Skip to main content

சுஜாதா தேசிகன் - பேருக்கு ஒரு முன்னுரை

தமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் “வாமா மின்னலு” என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும்.

இந்து மதத்தில் உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா? இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது.

கோயில்களில் பார்க்கும் பெருமாள் சிலைகள் எல்லாம் அர்ச்சாவதாரம் என்று சொல்லுவார்கள். நிச்சயம் பெருமாள் இப்படித்தான் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. முருகன் என்றால் எப்போதும் சின்ன பையனாகதான் காட்சி தருவார். கூடவே மயில் இருக்கணும். இல்லை என்றால் அவரை நாம் முருகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெருமாள் எப்படி இருப்பார் என்று தெரியாத காரணத்தால்தான் இன்று பழனி முருகனும், பிள்ளையாரும் அக்கரலிக் பெயிண்டால் காலண்டரில் ஜொலிக்கிறார்கள்.

திருவள்ளுவரையும் கம்பரையும் ஹுவான் சுவாங்கையும் (எலி வாலாய் பின்னல் போட்டிருப்பார்) சத்ரபதி சிவாஜியையும் ஷாஜகானையும் (இவர் ஒரு ரோஸ் வைத்திருப்பார்) அக்பரையும்கூட புத்தகங்களில் ஒரு உருவத்தைக் கொடுத்து, இவர் இப்படித்தான் இருப்பார் எனச் சொல்லி மனதில் பதிய வைத்திருக்கின்றனர். வழக்கமாக உட்கார்ந்திருக்கும் திருவள்ளுவர் கன்னியாகுமரியில் நிற்பதால், நம் மனது அவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லையே!.

அடுத்து, “பேர்ல என்ன இருக்கு ?” என்ற கேள்வி நாம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் பிரயோகம். ”வாட்ஸ் இன் அ நேம்”? என்று ஷேக்ஸ்பியர் கேட்டதை அவரே மறந்து இருக்கக்கூடும். ஆனால் நாம் அதை மறக்கவில்லை. நரசிம்மன், கோவிந்தராஜன், ஜெகந்நாதன், ராஜகோபாலாச்சாரி போன்ற பெயர்கள் கேட்டவுடன் உங்களுக்கு உடனே ஒரு வயதான பிம்பத்தைத் தரும். ஏன் என்றால் உங்களுக்குத் தெரிந்த இந்தப் பெயர்களில் இருப்பவர்கள், மாமாக்களோ, தாத்தாக்களோ. இதே பெயர்கள் தற்போது நரேஷ், கோவிந்த், ஜெகன், ராஜ் என்று சுருக்கப்பட்டதால் வயதும் கம்மியாகிவிட்டது போல் தோன்றுகிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு நீளமாக பெயர்கள் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வயது அதிகமாகும். சில ‘விதி’விலக்குகள் இருக்கின்றன. என் பெயர் சிறியதுதான்; “தேசிகன்”. அதற்கே, “ஓ நீங்கதான் தேசிகனா? நான் கொஞ்சம் வயசானவரா எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னவர்களின் லிஸ்ட் நீளம்.

சமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். முன்பு ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது “ஓ, அந்த தேசிகன் நீங்க தானா?” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை. வைத்திருந்தால், “சார் உங்களுக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கி வைத்திருந்தேன்” என்று அழைத்து, என்னைப் பார்த்து விட்டு “வெச்சிக்கோங்கோ.. வயசானா உபயோகமா இருக்கும்” என்று தந்திருப்பார்கள். இவர்கள் இப்படி நினைத்துக்கொள்வதில் எனக்குத் துளிக்கூட வருத்தம் கிடையாது. ஆனால் பெண்கள்? பிரச்சினை அங்குதான். அதற்குமுன் பெண்களின் பெயர்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.

