Skip to main content

கீச்கீச்


எச்சரிக்கை:
இதை படிக்க உங்களுக்கு நிறையப் பொறுமை வேண்டும். நடுநடுவே ஏகப்பட்ட தொந்தரவு நேரலாம். எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு "கீச்கீச்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அட நிஜமாதான் சார்! நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வாருங்கள். முதல் மாடி, நம்பர் 2C மகாலக்ஷ்மி தெரு, தி.நகர். போன மாசம் தான் கல்யாணம் ஆனது. புது வீட்டுக்குப் போய் இரண்டு வாரம் தான் ஆகிறது. வீட்டிற்கு வாருங்கள், அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும். இன்னும் நம்பவில்லையா? என் கஷ்டத்தை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பேன்? சரி, இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்குக் கேட்கும் அந்தக் "கீச்கீச்" சத்தத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். அப்போதான் என் கஷ்டம் உங்களுக்குப் புரியும்.

"கீச்கீச்"

என்ன சத்தம் கேட்டதா ? சத்தம் அலர்ஜி என்றால் தொடர்ந்து படிப்பது உங்களுக்கு நல்லதில்லை. பிறகு உங்கள் இஷ்டம்.

"கீச்கீச்"

முதலில் அந்த "கீச்கீச்" சத்தம் ஜன்னலிருந்து வருகிறது என்று நினைத்து எல்லா ஜன்னலுக்கும் எண்ணெய் போட்டேன்.

"கீச்கீச்".

அட! சத்தம் திரும்பவும் கேட்கிறது. உங்களுக்கும் கேட்கிறதா?

போன வாரம் என் அப்பா ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்தபோதுதான் அது என்னவென்று கண்டுபிடித்தார்.

"கீச்கீச்".

"என்னடா எதோ சத்தம் கேக்கறதே?"

"அது என்னன்னே தெரியலை, வீட்டுக்கு வந்ததிலிருந்து இருக்கு. எலின்னு நினைக்கிறேன்"

"கீச்கீச்".

"எலியா"

"ஆமாம்".

"கீச்கீச்"

"கீச்கீச்"

"பீரோ பின்னாடியிலிருந்து வருதுன்னு நினைக்கிறேன், ஒரு சின்ன கம்பு இருந்தா குடு"

என் அப்பா எலி பிடிப்பதில் எக்ஸ்பர்ட் கிடையாது. தானுண்டு தன் பிரபந்தம் உண்டு என்று இருப்பார். அப்பா கம்பு கேட்டது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

"கீச்கீச்"

"அப்பா, நான் பார்த்துக்கிறேன், உனக்கு ஏன் இந்த வீண் வேலை"

"இருடா, பீரோவை கொஞ்சம் நகர்த்து"

"கீச்கீச்"

நகர்த்தினேன். அப்போது சாம்பல் "கீச்கீச்" நிறத்தில் "கீச்கீச்" வழவழ என்று சின்னதாக எதோ ஒன்று ஓடியது. (அவ்வளவாக எழுதி எனக்குப் பழக்கமில்லை. அதனால் இதை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. வாசகர்கள் என்னை மன்னிக்கவேண்டும்)

"இது எலி இல்லடா மூஞ்சூர்!" என்றார் அப்பா

"என்னப்பா பெரிய வித்தியாசம் ?"

"கீச்கீச்"

"ரசகுல்லா வேற குலோப் ஜாமூன் வேற அது போல் மூஞ்சூறு வேற, எலி வேற"

"இப்ப என்ன பண்றது"

"அது ஒண்ணும் பண்ணாது அதுவே தம்பாட்டுக்கு போய்டும்"

மறு நாள் காலை முகூர்த்தம், அப்பா சீக்கிறம் எழுந்து, குளித்து, ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார். அப்பாவை அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்தும் போது தான் அப்பாவின் சட்டையில் இருந்த ஓட்டை கண்ணில் பட்டது!.

"அப்பா சட்டையை மாத்திண்டு போ"

"எதுக்குடா, எனக்கா கல்யாணம், இது போறும்"

"இல்லப்பா, சட்டை பின்னாடி ஓட்டையா இருக்கு"

"கீச்கீச்"

"போன கல்யாணத்துக்கும் இதைதானே போட்டுண்டு போனேன் ?"

