Skip to main content

சென்னை நவக்கிரக ஷேத்திரங்கள்


நவக்கிரகங்களை திருச்சி கோர்ட் பிள்ளையார் கோயிலில் பார்த்திருக்கிறேன். சிகப்பு, மஞ்சள், வெள்ளை நிற துணிகளை உடுத்தி, வெவ்வேறு திசைகளில் பார்த்துக்கொண்டு எப்போது யாராவது விளக்கு ஏற்றிக்கொண்டோ அல்லது சுற்றிக்கொண்டோ இருப்பார்கள்.
சனிக்கிழமை என்றால் கூட நான்கு பேர் சுற்றுவார்கள். வருடப் பிறப்பு பெயர்ச்சி பலன்கள் அல்லது அன்மை ஜோசியர் விஜயம் காரணமாக இருக்கலாம்.
அதிக ’நிதி’ முதலீடு செய்தவர்கள், எழுத்தாளர்கள் குறிப்பாகச் சினிமாவிற்கு எழுதுபவர்கள், அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்கள், ராசி மோதிரம், கலர் துண்டை நம்புகிறவர்கள், சந்தன பொட்டுடன் குங்கும பொட்டு வைத்திருப்பர்கள் முக்கால்வாசி பேர் நவக்கிரகங்களை நம்புவார்கள்.
நான் நவக்கிரங்களை சுற்றியதில்லை. ஆனால் கடந்த ஞாயிறு அன்று டாக்டர் சித்ரா மாதவன் அவர்கள் மைலாப்பூர் ஆர்.கே அரங்கில் நவக்கிரங்களை பற்றிய சொற்பொழிவைக் கேட்ட போது இத்தினை நாள் சுற்றாத எல்லா நவக்கிரங்களையும் சுற்று வந்த ஃபிலீங்.
சொற்பொழிவு முழுக்க சென்னையை சுற்றி இருக்கும் நவக்கிரக ஷேத்திரங்களை பற்றியது. சூரியனைச் சுற்றினால் என்ன பலன் என்பது போல இல்லாமல், அந்தக் கோயிலை சுற்றிப் பார்த்தால் என்ன மாதிரி கல்வெட்டுகள் இருக்கிறது, யார் கட்டியது, சூரிய பகவான் எப்படி இருப்பார், என்ன கலரில் டிரஸ் போட்டிருப்பார், கையில் என்ன வைத்திருப்பார், கை எவ்வளவு தூரம் மடங்கியிருக்கும். வைத்திருக்கும் தாமரை மலர்ந்திருக்குமா இருக்காதா - ஆகமங்கள் என்ன சொல்லுகிறது என்று ஏ.டி.எம்மில் பின் நம்பரை அடித்தவுடன் ‘சர்ர்ர்’ என்று காசு கொட்டுவது போல பல அறிய தகவல்களை கொட்டினார்.
ஒவ்வொரு நவக்கிரக ஷேத்திரத்தை பற்றிச் சொல்லிய பின் முத்துசுவாமி தீட்சிதருடைய நவக்கிரக கீர்த்தனை ஒன்றை ஜே.பி. கீர்த்தனா அவர்கள் பாடினார். எம்.எஸ். பாலமுரளி போன்றவர்கள் பாடியதை முன்பு கேட்டிருப்பதால் பழகபட்ட பாடலாக இருந்தது.
சென்னை அதுவும் போரூர் சுற்றிய பகுதியில் இந்தக் கோயில்கள் இருப்பது அதுவும் சோழ அரசர்கள் ( பெரிய கோயில் கட்டிய சமயம் ) கட்டியது பக்கத்தில் ஃபிளாட் கட்டும் ரியல் எஸ்டேட் மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நல்ல படியாக பிளாட் விற்றால் பக்கத்தில் இருக்கும் சனி பகவானுக்கு விளக்கு ஏற்றினாலும் ஏற்றுவார்கள். வேட்டி சுருங்கி கர்சிப் ஆனது போல முன்பு ஒரு காலத்தில் பெரிய கோயிலாக இருந்த இவை இன்று சிங்கிள் பெட்ரூம் பிளாட் மாதிரி ஆகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் Dr.சித்ரா மாதவன். கிளம்பும் போது ஒரு சின்ன ‘ஹலோ’ சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

Comments