Skip to main content

முடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை

சில மாதங்களுக்கு முன் ’கொம்பன்’  படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு வசனம் “மீசைய முறுக்கிட்டு திரியற இவிங்கள போல நீயும் உருப்படாம போவ” எனக்கு மீசை இல்லை, அதனால் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தேன். படத்தில் நடிப்பவர்கள் எல்லோர் முகத்திலும் புசுபுசுவென்று முடியும், சண்டைக்குச் சட்டையை கழட்டினால் நெஞ்சிலே அதே புசுபுசு. ”நீ என்ன பெரிய கொம்பனா?  அல்லது உன் தலையில் என்ன பெரிய கொம்பா மொளச்சிருக்கு” என்று பேசுகிறோம்.  மீசைக்கும் கொம்புக்கும் என்ன சம்பந்தம். இருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

சினிமாவில் ஒருவனுக்குத் தலை நிறைய முடி இருந்தா அவன் நகரத்துப் பொறுக்கி; மூஞ்சி முழுக்க இருந்தா கிராமத்து ரவுடி; கிராப் வெட்டியிருந்தால் போலீஸ்; பங்க் என்றால் தாதா என்ற அடையாளங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெய் சங்கர் படங்களில் எக்ஸ்டராவாக கண்ணத்தில் ஒரு மச்சம் இருக்கும். சிலருக்கு மச்சத்தின் நடுவில் ஒரு முடி வளரும். ஏன் என்று தெரியாது.

தேவர் மகனில் சிவாஜி சாருக்கு அடுத்ததாகக் கமல் சார் வாரிசாக மாறும் போது தலையில் ’பங்க்’கை எடுத்துவிட்டு அப்பா மாதிரி மீசை வைத்துக்கொண்டு முடி திருத்திக்கொண்டு வருவார். ஊரே அவரைப் பார்த்து வணக்கம் சொல்லும். இதற்குப் பெயர் தான் ‘முடி’சூட்டுவிழா.

ரஜினி சார்னாலே ஸ்டைல்தான். நின்னா ஸ்டைல். விரலை அசைச்சா ஸ்டைல்.  தலையைக் கோதினா ஸ்டைல் என்று சொல்லுவார்கள். சூட்டு கோட்டு போட்டுக்கொண்டு கபாலி ஸ்டில்ஸ் வந்த போது எல்லோரும் மிரண்டார்கள்.  ’சால்ட்,பெப்பர்’ விக், தாடி இல்லாமல் ரஜினி சாரை யோசித்துப்பாருங்கள். பாடல் காட்சியை மியூட் செய்து பார்க்கும் எஃபெக்ட் கிடைக்கும். சிவாஜியில் மொட்டை ரஜினி( அது வேற ஸ்டைல்) பற்றி பிறகு சொல்கிறேன்.

தமிழ் ஹீரோ பயங்கர கோபத்தில் வில்லனைப் பார்த்து சவால் விடும் போது கை எங்கே எட்டுகிறதோ அங்கே இரண்டு மூன்று மயிரை பிடுங்கி ( அல்லது ஆக்‌ஷன் செய்து ) ஊதிவிட்டு “நீ எனக்கு இதற்குச் சமம்” என்று சொல்லும் போது வில்லன் கண்கள் சிகப்பாகும்.

ஆனால் எந்த ஹீரோயினும் இந்த மாதிரி செய்வதில்லை. மாறாக பொமரேனியன் நாய்க் குட்டி மாதிரி அதை பிடுங்காமல், தடவிக் கொடுப்பதை திரைப்பட விழாக்களில் பார்க்கலாம். அவர்களுக்கு கோபம் வந்தால், பாஞ்சாலி காலம் முதல் கூந்தலை அவிழ்த்துவிட்டு முடிய மாட்டேன் என்று சபதம் போடுவார்கள்.

