Skip to main content

நல்லான் - நாலூரான்

நல்லான் - நாலூரான்
இந்த இரண்டு பெயர்களை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?
ஒருவர் நல்லான் இன்னொருவர் பொல்லான்.
அப்படி உங்களுக்குத் தோன்றினால் இந்தக் கட்டுரையை மேலும் படிக்க வேண்டும்.
நல்லான் :
நல்லான் சக்கரவர்த்தி ஒரு முறை ஆற்றில் மிதந்து வந்த பாகவதர் ஒருவருடைய பிணத்தை எடுத்து இறுதிச் சடங்குகளைச் செய்வித்தார். அவ்வூர் அந்தணர்கள் அவரது செயல் கண்டு அவரைப் பழித்து, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து அவரை ‘பொல்லான்’ என்று பழித்தனர்.
பெருமாள் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து “நாட்டுக்குப் பொல்லான்; நமக்கு நல்லான்” என்று அவருக்கு சர்டிபிகேட் கொடுத்து அவர் பெருமையை ஊருக்கு உணர்த்தினார்.
பொல்லான்:
கிருமிகண்ட சோழன் அரசவையில் கூரத்தாழ்வான் கண்ணிழப்பதற்கும், பெரியநம்பிகள் கண் மற்றும் உயிரிழப்பதற்கும் நாலூரானே முக்கிய காரணமானவர் என்று குருபரம்பரை மற்றும் கூரேச விஜயம் போன்ற நூல்களில் படித்திருக்கலாம்.
பெரும்பாலும் நாலூரானை ’இவர்’ என்று சொல்லாமல், அவன், இவன் என்று ஏகவசனத்தில் தான் பலரும் எழுதுகிறார்கள் (அதே போல தான் யாதவபிரகாசரையும் எழுதுவார்கள் ).
நாலூரான் பின்விளைவுகளை சற்றும் யோசிக்காமல் சோழராஜ சபையில் ஏதோ ஒரு வார்த்தை சொல்ல போக அதனால் அநர்த்தகள் பல நிகழ்ந்தது. பிறகு இப்படி நடந்துவிட்டதே என்று வருந்தினார்.
பெருமாள் பாகவதாபசாரத்தை ஒரு நாளும் பொறுக்க மாட்டான் என்று தெரிந்ததே. கூரத்தாழ்வான் நாம் அவருடைய பிழையை மன்னித்தாலும் பெருமாள் நாலூரனை தண்டித்து விடுவான் என்று அஞ்சினார்.
ஸ்ரீராமானுஜர் நியமனத்தினால் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் முன் அருளிச்செய்தார் அர்ச்சகர் மூலமாக தேவப்பெருமாள் “என்ன வேண்டும் கேளும்” என்ற போது அதற்கு “நான் பெற்ற லோகம்(மோட்சம்) நம் நாலூரானும் பெறவேண்டும்” என்று வரம் பெற்றார்.
அவர் பெருமாளிடம் “உனக்கு பொல்லான் எனக்கு நல்லான்” என்று சொல்லிவிட்டார் !
பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளியுள்ள வார்த்தாமாலை 269ஆம் வார்த்தையில் இப்படி ஒரு குறிப்பு இருக்கிறது
“ ஆண்டாள் வார்த்தை : ஆசாரியன் விஷயத்தில் அபசாரம் பண்ணின நாலூரானும் ஈடேறினான். பகவத்விஷயத்தில் அபசாரம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான். பாகவத விஷயத்தில் அபசாரம் பண்ணினார் இன்னார் ஈடேறினாரென்று இதற்கு முன்பு கேட்டறிவதில்லை”
நாலூரான் கூரத்தழ்வானின் சிஷ்யர். அவருக்கு தனியன் இப்படி இருக்கிறது :
மகரே சைகபாத்யே ச சதுர்க்ராம நிவாஸிநம்
கூரநாத குரோ: ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம்
பொருள்:
"தையில் பூரட்டாதியில் அவதரித்தவரும் கூரத்தாழ்வானுக்கு சிஷ்யரும் கடல் போன்ற நற்குணங்கள் உடைய நாலூரானை சேவிக்கிறேன்"
கூரத்தாவான் வாழி திருநாமத்தில் ”நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே ” என்கிறோம்.
நாலூரான் கூரத்தழ்வானின் சிஷ்யர். வைகுண்டத்தில் நித்தியவாசம் செய்பவர். அவரை பற்றி அடுத்த முறை படிக்கும் போது உங்கள் மனதில் தப்பாக நினைக்கக் கூடாது.
ஸ்ரீவைஷ்ணவத்தில் எல்லோரும் நல்லபடி இருக்க வேண்டும் என்பதே ஆதாரமான கருத்து. ஆழ்வார் பாசுரங்களிலும், நமது ஆசாரியர்களின் வாழ்க்கை குறிப்பிலும் அவர்கள் யாருக்கும் கெடுதலே நினைத்ததில்லை.
வலிமை மிக்க, முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட “God bless ” என்று அவர்கள் நாட்டை மட்டுமே சொல்லுவார்கள்.
அந்த தேசங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஐந்து வயது பெண் ஆண்டாள் ”வையத்து வாழ்வீர்காள்” என்று எல்லோரும் வாழ வேண்டும் என்கிறாள். ”தீங்கின்றி நாடு எல்லாம்” பாண்டிய நாடு மட்டும் இல்லை எல்லா நாடுகளிலும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள் அந்தச் சிறுமி !
Humanity is not one’s best quality.. it’s the basic quality. ஸ்ரீராமானுஜ தரிசனம் ஸ்ரீபெரும்புதூரில் இல்லை, இந்த மாதிரி சம்பவங்களில் இருக்கிறது.
பிகு: ஓர் அரசியல் தலைவர் மருத்துவமனையில் இருக்க முகநூலில் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அவரை பற்றி கொச்சையாக எழுதிய போது தோன்றிய கருத்துக்கள்.
- சுஜாதா தேசிகன்
7.8.2018

Comments

Post a Comment