"மூஞ்சூர் பண்ண வேலை, நேத்திக்கு அது ஒண்ணும் பண்ணாதுனு சொன்னே?"

"சொன்னேன்... உன் சட்டை ஒண்ணு குடு. முகூர்த்ததிற்கு டைம்மாச்சு"

"கீச்கீச்"

அடுத்த வாரம் "பேபி மாமா" வருவதாக போன் செய்தார். எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. "பேபி மாமா" என்ற பெயர், எப்படி, யார் வைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது.என் பாட்டிக்குத் தூரத்துச் சொந்தம். நாங்கள் எல்லோரும் அவரை "பேபி மாமா" என்றுதான் கூப்பிடுவோம். கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை. கல்யாணம் ஆகியிருந்தால் அவர் மனைவி கூட அவரை "பேபி மாமா" என்று கூப்பிட்டிருப்பாள். 55 வயது, பார்க்க 45 தான் சொல்லலாம். கொஞ்சம் ஆச்சாரமானவர். மஞ்சள் திருமண்தான் இட்டுக்கொள்வார். ஸஹஸ்ரநாமம் சொல்லிவிட்டுதான் சாப்பிடுவார். சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவார் - கொஞ்சம் பன்னீர்ப் புகையிலையுடன்! வீட்டுக்கு வந்தவுடன் எதாவது ரிப்பேர் ஆகியிருந்தால் அதை முதலில் சரிசெய்ய ஆரம்பித்துவிடுவார். எதுவாக இருந்தாலும் - பைப் லீக், டியூப் லைட், சைக்கிள் பங்சர், மோட்டர்.... ரெயில்வே ஓர்க்ஷாப்பில் சூப்பர்வைசராக இருக்கிறார். "மாமா இது கொஞ்சம் காம்பிளீக்கேட்டட் சர்க்கியூட், சர்வீஸ் செண்ட்ரில் தான் கொடுக்கணும்" என்றால் "ரெயில்வே ஒர்க்ஷாப்பில் பார்க்காததா" என்று உடனே கழட்டி ரிப்பேர் பார்க்க
ஆரம்பித்துவிடுவார். அவர் பையில் எப்போதும் ஒரு ஸ்க்ருடிரைவர், கட்டிங்பிளேயர், டெஸ்டர், கொஞ்சம் வயர், கீரிஸ் என்று ஒரு மினி டூல் பாக்ஸே வைத்திருப்பார்.

பேபிமாமா வருகிறார் என்று சொன்னவுடன் அவரிடம் இந்த மூஞ்சூருக்கு எதாவது வழி பண்ண வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். செவ்வாய்க்கிழமை சாயங்காலம் "பேபிமாமா" வந்தார். வந்தவுடன் ஃபியூஸ் போயிருந்த பாத்ரூம் பல்பை மாற்றினார்.

"கீச்கீச்".

"என்னடா ஏதோ சத்தம், ஏதாவது ரிப்பேரா ?"

"மாமா அது மூஞ்சூர், நீங்க போறத்துக்குள்ள இதுக்கு ஒரு வழி பண்ணனும்"

"பண்ணிட்டா போறது"

காப்பி சாப்பிட்டவுடன் எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது என்று வேளியே போனார். அரை மணி நேரத்தில் ஒரு எலிக்கூண்டுடன் வந்தார். எலிக்கூண்டுக்கு முக்கியமாகத் தேவைப்படும் மசால் வடையை வாங்க மறந்திருந்தார். நான் மசால் வடை வாங்கப் போனேன். எங்கள் வீட்டுத் தெரு முனையில் ஒரு டீக்கடை இருக்கிறது. அங்கு இதற்குமுன் நான் போனதில்லை. நான் போன சமயம் டீக்கடைக்காரர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

"என்ன ஐயரே எங்க இந்தப் பக்கம்"

"மசால் வடை வேணும்"

"இங்கே சாப்பிடவா இல்ல வூட்டுக்கு எடுத்துகுனு போறியா ?"

