Skip to main content

வணக்கம் சென்னை - 1

கடந்த சில வாரங்களாகச் சென்னை வாசம். பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், நுழையும் எல்லாச் சாலைகளிலும் ஒரு தடுப்பு வைத்து ஒத்தையடிப் பாதையாகவோ, அல்லது அம்பு குறிப் போட்டு ஒரு வழிப்பாதையாகவோ மாற்றுவழியில் திருப்பிவிடுகிறார்கள். மெட்ரோ, மேம்பாலம் பழுது என்று ஏதாவது காரணம் இருக்கிறது. கடைசியாக பசுல்லா சாலையில் திருப்பிவிடப்பட்ட போது அங்கிருந்த சங்கீதா ஹோட்டலைக் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் மரத்துக்குக் கீழே “மெட்ராஸ் காஃபி ஹவுஸ்” என்று சின்னதாக முளைத்திருக்கிறது.

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை முழுவதும், ”கும்பகோணம் காபி” கடை இறைந்து கிடைக்கிறது. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். ஐயங்கார் பேக்கரி, தலப்பாக்கட்டி பிரியாணி, கோவை பழமுதிர் நிலையம் எல்லாம் இந்த வகை தான்.

அலுவலகம் செல்லும் போது பண்பலையில் தினமும் ஒரு முறையாவது கோச்சடையான் -மெதுவாகத்தான்; சைவம் - அழகு பாடல்களைக் கேட்டுவிட முடிகிறது. போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பித்தாலும் மஞ்சப்பை ”பாத்து பாத்து” பாடலிருந்து தப்பிப்பது கஷ்டம்.

கொசுக்களை விரட்டும் புதிய LG ஏஸி; ”கேரியர் ஏஸி பொருத்திய ராசி நான் கேரியிங்” என்ற விளம்பரங்களைக் கேட்கும் போது சென்னை அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புளியோதரையை மந்தாரை இலையில் சுருட்டிக் கொடுக்காமல், ஹோட்டலில் பார்சல் செய்யப் பயன்படும் சின்ன அலுமினியம் ஃபாயில் கன்டெய்னரில் கொடுக்கிறார்கள். கர்பப்பக்ரஹத்தை குளிர்சாதன வசதி செய்திருக்கிறார்கள். வேர்த்துக் கொட்டாத திருமண் அழியாத அர்ச்சகரைப் பார்க்க முடிகிறது. உற்சவர் புறப்பாட்டின் போதும் உற்சவரும் திரும்ப வரும் போதும் சாப்பிட்ட ரத்னா கபே சாம்பாரும் இன்னுமும் மாறமல் அப்டியே இருக்கிறது.

கூட்டம் சேரும் எல்லா இடங்களிலும், A2B அடையார் ஆனந்த பவன், அல்லது க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடை ஆரம்பித்திருக்கிறார்கள். க்ரண்ட் ஸ்வீட்ஸ் பெயருக்கு ஏற்றார் போல விலையும் க்ராண்ட். சரவண பவன் காம்போ ஆஃபர் போஸ்டர் அடித்து கிருபானந்த வாரியார் படத்துக்கு போட்டியாக ஒட்டியிருக்கிறார்கள். சனி, ஞாயிறு காலை 6.30 மணிக்கே ராயர் மெஸில் க்யூ நிற்கிறது. சுடச்சுட இட்லியைச் சட்னியில் குளிப்பாட்டிச் சாப்பிடமுடிகிறது. காரச் சட்னியில் இன்னும் அதே காரம் இருக்கிறது.

போன வாரம் காலை 6 மணிக்கு பனகல் பூங்கா அருகில் ஒரு தீயணைப்பு வண்டியையும் அதை சுற்றிவேடிக்கை பார்க்கும் கூட்டத்தையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு நகைக்கடை மாடியில் சின்ன ஓட்டை வழியாக புகை வந்துக்கொண்டு இருந்தது. தி.நகர் ஜவுளி, நகைக்கடைகள் எல்லாம் அட்டைப்பெட்டி போல கட்டியிருக்கிறார்கள். எதற்கும் ஜன்னல் கிடையாது. எப்போதும் ஏதாவது தள்ளுபடியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்தக் கடைகள் எல்லாமே ஒரு டைம்பாம் தான்.

Comments

  1. கடைகள் எல்லாமே டைம் பாம்....

    உண்மை தான். அதற்குள் போகும்போதே அதில் பாதுகாப்பு இல்லாத உணர்வு வந்து விடுகிறது...

    ReplyDelete
  2. சென்னையை சில பாராக்களில் மிக அழாக, ரசனையுடன்

    படம் பார்த்தது போல உள்ளது.


    உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. திரு இந்தளூர் பரிமள ரங்கனாதர் கோவிலிலும் இப்படி குளிர் சாதன வசதி இருக்கிறது. எந்த ஆகமத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை. இது பற்றீ எழுதி இருக்கிறேன்.
    http://amaruvi.com/2014/08/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

    ReplyDelete

Post a Comment