஃபைல்களை கொடுத்துவிட்டு என்னை வெளியே அழைத்துக்கொண்டு சென்றார்.

சாஸ்திரி பவன் முன் இருக்கும் டீக்கடையில் பத்து நிமிடத்தில் எவ்வளவு டீ விற்கிறார்கள் என்று கணக்கு செய்தேன். அதுவே ஒரு நாளைக்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டு நேரத்தைக் கழித்தேன். எங்கே சீக்கிரம் கூப்பிடுவார்களோ என்று சாப்பிடாமல் காத்திருந்தேன்.

மூன்று முப்பது வரை என்னை யாரும் கூப்பிடவில்லை. பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் சுறுசுறுப்பாக கோப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தார்கள்.

நான்கு மணிக்கு என்னை உள்ளே அழைத்தார்கள். என்னைப் போலவே பாஸ்போர்ட் அதிகாரி முகத்திலும் களைப்பு தெரிந்தது. புன்னகைத்தார்.


“ஸ்ரீநிவாஸராகவன் ரைட் ? எப்படி பாஸ்போர்ட் தொலைஞ்சது... ?”

என் கதையை சொன்னேன்.

“பழைய போட்டோவிற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கே..”

“ஆமாம் சார் அப்ப குடுமி இல்லை... இப்ப இருக்கு”

பச்சை இங்கில் பாஸ்போர்ட் படிவத்தில் ஏதோ எழுதி கையெழுத்துப் போட்டுவிட்டு பெல்லை அடித்தார். வெள்ளைச் சீருடை உள்ளே வந்த போது

“இன்னிக்கு அவ்வளவு தான்... ” என்று கிளம்பத் தயாரானார்.

“தேங்க்ஸ் சார்..” என்றேன்.

பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டு இருந்த போது “அ” என்று நம்பர் பிளேட்டில் எழுதிய வெள்ளை அம்பாசிடர் என் முன் வந்து நின்றது. பின் கண்ணாடி கீழே இறங்க பாஸ்போர்ட் ஆபிஸர் தரிசனம் கொடுத்தார்.

“எங்கே போறீங்க ? “

“அண்ணா நகர்”

“ஐ வில் டிராப்யூ”

“வேண்டாம் சார்...”

அதற்குள் கார் டிரைவர் வெளியே வந்து காரை கதவை திறக்க... அவருடன் பயணம் செய்தேன்.

“அண்ணா நகர் ஆர்ச் பக்கம் இறக்கினீங்கனா போதும்”

“வேர் எக்ஸ்டாட்லி யூ வாண்ட்டு கோ ?”

அன்றைய ஹிந்து நாளிதழின் என்கேஜ்மெண்ட் பகுதியில் ”Rahasya Thraya Sara Saram Discourse by Govindacharya. Srinivasaperumal Temple , Anna Nagar, Shanthi Colony 5 p.m. All are welcome" பேப்பரை அவரிடம் காண்பித்தேன். என் முகத்தை மீண்டும் பார்த்தார்.

டிரைவரிடம் ”சாந்தி நகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு போப்பா” என்றார்.

கோயில் வந்தபோது மெல்லிசான கூட்டம். இன்னும் உபன்யாசம் ஆரம்பிக்காதது ஆறுதலாக இருந்தது.

“தேங்க்யூ சார்.. “ என்று இறங்கத் தயாரானேன்.

“இருப்பா ஐ வில் ஆல்சோ கம்” என்று அவரும் கீழே இறங்கினார்.

தன்னிச்சையாக அவர் பின் சென்றேன். கோயிலுக்குப் பின்புறம் சென்று அங்கே இருந்த கிணற்றில் தண்ணீர் எடுத்து கை, கால், முகம் அலம்பிக்கொண்டார்.

“என்ன பாக்கற?” என்று சிரித்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. தன் பெட்டியிலிருந்து திருமண்பெட்டியை எடுத்து பெரிதாக இட்டுக்கொண்டார்.

’ஒன்பது ஐஞ்சு’ வேட்டியை கட கட என்று கச்சப்படுத்தினார்.

தலையில் இருந்த டோப்பாவைக் கழட்டி பெட்டியில் போட்டு என்னிடம் கொடுத்திவிட்டு ”நீங்க போய் உட்காருங்கள்” என்று மேடைக்கு பின்புறம் இருந்த அறையில் நுழைந்தார்.

“ஸ்ரீ ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்த பல க்ரந்தங்கள் ஒவ்வொன்றும், மக்களுக்கு நல்லறிவைக் கொடுத்து, நல்வழியைக் காட்டி, அவர்களை உய்விக்கச் செய்கிறது. அப்படி ஸ்வாமி தேசிகன் ரகஸ்ய த்ரய சாரத்தில் இராமானுஜ சித்தாந்தத்தைத்....”

முதல் வரிசையில் அவருடைய குடுமியையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

Comments

  1. ஐயங்கார்களின் நிதர்ஸன நிலை. ஆனால் அந்த ஐ.எஃப்.எஸ். ஆஃபீசரின் அலுவலகப் பேச்சில் பிராம்மண சாயல் கொஞ்சம் கூட இல்லாதது வியப்பளிக்கிறது.

    ReplyDelete
  2. ரோம ராஜ்ஜியத்தில் யூதர்கள் போல மறைக்க வேண்டிய அவசியம் ஏன் ?

    ReplyDelete
  3. அந்த கடைசி ட்விஸ்ட் ..சந்தோஷ எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  4. எங்கள் ஆபிஸ் ஆடிட்டர் CAG டோப்பா இல்லாமல் கச்சத்துடன் தான் ஆபிஸே

    ReplyDelete
  5. கடைசி ட்விஸ்ட் செம :-))

    ReplyDelete
  6. Superb ! நிஜமா கடைசில நல்ல ட்விஸ்ட் ! 👍👍

    ReplyDelete
  7. Superply narrated and the ending was J Archer style "A twist in the tale" :-)

    ReplyDelete

Post a Comment