பெண்களின் பெயர்களை எடுத்துக்கொள்ளுங்கள்; “சுஜாதா” என்ற பெயர் எப்போதோ ஆண் பெயராகிவிட்டது என்று எழுத்தாளர் சுஜாதாவே என்னிடம் அடிக்கடி சொல்லியுள்ளார். சிம்ரன், ஸ்ரேயா, ஸ்நேகா எல்லாம் சீசனுக்குத் தகுந்தாற் போல அழகானவர்களின் பெயர்களைக் குறிக்கும். சில சமயங்களில் யாராவது இந்தப் பெயர்களை, தங்கள் பெயரென்று சொல்லிவிட்டால், படக்கூடாத இடத்தில் அமிர்தாஞ்சன் பட்ட மாதிரி இருக்கும். காரணம் நமக்கு இந்த பெயர்களினால் ஏற்படும் பிம்பம் தான்! விகடன், குமுதம் போன்ற பத்திரிகையில் பார்த்திருக்கலாம் தற்போது உள்ள “கதாநாயகன், கதாநாயகிகளுக்கு வயதானால்…” என்று போட்டு ஓவியர்கள் கற்பனை செய்து வரைந்திருப்பார்கள். அந்தப் படத்திலும் இளமை எட்டிப்பார்க்கும்.

மீரா, மாலதி, ரஞ்சனி, காயத்ரி, அனன்யா, ரூபா எல்லாம் நேரில் பார்க்காதவரை வயதைக் கண்டுபிடிக்க முடியாத பெயர்கள். இன்றைக்கும் என் பெண்ணின் பெயர் ஆண்டாள் என்றால் “ஏன் சார், சின்னப் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிங்க?” என்று வாரத்துக்கு ஒருவராவது கேட்டுவிடுகிறார். இத்தனைக்கும் திருப்பாவை எழுதிய ஆண்டாள் சின்ன பெண்தான். நதியா என்று ஒரு பெயரைக் கேட்டால், நிச்சயம் 35 வயசுக்கு மேல் இருக்கும் பிம்பம் உங்கள் மனசில் வரும். அதே நதியா நரசிம்மன் என்ற பெயரை கேட்டால்? ஒரு மரியாதை வரும். பெயருக்கு பின்னால் இருக்கும் நரசிம்மனுக்குக் கொடுக்கும் பயம் கலந்த மரியாதை. பெயருக்கு கூட பின்னால் பெயர் போடாமல் இருக்கும் பெண்கள்? நம்பாதீர்கள்.

பாட்டி என்றால், கோமளவல்லி, சூடாமணி, ரங்கநாயகி என்று இருப்பதுதானே மரபு?
ஒரு வீட்டுக்கு போகிறீர்கள் அங்கே ஒரு பாட்டி இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள் “இவங்க தான் ஸ்ரேயா பாட்டி” என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “ஸ்ரேயா என்கிற பேத்திக்குப் பாட்டி என்றுதானே?” அந்தப் பாட்டிக்கே பெயர் “ஸ்ரேயா” என்றால்…எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? அதே அதிர்ச்சி எனக்கு சில வருடங்கள் முன் கிடைத்தது.

அப்போது நான் சென்னையில் இருந்தேன். வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலம். யாராவது “நீங்க எழுதியது சூப்பர்” என்று மின்னஞ்சல் அனுப்பினால் நோபல் பரிசே விழுந்து விட்ட சந்தோஷம் ஏற்படும். ஒருநாள் என் வலைப்பதிவைப் பாராட்டி ஒரு பெண் வாசகர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கேட்கவா வேண்டும்? ஒருநாள் சாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, “நான் மேல்கோட்டை செல்ல பெங்களூர் வருகிறேன்” என்றேன். உடனே அவர் கட்டாயம் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் ரசிகை, வீட்டுக்குக் கூப்பிட்டால் யாராவது மறுப்பர்களா? கொஞ்சம் யோசிக்கற மாதிரி பாவ்லா செய்துவிட்டு “சரி” என்றேன்.

பெங்களூருக்கு வந்துவிட்டு சில மணிநேரத்தில் மேல்கோட்டை செல்ல வேண்டும். பெங்களூர் வந்து இறங்கியவுடன் அந்த பெண் வாசகிக்கு போன் செய்து பேசினேன். “ஓ! நீங்க ஜே.பி. நகரில் இருக்கீங்களா? நாங்க கோரமங்களா… நீங்க அப்படியே பி.டி.எம் பக்கமா வந்தீங்கனா ஈஸி. உங்களுக்காக சக்கரை பொங்கல் செஞ்சு ரெடியா வெச்சிருக்கேன்” என்று சொன்னார். (அன்று ’கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’). நான் அட்ரஸ் குறித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து, விசாரித்துக்கொண்டே அவர்கள் வீட்டைச் சென்றடைந்தேன்.

