Skip to main content

ஆசாரியர்கள் வருகை

ஆழ்வார்கள் விஜயம் பற்றி முன்பு எழுதியிருந்தேன். நினைவிருக்கலாம். ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட பின் ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன்
“உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார்.

சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டேன். அப்போது ஸ்தபதியிடம் அதைப் பற்றி பேசவில்லை..

பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய  நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் ஓடின போன வருஷ ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக  நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள்.

ஸ்தபதியிடம் பெருமாள் மூர்த்தியை வடிவம் செய்ய சொல்லும் செய்ய சொல்லும் போது, இதே போல நான்கு திருக்கைகளுடன் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நம்பெருமாளை விரல்களால் தடவ அவர் மொபைலில்  விஸ்வருபம் எடுத்தார் அவர் விஸ்வரூபம் எடுத்த சமயம் அதே மொபைலில்  ஸ்தபதியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.



“நீங்கப் போன வருஷம் வந்த போது பெருமாள், தாயார், ராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும் என்று சொன்னீர்களே? ஆரம்பிக்கட்டுமா ?” என்றார்.
வியப்பாக இருந்தது.
“உடனே” என்றேன்.

போன வருடம் ஆனி மாதம்  ”பெருமாள், தாயார், ஆசாரியர்களை அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார்.
ஸ்தபதியைச் சந்தித்த போது ”உங்கள் மூர்த்தியைச் செய்து கொடுக்கும் வரை  உடம்பு ஒத்துழைக்க வேண்டுமே என்று இருந்தது”
நம்பெருமாள் திருத்துழாய் பிரியன் என்று அவர் தோட்டத்திலிருந்து திருத்துழாயை பறித்து வந்து பெருமாளுடன் கட்டிக்கொடுத்தார்.
. ( இது மாதிரி திருத்துழாயை நான் இதுவரை பார்த்ததில்லை. முளைக்கீரை மாதிரி இருந்தது ! ) அதைப் பெருமாளுடன் சேர்த்து வைத்தார்.

“ஒரு தீவிர விஷ்ணு பக்தனுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டேன்” என்று கண்ணீருடன் என்னை வழி அனுப்பிவைத்தார்.

கும்பகோணத்தில் “லக்‌ஷ்மி நரசிம்மர்” என்று ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோவில் மஞ்சள் திருமண்ணுடன் சக்கிரவர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் என்னைத் தஞ்சாவூர் பேருந்து நிலையம் வரை கொண்டு வந்துவிட்டார்.
பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று ஆசாரியர்களுடன், நம்பெருமாள் தாயாருடன் வீட்டுக்கு விஜயம் செய்ய, வீட்டில் பெரியாழ்வார் காத்துக்கொண்டு இருந்தார். மாப்பிளையை மாமனார் வரவேற்பது தானே முறை !

படம் : எங்கள் இல்லத்தில் இன்றைய நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை :-)

23.3.2016
பங்குனி உத்திரம் 

Comments

  1. Alwargal Pughal parappum Engal Writer Desigane Innumoru Nootrandu Irrum.

    ReplyDelete
  2. உண்மையான பக்தி இருந்தால் போதும். அவன் செய்து முடிப்பான் கச்சிதமாக.
    -பி எஸ் ஆர்

    ReplyDelete

Post a Comment