Skip to main content

ராயர் மெஸ்


எம்.ஜி.ஆர், சோ என்று பல பிரபலங்கள் சாப்பிட்ட இடம். சனி ஞாயிறு தான் உகந்த நாள். எக்கச்சக்க கூட்டம் இருக்கும். வெளியே உங்க பேர் கொடுத்துவிட்டுக் காத்திருக்க வேண்டும்.

உள்ளே எட்டிப்பார்த்தால் சமையல் செய்யும் இடம் பக்கம் சரியாக 2.5 டேபிள் ஸ்டூல். மொத்தம் 13 பேர் உட்காரலாம். ஒரு கிரைண்டர் எப்போதும் சட்னி அரைத்துக்கொண்டு இருக்கும்.

மெனு கார்ட் கூட கிடையாது. சீட் கிடைத்தவுடன் ஆனந்ததுடன் வாழை இலை வரும். ஒரு கிண்ணம் நிறையத் ’கெட்டி’ சட்னி வரும் - கெட்டி என்றால் நிஜமாகவே கெட்டி. அந்த கெட்டி சட்னியை கொஞ்சம் டேஸ்ட் செய்துவிட்டு அதை இலையில் கொட்டுவிட்டு, கிண்ணத்தை காலியாக வைக்க வேண்டும். ( ஏன் என்று பின் சொல்லுகிறேன் ) இப்ப கார சட்னி கம்மிங் . கார சட்னி பச்சையாக நாக்கில் பட்டவுடன் ’டேஸ்ட் பட்’ எல்லாம் மலர்ந்துவிடும். மிளகாயைவிடக் காரமாக இருக்கும். மிளகாய்ப் பொடி( வாயில் போட்டால் கடுக்கு முடுக்கு என்று இருக்கும்) கூடவே நல்லெண்ணெய் ( வாசனையாக ). டயட்டில் இருபாவர்களுக்கு நெய்யும் உண்டு. இந்த வர்ணம் பாடி கச்சேரியை துவக்கினால் ( கச்சேரி ரோட்டில் தான் ராயர் மெஸ் இருக்கிறது ), பொங்கல் ஆலாபனை ஆரம்பிக்கும். . சித்திரை மாதம் சாப்பிட்டாலும் மார்கழி மாதம் நினைவுக்கு வருவது மாதிரி டேஸ்ட். பொங்கலில் நான் ராயர் மெஸ் என்று சொல்லலாம்.
அடுத்து சுடச் சுட இட்லி பானையில் இட்லியை துணியிலிருந்து பிரித்து எடுத்து ஒரு பெரிய தட்டு நிறையக் கொண்டு வருவார்கள். இரண்டு இட்லி அங்கே சம்பிரதாயம் இல்லை. மினிமம் நான்கு. இப்போது தண்ணியாக தேங்காய் சட்னியை இட்லியில் குளிப்பாட்டுவார்கள். கூடவே ஒரு குழம்பு வரும் ( சாம்பார் இல்லை ) மாவு கரைத்த குழம்பு. ஓரத்தில் கொஞ்சம் பெருங்காய வாசனையுடன் இருக்கும். (காலி கிண்ணம் நினைவு இருக்கா அதில் கொஞ்சம் ரொப்பிக்கொள்ளுங்கள் ) சட்னியுடன் கலக்கும் போது குறுந்தொகையில் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர், மண்ணின் நிறத்தை ஏற்று, அம்மண் தண்ணீரின் தண்மையை ஏற்று ஒன்றியபின் யாரால் பிரிக்க முடியாதோ அதே போல சட்னியும் குழம்பு கலக்கும் போது ஆவியான இட்லியை விரலால் தொட்டு சூடு போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது உள்ளே முறுகலாக மெதுவடை ஒரு ஜாலியில் வடிகட்டி எடுத்து வருவார்கள். வடை சட்டி ஓரம் எல்லாம் வடை மாவு வழிந்து, கலரிங் செய்த பெண்ணின் தலை மாதிரி இருக்கும். இதுவும் சம்பிரதாயமாக ஒன்று கிடையாது, இலையில் இடம் இருக்கும் இடத்தில் எல்லாம் போடுவார்கள். கச்சேரி இனிதே முடிந்த பின் மெள்ளமாக எழுந்திருக்க வேண்டும் (இவ்வளவு சாப்பிட்டால் வேகமாக எப்படி எழுந்துக்கொள்ள முடியும் ? )

“சார் வெளியே காத்துக்கொண்டு இருக்கிறார்கள்... காபி வெளியே வரும்” என்று துக்கடாவை வெளியே அனுபவிக்க கூப்பிடுவார்கள்.
வெளியே தட்டு நிறையக் காபி வரும். ஒரு டம்பளரில் டிக்காஷன் இருக்கும். காபி கொடுத்துவிட்டு ”கொஞ்சம் டிக்காஷன் ?” என்று உபசரிப்பார்கள். இடம் கிடைக்காத கூட்டம் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும்.

பில்லிங் மிஷின், GST போன்ற எந்த காம்பிளிகேஷனும் இல்லாமல் சொல்லுங்கோண்ணா என்று விஜய் படத்தில் வரும் வசனம் போல அவர் கேட்க, நாம் சாப்பிட்டதை சொல்ல ( இவ்வளவு சாப்பிட்டோமா என்று ஒரு guilty ஃபீல்ங் வரும் ) அவர் உடனே கணக்கு போட்டுவிடுவார் ( பத்தாம் வாய்ப்பாடு, ஐந்தாம் வாய்ப்பாடு தெரிந்தால் போதும். சுலபமாக கணக்கு போட்டுவிடலாம் ! விலை எல்லாம் multiples of 5 or 10 ! )

சுஜாதா தேசிகன்
19.9.2017
மாளய அமாவாசை
(பயப்பட வேண்டாம், ராயர் மெஸில் எப்போதுமே பூண்டு வெங்காயம் கிடையாது ! )

Comments

  1. வாயில் நீர் வரவழைத்து விட்டீர்கள்! இவ்வளவு சொன்னீர்களே, ராயர் மெஸ் எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டாமா ?? (கச்சேரி ரோடு மைலாப்பூர் ??) நக்கீரன்

    ReplyDelete
  2. அட அட அடா...
    நீங்கள் அனுபவித்ததை நாங்கள் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை ..
    ம்...ம்...அதற்க்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ....

    ReplyDelete

Post a Comment