Skip to main content

வணக்கம் சென்னை - 5

 திடீரென்று ஒரு நாள் பாரிஸ் கார்னரை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று புறப்பட்டேன். பாரிஸ் கார்னர், எலிஃபெண்ட் கேட், பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன் என்று பல இடங்கள் ஒரே இடத்தைக் குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். இதே மாதிரி சென்னையில் வேறு இடங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த கடைகளின் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தெரு முழுக்க செண்ட் விற்பனை, மற்றொரு தெரு முழுக்க பாத்திரக்கடை; ஜவுளி கடை, நகை என்று தெருவிற்கு தெரு வித்தியாசமாக இருக்கிறது. 

பைராகி மடம் என்று அழைக்கப்படும் பிரசன்ன வேங்கடேச பெருமாள்  கோயிலை அந்த கோயில் எதிர்த்த மாதிரி இருப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை. 400 வருடம் பழமை மிகுந்த இந்தக் கோயில் அங்கே வசிக்கும் மார்வாடி, சேட் உபயத்தில் ஸ்ரீநிவாசர் நன்றாக இருக்கிறார். அர்ச்சகர் புன்னகையுடன் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதைப் போல வரவேற்று பெருமாள் சேவை செய்து வைக்கிறார். அர்ச்சனையை ராகத்துடன் பாடி அசத்துக்கிறார். கோயிலில் இருக்கும் ஆண்டாள் கொள்ளை அழகு. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். திருப்பதிக்கே லட்டு மாதிரி திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு இங்கிருந்து தான் ஆண்டு தோறும் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருட சேவையின் போது ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது என்பது எனக்குத் அன்று தெரிந்த, தெரியாத தகவல். 

சௌகார்பேட்டை போய்விட்டு பானிபூரி, ஜிலேபி சாப்பிடவில்லை என்றால் உம்மாச்சி கோவிச்சிக்கும் என்று கொஞ்சம் டேஸ்ட் செய்துவிட்டு, இன்னொரு கடையில் மிளகாய் பொடி தூவிய மினி இட்லியைப் பதம் பார்த்துவிட்டு ஏதோ ஒரு பீடா தெருவில் நுழைந்து ஒரு பீடா போட்டுக்கொண்டு கிட்டதட்ட சேட்டாக மாறிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இது வேறு உலகம். 
போன வணக்கம் சென்னையில் கமல்ஜி பற்றி எழுதியது ஞாபகம் இருக்கலாம். இந்த 'ஜி’ இலக்கணம் ரஜினிக்குப் பொருந்தாது.  ”ரஜினிஜி” என்று சொல்லிப்பாருங்கள் சரியாக வராது; சுஜிஜி அதே ரகம், சூப்பர் சிங்கரில் மனோஜி, சுபாஜி, சித்ராஜி போல சுலபமாக இருக்காது. ஜி வராத இடத்தில் சார்/மேடம் தான் சரியாக வரும். 

அது சரி ‘சர்ஜி’ என்று வருகிறதே என்று சந்தேகம் கேட்பவர்களுக்கு, இது வேற இலக்கணம், தொல்காப்பியருக்கு ஹிந்தி கற்றுகொடுத்த பின் அவரை கேட்கலாம். 

தஞ்சை மெஸ் மாறவில்லை. காலை ஏழு மணிக்கே பளிச் என்று உபசரிக்கத்  தொடங்கிவிடுகிறார்கள். இரவு ’கடப்பா’ வை சாப்பிடவே ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. ஸ்டேஷன் ரோடில் இருக்கும் காமேஸ்வரி மெஸ் குட்டி போட்ட மாதிரி இரண்டு வந்துவிட்டது. அண்ணன், தம்பி தகராறு என்று நினைக்கிறேன் “எதிர்த்த மாதிரி இருக்கும் காமேஸ்வரி மெஸ் எங்கள் கிளை கிடையாது” என்று நோட்டிஸ் ஓட்டியிருக்கிறார்கள். பழைய கடை ஒன்லி காஃபி கடை ஆகிவிட்டது, எதிர்கடை ஒன்லி டிபன். கூட்டமாக மக்கள் உப்புமா சாப்பிட்டுவிட்டு எதிர்கடையில் காஃபி சாப்பிட போகிறார்கள். அம்பானி பிரதஸ் மாதிரி தொழில் தெரிந்தவர்கள். 

இன்னும் ஒரு ஹோட்டல் புதிதாக வந்துள்ளது. நடேசன் பூங்கா பக்கம் கிரீன் ஓட்டல் இங்கே முழுக்க முழுக்க சிறுதானியம் கொண்டு தயாரிக்கும் உணவை பாக்கு மட்டையில் ( அட ஸ்பூன் கூட பாக்கு மட்டை ஸ்பூன் தான் !) கொடுக்கிறார்கள். சிறுதானிய சூப் ( கஞ்சி என்று கூட சொல்லலாம் ) சூப்பர். 

பல வருடம் கழித்து சத்யம் தியேட்டர் சென்றிருந்தேன். திரையரங்கு முழுக்க பாலிஷ் செய்து பள பள என்றாக்கியிருக்கிறார்கள். ‘டாய்லெட் ரெஸ்ட் ரூமாகி  முழுக்க கண்ணாடியில் கண்ணாடி அறை சேவை மாதிரி இருக்கிறது.  டாய்லெட் போகும் அந்த இரண்டு நிமிஷம் கூட நம்மை சின்னத்திரையில் சினிமா பார்க்க வைக்கிறார்கள். இடைவேளையின் போது, நகை, ஜவுளி என்று ஏகப்பட்ட விளம்பரங்கள். “ஆஹா இல்லை என்றால் உங்கள் பணம் சுவாஹா” விளம்பரம் மட்டும் ஐந்து முறை மாறி மாறி போடுகிறார்கள். எல்லா விளம்பரமும் முடிந்த பின்னர், பக்கத்தில் இருந்தவரிடம் “சார் இப்ப பார்த்துக்கொண்டு இருந்தோமே அது என்ன படம் ?” என்று கேட்டுத் தெரிந்துக்கொண்டேன். 
( படங்கள் இணையம் ) 

Comments

  1. அருமை. பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில் பற்றி கேட்டதுண்டு, ஆனால் போனது இல்லை. தஞ்சை மெஸ் & காமேஸ்வரி மெஸ் எங்கு இருக்கிறது ?

    ReplyDelete
  2. Please post one city round-up (any city!) each week. You are one person who won't be offended if we say you remind as of Sujatha (i hope!). Please continue in the same style and format.

    ReplyDelete

Post a Comment