Skip to main content

வில்வ மரமும், விஷ்ணு பக்தனும்

தமிழ் ஸ்டுடியோ, கூடு இதழில் எழுதுவதற்கு நீங்க பெரிசா ஒன்றும் செய்ய வேண்டாம், சும்மா உங்க வீட்டை சுற்றி ஒரு ரவுண்ட் போய் செடி கொடிகளை படம் எடுத்தால் போதும் என்று சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கமெண்ட் அடித்தார். அதனால் இந்த வாரம் ஒரு மாறுதலுக்கு வீட்டை சுற்றாமல் கும்பகோணத்தை சுற்றி வந்தேன். அங்கே வில்வ மரம் ஒன்றை பார்த்தேன். வில்வ மரம் இருந்த இடம் சக்கரபாணி திருக்கோயிலில்.

பொதுவாக வில்வமரம் சிவன் கோயிலில் தான் இருக்கும். சின்ன வயதில் எங்கள் பாட்டி வீட்டு பக்கம் இருக்கும் சிவன் கோயிலில் பெரிய வில்வ மரத்தை பார்த்திருக்கிறேன். பிறகு சென்னையில் திருமதி ராதா விஸ்வநாதன் ( எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் மகள்) வீட்டில் என் மனைவி பாட்டு கற்றுக்கொள்ளும் போது திரு விஸ்வநாதனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு இருந்த போது அவர் வீட்டில் இருந்த வில்வமரத்திலிருந்து ஒரு பழுத்த வில்வப் பழம் கீழே விழுந்தது. உடனே அவர் அதை எடுத்து என்னிடம் கொடுத்து ஜூஸ் செய்து சாப்பிடு நன்றாக இருக்கும் என்றார். சரி என்று அதை வாங்கிக்கொண்டேன். எப்படி ஜூஸ் செய்வது, நல்லா இருக்குமா ? எவ்வளவு சக்கரை போடணும், கொட்டை இருக்குமா ? என்று பல கேள்விகளை கேட்டேன். பல கேள்விகளை கேட்டதாலோ என்னவோ நான் ஜூஸ் செய்து சாப்பிட மாட்டேன் என்று முடிவு செய்து, அந்த பழத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.



இந்த பழம் பேதி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் என்று பல வியாதிகளுக்கு மருந்தாக இருக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். விட்டமின் B2 என்னும் ரிபோஃபிளாவின், விஷ முறிவு மருந்து, இதை தவிர மிட்டாய், ஜூஸ் கூட தயாரிக்கலாம் என்று புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள். சக்கரபாணி கோயிலில் இருக்கும் பெருமாளுக்கு வில்வ அர்ச்சனை செய்வார்கள் என்று சொன்னார் கோயில் அர்ச்சகர்.

சில வாரங்களுக்கு திரு விஸ்வநாதன் அவர்கள் இறந்துவிட்டார் என்ற கேள்விப்பட்ட போது அந்த வில்வ பழம் நினைவுக்கு வந்தது.










படம்: சுஜாதா தேசிகன்

செடி கொடிகளில் இருக்கும் இலைகளின் அமைப்பை என்னை எப்போது வியக்க வைக்கும். சின்ன வயதில் பயாலஜி வகுப்பில் படித்த ஞாபகம் இருந்தாலும், அந்த வயசில் வியக்க முடியவில்லை. இலை அமைப்பில் "digitate" என்ற ஒரு வகை இருக்கிறது. நம் கை விரல் அமைப்பை போன்றது. அடுத்த முறை இலவம் பஞ்சு மரத்தை பார்க்கும் போது கவனித்துப்பாருங்கள். வீடு பக்கத்தில் இருக்கும் இந்த கைவிரல் மாதிரி அமைப்பு உள்ள மரங்களை தேடி போன போது எல்லாம் ஒற்றைப்படை எண்கள் (ஐந்து, ஏழு, ஒன்பது). ஏன் இரட்டை படை எண்களில் இன்னும் நான் பார்க்கவில்லை.

- 0 - 0 - 0 - 0 - 0 - 0 -

இலைகளின் அமைப்பை சின்ன வயதில் வியக்காமல் இப்போது வியக்க முடிகிற மாதிரி சின்ன வயதில் படித்த சில சிறுகதைகளை தற்போது படிக்கும் போது வியக்க முடிகிறது. எட்டாவது படிக்கும் போது நான்டீடெய்லில் குஷ்வந்த் சிங் எழுதிய "மார்க் ஆஃப் விஷ்ணு" என்ற சிறுகதையை தேடி போன வாரம் படித்தேன்.

குங்கா ராம் ஏழை பிராமணன். தினமும் இவன் வேலை பார்க்கும் வீட்டில் இருக்கும் பொந்துக்கு பக்கத்தில் பால் வைத்துவிட்டு தான் தூங்க போவான். அங்கே இருக்கும் நாகத்துக்கு.

எல்லா பிராமணர்களை போல இவனுக்கும் பக்தி அதிகம். விஷ்ணு பக்தன். தினமும் சந்தனத்தால் V வடிவத்தில் நாமம் எட்டுக்கொள்வான்.
வீட்டில் இருக்கும் குழந்தைகள் அவனை கேலி செய்வதை அவ்வளவாக பொருட்படுத்த மாட்டான். "பாம்பு பால் குடிக்காது, ஏதாவது பூனை பாலை குடித்திருக்கும்" என்று குழந்தைகள் கேலி பேசினால் காதை மூடிக்கொள்ளுவான்.

