Skip to main content

பேட்மேன் பேல்பூரி

பள்ளிக்கூடத்திற்கு வெளியே முன்பு மாதிரி இப்போது தின்பண்டங்கள் எதுவும் விற்பதில்லை. ஹைஜீன் என்று நம் புராக்டர் அண்ட் கேம்பில் குழந்தைகளுக்கு வெளியே எதையும் வாங்கித் தர பயப்படுகிறோம். நான் படிக்கும்காலத்தில் ஸாண்ட்விச், பீட்சா, பர்கர் வகையறாக்களைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஆறாம் கிளாஸ் படிக்கும்போது ‘பாக்கெட் மணி’ 25பைசாவுக்கு, இரண்டு தேன் மிட்டாய்; கூட மூன்று ஜவ்வு மிட்டாய் கிடைக்கும். தேன் மிட்டாயில் தேன் இருக்காது. ஆரஞ்ச் கலரில் (மைதா மாவு என்று நினைக்கிறேன்.) உருண்டை; உள்ளே உடைத்தால் சக்கரைப் பாகு இரண்டு சொட்டு இருக்கும்; அது தான் தேன். அந்த டேஸ்ட் அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்நாக்ஸ் என்பதெல்லாம் தேடினாலும் கிடைக்காது. அதை விற்கும் பாட்டியை என்னால் மறக்க முடியாது.



வாய் நிறைய புகையிலை, உதட்டோரம் சிகப்பாக வழிந்துகொண்டு, விரலில் சுண்ணாம்பை நக்கிக்கொண்டு ஜவ்வு மிட்டாய் விற்றுக்கொண்டு இருப்பார்.

ஜவ்வு மிட்டாய்- பஞ்சு மிட்டாய் கலரில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி இருக்கும். யூரேனியம் போன்ற வஸ்துவை கூட பிரித்து எடுத்துவிடலாம், ஆனால் ஜவ்வு மிட்டாய் மீது இருக்கும் பிளாஸ்டிக் பேப்பர் மேலாடையை பிரித்து எடுப்பது என்பது முடியாத காரியம். ஒரு கடி கடித்தபின் மேல்-கீழ்வரிசைப் பற்கள் இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இழுக்கும்போது பல் ஈறு லேசாக வலிக்கும். பல் இடுக்கில் எல்லாம் மாட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரேஷனில்தான் வெளியே வரும். கடைசியில் பிளாஸ்டிக் பேப்பர் அல்லது மணல் மாதிரி நர நர என்று வந்தால் ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு முடிந்துவிட்டதன் அறிகுறி. சாப்பிட்டபின் ‘கால் கேர்ள்’ மாதிரி வாய் முழுக்க ரோஸ் கலர் லிப்ஸ்டிக் வந்துவிடும்.

அதே பாட்டிகடையில் (கடை என்றால், ஒரு கூடை அதில் பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்கள்..) கமர்கட், எலந்தை வடை, எலந்தை ஜூஸ், சூடமிட்டாய், புளிப்பு மிட்டாய், பலபமிட்டாய், சிகரேட் மிட்டாய் எல்லாம் உண்டு. சீசனுக்கு ஏற்றாற்போல் அரிநெல்லிக்காய், நவாப்பழம், கொடுக்காப்புளி, களாக்காய், கிளிமூக்கு மாங்காய் என்று இயற்கை உணவுகளும் கிடைக்கும்.

இவை எல்லாம் சாப்பிடவென்று சில முறை இருக்கிறது.கமர்கட்டை வாயில் போட்டு ஒருபக்கக் கன்னத்தில் அடக்கிவைக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெல்லம் கரைந்து, தொண்டயில் இறங்கும். சூடமிட்டாய் சாப்பிட்டபின் காத்தை உள்ளே இழுத்தால் தொண்டையில் ஜில் என்ற காதல்கதை சொல்லும். எலந்த வடை, ‘பார்த்து சாப்பிடு உள்ளே பூச்சி இருக்கும்,’ என்ற எச்சரிக்கையையும் மீறி அதன் சுவை நம்மை அடிமைப்படுத்தும். அரிநெல்லிக்காய், பாக்கெட்டில் வாங்கி அதில் உப்பு, மிளகாய்த் தூளைப் போட்டு சிறுது நேரம் கழித்துப் பார்த்தால் நெல்லிக்காய் தண்ணீர் விட்டுக்கொண்டு, அதன் சுவையை விவரிக்க இயலாது.

