Skip to main content

கூரத்தாழ்வான் என்ற பெரியார்

கூரத்தாழ்வான் என்ற பெரியார்
Image may contain: 1 person
சென்ற வாரக் கடைசியில் கூரம் சென்று கூரத்தாழ்வானின் திருநட்சத்திரத்துக்கு ஆழ்வானைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, சில காரணங்களால் அது முடியாமல் போனது. வார்த்த மாலை படித்துக்கொண்டு இருந்த போது ஒரு விஷயம் கண்ணில் பட்டு மன அமைதியைக் கொடுத்தது.
அது என்ன என்பதைப் பற்றி கட்டுரையின் நடுவில் சொல்லுகிறேன்.
வழக்கமாகக் கோயிலுக்குள் நுழையும் போது அமுதனிடம் துவாரபாலகர்களை காண்பித்து ”இவர்கள் யார் ?” என்று கேட்பேன்.
“ஜெயன் விஜயன்” என்று பதில் சொல்லுவான்.
அதே போல உடையவர் சன்னதிக்குள் நுழையும் போதும் ஒரு கேள்வி கேட்பேன்.
அவனும் “கூரத்தாழ்வான், முதலியாண்டான்” என்பான்.
எப்படி கண்டுபிப்பது என்று கேட்டால் “தாடி வைத்தவர் கூரத்தாழ்வான்” அடுத்தவர் முதலியாண்டான்”.
சென்ற முறை சென்ற போது பதிலை சொல்லிவிட்டு “கூரத்தாழ்வான் மட்டும் ஏன் தாடி வைத்துக்கொண்டு இருக்கிறார் ஏன் ?” என்று என்னிடம் கேள்வி கேட்க அதற்குப் பதில் தெரியாமல் முழித்தேன்.
ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புத்தூர் என்ற பல திவ்ய தேசத்தில் உடையவர் சன்னதிகளிலும் இரண்டு பக்கமும் சித்திர ரூபத்தில் ஆழ்வானையும், ஆண்டானையும் காணலாம் இவர்கள் இருவரும் இராமானுசனுக்கு வலது, இடது கரம் போன்றவர்கள்.
திருகோஷ்டியூர் நம்பியை ராமானுஜர் பதினெட்டு முறை சென்றார் என்பது பிரசித்தம். 18ஆம் முறை சந்திக்கும் போது ”தண்டமும் பவித்திரமுமாகத் நீர் ஒருவர் மட்டும் வாரும்” என்று சொல்ல அடுத்த முறை உடையவர் கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு திருக்கோஷ்டியூர் சென்று நம்பியைத் தண்டனிட்டார்.
நம்பி “ஒருவர் மட்டும் என்றேன், ஆனால் நீர் இவர்களை அழைத்து வருவானேன் ?” என்று கேட்க அதற்கு ராமானுஜர் “தேவரீர் தண்டமும் பவித்திரமுமாக வரச் சொன்னீர்கள் - முதலியாண்டான் எனக்கு த்ரிதண்டம், கூரத்தாழ்வான் என் பவித்திரம்” என்றார்
Image may contain: people standing
அதனால் தான் இவர்கள் இருவரும் உடைவர் கூடவே இருக்கிறார்கள். ஆனால் கூரத்தழ்வான் ஏன் தாடி வைத்துக்கொண்டு இருக்கிறார் ?
கூரத்தாழ்வானைப் பற்றி மேலும் சில விஷயங்கள் பார்த்துவிட்டு அதைப் பற்றி சொல்லுகிறேன்.
இராமானுச நுற்றந்தாதியில் இந்த கூரத்தாழ்வானை பற்றிய இந்த இரண்டு வரி பலருக்கு தெரிந்திருக்கும்.
”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”
இதில் ‘நம்’ என்ற பிரயோகத்தை கவனித்திருப்பீர்கள். ’நம்’ தமிழில் ஒரு ஸ்பெஷல் வார்த்தை. நம்ம ஆளு, நம் வீடு, நம் குழந்தை, நம் ஊர், நம் நாடு என்று எங்கு எல்லாம் ‘நம்’ சேருகிறதோ அங்கே எல்லாம் அபிமானம் இருக்கும்.