தடய அறிவியல் விஞ்ஞானிகள். கொலை நடந்த இடத்தில் தடவி தடவி எடுத்து, ஆர்சனிக், பாதரசம், ஈயம் போன்ற விஷங்களையும், போதைப் பொருளான ஹெராயின், கோக்கெயின் பல நாட்கள் ஏன் பல வருஷங்கள் கூட தங்கியிருக்குமாம். பல ரசாயன சோதனைகள் மூலம் அதைப் பிரித்து எடுத்து உயிரோடு இருந்தால் உங்களையும் பிரித்து மேய்ந்துடுவார்கள்.
ஆனால் ஒரு முடியை பிடுங்கினால் அதன் வேரில் ஒட்டிக்கொண்டு இருக்கும் டி.என்.ஏயை வைத்து யாருடைது என்று கண்டுபிடித்துவிடலாம். இரட்டைக் குழந்தையாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம்!

நெப்போலியன் 1821ல் இறந்து போனார். எப்படி என்பது பெரிய புதிராக இருந்தது. மருத்துவர்கள் வயிற்றில் புற்றுநோய் என்றார்கள். செயின்ட் ஹெலனா என்ற  தீவில் ஆங்கிலேயர்கள் 1815ல் நெப்போலியனைச் சிறையில் வைத்திருந்தார்கள். அப்போது நெப்போலியன் டைரி எழுதினார். ஐம்பது வருடத்துக்கு முன்பு கிடைத்தது. அதில் தனக்கு தாகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது, நிறைய முடி கொட்டியது, உடம்பு பருமன் ஆனது என்று குறிப்பு இருந்தது. டயட் பிரச்சனை இல்லை ஆனால் அவர் டயட்டில் ஏதோ கலந்தது தான் பிரச்சனை. ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் இதைப் படித்த போது ஆர்செனிக் விஷத்தின் அறிகுறி மாதிரி இருக்கிறதே என்று சந்தேகப்பட்டார்கள். உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று கண்டறிய  நெப்போலியன் முடியைச் சோதிக்க முடிவு செய்தார்கள். புகைப்படம் கூட வராத அந்த காலத்தில் ஞாபகார்த்தமாக நண்பர்கள், காதலர்கள் தங்கள் முடிகளைக் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்டவர்கள் (யானை முடி மோதிரம் மாதிரி) அதை மோதிரம், வளையலில் பிணைத்து மயிரே போச்சு என்று இல்லாமல் அதைப் பத்திரமாக வைத்துக்கொண்டார்கள்.

நெப்போலியன் பேரரசர் இல்லையா ? அவரும் தன் முடியை சிலருக்கு கொடுத்து வைத்திருந்தார். அவர் இறந்த போது பிணத்திலிருந்து கூட சிலர் அதை எடுத்து( சரியான வார்த்தை பிடுங்கி) நினைவுப் பரிசாக வைத்துக்கொண்டார்கள். கிட்டத்தட்ட 150 வருடங்கள் கழித்து, தடயவியல் விஞ்ஞானிகள் அவரது முடி இழைகளைச் சோதனை செய்தார்கள். அதில் அதிக அளவு ஆர்சனிக் விஷம் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆர்சனிக் என்றால் என்ன என்று குழம்ப வேண்டாம் - இன்றும் நாம் பூச்சிக்கொல்லி, செடிக்கொல்லி முதலான பொருள்களில் பயன்படுத்துகிறோம். நெப்போலியன் சாவில் மயிரை பியித்துக்கொள்ளும் மேலும் ஒரு எக்ஸ்ட்ரா திருப்பம் இருக்கிறது தேடிப் படித்துவிடுங்கள்.

ஆண்களின் தலையில் வளர்ந்தால் அதற்குப் பெயர் முடி;  பெண்களின் தலையில் வளரும் போது அது கூந்தாலாகிவிடுகிறது. சிலர் பொதுவாக கேசம் என்பார்கள். சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கு வந்தது என்று நினைக்கிறேன் அந்த ஆராய்ச்சியை டிவிட்டர் டாக்டரேட் ஆசாமிகளுக்கு விட்டுவிடுகிறேன்.