"நாகம் வெளியே வந்தால் அடித்து சாகடித்து, ஸ்கூலில் இருக்கும் ஸ்பிரிட் பாட்டில் போட்டுவிடுவோம்" என்று குழந்தைகள் சொன்னால் "நாகம் நூறு முட்டை போடும் அதிலிரிந்து பல நாகம் வரும். அவைகளை அழிக்க முடியாது" என்பான். எவ்வளவு கேலி பேசினாலும் குங்கா ராம் பாம்புக்கு பால் வைப்பதை விடாமல் செய்து வந்தான்.

மழை காலம் வந்த போது எல்லா இடத்திலும் தண்ணீர் வந்து, அந்த பொந்துக்குள் தண்ணீர் போக, பாம்பு பொந்தை விட்டு வெளியே வந்தது. ஆறு அடி நீளம், பளபளபாக புல் தரையில் இருக்க. சிறுவர்கள் பெரிய மூங்கில் குச்சியால் அதை அடித்து தும்சம் செய்துவிடுகிறார்கள். பாம்பின் தலை பகுதி மட்டும் சேதம் ஆகாமல் இருக்க, சிறுவர்கள் அதை பெரிய பிஸ்கெட் டின்னில் உள்ளே போட்டு மூடிவிடுகிறார்கள். இது நடந்த சமயம் குங்கா ராம் வீட்டில் இல்லை. வழக்கம் போல குங்கா ராம் ராத்திரி பொந்திக்கு பக்கத்தில் பால் வைக்க சிறுவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிக்க குங்கா ராமுக்கு ஒன்றும் புரியவில்லை.

காலை சிறுவர்கள் ஸ்கூல் பஸ்ஸில் போகும் போது பிஸ்கெட் டின்னை அவனிடம் காண்பித்து "உள்ளே நாகம் இருக்கு" என்று சிறுவர்கள் கூற குங்கா ராம் வாய் அடைத்து போய் நின்றான்.

ஸ்கூலில் சிறுவர்கள் டீச்சரிடம் அந்த நாகம் இருக்கும் டின்னை கொடுக்க டிச்சர் அந்த டின் மூடியை திறக்க நாகம் எல்லாம் கோபத்தையும் திரட்டி மேலே சீறுகிறது. டீச்சர் அதிர்ச்சியில் கீழே விழ பள்ளிக்கூட மாணவர்கள் பெஞ்ச் மேலே பயத்துடன் ஏறி நிற்கிறார்கள். நாகம் பெரிதாக சீறுகிறது. அப்போது வகுப்பறையின் வாசலில் குங்கா ராம் ஒரு கிண்ணி பாலுடன் வந்து நிற்கிறார். நாகம் கதவு பக்கம் போகிறது. அப்போது குங்கா ராம் பாலை அதற்கு வைத்துவிட்டு கை கூப்பி தலையை குனிந்து கும்பிட நாகம் குங்கா ராமின் தலையில் பல இடத்தில் கொத்த குங்கா ராம் நுறை தள்ளி உடம்பு நீலமாக அந்த இடத்திலேயே இறந்துவிடுகிறார்.

குங்கா ராம் நெற்றியில் சின்ன ரத்த துளிகளை டீச்சர் கைகுட்டையால் துடைத்த போது தெரிந்தது V வடிவத்தில் நாமம்.

- 0 - 0 - 0 - 0 - 0 - 0 -

ஸ்கூல் படிக்கும் காலத்தில் NP என்ற பெயருடன் பிங்க் கலரில் பபுள் கம் கிடைக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டு கடிக்க வேண்டும். யாராவது துப்பிய பபுள் கம்மை மிதித்துவிட்டால் எடுப்பது பெரிய போராட்டமாக இருக்கும். பபுள் கம்மை முழிங்கிவிட்டால் என்ன ஆகும் ? அது வயிற்றுகுள் ஒட்டிக்கொண்டு விடுமோ என்ற பயம் இன்னும் இருக்கு. பபுள் கம்மை பற்றி இப்படி பல கேள்விகள் இருக்கிறது. பபுள் கம்மில் இயற்கை ரப்பர் (polyisobutylene) இருக்கிறது. இதை தான் டியுப் லெஸ் டையர் உள்பாகத்த்தில் உபயோகப்படுதுகிறார்கள். ஐயாயிரம் வருஷத்துக்கு முன்பு பல் அச்சுடன் துப்பிய பபுள் கம்மை கண்டுபிடித்திருக்கிறார்கள். பபுள் கம்மை முழுங்கினால் நம் வயிற்றில் ஏழு வருஷம் ஜீரணம் ஆகாமல் இருக்கும் என்ற கதையும் இருக்கிறது. ஏழு வருடம் என்ன அதுக்கு மேல் கூட பபுள் கம் ஜீரணம் ஆகாது என்பது உண்மை ஆனால் அது வயிற்றுக்குளேயே இருக்காது வெளியே வந்துவிடும். கடவுளுக்கு நன்றி.



( நன்றி: கூடு )

Comments

  1. [...] This post was mentioned on Twitter by awpoet, Desikan. Desikan said: வில்வ மரமும், விஷ்ணு பக்தனும் - http://desikan.com/blog/?p=1207 [...]

    ReplyDelete

Post a Comment