வாடகை வீட்டை காலி செய்யும் போது சுமாரான பெயிண்ட் அடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். ஆனால் சொந்த வீடாக இருந்தால், கலர் சற்றே மங்கினால் கூட கலர் அட்டையைப் பார்த்து, செலக்ட் செய்து இரண்டு கோட் பெயிண்ட் அடிப்பதற்குக் காரணம் அது நம் வீடு.
செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்தியது என்று அமெரிக்காவோ, ஆந்திராவோ எங்கு இருந்தாலும் நீயூஸ் பேப்பரில் பார்க்கும் போது நம் நாடு என்று சந்தோசப்படுகிறோம்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார், ஆசாரியர் ஏன் பெருமாளுக்கும் இந்த ’நம்’ உண்டு. இதனை உபதேச ரத்தினமாலையில்
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்
அவரவர் தம் ஏற்றத்தால்
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே!
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று
என்கிறார் மணவாள மாமுனிகள். அதாவது அன்புடையார் இவர்களுக்கு அன்பாகச் சாற்றிய திருநாமங்கள் என்கிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள இராமானுச நூற்றந்தாதியில் “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார். காரணம் என்னவாக இருக்கும் ?
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் பிராத்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன் ஆனால் என்னுடைய நிழல் போல பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று விண்ணப்பிக்க
”அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி.
இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று கொள்ளலாம்.
“வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும்” என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்கும்.
முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வச் செருக்கு ( அதிக பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ). இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூடத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர்.
இராமானுச நுற்றந்தாதில் இந்த வரிக்கு இரண்டு விதமாகப் பாடங்கள் உண்டு
குழியைக் கடக்கும்
குழியைக் கடத்தும்
எது சரி ?
முதல் பாடத்துக்கு அர்த்தம் - குழியைக் கடக்கும் - இந்த மூன்று கவர்வங்களாகிய படு குழியை கடந்தவர் என்று பொருள்.
அடுத்த பாடம் குழியைக் கடத்தும் - இந்த மூன்று கவர்வங்கள் ஆகிய படுகுழியை தான் கடந்தது மட்டும் அல்லாமல், தன் சீடர்களையும் கடக்க வைத்தார் என்று பொருள். ஆக இரண்டும் சரியானவை தான் !
பெருமாளின் குணங்களை பேசும் போது தப்பே வராது ; ஆசாரியர்களைப் பற்றி பேசும் போதும் அதே.
இந்த மூன்று குழிகளையும் கடந்தவர் என்பதற்கு அவர் வாழ்வே எடுத்துக்காட்டு முழுவதும் எழுதினால் ஒரு தனி புத்தகமே எழுத வேண்டும்.
எம்பெருமான் வைபவத்தைப் பேசித் தலைக்கட்டலாம், எம்பெருமானார் வைபவத்தை பேசித் தலைக்கட்ட முடியாது என்பர் ஆண்டான் எம்பார் முதலானோர்;
’எம்பெருமானார் வைபவத்தைப் பேசித் தலைக்கட்டலாம்; ஆழ்வான் வைபவத்தைப் பேசித் தலைக்கட்ட முடியாது’ என்பர் ஆசிரியார்களனைவரும்
- ‘கூரத்தாழ்வான் வைபவம்’ புத்தகத்தின் முன்னுரையில் ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யார்ஸ்வாமி
அதனால் இந்தக் கட்டுரையில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
ஒரு சமயம் ததீயாராதனத்திற்காக வாழையிலையை ஒருவர் மரத்திலிருந்து வெட்ட, வெட்டிய பகுதியில் ஒழுகிய சாற்றினைக் கண்டார். ஒரு உயிரை வெட்டி அதிலிருந்து ஒழுகும் ரத்தம் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்து மயக்கமுற்றார்.
இன்னொரு சமயம் இரவு அவர் எங்கோ சென்றுகொண்டு இருந்த போது வயலில் தவளை கத்தும் சத்தம் கேட்டது. அருகே சென்று பார்த்த போது நல்ல பாம்பின் வாயில் சிக்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அவருக்கு நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம் நினைவுக்கு வந்தது
நண்ணாதார் முறுவலிப்ப, நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை!