”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” தொடங்கி ”கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே ” ஐ பாடல் வரை பெண்களுடைய முடிக்குக் கூந்தல் என்று தான் பெயர்.  ”பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்” என்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகத்தில் கூந்தல் வாசனைப் பெற்றால் வண்டுகள் பூக்களுக்கு பதில் கூந்தலை தேடி வந்து தலைக்கு மேல் ரீங்காரம் செய்கிறது என்கிறார். கவிஞர்கள் தேன் தடவி எழுதினார்களா அல்லது பெண்கள் எண்ணெய்க்கு பதில் தேனையே எண்ணெய்யாக தடவினார்களா என்று தெரியாது. பெண்கள் கூந்தலுக்கு வண்டுகள் வருகிறது. “நாற்றத் துழாய்முடி நாராயணன்” என்கிறாள் ஆண்டாள். நாராயணாக இருந்தாலும் அது முடி தான். முடி ஆண்மை.

முடி என்பது சாதாரணமாக உபயோகிக்கலாம். மயிர் ? இரண்டும் ஒன்றைக் குறிக்கும் ஆனால் மயிர் என்ற வார்த்தையை அப்படி உபயோகிக்க முடியாது. உதாரணமாக அறிவியல் தேர்வில் ”வெள்ளை முடி வளர்வது வயதாகிவிட்டதைக் குறிக்கும்” என்று எழுதலாம். இங்கே முடிக்குப் பதில் மயிர் என்று மாற்றிப் பாருங்கள். நிச்சயம் வாத்தியார் மதிப்பெண் போட மாட்டார். மசிர் என்று உபயோகித்தால் அந்த வாத்தியார் வீட்டுக்கே வந்துவிடுவார்.

அதே வார்த்தையுடன் ‘ப்’ சேர்த்து ’மயிரைப்’ கூடவே ஒரு  <பீப்>  சேர்த்தால்  இலக்கண விதி பிரகாரம் அது கெட்ட வார்த்தையாகிவிடும். அதே போல் மயிர் கூட ஆண்டியை சேர்த்தால் மயிராண்டி என்று ஊர்க் கலவரமே வரலாம். இலங்கையில் இது மசிராண்டியாம். கூடவே “சிரை” “பிடுங்கு”  என்று மயிரைத் தினமும் தமிழ் கூறும் நல்லுலகம் அலங்கரிக்கிறது.  எனக்குத் தெரிந்தவரை மயிரை நல்ல வார்த்தை ஆக்க ஒரே வழி இருக்கு  “மயிர் இழையில் உயிர் தப்பினார்”  மேலும் சில வார்த்தை இருக்கலாம்.

சாப்பாட்டில் முடி இருந்தால் பெரிய பிரச்சனை தான். மாமியார் மருமகள் இரண்டு பேரும் சேர்ந்து செய்தால். “உங்க அம்மாவுடையது தான்” என்று மனைவியும். “அவளோடுது தான்” என்று அம்மாவும் ஒற்றை மயிருக்கு மயிர்பிடிச் சண்டை போட்டுக்கொள்ளலாம். சாப்பாட்டில் மயிர் என்றால் ஆசார குறைச்சல், யாருடையாதாக இருந்தாலும் சாப்பாட்டை விட்டு எழுந்துவிட வேண்டும். ஆனால் அம்மா, மனைவி நாக்கையும் நம் நாக்கையும் கட்டுப்படுத்த முடியாது.

புத்திசாலி மனைவியாக இருந்தா “பாருங்க வெள்ளை முடி” உங்க அம்மாவுடையது என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைலில் கண்டுபிடிக்கலாம். மைக்ரோ ஸ்கோப்  வழியாகப் பார்த்தால் அது ஆண், பெண், வயது, டை அடித்ததா என்று சகலமும் கண்டுபிடித்துவிடலாம். மயிர்பிடிச் சண்டையினால் உதிர்ந்த முடியா என்று கூட கண்டுபிடிக்கலாம்.

சாப்பாட்டில் முடி என்றால் அருவெறுப்பாக கருதும் நாம். திருப்பதியில் காணிக்கையாக செலுத்தும் முடி வருடந்தோறும் பல கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலிருந்து L-Cysteine என்ற அமீனோ அமிலத்தை எடுத்து சாக்லேட் செய்ய உபயோக்கிறார்கள். செயற்கை முறையில் கிடைக்கிறது ஆனால் நம் முடியிலிருந்து எடுப்பது ஆர்கனிக் வகை இல்லையா ? வெளிநாட்டிலிருந்து மச்சினர் கொண்டு வரும் சாக்லேட்டை ’திருப்பதி பிரசாதம்’ போல சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்.