"வீட்டுக்கு எடுத்துண்டு போறேன்"

"சுடசுட இப்பதான் போட்டது, ஒரு ஆறு கட்டட்டுமா"

"இல்லை எனக்கு ஒண்ணு போதும்"

"என்ன ஒண்ணா? எலிப்பொறிக்கு வாங்கவந்தியா அத்தானே பார்த்தேன்..."

கடையில் சாப்பிடுபவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். நான் மசால் வடை பாக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்பிபார்க்காமல் வந்துவிட்டேன். வீட்டில் பேபி மாமா மசால் வடைக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

"மாமா மசால்வடைக்கு மூஞ்சூர் மாட்டுமா?"

"மாட்டாம...? ரயில்வே ஒர்க்ஷாப்பில பிடிக்காத எலியா?"

மசால் வடையைக் கூண்டில் உள்ள கொக்கியில் மாற்றி, லீவரை அட்ஜஸ் செய்து வைத்தார். சின்ன குச்சியால் ஆட்டிவிட்டு ஒருமுறை டெஸ்ட் செய்தார். "பட்" என்ற சத்ததுடன் எலிக்கூண்டு முடிக்கொண்டது.

"பார்த்தியா எலி நிச்சயம் இன்னிக்கு ராத்திரி மாட்டிக்கும்"

"மாமா அது மூஞ்சூர்"

"எதோ ஒண்ணு, நாளைக்கு கார்த்தால தெருக்கோடியில் போய் விட்டுவிட வேண்டியதுதான்"

"கூண்டை எங்கே மாமா வைக்கணும்"

"கீச்கீச்".

"பீரோவுக்கு அடியில வை" "கீச்கீச்".

அன்று ராத்திரி சுமார் இரண்டரை மணிக்கு "பட்" என்று சத்தம் கேட்டு நானும் பேபி மாமாவும்
விழித்துக்கொண்டடீம்.

"கீச்கீச்". "கீச்கீச்". "கீச்கீச்".

"பார்த்தையா எவ்வளவு ஈஸி, ஒரு மசால் வடை அவ்வளவுதான்"

இவ்வளவு நாள் எங்களுக்குத் தொல்லை கொடுத்த அந்தச் சின்ன வில்லனைப் பார்க்க ஆர்வமாக இருத்தது. கூண்டை வேளியே எடுத்து அதில் உள்ள ஜன்னல் கம்பி இடுக்கில் பார்த்தேன். உள்ளே பாதி மாசால் வடை. மூஞ்சூரைக் காணோம்!

"மாமா உள்ள மூஞ்சூர் இல்லையே"

"என்ன?, சரியா பார்டா"

மாமாவும் பார்த்தார் உள்ளே மூஞ்சூர் இல்லை.

"சும்மா ஸ்பிரிங் டென்ஷன்ல முடியிருக்கு"

"இல்ல மாமா மூஞ்சூர் வந்திருக்கு, பாதி மசால் வடையை காணோமே"

"கீச்கீச்".

சத்தம் வந்த திசையைப் பார்த்தோம். அங்கே செருப்பு வைக்கும் இடத்தில் சின்னதாக மூஞ்சூர் எட்டிப்பார்த்துக் கண்சிமிட்டியது!

மாமா உடனே தன் பையை திறந்து, கொஞ்சம் கம்பியை எடுத்தார். கூண்டில் உள்ள ஜன்னல் கம்பிக்குக் குறுக்காக கட்டினார்.

"கீச்கீச்"

"மூஞ்சூர் இனிமே தப்பிக்க முடியாது, மீதி மசால் வடையை சாப்பிட வரும்" என்று சொல்லித் திரும்பவும் கூண்டின் லீவரை செட் பண்ணி பீரோ அடியில் வைத்தார்.

"கீச்கீச்"

காலையில் எழுந்து பார்த்தபோது கூண்டு திறந்திருந்தது. மசால் வடை பாதி அப்படியே இருந்தது.

பேபி மாமா தங்கியிருந்த அந்த முன்று நாளும் மூஞ்சூர் விரதம் இருந்தது. மசால் வடையைச் சாப்பிட வரவில்லை. அந்த மசால் வடை ஊசிப்போய், திரும்பவும் தெருவோர டீக்கடையில் மசால் வடை வாங்கி வந்து வைத்தேன். கூண்டை கிச்சன், ஸ்டடிரூம் என்று மாற்றிப்பார்த்தோம். மூஞ்சூர் கொஞ்சம் புத்திசாலி என்பது எங்களுக்கு லேட்டாகதான் புரிந்தது.