கண்ணாளா! கடல் கடைந்தாய்! உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய், சாமாறே.
பொருள் : எதிரிகள் மகிழ்ந்து சிரிக்கவும், நல்ல உறவினர் வருந்தவும் எண்ணற்ற துன்பங்களை உண்டாக்கும் இந்த உலகின் தன்னைதான் என்னே ! கருணை உடையவனே உன் திருவடியை நான் அடையும்படி காலம் நீட்டாமல் உயிரை உடம்பிலிருந்து பிரித்து அருள வேண்டும்
அந்தத் தவளை பாம்பின் வாயிலிருந்து விடுதலையாகி யாரிடம் உதவிக் கேட்கும் ? என்று மயக்கமுற்று கீழே விழுந்தார்.
பெண் ஒருத்தி தண்ணீர் குடத்தைச் சுமக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்ட ஆழ்வான், வெகு தூரத்தில் இருந்த அவள் இல்லத்துக்கு அவரே அதைத் தலையில் வைத்துச் சுமந்து சென்று சேர்ப்பித்தார்.

சம்பிரதாயத்தில் ஆழ்வான் என்றால் அது கூரத்தாழ்வான். ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வார்.
சில வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் சென்ற போது பெரிய நம்பிகள் திருமாளிகைக்கு எதிரில் இருக்கும் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு உள்ளே சென்று சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு பிறகு கூரத்தாழ்வான் சன்னதியில் ‘கூரத்தாழ்வார்’ என்று இருந்ததை ‘கூரத்தாழ்வான்’ என்று மாற்றியிருந்ததை பார்க்க முடிந்தது.
Image may contain: outdoor
ஸ்ரீராமானுஜருடைய பிரதான சீடர் கூரத்தாழ்வானை, கூரத்தாழ்வார் என்று மரியாதையாகக் கூப்பிடாமல் ஒருமையில் ’கூரத்தாழ்வான்’ என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பார்கள்.
கூரத்தாழ்வார் என்பவர் அவர் திருதகப்பனார் அதனால் வேறுபடுத்திக்காட்ட இவரைக் கூரத்தாழ்வான் என்று அழைக்கிறார்கள் என்று பலர் கூறுவர். சில காலம் முன்புவரை, அடியேனும் அதே போல தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.
சில வருடங்களுக்கு முன் கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்றிருந்தேன். அங்கே சன்னதியில் கூரத்தாழ்வான் வாழ்க்கை சரித்திரம் படமாக இருந்தது அதில் ஏன் ஆழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிந்துகொண்டேன்.
கூரத்தாழ்வான் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்குக் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு எளிமையான விளக்கங்களைச் சொல்லி புரியவைப்பதில் வல்லவர்.
உதாரணமாக - “சிறுமா மனிசராய் என்னை ஆண்டார்” என்ற பாசுரத்தில் “சிறு - மா” அதாவது “சிறுமை - பெருமை” என்று ஒன்றுக்கொன்று முரண் பட்ட குணமாக இருக்கும் இரண்டும் எப்படி ஒருவருக்கு அதுவும் பெருமாளுக்கு இருக்க முடியும் ? என்று ஆழ்வானுடைய திருகுமாரரான பட்டர் கேட்ட போது அதற்குக் கூரத்தாழ்வான் ”ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் போன்றவர்கள் வடிவில்(மேனி) சிறுத்தவர்களாக இருந்தாலும், ஞானத்தால் உயர்ந்தவர்கள் அன்றோ?” அதே போல் தான் இதுவும் என்று பதில் சொல்லிப் புரிய வைத்தார்.
பிறகு ஒரு சமயம் ராஜேந்திர சோழன் சதஸ்ஸில் ஆழ்வான் திருவாய்மொழி காலஷேபம் சாதித்துக்கொண்டு இருந்த போது ”வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம்” ( 5ம் பத்து 3ஆம் திருவாய்மொழி 7ஆம் பாசுரத்தில்) என்ற பகுதி வந்த போது ’ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்ற நூறு வயது நிரம்பிய முதியவர் ஒருவர் எழுந்து பாசுரத்தில் “தலையில் வணங்கவுமாங்கொலோ தையாலார் முன்பே” என்று முடிகிறது. நாயகனை நாயகியானவள் தலையால் வணங்குவாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?” என்று கேட்க உடனே கூரத்தாழ்வான் “ஏன் இல்லை, என்று ஸ்ரீராமாயனத்தில் சுந்திரகாண்டத்தில் சீதைப்பிராட்டி அனுமானிடம் செய்தி சொல்லி அனுப்பிய போது ”எனக்காக ராமபிரானைத் தலையால் வணங்கு என்று சொல்லியிருக்கிறாளே” என்று எடுத்துக்காட்டினார்.