’தல’ப்பாகட்டி பிரியாணி கடைகளுக்கு போட்டியாகச் சிகை அலங்கார கடைகள் எங்குப் பார்த்தாலும் வளர்ந்திருக்கிறது. நம்முடைய முடி குறைய குறைய அவர்களுக்கு வளர்ச்சிதான். சுருட்டையை நேர்செய்வதும், நேராக இருப்பதைச் சுருட்டிவிடுவதும் கலர் அடிப்பதும் வாட்ஸ் ஆப் ஃபார்வர்ட் மாதிரி டைம்பாஸாகிவிட்டது. உங்கள் மரபணுக்கள் உங்கள் முடியின் கலரை முடிவு செய்கிறது. ஊருக்கு ஊர் கலர் மாறுபடுகிறது. நம்மூரில் கருப்பு வெளிநாடுகளில் பொன்னிறம் என்று பார்த்திருப்பீர்கள். நல்ல வேளையாக நமக்குப் பொன்னிறமாக இல்லை, பழைய காலத்தில் ரோமானியர்கள் பொன்னிறமாக இருக்கும் முடியைப் பார்த்தால் உடனே “யார் அங்கே” என்று ஓர் அடிமை கூப்பிட்டு பொன்னிற முடியை முழுவதும் வெட்டி விக் செய்தார்கள். அது மட்டும் இல்லை மொட்டையான பிறகு அவனை அடிமையாக்கிக்கொண்டார்கள். மீண்டும் வளர்ந்த பிறகு அறுவடை செய்ய தான்.

எங்கள் வீட்டில் காய்கறி குப்பை எல்லாம் ஒரு தொட்டியில் போட்டு அதை அழுகிப்போகச் செய்து காம்போஸ்ட் உரம் செய்யும் போது அதில் மக்காதது சாக்லெட்ட் பேப்பர், இன்னொன்று தலை முடி. அகழ்வாராய்ச்சிகளில் தேடிக்கொண்டு போகும் போது பழமையான எலும்புக்கூடுகளுடன் முடிகள் கிடைத்துள்ளது.

“முடியில என்ன இருக்கு?” என்று கேட்டால் சட்டென்று பதில் சொல்லத் தெரியாது. 88% ’கெரட்டின்’ என்ற புரதம் தான் முடி, நகம், கொம்பு என்று எல்லாவற்றிலும் இருக்கிறது. அதுவும் இறந்த புரதம்.
காத்துப் புகாத இடத்தில் வைத்திருந்தால் பல நூற்றாண்டுகள் அழுகாமல் அப்படியே இருக்கும். பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் முடியில் தான் உயிர் இருக்கிறது என்று நம்பினார்கள். எல்லாப் புராணங்களிலும் முடியுடன் தான் வர்ணிக்கிறார்கள்.  ”அழகான கூந்தலுடன்” என்று வர்ணிக்கப்படுகிறாள் ஆத்தோர் என்ற எகிப்திய கடவுள். பைபிளில் சாம்சன் நீண்ட முடியை வெட்டினால் அவர் வலிமையை இழந்துவிடுவார். நாய்க்குடை காளான் மாதிரி கிளியோபாட்ரா ஹேர்ஸ்டைல் எல்லோருக்கும் தெரியும். தெய்வீக ஆசீர்வாதம் மூலம் வந்தது என்கிறார்கள். பிறகு மந்திரதந்திரங்கள், ஸ்பெஷல் எண்ணைத் தைலம் என்று அதைப் பாதுகாத்தாள். அமேசான் காடுகளில் உள்ள அரிய வகை மூலிகையால் தயார் செய்த தைலமாக கூட இருக்கலாம். பதஞ்சலியில் கூட ஏதோ தைலம் இருக்கிறது.