அவர்கள் வீட்டுக்குப் போகும்முன் என்ன நடந்தது என்று சொல்லியாக வேண்டும். நான் போனில் பேசுவதை என் மனைவி கேட்டுவிட்டு “யாரு” என்றாள் சின்னதாக. கல்யாணம் ஆன புதுசு; அதனால் சின்னதாக. முதல் அனுபவம் என்பதால் எனக்குத் தெரிந்த வாசகி என்று நான் உண்மையைச் சொல்லிவிட்டேன்.

“என்ன டிரஸ் இது? ரிசப்ஷனுக்கா போறீங்க? நல்ல யங்கா டி. ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகிட்டு காஷுவலா போங்க” என்ற அவள் விருப்பப்படியே டிரஸ் மாற்றிக்கொண்டேன். “எங்க ஆத்து மனுஷா வீட்டுக்கு வரும்போது மட்டும் இப்படியெல்லாம் வந்துராதீங்க” என்று சொல்லி வழி அனுப்பினாள்.

வாசகியின் வீட்டுக்கு முன் ஏதோ மரம், பக்கத்தில் மளிகை கடை, எதிர்த்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் என்ற முக்கியமான லாண்ட்மார்க்குகள் இருந்ததால் அவர்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. வீட்டுக் கதவைத் தட்டியவுடன் வயதானர் ஒருவர் கதவைத் திறந்தார்.

“என்ன வேண்டும்?”

“நான் தேசிகன்” என்று சொன்னவுடன், “ஓ, நீங்க தானா அது?” என்று அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு அம்மணி வந்து “நீங்க…” என்று ஆரம்பித்தபோது மீண்டும் “தேசிகன்” என்றேன். இவங்கதான் வாசகியா என்று அதிர்ந்த மனதை, “சே, அப்படி இருக்காது, அவங்க பொண்ணாயிருக்கும், வருவாங்க” என்று அவசர சமாதானம் செய்தேன்.

“என்ன தேசிகனா? உங்க பேரைக் கேட்டதும் நீங்க ஏதோ வயசானவரா இருப்பீங்கன்னு நினைச்சேன். அதுவும் நீங்க சுஜாதாவோட நெருங்கிய நண்பர், ஆழ்வார், பத்தி எல்லாம் எழுதறீங்க” என்று அந்த அம்மணி அடுக்கிக்கொண்டே போக… ஊர்ஜிதமாகிவிட்டது, இவர்தான். இவரேதான். இவ்வளவு சின்னவனாக நான் இருப்பது ஏதோ தெய்வகுற்றம் போல் பார்த்தார். நல்ல வேளையாக உதட்டுக்கு மேலே மீசை இருந்தது. இல்லை என்றால் சர்க்கரைப் பொங்கலுக்குப் பதில் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துவிட்டு எதிர்த்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியிருப்பார்.

அதே அதிர்ச்சி எனக்கும் இருந்தது. “உங்க பேரும் ரொம்ப யங்கா இருந்ததால நான் டி-ஷர்ட் எல்லாம் போட்டுண்டு வந்தேன் பார்க்க இப்படி இருக்கீங்களே, நான் என்ன பாவம் செய்தேன்?” நினைத்தேன், ஆனால் சொல்ல முடியவில்லை!

அப்புறமாவது நான் சும்மா இருந்திருக்கலாம். என்ன பேசுவது என்று தெரியாமல் மேஜை மீது வைத்திருந்த ஒரு ஃபேமலி போட்டோவைக் காண்பித்து “இதுதான் உங்க பொண்ணா?” என்றேன்.

“என்னது இது? இவ என் பேத்தி. பக்கத்தில் இருப்பதுதான் அவ குழந்தை” என்றார்.

இப்போது அவரும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்பதுதானே சம்பிரதாயம்? கேட்டார்.

“திருச்சியில் எங்கே இருந்தீங்க?”