இப்பேர்பட்ட கூரத்தாழ்வானிடம் திருவாய்மொழி காலஷேபம் கேட்க வேண்டும் என்று நம் உடையவருக்கே மிகுந்த ஆசை. ஆனால் ஆசாரியரான ஸ்ரீராமானுஜருக்கு காலஷேபம் சொல்ல கூரத்தாழ்வான் இசையவில்லை. எனவே முதலியாண்டான் போன்றவர்கள் ஆழ்வான் காலஷேபத்தைக் கேட்டு அதை ஸ்ரீராமானுஜரிடம் விண்ணப்பிப்பது என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
Image may contain: 1 person
கூரேசர் திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமான "உயர்வற உயர்நலம் உடையவன்” என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பேசுகிறாரே என்று ஆழ்ந்து அந்த அனுபவத்தில் அப்படியே மயங்கி மோதித்துவிட்டார். இப்படி இவர் மயங்கியதை மற்றவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் தெரிவிக்க அவரும் ஓடி வந்து இது போல தான் “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாசம் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று சொல்லி, நம் கூரத்தாழ்வானும் நம்மாழ்வார் போல் பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு “ஆழ்வான்! ஆழ்வான்! ஆழ்வான்! எழுந்திரும்!” என்றாராம்.
அதனால் தான் அவர் ’ஆழ்வான்’ என்ற பெயருடன், அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.
கூரத்தாழ்வானின் பிறப்பிடம் காஞ்சிபுரத் அருகே கூரம் என்ற சிறிய கிராமம்(கி.பி 1010).
உடையவருக்கு எல்லாவிதத்திலும் உதவினவர். ஸ்ரீபாஷ்யம் இவரால் தான் நமக்குக் கிடைத்தது என்றால் அது மிகையாகாது.
இவர் கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதர், ஸ்ரீவத்ஸ்சிஹனர் என்ற திருநாமங்களாலும் வழங்கப்பெறுவார். வரதராஜ ஸ்தவம்’ சுந்தர பாஹாச்ஸ்தவம்’ அதிமானுஷியஸ்தவம்’ ஸ்ரீவைகுண்டஸ்தவம்’, யமகரத்நாகரம்" கத்தியத் திரய வியாக்கியானம்' முதலிய நூல்களைச் செய்தவர்.
பிள்ளைப் பிள்ளையாழ்வான், திருவரங்கத்தமுதனார். நாலூரான் என்பவர்கள் இவருடைய சீடர்கள்.
சிஷ்ய லட்சணத்திற்கும் ஆசாரிய லட்சணத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டியவர் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வானின் மனம் கொஞ்சம் குழம்பியிருந்தது. பெரிய பெருமாள் அவரிடம் உமக்கு என்ன கலக்கம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஆழ்வான் “உடல் மிகவும் தளர்ந்து பகவானை முழுமையாக அனுபவிக்கக் கைங்கரியம் செய்ய முடியவில்லை, அதனால் என்னை விடுவித்து பரமபதத்தில் ஆத்மாவை நிலைக்க வைக்க வேண்டும் என்று வேண்டினார். பெருமாள் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரைச் சார்ந்த எல்லோருக்கும் பரமபதத்தை அளித்தார்.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீஇராமானுஜர் சந்தோஷமும் அதே சமயம் வருத்தமும் அடைந்தார்.