ஹென்னா என்ற மருதாணியை இன்றைய மம்மிக்கள் பலர் ஆர்கானிக் டையாக அடித்துக்கொள்கிறார்கள். எகிப்திய மம்மிகள் இதையே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் செய்திருக்கிறார்கள். சவுக்கார் பேட்டையில் அதிகம் பேர் உபயோக்கிறார்கள். ரோமானியர்கள் மர சாம்பல், சோடியம் பைகார்பனேட் கொண்டு கலர் அடித்துக்கொண்டார்கள். துப்பாக்கி வந்த காலத்தில் அதன் மருந்தையும் ( Gunpowder) போராக்ஸையும் வினீகர், மிருக ரத்தத்துடன் கொஞ்சம் எண்ணைச் சேர்த்து கொதிக்க வைத்து வெள்ளை முடியை கலர் செய்தார்கள். வெறுப்படைய வேண்டாம், இப்போதும் நமக்குக் கிடைக்கும் டைகளிலும் இது போன்று பல விஷயங்கள் உள்ளே அடங்கியிருக்கிறது.

இன்று பெரிதாக ஒன்றும் மாறவில்லை. பெண்கள் தங்கள் முடியை பேணி பாதுகாக்கிறார்கள். ஒரு பெண்ணிடம் “நிறையக் கொட்டிவிட்டது போல” என்று அவள் கூந்தலைப் பற்றி பேசிப்பாருங்கள். உங்களுக்கு அன்று “bad hair day” தான். ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை. மேற்கு மாம்பலம், முதல் தாம்பரம் வரை மின்சார ரயிலில் போனால் இரண்டு பெரிய பாஸ்போர்ட்சைஸ் போட்டோவை பார்க்கலாம். ஒன்றில் சோகமாக வழுக்கை மண்டையும் பக்கத்தில் சிரித்துக்கொண்டு தலை முடியுடன், கீழே  “Before" "After" என்பதைப் பார்க்கலாம்.

இன்றும் பொது இடங்களுக்கு விக் வைத்துக்கொள்ளும் நடிகர்கள். தொப்பி போட்ட அரசியல் வாதிகள், சத்குருக்கள், பாபாக்கள், ஸ்ரீஸ்ரீக்கள் எல்லோருக்கும் பொதுவான ஓர் அம்சம் மற்றும் எல்லோருக்கும் ஒரு இமேஜ் கொடுக்கிறது இந்த முடி சமாசாரம் தான்.

கூகிளில் முடி என்றால் இது தான் கொட்டுகிறது... 
முடி கொட்டுவது பற்றி எனக்குக் கவலை இல்லை என்று ஆண்கள் வெளியே சொன்னாலும், அவர்களுக்கு உள்ளூர கவலை இருக்கவே செய்கிறது. முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கே இந்தக் கவலை இருந்திருக்கிறது ( பார்க்க அவர் எழுதிய கடிதம் ). வெள்ளை கருப்பாகவும் ஏன் வழுக்கையில் கூட முடி முளைக்கவும் அவருக்கும் ஹீலர் பாஸ்கர் மாதிரி ஒருவர் கிடைத்திருக்கிறார்.

நேரு... 
விவாகரத்துக்கும் வழுக்கைக்கும் சம்பந்தம் இருக்கவே செய்கிறது. ”வழுக்கை விழ வாழ்க்கையில் அதிகம் வழுக்கி விழுகிறார்கள்” என்று திருவள்ளுவர் மாதிரி இரண்டே வரியில் எழுதிவிடலாம். பிரச்சனை திருவள்ளுவர் மாதிரி அவர்களுக்கு முடி இல்லாதது தான் என்கிறது புள்ளிவிவரம். கஷ்டம் வந்தால், மயிரே போச்சுன்னு இருப்போம் ஆனால் பிரச்சனை முளைப்பது அந்த மயிரே முளைக்காத போது தான்  பல ஆண்கள், மிச்சம் இருப்பதையும் எடுத்துவிட்டு, ஃபிரஞ்ச் தாடி வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். சிவாஜி ரஜினி மாதிரி. இதன் உளவியல் காரணத்தை ஆராய்ச்சி செய்யலாம். நம் கவலையை சொன்னால் ”நீங்க வாழ்க்கையில் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு, இதுக்கே கவலைப்பட்டா ?” என்று அறிவுரை.