"பேபி மாமா" கொஞ்சம் ஏமாற்றத்துடன் தான் ஊருக்கு போனார்.

"கீச்கீச்"

நாளுக்கு நாள் மூஞ்சூர் தொந்திரவு ஜாஸ்தியாகிவிட்டது. டீவி ஸ்டாண்ட் பின்புறம் டாய்லட் அமைத்துக்கொண்டது, கிச்சனில் படுத்துக்கொண்டது. தலையணை, பருப்பு டப்பா, மியுஸிக் சிஸ்டத்தின் ஸ்பீக்கர், சோஃபா என்று எதைப் பார்த்தாலும் அதன் நினைவு வரும்படி செய்தது. வீட்டுக்கு வருகிறவர்களுக்கு "கீச்கீச்" சத்தம் செய்து "என்ன சார் ஏதோ சத்தம்" என்று கேட்க வைத்தது, தன் புராணத்தை என் மூலமாகச் சொல்ல வைத்தது.

"கீச்கீச்"

வீட்டுக்கு வந்துவிட்டுப் போனவர்கள் போன் செய்து "என்ன மூஞ்சூரை புடிச்சுடிங்களா ?" என்று விசாரித்தார்கள். வருகிறவர்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்த டெக்னிக்கை சொல்லிவிட்டுப் போனார்கள். ஹரிணி வித்தியாசமாக ஒன்றைச் சொன்னாள். ஹரிணி என் மனைவியின் ஃபிரண்ட்.

"எங்காத்துல ஜூஜி இருக்கு அதை வேண்டுமானால் இங்கு கொண்டுவந்து விடுகிறேன்"

"ஜூஜியா"

"மாம் ஜூஜி எங்காத்து பூனை"

"எனக்கு பூனை வளர்த்து பழக்கமில்லை.. அப்பறம் அதை துரத்த நாய் வளர்க்கனும்"

"இல்லை, இல்லை, ஜூஜியை இங்கு கொண்டுவரேன், அது எலியை ஈஸியா புடிச்சுடும். புடிச்சப்பறம் அழைச்சுண்டு போய்டறேன்"

"சரி, ஞாயிற்றுக்கிழமை வாங்கோ. எனக்கு அன்னிக்குதான் லீவு"

"கீச்கீச்"

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் மூன்று நாள் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை "அரட்டை அரங்கம்" முடிந்த பிறகு ஹரிணி ஜூஜியை ஒரு சின்ன கூடையில் எடுத்து வந்திருந்தாள். தரையில் விட்ட ஜூஜி ஒரு சின்ன கையடக்கப் பதிப்பாக இருத்தது. நான் அதுக்கு ஒரு "பார்லே G" பிஸ்கட் பாக்கெட் வாங்கிவைத்திருந்தேன். வெளியே வந்த ஜூஜி ஓரமாகப் போய் உட்கார்ந்து பிஸ்கட்டைச் சாப்பிட ஆரம்பித்தது.

"கீச்கீச்"

அந்தச் சத்ததை அது கண்டுகொள்ளவேயில்லை.

"எலி எங்கே" என்றாள்.

"ஜூஜி தான் கண்டுபிடிக்கணும்"

"எதைவாவது பண்ணி எலியை விரட்டிவிடுங்கள், ஜூஜி புடுச்சிடும்"

நான் பீரோ, டேபிள் எல்லாவற்றையும் நகர்த்திவிட்டேன். ஆனால் மூஞ்சூர் வெளியே வரவில்லை. ஹாலில் "கீச்கீச்" சத்தம் நின்றுவிட்டது. "கீச்கீச்" கிச்சனில் கேட்டதால் அங்கும் போய் எல்லாவற்றையும் நகர்த்தினேன். "கீச்கீச்" இப்போ மறுபடியும் ஹாலில் கேட்டது. ஹாலில் டிவிக்குப் பின்னே தட்டினேன். மூஞ்சூர் ஓடியது. இவ்வளவு நேரம் சும்மா இருத்த ஜூஜி முழித்துக்கொண்டு ஒரு தாவு தாவி மூஞ்சூரைப் பிடித்தது. பிடித்தவுடன் "பிழைத்து போ" என்று விட்டுவிட்டு மீதியுள்ள பிஸ்கேட்டைச் சாப்பிடப் போய்விட்டது.

