Skip to main content

வணக்கம் சென்னை - 2

ஒரு மாலை, ரங்கநாதன் தெரு அன்பழகன் பழக்கடை முதல் ’தாயார் டைரி’ வரை ஊர்ந்து சென்றேன். பிளாஸ்டிக், துணி, மக்கள் என்று ரங்கநாதன் தெருவை சுலபமாக வகைப்படுத்திவிடலாம். கூண்டு மாதிரி இருக்கும் தாயார் டைரி கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று கடைக்காரருக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒரே டிசைனில் புடவை கட்டிய பெண்கள் ஜவுளி கடைகளுக்கு முன் வடை, போண்டா, அல்வா விற்க தொடங்கியிருப்பது புதுசு. தி.நகர் முழுவதும் இப்போது ’சாஃப்டி’ ஐஸ்கிரிம் கடைகளும் பக்கத்திலேயே ஸ்வீட் கார்ன், லெமன் சோடா கடைகளும் நிறைய முளைத்திருக்கின்றன.

பனகல் பூங்காவில் மகிழம்பூ மரம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். யாராவது பனகல் பூங்காவில் இருக்கும் மரங்களிலெல்லாம் அதன் பெயர்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும்.

பனகல், நடசேன், ஜீவா என்று எந்தப் பூங்காவிற்குச் சென்றாலும் காலையில் மக்கள் ஊர்வலமாக நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் சிக்னல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதியம் பனகல் பூங்காவை மூடிவிடுகிறார்கள்!

சென்ற வாரம் காலை பனகல் பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது “எப்படி சார் இருக்கீங்க?” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். தெரிந்தவர் என்பதால் அவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

“சார் நேத்திக்கு ’தமிழ் இந்து’ பார்த்தீங்களா?”

“இல்லையே”

“ஜெயமோகன் பத்தி வந்திருக்கு”

“ஓ... அப்படியா?”

“என்ன சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா... பெண் எழுத்தாளர்கள்....” என்று முழுக் கதையும் அவர் சொல்லி முடித்தபோது எனக்கு வழக்கத்துக்கு மிக அதிகமாக வியர்த்துக் கொட்டியவாறு என் நடைப்பயிற்சியும் முடிந்திருந்தது..

“நாளைக்கும் இதே டயதுக்குதான் வாக்கிங் வருவீங்க?”

சென்னையில் பல இடங்களில் ”ஆட்டோக்கள் மீட்டர் போடவில்லை என்றால் புகார் செய்யுங்கள்” என்று எல்.இ.டி எழுத்துகள் துடித்துக்கொண்டு ஓடுவதைப் பார்க்க முடிகிறது. நான்கு ஆட்டோ பயணங்களின் போதும் எல்லோரும் மீட்டரை ஓடவிட்டார்கள். இருவர் மீட்டருக்கு மேல் 20 ரூபாய் தாங்க என்று பவ்யமாக கேட்டார்கள். சென்னையின் சூட்டையும் மீறி ஆட்டோ மீட்டர்கள் சூடு இல்லாமல் ஓடியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

சரியான வழி தெரிந்தால், சென்னையில் எல்லா முக்கியமான இடங்களுக்கும் பேருந்துலேயே சென்று வரலாம். தொடர்ந்து மூன்று நாள்கள் பேருந்தில் பயணித்தது நல்ல அனுபவம். சில்லறை வேண்டும் என்று எந்த நடத்துனரும் அடம்பிடிக்கவில்லை. குளிர்சாதனப் பேருந்துகளில் பெரும்பாலும் பெண்கள் தனக்குத் தானே சிரித்துக்கொண்டு ‘வாட்ஸ்ஆப்’புகிறார்கள். சிலர் பேச ஒன்றும் இல்லை என்றாலும் ‘அப்பறம் நீ தான் சொல்லணும்’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். யார் கையிலும் புத்தகம் இல்லை. ஏன் குமுதம், ஆனந்த விகடன் கூட இல்லை!.