எலும்பு மஜ்ஜைக்கு அடுத்து அதிகமாக நம் உடம்பில் வளரும் திசு முடி தான். முடியின் மயிர்க்கால்களுக்கும் நரம்புகளுக்கும் தொடர்பு உண்டு அதனால் தான் தலையை மசாஜ் செய்த பின் அந்த ’ஃபீல் குட்’ கிடைக்கிறது. சராசரி ஒருவருக்கு 125,000 தலையின் மேற்பகுதியில் மயிர்க்கால்கள் இருக்கிறது. வருடத்துக்கு ஒவ்வொன்றும் 12 செ.மி வளர்கிறது. ஆக 125,000 x 12cm  = 15,00,000cm அதாவது மொத்தம் 15km. எது வளர்கிறதோ இல்லையோ, பிறந்த நாளுக்குப் பிறந்த நாள் 15km முடி வளர்கிறது கிட்டதட்ட மூன்று மணிநேரம் வேகமாக நடந்தால் கடக்க கூடிய தூரம்.

ஆனால் இவ்வளவு வளரும் முடி கொட்டவும் செய்கிறது. தினமும் 30 முதல் 100 முடி கொட்டுகிறது என்கிறார்கள். சட்டையில், தோள்பட்டையில், சாப்பாட்டில்,  சீப்பில், குளியலறை சிங்க், வாஷ்பேசின் என்று எல்லா இடங்களிலும் பார்க்கலாம். வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினால் காணாமல் போன பல பொருட்கள் கிடைப்பதுடன் முடி பந்துகள் கிடைப்பது நிச்சயம். தலை முடி அதிகம் இருப்பவர்கள், சரவணபவன் போன்ற சில ஹோட்டல்களில் தலை முடி விழாமல் இருக்கத் தொப்பி போடுகிறார்கள். தலை முடி இல்லாதவர்கள் சவுரி போடுகிறார்கள்.

சவுரி பெண்களுக்கே சொந்தம். விக் ஆண்களுக்கு. ஒரே எஸ்சப்ஷன் சௌரிராஜப் பெருமாள்!. அதற்கு ஒரு சின்ன ஸ்தல புராணமும் இருக்கிறது. ரங்க பட்டர் கோயில் அர்ச்சகர் பெருமாளுக்கு தினமும் மாலை சாற்றி ஆராதனை செய்த பின் தன் காதலிக்கு அந்த மாலையைச் சாற்றினார். ஒரு நாள் திடீர் என்று சோழ மன்னன் கோயிலுக்கு வர ராஜமரியாதை செய்ய என்ன செய்வது என்று தெரியாமல், காதலிக்கு அணிவித்த மாலையை மன்னருக்கு அணிவித்தான். அதில் சில தலை மயிர் இருக்கவே, ”இது என்ன ?” என்று மன்னன் கேட்க அர்ச்சகரும் இது பெருமாளுடைய திருமுடி தான் என்று புருடா விட. மன்னன் உற்சவரைச் சோதிக்க பெருமாள் தலையில் நிஜமாகவே திருமுடி இருப்பதைக் கண்டான்.  நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் என்று ஐந்து ஆழ்வார்கள் திருகண்ணபுரம் சௌரிராஜ பெருமாளைப் பாடியிருக்கிறார்கள். சௌரி என்றால் யுகந்தோறும் அவதரிப்பவன் என்று பொருள்.

கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் என்று சீர்காழி கூடப் பாடியிருக்கிறார்
(https://www.youtube.com/watch?v=ICVg0kARly4 )

விக் வைத்த மாதிரி இருக்கும் இந்தக் கால நங்கைகள் “மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!” என்று கல்யாணத்தில் மாலை மாற்றும் முன் தலைக்கு சவுரி மாற்றிக்கொள்கிறார்கள். முன்பு சிலர் சவுரியை வீட்டில் மாட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கரூர் தான்தோன்றிமலை இதற்கு ஃபேமஸ் அடிவாரத்தில் இருக்கும் ஒரு தெருவிற்கு பெயரே சவுரிமுடி தெரு!