ஹரிணி "வாட் ஹாப்பண்டு ஜூஜி" என்று ஆங்கிலம் தெரிந்த ஜூஜியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். ஜூஜி கடைசி பிஸ்கேட்டைச் சாப்பிட்டு முடித்தது.

ராத்திரி எதிர் வீட்டு மாமா வீட்டுக்கு வந்திருந்தார்.

"என்ன சார்! மத்தியானம் பூனை வந்தது போல"

"ஆமாம் மாமா, மூஞ்சூர் தொல்லை தாங்கமுடியலை அதான்...என்னென்னு தெரியல, வந்த பூனை மூஞ்சூரை புடிச்சுது. அப்பறம் விட்டுடுத்து"

"தெரியாதா பூனை மூஞ்சூரை சாப்பிடாது, அது பிள்ளையார் வாகனமாச்சே"

"அப்படியா?"

"கீச்கீச்"

"உங்களுக்குமுன் குடுத்தனம் இருந்தவா ரொம்ப கஷ்டப்பட்டா. அவா அதுனாலதான் காலிப்பண்ணிட்டா. உங்களுக்கு தெரியாதா? தெரியுமுனுனா நினைச்சேன்"

வீட்டுக்காரர் ஏன் அட்வான்ஸ் வாங்கவில்லை என்று எனக்கு இப்போழுதுதான் புரிந்தது.

கல்யாணம் ஆன புதுசு, வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர ரம்பித்தது.ஃபிரிஜ், கிரைண்டர், ஃபர்னிச்சர் .... என்ற வரிசையில் இன்று ஒரு வாஷிங் மிஷின் வந்தது, கூடவே இன்ஸ்டால் பண்ணுவதற்கு ஒருவர் வந்திருந்தார்.

"சார் எங்கே வைக்கனும்"

"கீச்கீச்"

"இதோ இந்த பாத் ரூம் பக்கத்தில்"

"கீச்கீச்"

"என்ன சார் எதோ சத்தம்"

"மூஞ்சூருங்க"

"அப்படியா? வாஷ் செய்ய எதாவது துணியிருக்கா மெடம், ஒரு டெஸ்ட் ரன் பண்ணிடலாம்"

"கீச்கீச்"

என் மனைவி துவைக்க வேண்டிய துணியை எடுத்து வந்து, உள்ளே போட்டாள். மிஷின் முடியது. ஆட்டோ மெடிக் என்பதால் முதலில் சோப்புடன் துணியை சுத்தியது. பிழிந்தது. திரும்பவும் சுத்தியது. பிழிந்தது. இருபது நிமிடத்திற்குப் பின் பச்சை நிறத்தில் ஒரு சின்ன லைட் எறிந்தது.

"மேடம் பார்த்துகோங்க பச்சை வந்த்துதுனா முடிஞ்சிருத்துன்னு அர்த்தம். இனிமே துணியை எடுத்து காயவைக்க வேண்டியதுதான். வேற எதாவது டவுட் இருந்தால் கேளுங்க"

என் மனைவி மிஷினிலிருந்து, துணியை எடுத்தாள். அப்போது கருப்பாக, உருண்டையாக எதோ ஒன்று "செதசெத" என்று கீழே விழுத்தது.

"மேடம் துணி போடும் போது பார்த்து போடுங்க. பாக்கேட்டில் எதாவாது இருந்ததா?"

"இல்லையே"

அதன் பின் எங்கள் வீட்டில் அந்த "கீச்கீச்" சத்தம் கேட்கவேயில்லை.


Old Comments from my previous blog.

நன்றாக உள்ளது கதை. ஆனால் மூஞ்சூரின் முடிவு பரிதாபமாக இருந்தது.