12 வருடம் முன் சென்னையில் நான் வைத்திருந்த சைக்கிள் இன்னும் ஓடுகிறது!. பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு மட்டுமாவது சைக்கிளில்தான் போவது என்று முடிவு செய்து தினமும் 45 நிமிடம் ஓட்டிவிடுகிறேன். துரைசாமி சுரங்கப்பாதையை இரண்டு முறை வெற்றிகரமாகக் கடந்து, வடபழனி வரை சென்றுவிட்டு திரும்பினேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். சைக்கிளில் செல்பவரை டி.வி.எஸ்-50 ஓட்டுபவர் கூட மதிப்பதில்லை. சென்னையில் சில சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது சாத்தியமே இல்லை. வெளிநாடுகளைப் போல் இங்கே சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப் பாதை எல்லாம் கிடையாது நீங்களே தான் உங்கள் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

நீல, சிகப்பு விளக்கை சிமிட்டிக்கொண்டு பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் ரோந்து செய்து பாதுகாப்புக் கொடுத்தாலும், ஆபத்தானது நகர் முழுக்க ஓடும் கல்லூரிப் பேருந்துகள் தான். அதிலே பயணிக்கும் மாணவர்களை உடனே முன்னேற்றிவிட வேண்டும் என்று துடிப்புடன் அசுர வேகத்தில் ஓட்டுகிறார்கள்.

சென்ற வாரம் மெட்ராஸ் காபி கடை பற்றி எழுதியது நினைவிருக்கலாம். அதைக் காணவில்லை. அடுத்த காபி கடை கண்டுபிடிப்பு பாண்டி பஜாரில்-- ‘ஒன்லி காபி’. இங்கே ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி கடைக்கிறது. காலை வாக்கிங் வருபவர்களுக்கு (5மணி முதல் 8 மணி வரை) காபியுடன் கூடவே டவரா அளவு ஒரு பிஸ்கெட்டும் கொடுக்கிறார்கள். வாழ்க. (எல்லாக் கடைகளிலும் சர்க்கரை இல்லாத காபி என்று கேட்டால் ஸ்ட்ராங் காபி தருகிறார்கள். ஏன்?)

சென்ற வாரம் 'அக்கறை' கூட்டத்துக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் சென்றேன். அக்கறை கூட்டத்தில் குவாண்டம், ஆஸ்பத்திரி, சொந்த அனுபவம், ஜோக்ஸ் என்று விதவிதமாக பேசினார்கள், ஹாஹோ சிரிப்பானந்தா சிரித்து காண்பித்தது பயமாக இருந்தது. மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்று நினைவில்லை, கடைசியாக மினி சமோசாவும், உப்புக் கடலையும் நினைவிருக்கிறது.

முண்டாசுப்பட்டி படம் முழுக்க சிரிக்க முடிந்தது. அடுத்து நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாடு செய்திருந்த பிரசன்னா விதானகேவின் With you Without you படம் பார்த்த பிறகு சிரிப்பு வந்தது.

ஒரு தமிழ்ப் பெண்ணுக்கும் ஒரு முன்னாள் சிங்கள இராணுவ வீரருக்கும் இடையே ஏற்படும் காதலையும் மனப் போராட்டங்களையும் சொல்லும் கதை. ஒரு நல்ல சிறுகதையைப் படித்த உணர்வைத் தந்தது. இந்த படம் முடிந்த பிறகு விவாதம் நடைபெற்றது. டாடா சுமோவில் வந்தால் அவன் வில்லனாகத் தான் இருப்பான் என்று நினைக்கும் கூட்டத்துக்கு இந்த மாதிரி படங்கள் எல்லாம் டூமச். சத்தமாக எது பேசினாலும் கைத்தட்டும் வழக்கம் இன்னும் இருக்கிறது என்பதையும் அந்த விவாதத்தில் பார்க்க முடிந்தது.

இந்த வாரம் FMல் கேட்ட நல்ல பாடல்: எந்தாரா எந்தாரா நீயே என் தாரா.
பாடியவர்கள்: ஷதப் ஃபரிதி, சின்மயி. யாருப்பா அந்த ஷதப் ஃபரிதி ?

Comments

  1. உங்கள் எழுத்தில் உங்கள் புனைபெயரை ஜஸ்டிஃபை செய்யும் அளவுக்கு சுஜாதா வின் ஸ்டைல் உள்ளது

    ReplyDelete
  2. சென்னை உங்கள் பார்வையில்......

    ரசித்தேன்...

    ReplyDelete

Post a Comment