“எனக்கு முன் நீர் முந்திக்கொண்டீரே ? உம் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்வேன் ? ” என்ற போது ஆழ்வான் திருவாய்மொழி “சூழ்விசும்பு” என்று தொடங்கும் பாசுரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் புகுகின்ற புதியவர்களுக்கு ( ஜீவாத்மாவிற்கு ) வரவேற்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாம் முன்னே சென்றால் தான் பரமபதத்துக்கு பின்னே வருபவர்களுக்கு ( ஸ்ரீராமானுஜர் ) எதிர்கொண்டு மரியாதையுடன் எதிர்கொண்டு வரவேற்க முடியும். சீடரான தாம் முறைப்படி வரவேற்பு அளிப்பது தானே சரியாக இருக்கும் ?
இராமானுஜர் என்ன செய்திருப்பார் ? ஆழ்வானை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார்.
கூரத்தாழ்வான் பரமபதம் புறப்படும் சமயம், ஸ்ரீஇராமானுசர் ஆழ்வானின் காதுகளில் திருமந்திரத்தை ஓதினார். பிறகு மீண்டும் ஓதினார். பக்கத்தில் இருந்த சீடர்கள் ஏன் மறுபடியும் ஓதினீர்கள் என்று கேட்க அதற்கு உடையவர் ஓர் அரசிலங்குமாரன் வாயில் கற்பூரத்தைப் போட்டு கொள்ளாமல் இருந்தால் அவன் நாக்கு உலர்ந்து போய்விடும். அதே போல ஆழ்வானுக்குத் திருமந்திரம் தான் கற்பூரம், கூரேசர் நாக்கு உலந்து போகாமல் இருக்க மீண்டும் திருமந்திரத்தை ஓதினேன் என்றார். என்ன மாதிரி ஆசாரியன், என்ன மாதிரி சிஷ்யன்
கூரத்தாழ்வானும் அவர் மனைவி ஆண்டாளும் ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம் ஒரு நாள் நல்ல மழை! அவரால் வெளியே செல்ல முடியவில்லை. ஆழ்வானும், ஆண்டாளும் அன்று பட்னி.
இரவு கோயிலில் அரவணை மணி சத்தம் கேட்கிறது. ஆழ்வான் மீது இருந்த பற்றினால் ஆண்டாள் ”உன் பக்தன் இங்குப் பட்டினியாக கிடக்க..... ” என்று ஒரு நெடி யோசித்தார்.
யோசித்த மறு நொடி அரங்கன் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து “ஆழ்வானுக்குப் பிரசாதம் அனுப்பிவையும்” என்று கூற, கோயில் உத்தமநம்பி மூலமாகச் சகல மரியாதையுடன் பிரசாதம் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து சேர ஆழ்வான் “எதற்கு ?” என்று வினவ “நம்பெருமாள் நியமனம்” என்றார் உத்தமநம்பி.
ஆழ்வான் இரண்டு கவளம் ( தனக்கும், ஆண்டாளுக்கும் ) பெற்றுக்கொள்கிறார். உத்தமநம்பி சென்ற பிறகு ஆழ்வான் ஆண்டாளைப் பார்த்து “நீ ஏதாவது நம்பெருமாளிடம் வேண்டினாயோ ?” என்று கேட்க ஆண்டாள் தான் நினைத்ததைக் கூறினாள். “குழந்தை தாயை பார்த்து என்னை காப்பாற்று என்று கேட்குமோ ? உலகத்துக்கே படியளக்கும் நம்பெருமாள்
அடியார்களை மறந்துவிடுவானோ ?” என்று கூறிவிட்டு பிரசாதத்தை ஸ்வீகரித்தார்கள் (உண்டார்கள்). அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பராசர பட்டர், வேதவ்யாச பட்டர் பிறக்கிறார்கள். ( கூரத்தாழ்வான் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துக்கொண்டதில்லை இவருடைய குழந்தைகள் ஸ்ரீரங்கநாதனுடைய (அரவணைப் பிரசாதம்) கடாக்ஷத்தினாலேயே அவதரித்தனர்.
கட்டுரையின் ஆரம்பத்தில் கூரம் செல்ல முடியவில்லை என்று சொல்லியிருந்தேன் அல்லவா ?
