Skip to main content

தொட்டமளூர்

[%image(20090302-brindavanaKrish.jpg|107|143|Brindavana Kannan)%]

ஹைவேஸின் அதிவேகப் பயணத்தில் உங்களுக்குப் பின்னால் வரும் காரின் பிரேக் பெடலுக்கு அடியில் வாட்டர் பாட்டில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்?



போன வருட இறுதியில் வந்த ஒரு சாதாரண சனிக்கிழமை காலை.  டிவியில் ஏதோ அசட்டு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, போரடிப்பதை உணர்ந்து திடீர் என்று ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வரலாம் என்று முடிவுசெய்து, தயிர்சாதம், தண்ணீர், குழந்தைகள் என்று எல்லாவற்றையும் அள்ளிகொண்டு கிளம்பும் போதே மணி பதினொன்று.


[%image(20090302-DoddamallurGopuram.jpg|133|200|Doddamallur Gopuram)%]

ஸ்கூல் எக்ஸ்கர்ஷனில் ஸ்ரீரங்கப்பட்டினத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள்; அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. சொல்லப்போவது தொட்டமளூர் பற்றி. பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் சென்னப்பட்டினத்தைத் தாண்டி சில மைல் தொலைவில் இருக்கிறது தொட்டமளூர். ராஜேந்திர சிம்ம சோழ மன்னன் இக்கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. ராமானுஜர் காலம் அல்லது அதற்கு முன்பே இந்தக் கோயில் இருந்திருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். கோயிலைப் பார்த்த மாத்திரத்தில், ’பார்த்த மாதிரி இருக்கிறதே’ என்று தோன்றும். தவழும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணன்(நவநீதகிருஷ்ணன்) இங்கே பிரசித்தம். கன்னட பக்தர்கள் பலர்( விஜயதாசர்,
புரந்தரதாசர், ராகவேந்திரர்) இந்தக் கோயிலுக்கு வருகை தந்துள்ளார்கள் என்று தெரிகிறது. 


[%image(20090302-DoddamallurKannan.jpg|200|133|Doddamallur Kannan)%]

மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் - குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணை உருண்டையுடன் தவழ்த்து வருகிறான். கூப்பிட்டால் வீட்டுக்கே வந்துவிடுவான் என்று தோன்றுகிறது. ஏற்கனவே அமுதன் செய்யும் லூட்டி தாங்க முடியாமல் அந்த ஆசையைக் கைவிட்டேன்.


கோயிலுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கம்பர் மண்டம் மாதிரி ஒரு சின்ன மண்டபம் இருக்கிறது. இதற்கு புரந்தரதாசர் மண்டபம் என்று பெயர். ஒருமுறை தொட்டமளூர் கண்ணனை புரந்தரதாசர் தரிசிக்க வந்தபோது கோயில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர், "ஜகத்தோத்தாரணா' என்று துவங்கும் பாடலைப் பாட கோயில் கதவு திறந்தது; கண்ணன் உள்ளிருந்து புரந்தர தாசரை எட்டிப் பார்த்தான் என்கிறார்கள்.


நாங்கள் போன போது, மத்தியானம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது, புரந்தரதாசருக்கு ஏற்பட்ட அதே அனுபவமாய் எங்களுக்கும் கோயில் மூடப்பட்டிருந்தது. உடனே புரந்தரதாசர் மண்டபம் பக்கத்தில் சென்று நிழலைத் தேடி, உட்கார்ந்துகொண்டு, 'ததியோதாரணா' என்று வயிறு சத்தம் போட,  தயிர் சாதத்தையும், ஊறுகாயையும் சாப்பிட்டு முடித்தோம்.


[%image(20090302-PMandapam.jpg|286|214|Purandradasa Mandapam)%]

எங்கள் காரை ஒரு சின்னப் பையன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு மனநலம் சரியில்லாதவன் போல் இருந்தான். சதா வாயில் எச்சில் ஒழுக, மிட்டாயைக் கடித்துக்கொண்டு, கையில் பிசுக்காக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருக்கும் கடையில் சென்று 'Good Day' பிஸ்கெட் பாக்கெட் ஒன்று வாங்கி அவனிடம் தந்தேன், ஆனால் அதை மறுத்துவிட்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு ரூபாய் பந்துதான் தனக்கு வேண்டும் என்று சொன்னான். வாங்கித் தந்தேன். குழந்தை.


ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று, திரும்பி வரும் வழியில் மளூர் கண்ணனை தரிசித்துவிட்டு, வெளியில் வந்தபோது, மதியம் பார்த்த அதே பையன், இப்போது எங்களைப் பார்த்துச் சிரித்தான். நாங்கள் காரில் புறப்பட்ட போது எங்கள் கார் பின்னாலேயே கொஞ்சம் தூரம் ஓடிவந்தான். கண்ணனாக இருப்பானோ? 


எங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் சென்னப்பட்டினத்துக்கு கொஞ்ச தூரம் முன்பு எங்கள் காரைப் பின்தொடர்ந்து வந்த டாடா சஃபாரி எங்கள் கார் பின் பக்கம் வந்து மோதியது. கோபத்துடன் இறங்கி என்ன என்று விசாரிக்கப் போனேன்.
 
”சார், பிரேக் பெடலுக்கு அடியில் வாட்டர் பாட்டில் மாட்டிக்கொண்டுவிட்டது; என்னால் ஒன்றும் செய்ய முடியலை...,” என்றார்.


கார் பின்பக்கம் 'V' மாதிரி நசுங்கியது. - Mark of Vishnu?


பிகு: முதல் கிருஷ்ண விக்ரகம் படம்:  போன மாதம் பிருந்தாவன் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனபோது சர்ச் ஸ்டிரீடில் வாங்கியது. பிருந்தாவனக் கண்ணன்!


தொட்டமளூர்  ஆல்பம்
( சுஜாதா நினைவு தினம் அன்று இறவு எழுதியது)


என் மற்ற பயணங்கள்

நவதிருப்பதி
மதுரை திவ்வியதேசங்கள் மூன்று
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருமெய்யம்
திருநீர் மலை, திருப்பதி
கும்பகோணம்



 

Comments

  1. ரகளை. அட்டகாசம். ததியோதாரணா, பிருந்தவனக் கண்ணன் - சுஜாதா வாழ்கிறார்.

    ReplyDelete

Post a Comment