உள்ளங்கை, உள்ளங்கால், உதடுகளில் முடி வளரவே வளராது. அப்படி வளர்வதாக இருந்தால், பெண்கள் தேய்க்கும் எண்ணைக்கு தலையில் வளர்கிறதோ இல்லையோ, உள்ளங்கையில் சவுரி முடியே வளர்ந்திருக்கும். சாதாரண முடி தானே என்று நினைத்தாலும் அதன் பயன்கள் பல. பள்ளியில் வாத்தியார் குட்டும் போது அதிகமாக வலிக்காமல் தலை முடி காப்பாற்றுகிறது. புருவங்கள்,  கண் இமைகள் தூசு விழாமல் காக்கும் வைப்பர். மூக்கு வழியாக தூசு நுரையீரலுக்குச் செல்லாமல் மூக்கு முடி காப்பாற்றுகிறது. அக்குளில் இருப்பது வேர்வையைச் சுலபமாக ஆவியாக்க உதவுகிறது. காது முடி நாற்பது வயதுக்கு மேல் தான் வளரும். சாதனை படைத்து கின்னஸுக்கு போய்விட்டது. அதைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன்.

முடி வெட்ட வெட்ட வளர்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், அப்படி இல்லை. அப்படி இருந்தால் தினமும் வெட்டிக்கொண்டு, ஷேவ் செய்துகொண்டு இருக்க வேண்டியிருக்கும். வருடத்துக்கு நான்கு சீசன் இருப்பது மாதிரி முடி வளர்ச்சிக்கும் நான்கு பருவம் - வளரும், உடையும், செயலற்று இருக்கும், பிறகு உதிரும். இதற்கு anagen, catagen, telogen, exogen என்று பெயர். எல்லா முடியும் ஒரே சமயத்தில் வளர்வதில்லை. அப்படி வளர்ந்தால் ?  ”போன வெள்ளிக்கிழமை வழுக்கையா பார்த்தேன்.. பரவாயில்லை அதுக்குள்ள வளர்ந்துவிட்டது.. எனக்குத் தான் லேட். நீங்க என்ன டயட் எடுக்கிறீர்கள்” என்ற விசாரிப்புக்கள் இருக்கலாம். ஆண்களுக்கு வேகமாகவும், பெண்களுக்கு மெதுவாகவும் வளருமாம். ஒரு மனிதன் வாழ்நாளில்  ஐந்து மாதம் ஷேவ் செய்கிறான். பெண்கள் எவ்வளவு வருடம் தலை சீவுகிறார்கள் என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுகள். 100gm வெயிட்டை ஒரு முடி தாங்குமாம். அதனால் தான் நமக்கு இவ்வளவு தலைகனமோ ?

ஒரு வெள்ளை முடியைப் பிடுங்கினால் இரண்டு வளரும் என்பது கட்டுக்கதை. பா.ரா போன்ற முதிர்ந்த(வயதில் இல்லை) எழுத்தாளர்கள் இதற்குப் பதில் சொல்லலாம்.  சரோஜாவின் சவுரி என்று -க.நா.சு சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். அடியேன்  ’சாஸ்திரி பவன்’ என்று ஒரு கதை எழுதியதாக நினைவு முடியைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு ஆனால் அது எல்லாம் இன்னொரு சமயம்.  இத்துடன் இந்த கட்டுரையை ‘முடி’த்துக்கொள்கிறேன்.

Comments

  1. Very interesting article.. smart enough to provide rich information among the jovial words.. will be more interesting to speak about "moustache" for cats, tiger(ess), lion(ess) etc...

    ReplyDelete
  2. Kannapuram inclusion is beautifully narrated.

    ReplyDelete
    Replies
    1. one of the use of the hair is for bakery use in eruope it is a big prosess and in pondy they burn it and eksport the liquid for biskuit industry

      Delete
  3. Mayir suttuk kariyaagumaa? oru nalla pazhamozhi. Mayiraikkatti malaiyai izhu.... matrum onru. Mayir neeppin vaazhaak kavarimaa annaar uyir neeppar maanam varin-kuraL

    ReplyDelete

Post a Comment