அப்பன் என்ற தனவந்தர் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு பக்கம் வசித்து வந்தார். ஆழ்வானைப் பற்றி அறிந்து அவரின் சீடராக வேண்டும் என்று விரும்பி ஆழ்வான் இல்லத்துக்கு வந்தார். துரதிஷ்டவசமாக அப்போது ஆழ்வான் உயிர் பிரியும் சமயமாக இருந்தது. அதனால் அப்பன் ஆழ்வானைப் பார்க்க முடியவில்லை. மிகவும் மனம் வருந்தினார். அருகிலிருந்த பட்டரிடம் என்ன செய்யலாம் என்று கேட்க அதற்குப் பட்டர் “எப்பொழுது அப்பன் ஆழ்வானை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாரோ அப்போதே ஆழ்வானின் சீடராகிறார்” என்றார்.
( கூடத்தழ்வானின் சீடராக ஆகவேண்டும் என்ற எண்ணமே ஒருவனுக்கு நல்லது செய்யும் - என்கிறது வார்த்த மாலை )
ஸ்ரீராமானுஜரையும் சம்பிரதாயத்தின் கவுரவத்தையும் கக்க தன் கண்களைத் தியாகம் செய்தார் ஆழ்வானை காட்டிக்கொடுத்தது நாலூரான் என்ற சிஷ்யன் என்பது பலருக்கு தெரிந்த கதை.
கூரத்தாழ்வானுக்குக் கண் போன பிறகு ஸ்ரீராமானுஜர் மிகவும் வேதனையுடன், ஆழ்வானை வாரி அனைத்துக் கொண்டு “விசிஷ்டாத்வைத தர்சனத்துக்காக ,உமது கண்ணை இழந்தீரே.உமக்கா இந்த நிலமை” என்று அழுதார்.
அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் திருமண் கோணியது என்று அபசாரப்பட்டிருப்பேனோ ” என்றாராம் பாகவத அபச்சாரம் என்பது எந்த ரூபத்திலும் இருக்க கூடாது என்று பார்த்துக்கொண்டவர்.
இதை விட அதற்குப் பிறகு அவர் செய்த காரியம் தான் அவர் கருணையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
ஆழ்வானும் எம்பெருமானாரும் காஞ்சிபுரத்துக்கு வந்த சமயம் உடையவர் ஆழ்வானை வரதாராஜஸ்தவத்தை பேரருளாளன் முன்பு விண்ணப்பம் செய்து, பதிலுக்குக் கண்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று நியமித்தார்.
கூரத்தாழ்வானும் ஆசாரியர் கட்டளையை மறுக்கவிரும்பாமல் அப்படியே செய்ய ஆரம்பித்தார் அப்போது ஸ்ரீராமானுஜர் கோயிலை பிரதக்‌ஷணம் செய்யப் போக ஆழ்வான் முடிக்கும் சமயம் பேரருளாளர் “என்ன வேண்டும் என்று கேட்க ?” அதற்குக் கூரத்தாழ்வான் “நான் பெரும்பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
( அதாவது ஸ்ரீராமானுஜ சம்பந்தத்தால் தான் மோட்சம் அடைவது மாதிரி நாலூரானும் பெற வேண்டும் என்று கொள்ள வேண்டும் )
ஸ்ரீவைஷ்ணவத்திம் உயர்ந்த குணங்களுக்கு இவர் வாழ்க்கையில் பல எடுத்துக்காட்டு இருக்கிறது. சரி ஏன் அவர் தாடி வைத்துக்கொண்டு இருக்கிறார் ?
ஒரு முறை அவருடைய தாடியை மழிக்கும் போது, அதில் பேன் ஒன்று கீழே விழுந்து இறந்து போயிற்று. அதற்காக இனி தாடியை மழிக்காமல் அதில் அவை வசிக்கட்டும் என்று விட்டு விட்டார் இவர் அன்றோ பெரியார் !
பிகு: நாம் தினமும் சொல்லும் தனியன்களான யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள் இவர் அருளியவை. வாக்ய குருபரம்பரை கூட இவர் அருளியது தான்.
-சுஜாதா தேசிகன்
5.2.2018
தை, ஹஸ்தம் - கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்
படங்கள் உதவி : Ethirajan Srinivasan Kesavan Srinivasan

Comments

  1. Amirthavalli SatagopanJuly 24, 2023 at 8:35 PM

    அத்யத்புதம் ஸார்.

    ReplyDelete

Post a Comment