Skip to main content

பகல் வேஷம்

வெயில் இல்லாத இன்று காலை ’ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்களை பார்த்துக்கொண்டு இருந்தபோது வெளியே கானம் ஒன்று கேட்டது. ராம கானம். அனுமாரை தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும் என்று வெளியே பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார்.

காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, ஜிகினா பேப்பர் கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை பெயிண்ட் என்று அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் அவர்.

அவர் அடுத்த வீட்டுக்கு சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. அவர் குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.



ஆஞ்சநேயரை பார்த்து அவரிடம் பேசினேன்.

உங்க சொந்த ஊர் எது ?
சொந்த ஊர் கர்நாடகா.

பிறகு சென்னையில் ?
ஒவ்வொரு வருஷம் ஓர் ஊர் இந்த முறை சென்னை, சென்னையை சுற்றி பல ஊர்கள், பிறகு மதுரை, திருநெல்வேலி இப்படி

எந்தெந்த ஊருக்கு எல்லாம் போயிருக்கீங்க ?
எல்லா ஊருக்கு போயிருக்கிறேன். ஆந்திரா, மதுரா, குஜராத் ஏன் காஷ்மீருக்கு கூட போயிருக்கிறேன்.

நல்லா குரல், பாட்டு எங்கே கத்துக்கிட்டீங்க ?
கொஞ்சம் வெட்கப்பட்டு... எங்க அப்பாகிட்ட

இந்த வேஷம் ?
இது எங்க குலத்தொழில். ‘பகல் வேஷம்’ என்பார்கள். குல தொழில் என்பதால் விடாமல் செய்கிறேன்.

வருமானம் ?
எங்களுக்கு விவசாயம். ஊரில் வீடு,  80 ஏக்கர் நிலம் இருக்கு. ஒன்றும் கஷ்டம் இல்லை.

அவர் செல்லும் இடங்கள் எல்லாம் நாய்கள் அவரை சூழ்ந்து குலைக்கிறது. நாம் இவர்களை பார்க்கும் போது ஏதோ பிச்சை எடுக்க வருபவர்கள் போல துரத்திவிடுகிறோம். அது அவர்களின் குல தொழில் !







Comments

  1. குலத் தொழில்..... சொந்தமாக 80 ஏக்கர் இருந்தும் இப்படி குலத் தொழிலை விடாத அவருக்கு எனது பாராட்டுகள்.

    இப்படியும் சிலர்.

    ReplyDelete
  2. செய்யும் தொழிலே " தெய்வம் " உண்மைங்க

    ReplyDelete
  3. ஸ்ரீரங்கத்தில் ராமர் லக்ஷ்மணர் வேஷம் போட்டுக்கொண்டு நல்ல குரலில் பாடிக்கொண்டும் வருகின்றனர். எவ்வளவு பைசா கொடுத்தாலும் சந்தோசமாக வாங்கிக்கொண்டு செல்கின்றனர். தெலுங்கு தாய்மொழியாக கொண்டு அவர்கள் பாடும் பாட்டு அருமையாகவும் இருக்கிறது.....

    ReplyDelete
  4. பாடிப் பாடி ஊர் ஊராய்ச்செல்லும் அவரிடம் ராமர் தங்கிவிட்டாற்போலிருக்கிறது. அதனால்தான் குரலில் அந்த இனிமை நீங்கள் குறிப்பிட்டதுபோல். அவர் குரலைத்தேடிச்சென்றபோது அவரது ஆன்மா உங்களுக்குக்கிடைத்துவிட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
    -ஏகாந்தன்

    ReplyDelete
  5. சிலர் நிஜமாகவே வாழ்கிறார்கள்.. அவர்கள் வாழ்வை..

    ReplyDelete

Post a Comment