Skip to main content

ஆடித் தள்ளுபடியில் வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆடி மாசத்தில் தோசை வார்க்க ஆரம்பித்தான். அப்போது எக்ஸ்சாஸ்ட் ஃபேன் வழியாக வேதாளம் வந்தது.


"என்ன விக்ரமா, வைஃப் வீட்ல இல்லையா, நீ தோசை வார்க்கற ?"



"ரொம்ப நாளா உன்னைத்தான் ஆளக் காணோமேன்னு பாத்தேன், வந்துட்டியா ?" விக்கிரமாதித்தன் அலுத்துக்கொண்டான்.


"நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே. சரி சரி எனக்கும் ஒரு ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் போடு, சாப்டுட்டுப் போறேன்."
 
"தோடாஆஆ.. இதுல ஒன்னும் குறைச்சலில்லை!" பேசிக்கொண்டே தோசைக்கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்தான் விக்கிரமாதித்தன். தோசைக்கல்லில் பட்ட தண்ணீர் "ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தத்தோடு அதில் குதித்தது.


வேதாளம், "தண்ணி ஏன் குதிக்றது தெரியுமா ?" கேட்டது.


"கல் சூடா இருக்கில்ல, அதனால!"


"இது சரியான பதில் இல்லையே!"


"ஆரம்பிச்சுட்டயா உன் வேலையை? சரி, சொல்லித் தொலை!"


வேதாளம் தொடர்ந்தது. "நீ தோசைக்கல்லுல தெளிக்கற தண்ணி இந்த அறையோட தட்ப வெப்ப நிலையில இருக்கும். ( 30 டிகிரின்னு வெச்சுக்க!) தோசைக்கல்லுல விழும் போது தண்ணி திடீர்னு 100 டிகிரிக்கு சூடாறது. அப்போ தண்ணிக்கும் தேசைக்கல்லுக்கும் நடுவுல நீராவி உருவாகறது. நீராவி உஷ்ணத்தை நல்லாக் கடத்தாது. அதனால தோசைக்கல்லுல இருக்கற வெப்பம் தண்ணீருக்குள்ள போகாது. அதனால தண்ணீரோட அடிப்பாகம் 100 டிகிரியாவும் மேலே போகப் போக சூடு குறைவாவும் இருக்கும். அதாவது நீராவிக்கு மேல இருக்கற தண்ணியோட பகுதி கொதிக்கற சூட்லயும் மேல் பகுதி மிதமான சூடாவும் இருக்கும். தண்ணீருக்கும் தோசை கல்லுக்கும் நடுவுல நீராவி ஒரு குஷன் மாதிரி இருக்கும். அதனாலதான் தண்ணி குதிச்சு டான்ஸ் ஆடறது!"


விக்கிரமாதித்தன் ஒன்றும் பேசாமல் சில தோசைகளை வார்த்து வேதாளத்திற்குக் கொடுத்துவிட்டு ஹாலுக்குச் சென்று சமீபத்தில் 'ரஜினி'ராம்கி எழுதிய 'மு.க' புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தான்; படித்துக்கொண்டே தூங்கிவிட்டான். தோசைகளைக் காலி செய்துவிட்டு  வேதாளம் வந்த போது விக்கிரமாதித்தன் விரிந்த புத்தகத்தை மார்மேல் கவிழ்த்து வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்.


"என்ன அதுக்குள்ள தூக்கமா ?"


விக்கிரமாதித்தன் கொட்டாவி விட்டுக்கொண்டே "புஸ்தகத்தை எடுத்துப் படிச்சாலே தூக்கம்தான் வருது!"


"ஏன் படுத்துண்டு படிக்கும் போது தூக்கம் வருது தெரியுமா ?"


"தெரியாது.  என்னவாவது சொல்லித் தொலை!!" மேலும் ஒரு கொட்டாஆஆவி..


"படுத்துண்டே படிக்கும் போது அசையாம ஒரு இடத்தில இருக்கோம். இதனால நம்ப தசைகளுக்கு ரத்த ஓட்டம் கம்மியாறது. ரத்த ஓட்டம் கம்மியாறதால லாக்டிக் ( lactic ) அமிலம் சுரக்கிறது. இந்த லாக்டிக் அமிலம் பிராணவாயுவை(ஆக்ஸிஜனை) அதிகமா உறுஞ்சற தன்மை கொண்டது. இதனால நம்ப மூளைக்குப் போற ரத்த ஓட்டத்துல இருக்கற ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு தூக்கம் வருது. இதனால் தான் நடந்துண்டே சிலர் படிக்கிறாங்க."


விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் கொட்டாவி விட்டான். வேதாளம் நான் கிளம்புகிறேன் என்று வெளியில் போனது.


"சுவாரசியமா வேற ஒன்னும் இல்லையா ?" என்றான் விக்கிரமாதித்தன்.


"எதிர்வீட்டு வாசல்ல கொட்டியிருக்ற இந்த ஆரத்தி பத்தி சொல்லட்டுமா ?"


விக்கிரமாதித்தனுக்கு ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது. வேதாளம் தொடர்ந்தது.


"மஞ்சள், இஞ்சி எல்லாம் ஒரே குடும்ப வகையைச் சேர்ந்தது. மஞ்சள்ல இருக்கற மஞ்சள் தன்மை 'curcumin' சேர்மத்தினால கிடைக்றது. இந்தச் சேர்மத்துல ஐதரொட்சிற் கூட்டத்தினால (hydroxyl group) கொஞ்சம் அமிலத்தன்மை இருக்கு. இதோட கொஞ்சம் கார குணமுள்ள (basic in nature ) சுண்ணாம்பு(calcium hydroxide - கல்சியமைத்ரொட்சைட்டு) கலக்கும் போது இந்தக் கரைசல்ல உள்ள மூலக்கூறுல ( Molecule ) எந்த மாற்றமும் இருக்காது. ஆனா அதுல இருக்கற அடிப்படை ஊடகத்துல (Basic Medium) மாற்றம் நடக்கறது. இதனால சிகப்பு நிறமா மாறுது."


விக்கிரமாதித்தன், "சரி இந்தச் சிகப்பை எப்படி மறுபடி மஞ்சளா மாத்தறது ?" தான் கவனிப்பதாகக் காட்டிக்கொள்ளவும், வந்த கொட்டாவியை மறைக்கவும் சும்மா ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான்.


"விக்கிரமாதித்தன்! வேதாளத்துகிட்ட கேள்வி கேட்கக் கூடாதுன்னு எழுதப்படாத விதி!. உனக்குத் தெரியாதா ? சரி, அடுத்த வேதாளம் பதிவுல பதில் சொல்றேன். இல்லை யாராவது பின்னூட்டத்துல சொல்றாங்களான்னு பார்த்துண்டிரு. தூங்கிடாத!!"


வேதாளம் பறந்து சென்றது.

Comments