சில சமயம் பள்ளி நிர்வாகம் சுகாதர துறைக்கு புகார் கொடுக்க, மாநகராட்சியிலிருந்து வந்து பள்ளிக்கூடத்தின் வெளியே விற்பவர்களை விரட்டியடிப்பார்கள். (இரண்டு நாளில் திரும்ப வந்துவிடுவார்கள்.) பார்க்கப் பாவமாக இருக்கும். இந்தியன் படத்தில் மனோரமா மண்ணை அள்ளிப்போட்டுத் திட்டுவதுபோல பாட்டி அவர்களைத் திட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

போன முறை திருச்சி சென்றபோது பள்ளிக்கூட வாசலில் நகராட்சி பிளாட்பாரம் முழுக்க புது டைல் போட்டு, அந்த இடமே அலம்பிவிட்ட மாதிரி இருந்தது. மண்ணை அள்ளிப் போட்டுத் திட்டப் பாட்டியும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை.

- 00OOO00-

ஒரு மீன்பாடி வண்டி– மங்காரம் & சன்ஸ் பிஸ்கெட் டின்னில் அரிசி பொரி, வண்டிக்கு அடியில் வெள்ளரிக்காய், வெங்காயம், காரெட், தக்காளி என்று ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டே இருக்கும். பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டும் சேர்த்து அரைத்த தண்ணியான சட்னி கொண்ட பாத்திரம், கரண்டி. இது தான் கடை. பொரியை மேலே சொன்ன சட்னியுடன், கொஞ்சம் காய்கறி போட்டுக் கலந்து, துண்டு நியூஸ் பேப்பரில் போட்டு தருவார். பிஸ்கெட் டின்னின் மேல் பேட்மேன் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். கட்டம் போட்ட லுங்கியும், அழுக்கான சட்டையும் அணிந்திருந்தாலும் அவர்தான் எங்கள் பேட்மேன். நாளடைவில் ‘பேட்மேன்’ என்று கூப்பிட்டால் அவரும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.



தமிழர்களுடைய குணம் பொட்டுக்கடலை, வேர்கடலை, பொரியை பார்த்தால் உடனே அதில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்வது. ஆனால் பேட்மேன் கடையில் அப்படி நாம் எடுத்துப் போட முடியாது. உடனே பேல்பூரியைக் கலக்கும் கரண்டியால் அடித்துவிடுவார். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதைப் போல அவரிடம் தாரளமாகக் கடன் வைக்கலாம், மறுநாள் மறந்துவிடுவார்.

நல்லபடியாக வியாபாரம் செய்துகொண்டிருந்தபோதே, இன்னொருவர் பேல்பூரிக் கடை திறந்தார், இவர் வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்தது.

குங்குமப் பொட்டு ஆசாமியின் போட்டி பேல்பூரிக் கடை– ஒரு சைக்கிள் அதில் சில பைகளில் காய்கறி, வெங்காயம், தக்காளி எல்லாம் பொடிப் பொடியாக ஒழுங்காக வெட்டித் தயாராக இருக்கும். பொரியை ஒரு ஆழாக்கில் அளந்து போட்டு, சட்னி, மேலே கொஞ்சம் கொத்தமல்லி, கொஞ்சம் பாராசூட் தேங்காய் எண்ணை சேர்த்து, ஸ்பூன் செருகி, பிளாஸ்டிக் கப்பில் அழகாகக் கொடுப்பார்.

நெற்றியில் குங்குமப் பொட்டு, தோளில் துண்டு (கப் துடைக்க) எனப் பார்க்க அழகாகக்கூட இருந்தார். அவரைப் பார்த்தாலே பயமாகவும் இருக்கும் அதனால் கையை விட்டு பொரி எடுத்து சாப்பிட யாரும் முயற்சிக்கவில்லை. இன்னொரு பயமும் இருந்தது- அவர் நெற்றி வியர்வை குங்குமப்பொட்டு வழியாக வழிந்து சிகப்பாகி, துவாரபாலகர் மூக்கு மாதிரி இருக்கும் அவர் மூக்கு நுனியில் வந்து ஒரு சொட்டு நிற்கும். எங்கே அந்தச் சொட்டு பேல்பூரியில் விழுந்துவிடுமோ என்ற டென்ஷன்தான் அது.

ஒரு முறை, “நான் சினிமாவில் நடிக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கேன்” என்றார். சில வாரங்களுக்குப் பிறகு அவரைக் காணவில்லை. பழையபடி பேட்மேனிடமே பேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். “எங்கே உங்க ஹீரோ இல்லையா?” என்ற நக்கலுடன் எங்களுக்கு பேல்பூரி கலந்து தருவார்.

கடைசியாக பேட்மேனை கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்புறம் வண்டியை ஓரமாக வைத்துவிட்டு ஒன்றுக்கு அடித்துக்கொண்டு இருக்கும்போது பார்த்தாக ஞாபகம்.

சில மாதங்களுக்கு முன் ஏதோ சேனலில் பாக்கிரயாஜ் ஒரு பாடலில் எக்ஸ்சசைஸ் செய்யும் போது ஓரத்தில் அந்தக் குங்கும பொட்டு பேல்பூரிக்காரரை சில நொடிகள் பார்த்தேன்.

Comments