Skip to main content

அப்பாவின் சர்குலேஷன் லைப்ரரி

என் அப்பா பாரத மிகு மின் நிலையத்தில்(BHEL) வேலை செய்த போது தொடர்ந்து ’சார்குலேஷன் லைப்ரரி’ ஒன்றை நடத்திக்கொண்டு வந்தார். வாராந்திர, மாதாந்திர பத்திரிகைகளின் அறிமுகம் அதில் தான் எனக்குக் கிடைத்தது.

குமுதம், விகடன், ஜூனியர் விகடன், பக்தி, சக்தி, மஞ்சரி, சாவி, குங்குமம், பேசும்படம், பொம்மை… என்று அடுக்கிவைத்துப் படித்திருக்கிறேன். நிறையப் பேர் அந்த லைப்ரரியில் இருந்ததால் எல்லாப் புத்தகமும் இரண்டு, மூன்று பிரதிகள் முதலில் புதுசாக எங்கள் வீட்டுக்குத் தான் முதலில் வரும்.

புத்தகங்களை அவர் பேருந்தில் செல்லும் போதே படித்து முடித்துவிடுவார்.

ஒரு முறை அவர் ஒரு கதையை படித்துவிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் “இது எல்லாம் என்ன கதை… இதைப் பத்திரிக்கையில் எப்படிப் பிரசுரித்தார்கள்…. எல்லோரும் சுஜாதா மாதிரி ஆகிவிட முடியாது…” என்று கமெண்ட் அடித்தார். பின்னாடி இருந்தவர் “சார் என்ன கதை ?” இதோ இந்தக் கதை தான் என்று புத்தகத்தை பிரித்து அவரிடம் கொடுத்தார்.

பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போது பின் சீட்டு நபர் “சார் புத்தகம்” என்று திரும்பி கொடுத்துவிட்டுக் கூடவே இன்னொரு விஷயத்தைச் சொல்லிவிட்டு இறங்கினார்.

அன்று மாலை வீடு திரும்பிய என் அப்பா கொஞ்சம் மூடவுட்டாக இருந்தார். பஸ்ஸில் நடந்த சம்பவத்தை விவரித்தார். ”வாடா என்னுடன்” என்று எங்கள் வீட்டுக்குக் கொஞ்சம் தொலைவில் இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

“இன்று காலை பஸ்ஸில் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டேன்.. மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றார்.
“அட என்ன சார் நீங்க இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம்”

இனிமேல் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். மற்றவர் மனம் புண்படும் படி பேச கூடாது என்று என்னிடம் சொன்னார்.

புத்தகத்தைக் கொடுத்துவிட்டு அந்த நபர் சொன்ன விஷயம் இது தான். “அந்தக் கதை என் தம்பி எழுதியது!”

இன்னொரு சம்பவம்:

அன்று காலை வழக்கம் போல பேப்பருடன் பத்திரிக்கைகள் வந்தது. அப்பா பத்திரிக்கைகளை மேலோட்டமாகப் பார்த்தார். உடனே அந்தப் பத்திரிக்கை அட்டைப்படத்தைக் கிழித்துவிட்டு ஆடை இல்லாத அந்தப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு அவசரமாகக் அலுவலகத்துக்கு பஸ் பிடிக்க சென்றார்.

நான் ஏன் என்று கேட்டேன் “அசிங்கமா இருக்கு….பல வீட்டுக்கு இந்தப் புத்தகம் போகப் போகிறது.. ” என்றார். மாலை பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்
கிழித்த அட்டைப்படத்தில் ஒரு ஜோக் தான் வந்திருந்தது.

ஒரு பெண் பால் சொம்புடன் கணவன் முன் நிற்கும் படம். கீழே
“‘அத்தைதான் உங்களுக்கு ஆடையில்லாம பால் தரச் சொன்னாங்க!’
அத்தை பாலாடை என்று நினைத்துச் சொல்ல புது மணப்பெண் தவறாக புரிந்துகொண்டு தன் ஆடை என்று நினைத்து ஆடையில்லாமல் கணவன் எதிரில் பால் சொம்போடு நிற்கும் படம். வரைந்தவர் ஜெ, கேட்கவே வேண்டாம்.

என்று மாலையே ஆசிரியர் சாவி கைது செய்யப்பட்டார் என்ற செய்தியும் மாலை மலரில் வந்தது.

பலரைப் போல் சாவியை என் அப்பாவிற்கு ரொம்ப புடிக்கும். ஆனால் ”இதை எப்படி எடிட் செய்யாமல் விட்டார் ?” என்ற ஆச்சரியம் அடங்க அவருக்கு நிறை நாள் ஆனது. அந்தச் சமயத்தில் சாவிக்குக் கலைஞர் மற்றும் பல பெரும் பத்திரிக்கை ஆசிரியர்கள் எல்லாம் சப்போர்ட் செய்தார்கள்.

இன்றும் இந்த நிகழ்ச்சியைப் பலர் பத்திரிக்கை சுதந்திரத்தின் கருப்பு தினம் அதில் வக்கிரமும், ஆபாசமும் எதுவும் இல்லை என்று பலர் வாதிடுவார்கள்.

“இவ்வளவு பேர் சப்போர்ட் செய்கிறார்களே ?” என்றேன்.
“மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது எனக்கு இது தப்பு தான்!”

வாக்குவாதம் செய்தேன்.

கிழித்த அந்த சாவி அட்டைப் படத்தை என்னிடம் கொடுத்து “உன் அம்மாவிடம் காண்பித்து தப்பா, ரைட்டா ?” என்று கேட்டுக்கொண்டு வா” என்றார்.
என்னால் முடியவில்லை.

சுஜாதா தேசிகன்
உலக அன்னையர் தினம் 2018 

Comments

  1. அதான் நாராயணன் ஸார் !

    ReplyDelete
  2. //உன் அம்மாவிடம் காண்பித்து தப்பா, ரைட்டா ?” என்று கேட்டுக்கொண்டு வா” // - இதைவிட சிறப்பா சொல்லியிருக்கமுடியாது.

    ReplyDelete

Post a Comment