வெங்கடேஷ் லகுடுவா

By Venkatesh Laguduva, at Thu Aug 26, 08:49:32 PM IST  

Imported Haloscan comments to Blogger comments
Thread: 109281094354841702

Post by pradeep
super! keech keech.. fantastic keech keech.. excellent keech keech.. awesome keech keech..
Wed, Aug 18 2004 12:58

Post by Meenaks
கதை சூப்பர். வாத்தியார் நடை மாதிரியே இருக்கிறது கூடுதல் சிறப்பு.
Wed, Aug 18 2004 1:57

Post by Raviaa
கீச்கீச்"கீச்கீச்" அருமை என்று சொல்ல வந்தேன்..:)
Wed, Aug 18 2004 6:00

Post by Ibrahimshah
Keeeech keeech Finally you made 'Mujuru soup'........
Wed, Aug 18 2004 6:57

Post by s balaji
Content wise and story telling wise, this is an excellent short story. It is really a great feat to keep the reading interest alive thru' out in a story with மூஞ்சூர்as the hero!! You could have avoided the minor spelling mistakes in the writing, though! Pl. get the comments from your master (Mr. Sujatha) on this story!
Wed, Aug 18 2004 7:57

Post by srishiv
hahaha super story desi..nalla irunthathu, enga pudicheenga karu? its good ma...like bala, another disiple to sujatha who took the points from him, as he used to tell, sujatha used to teach 1000s of people, athula yaro oru balakumarano illa oru desikano than varanga illaya??? The flow was so nice desi...innum enna enna thiramai vachirukeenga desi? oru pakkam software engineer, oru pakkam artist, oru pakkam story writer, i think u r a singer also? enna enna thiramai? appppaaaa...paravayilla, innum oru astavathaniyai parka vaichathukku nandrigal ma.... anbudan.... srishiv...
Thu, Aug 19 2004 1:57

Post by Thirumalai
Excellent builtip of the situation. But the end was sad. Hmmm. Anbudan S.Thirumalai
Sun, Aug 22 2004 8:57

Post by V Kumar
We had a similar situation at our home. The munjoor ended up dead under the washing machine. We had to upturn(!) the machine to remove it and clean the machine with phenyl/dettol etc. Good flow in writing. Another disciple piece. -Kumar
Mon, Aug 23 2004 1:58

Post by chenthil
Hi Desikan, Really a good short story. The last twist gave a real jerk, Almost felt the pain of the "moonjuru". Wonder if I am the only one who found this a melancholic story.
Tue, Aug 24 2004 9:57

Post by sriram
Hi desikan, Your drawings are amazing.Your articles have great historical details of Srirangam.Keep up the good work.I used to read your web page also.Great work.Get to see rare works of Sujatha's. I have read a story that is exactly similar to your 'moonjuru' story.
Thu, Aug 26 2004 8:58

Post by gnanamani
HI desikan, Good one indeed... I met you in UYIRMMAI function.I came with lazygeek(Guru). You are writing with a good flow.. keep it up Mani
Thu, Aug 26 2004 4:59

Post by Eelanathan
அருமையான கதை தேசிகன்.
Sun, Aug 29 2004 7:57

Post by praveen
desikan, kathai sooper-o sooper. romba nala irunthuthu. enga veetula nadakara maathiri irunthuthu. story starting to end moonjuru pidicha nala irrukum nu feeling... end twist la moonjuru hero aaidichu. very good story
Sun, Sep 5 2004 6:58

Post by xxx
story has 40 per cent words more than actually required...middle part sags a lot...there is nothing to sustain in the middle.. every good story should have a good beginning, good middle and a great ending.. Most tamil writers concentrate only on the beginning and end..pls don'tt fall into the same trap...
Tue, Sep 7 2004 9:01

Post by sasikala
dear desikan, keech story was very nice. i read it to my children. and once again to my motherinlaw. all of us likedit. write more. our best wishes to u. sasikala.
Tue, Sep 7 2004 10:00

Post by Martin
Hi Desikan, Very good story. Racy and humorous style sustains the interest till the end. Congrats! Waiting for more...
Thu, Sep 9 2004 10:58

Post by ஷ்ரேயா
adapaavamee!!( keech keech..not you!!) good one. u really should write more often!
Tue, Sep 21 2004 9:26

Comments