Skip to main content

இரண்டு சொட்டு.. இரண்டு குழந்தைகள்

சென்ற வருடம் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமியுடன் யாத்திரை சென்ற போது மதுரா, கோகுலம், பிருந்தாவன், நந்த கிராமம் என்று சுற்றிய போது என் பக்கம் இருந்த மாமியின் தோளில் இருந்த கைப்பை என்னை கவர்ந்தது. அதன் வாரில் சின்ன குஞ்சலம் மாதிரி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.
என்னவாக இருக்கும் என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் அவர் சட்டென்று “ஏதாவது வேண்டுதலாக இருக்கும்.. மறந்துவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு” என்றார்.
“எனக்கு அப்படி தெரியலை...”
“அப்ப திருமண் பெட்டியாக இருக்கலாம்”
“மாமி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு...”
மாமி அசந்த சமயம் உற்றுப் பார்த்தேன்... குஞ்சலத்தின் உள்ளே சின்ன பாட்டில் மாதிரி ஒரு வஸ்து இருப்பது தெரிந்தது.
மீண்டும் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன்.
“நிறையப் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்கிறோம்.. அதை எல்லாம் சேகரித்து வைத்துள்ளார் மாமி” என்றார். லாஜிக் உதைத்தது.
உதைப்பட்டாலும் பரவாயில்லை, மாமியையே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன்.
சட்டென்று கேட்டால் வேளுக்குடி ஸ்வாமியிடம் புகார் செய்துவிடுவாரோ என்ற பயத்தில்
“எங்கிருந்து வருகிறீர்கள் ?” என்று பேச்சை ஆரம்பித்தேன்
“மும்பை.. டெல்லி.. இருப்பது பாஸ்டன், யூஎஸ்”
புரியாமல் “ஓ..”என்றேன்
“நாங்க யூஎஸ் போய் 23 வருடம் ஆச்சு”
“அங்கிருந்து யாத்திரைக்கு வருகிறீர்களா ?”
“இல்லை, இல்லை மும்பைக்கு வந்தோம் டெல்லியில் ஒரு கல்யாணம் அதை முடித்துக்கொண்டு இந்த யாத்திரை”
”ஹெக்டிக் டிரிப்தான்..மாமி உங்களுக்கு”
“ஆமாம்!” என்று முகம் மலர்ந்த சமயம் ( பாட்டியை மாமி என்று அழைத்தால் ? )
“கைப்பையில் இது என்ன ?”
“ஓ அதுவா .. “ என்று உடனே திறந்து எனக்கு இரண்டு சொட்டு கொடுத்தார்.
கையில் சில்லென்று இருந்தது.
“சானிடைசர்...” இது இல்லாமல் எங்கும் செல்வதில்லை என்றார்.
வழியில் கிருஷ்ணர் விளையாடிய இடங்களில் இந்த இரண்டு குழந்தைகளை பார்த்தேன். மாமியின் இரண்டு சொட்டு சானிடைசர் தான் நினைவுக்கு வந்தது.

Comments

  1. ரெண்டு சின்ன சம்பவம், சுவாரசியமான இணைப்போடு. நன்று.

    ReplyDelete

Post a Comment