Skip to main content

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்








மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும்.

பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம்.

தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும்.

அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட்டோம். பந்தை ஸ்டிராங்காக்க வெய்யிலில் காய வைத்தால் சூட்டுக்கு பிளந்துவிடும், அல்லது அணில் வந்து கடித்துவிடும். உருட்டிய பந்தைக்கொண்டு ஓர் ஓவர் கூட இதுவரை விளையாடியதில்லை.







இந்த மரத்தின் தாவர பெயர் Samanea saman என்று ஹிந்தி பட டைட்டில் மாதிரி இருந்தாலும், இந்த மரத்துக்கு பெயர் 'ரெயின் டிரீ' ( Rain Tree ). மெக்ஸிகோ பிரேசிலிலிருந்து வந்தது என்று சொல்லுகிறார்கள். தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர்.

இந்த மரத்துக்கு கீழே வளரும் புல் செழிப்பாக இருப்பதையும், முழுவதும் பூத்திருக்கும் மரத்த்தில் இந்த பூக்கள் கொட்டும் போது அடுத்த முறை ரசித்து பாருங்கள்.

- * - * - *

விதூஷகன் சின்னுமுதலி என்ற சிறுகதை, கல்கி 1930 விமோசனம் இதழில் எழுதியது. விதூஷகன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஜெஸ்டர்(Jester) என்று பொருள். "Gopal the Jester" என்ற "அமர் சித்ர கதா" காமிக் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம். அரசவையில் வேலைக்கு வைத்திருக்கும் புத்திசாலியான கோமாளி என்று வைத்துக்கொள்ளலாம். தெனாலிராமன் கூட விதூஷகன் தான்.

பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் தெருக் கூத்தில் ராமாயணமோ, மஹாபாரதமோ விதூஷகன் என்று ஒரு கதாப்பாத்திரம் வரும். ஷேக்ஸ்பியர் நாடங்களில் வரும் க்ளவுன் கதாபாத்திரம், பாலச்சந்தர் படத்தில் அதிகப்பிரசங்கி கதாப்பாதிரம் இந்த வகை தான். கல்கி கதையில் வரும் விதூஷகனால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், அவன் வாழ்க்கையில் அவனும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ? என்பதே கதை.







கல்கி கதையில் வரும் சின்னுமுதலி என்ற இந்த விதூஷகன் சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் இருப்பவன், எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனுடைய நடை உடை பாவனை, பட்லர் ஆங்கிலம், வாய்க்கு வந்த படி பாடலுடன், சர்க்கஸ் கோமாளி மாதிரி அவன் செய்யும் செய்கையால் அவன் ரொம்ப பிரபலம். தேங்காய் மூடி கச்சேரி செய்யும் பாகவதர் மாதிரி இவன் செய்யும் வேலைக்கு தேங்காய், வாழைப்பழம், முறுக்கு போன்றவை தான் கிடைக்கிறது. மனைவியும், பிள்ளையும் செய்யும் நெசவுத் தொழிலில் குடும்பம் பிழைக்கிறது. இவனுக்கு குடிப் பழக்கம் வேற இருப்பதால் குடும்பம் கஷ்டப்படுகிறது.

மேடை நாடகங்களில் நாம் பார்க்கும் கோமாளிகளும், சினிமாவில் காமெடி என்ற பெயரில் அடிவாங்குபவர்களும் அவர்கள் வீட்டில் அதை பார்த்தால் அவர்களின் மன நிலை எப்படி இருக்கும் சில சமயம் யோசித்ததுண்டு. முதல் முதலில் விதூஷகனின் மனைவி இவன் செய்யும் கூத்தை பார்க்கிறாள். கல்கி அதை இப்படி விவரிக்கிறார்.

"கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசிங்கமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்."

என்னை கவர்ந்தது இந்த கதையின் முடிவு தான். நான் இந்த கதையை எழுதியிருந்தால், கடைசியில் "அவன் கால் ஒற்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும்" என்ற வரியுடன் கதையை முடித்திருப்பேன். கல்கி இதற்கு அப்பறம் கூட மூன்று வரிகள் எழுதியிருக்கார். இரண்டு விதமான முடிவிலும் சுவாரஸியம் இருக்கு. அதை வாசகர்கள் அனுபவிக்கலாம்.

இந்த கதையின் அமைப்பை பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளில் பார்க்கலாம். நிச்சயம் படிக்க வேண்டிய கதை.

http://www.chennailibrary.com/kalki/mis/vidhushaganchinnumudhali.html

- * - * - * -







தோசைக்கு சிறந்த இடம் பெங்களூரு. சென்னை தோசை மெல்லிசான வாயில் புடவை மாதிரி என்றால், பெங்களூரு தோசை கனமாக பட்டு புடவை மாதிரி. மசால் தோசைக்கு பூர்வீகம் மைசூர். தோசைக்கு நடுவில் உருளைக்கிழங்கை வைத்தால் நமக்கு மசால் தோசை ஆனால் பெங்களூர்/மைசூரில் தோசையில் சிகப்பு சட்னி தடவி பிறகு உருளைக்கிழங்கு வைத்தால் தான் மசால் தோசை. சிகப்பு சட்னிக்கு தான் மசாலா!.

தாவங்கரே பென்னே தோசை பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். பெங்களூரு 'புல் டெம்பிள்' ரோட்டிலும், பனசங்கரியில் ஏதோ ஒரு சந்திலும், ராஜாஜி நகர் நேஷனல் ஸ்கூல் பக்கமும் இந்த கடை இருக்கிறது.

பெண்கள் முகத்துக்கு கிரீம் பூசிக்கொள்ளும் போது பார்த்திருக்கலாம்- நெற்றியில் கொஞ்சம், இரண்டு கன்னத்திலும் கொஞ்சம், மோவாக்கட்டையில் கொஞ்சம் கடைசியாக மூக்கில் கொஞ்சம் தடவிய பின் முகம் முழுக்க பூசிக்கொள்ளுவார்கள். தாவங்கரே தோசையில் கிரீமுக்கு பதில் வெண்ணை மற்றபடி எல்லாம் அதே மாதிரிதான்.



எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் புள்ளையார் கோயில் பக்கம் திடீர் என்று இரண்டு வாரத்துக்கு முன்பு தள்ளுவண்டியில் தோசைக் கடை ஒன்று முளைத்தது. ஹோண்டா சிட்டியும், ஆட்டோக்களும் க்யூவில் நிற்க பின்னாடி நான் போய் செர்ந்துக்கொண்டேன்.
ஒரு கரண்டி மாவில் தோசை. நாற்பது வகைகள் செய்கிறார்கள்.

ஒரு தள்ளுவண்டி, இரண்டு கரி அடுப்பு, அதற்கு மேல் தோசைக் கல். கல் என்றால் நிஜ கல் இரும்பு கிடையாது. பன்னீர் ஊத்தப்பம் ஆர்டர் செய்தேன். ஊத்தப்பத்தை ஏதோ பிட்சா மாதிரி வெட்டி தந்தார்கள். எப்படி தோசைக்கு நடுவில் பன்னீர் ஸ்டஃப் செய்தார்கள் என்று அடுத்த முறை கவனிக்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் இந்த கடையை நடத்துபவர் சதீஷ். மாலை நாலு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் இவர் 60-70 தோசைகளை விற்கிறார். இப்போது எல்லாம் இரவு வாக்கிங் போய்விட்டு வருகிறேன் என்றால் வீட்டில் எனக்கு பர்மிஷன் கொடுப்பதில்லை.

Comments