நான் சொன்ன பதிலைக் கேட்டு உடனே, “உங்க அப்பா நானி தானே?” என்றார் மகிழ்ச்சியாக.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருந்தபோது “நானி பையன் தேசிகனாடா நீ…அட, ஏண்ணா.. இவனைத் தெரியலை உங்களுக்கு? இவன் நானியோட பையன். என்னை உனக்குத் தெரியலையா? எப்படித் தெரியும்? நான் உங்காத்துக்கு வந்தபோது நீ சின்னப் பையன், டிரவுசர் போட்டுண்டு (நல்ல வேளை!) ஓடிண்டிருப்பே, உனக்கு என்னை நெனைவு இருக்காது…”

ஐயங்கார் எல்லாம் குளோஸ்டு கம்யூனிட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு குளோஸா இருக்கும் என்று நினைக்கவில்லை. புரியாமல் “நீங்க யாருன்னு தெரியலையே?” என்று திரும்பவும் அப்பாவியாகக் கேட்டேன்.

“என்ன அப்படிக் கேட்டுட்ட.. ம்ம்… எப்படிச் சொல்றது? எங்க அம்மாவுக்கு உங்க பாட்டி அத்தை… அப்ப அம்மங்கா… நான் அம்மங்காவுட பொண்ணு.. ஒன்றுவிட்ட முறை பையன்” என்றார். என் அகராதியில் மாவடுக்கு அடுத்து அம்மங்கா சேர்ந்து கொண்டது.

அதற்குப் பிறகு தேசிகன் என்ற பெயரைச் சுருக்கி “தேசி” என்று மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தார். வயது கம்மியாகிவிட்டது இல்லையா?

இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் அம்மங்காவிடம் அனுப்பினேன். அனுப்பியப் பத்தாவது நிமிடம் அவர் போன் செய்தார். “ஏய் தேசி, என் பேரை அப்படியே யூஸ் செஞ்சிருக்கே? நேராக உன் வீட்டுக்கு வந்து உன்னை அடிப்பேன்,” என்றார். அவர் அப்படி செய்யக்கூடியவர் என்பதால் அவர் வயதுக்கும் உறவுக்கும் பயந்துக்கொண்டு இந்தக் கட்டுரையில் அவர் பெயரைப் போடவில்லை. எதற்கும் நெட் அன்பர்கள் ஜாக்கிரதை.


போன வாரம் ஒருவர் “சார் எங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்காக புளியோதரை பண்ணியிருக்கேன்” என்றார். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று போகவில்லை. இத்தனைக்கும் அவர் ஆம்பளை!

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் பெயரில் என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கலாம், ஆனால் சில சமயம் உங்களை நீங்கள் அடையாளப்படுத்த இது தேவையாக இருக்கிறது.

சில வாரங்களுக்குமுன் ஒரு பெரிய எழுத்தாளர் ( கடுகு என்ற திரு பி.எஸ்.ரங்கநாதன்)  என் கதையைப் படித்துவிட்டு இவ்வாறு மெயில் அனுப்பியிருந்தார்:

“உங்கள் கதையைப் படித்தேன். இனிமேல், தேசிகன் என்ற பெயரைவிட, அத்துடன் கூட ஏதாவது சேர்த்துக்கொண்டு எழுதுவது பெட்டர். இல்லை என்றால் கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி போல இதுவும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று மாதிரி ஆகிவிடும்” என்று சொல்லிவிட்டு கூடவே சில பெயர்களும் கொடுத்துவிட்டு ”எனக்கு நீங்கள் “சுஜாதா தேசிகன் என்ற பெயரை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று பின்குறிப்பாகவும் ஆசீர்வாதமாகவும் எழுதியிருந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய திருப்பாவை விளக்கங்கள், கிழக்கு (வரம்) வெளியீடாக, சின்ன புத்தகமாக, ‘சுஜாதா தேசிகன்’ பெயருடன் வருகிறது, விலை 20/=. கொடுக்கும் விலைக்கு 10 திருப்பாவை உரை இலவசம்.

Comments

  1. Really enjoyed your blog.

    From
    Another Desikan, living in Bangalore, but 65 years old.

    ReplyDelete
  2. " பேருக்கு ஒரு முன்னுரை" என்றால்? சும்மாவானும் பேருக்கு ஒரு முன்னுரை எழுதி வைத்தீர்களா?!!

    சினிமா விரும்பி

    ReplyDelete

Post a Comment